யார் குற்றம்
ஒரு பெண் மீது ஆணோ ஒரு ஆண் மீது பெண்ணோ அன்பு கூறுவதற்குப் பெயர் காதல். ஆனால் தான் அன்பு கூறுகின்ற ஆணோ பெண்ணோ திருமண வாழ்விலும் எல்லாவித சுகதுக்கத்திலும் அதே அன்பாய் அல்லது காதலுடன் வாழ்ந்து வாழ்க்கை என்னும் மிகப்பெரிய சவாலை எதிர்கொள்ள இயலுமா என்பதை அறிந்துகொள்வதற்கு வாழ்க்கையை வாழ்ந்து பார்க்கும்போது மட்டுமே முழுவதுமாக அறிந்துகொள்வதற்கு முடியும் என்பதை காதலிக்கும்போது அறிந்துகொள்வது இயலாத காரியம் என்பதாலேயே காதலித்து திருமணத்தில் முடிகின்ற திருமண வாழ்க்கைகள் பல சமயங்களில் பெரும் தோல்வியை சந்திக்கிறது. திருமணம் என்பது இருமனங்கள் சம்பந்தப்பட்டது என்பதை அறிந்திருந்தாலும் கூட மனதிற்கு பிடித்திருக்கிறதா இல்லையா என்பதற்கு முக்கியத்துவமின்றி வரன்களை பல்வேறு காரணங்களுக்காக திருமணத்தில் இணைத்துவிடுவதும் பின்னர் திருமணத்தில் இணைய போகின்ற இருவருக்கும் பிடித்திருந்தாலும் வேறு காரணங்களுக்காக திருமணபந்தத்தில் இணைவதற்கு எதிர்ப்பதும் அதற்க்கு காரணமாக சமுதாயத்தில் சொல்லப்படும் எண்ணிமுடியாத விதிகளும் இந்திய கலாச்சாரத்தில் பெரும்பான்மையான மனிதர்களின் சோககதைகளின் பின்புலமாக, அன்றாடம் சந்திக்கின்ற பலரின் சொந்தகதைகள்.
திருமணம் என்பதை ஆண் பெண் இருவருக்கும் குறிப்பிட்ட வயதில் எப்படியாவது முடித்து விடவேண்டும் என்கின்ற பெற்றோரின் ஆதங்கம் ஒருபுறமும் அவ்வாறு குறிப்பிட்ட வயதிற்குள் திருமணம் நடைபெறாமல் போனால் சமுதாயத்திற்கும் உறவினர் நண்பர்களுக்கும் கேள்விக்குறியாக அப்பெண்ணோ ஆணோ ஆளாக்கப்படுவதும், அவ்வாறு ஆளாகாமல் பார்த்துக்கொள்வதையே மிகப்பெரிய காரணமாக முன்வைத்து அவசர கதியில் திருமணம் என்கின்ற ஆயுள்தண்டனையை பெண்களுக்கும் பையன்களுக்கும் ஏற்ப்படுத்திவைக்கின்ற பெற்றோரும் சுற்றமும் நட்ப்பும் பின்னர் அவர்களது வாழ்க்கையில் ஏற்படுகின்ற பல துயரங்களை சரி செய்வதற்கு வழி அறியாமல் விலகிச்செல்வதும் வாடிக்கையாகிவிட்ட வேதனைகள்.
இவ்வாறு அவசர கதியில் இயங்காமல் நன்றாக யோசித்து மனப்பொருத்தம் ஜாதகப்பொருத்தம் அந்தஸ்த்து என்று வரிசையாக பல பொருத்தங்களை கவனித்து ஊரே வியக்கும் வண்ணம் திருமணம் தடபுடலாக நடந்து பிள்ளைகள் ஒன்றோ இரண்டோ பெற்றுக்கொண்ட பின்னர் சாவகாசமாக கணவனைப்பற்றி மனைவியும் மனைவியைப்பற்றி கணவனும் அறிந்துகொள்ளும் பல்வேறு செய்திகளும் அதனால் ஏற்ப்படுகின்ற விளைவுகளை தாங்க இயலாமல் விவாகத்தை ரத்து செய்வதும் சமுதாயத்தில் தற்போது சாதாரணமான விஷயங்களாகிவிட்டது. மேல்மட்டமானாலும் கீழ்மட்டமானாலும் பெண்களானாலும் ஆண்களானாலும் மனமும் எண்ணங்களும் சிந்தனைகளும் செயலும் ஒன்றுதான். பல சமயங்களில் மனவேற்றுமையோ வேறு வேற்றுமையோ காரணமாக இருந்தாலும் சம்பந்தப்பட்ட ஆணின் மனதும் பெண்ணின் மனதும் வெறுப்பின் ஆதிக்கத்தினால் அதுவரையில் ஒருவர் மீது ஒருவர் வைத்திருந்த காதலும் கண்ணியமும் காணாமல் போக, மனம் வெறுமையாய் வெறுப்புற்று கிடக்க, அந்த சமயம் பார்த்து வேறு ஒரு நபரின் துணை அமையும்போது அங்கே அவ்விருவருக்கும் ஏற்ப்படுகின்ற உறவுக்குப் பெயர் 'கள்ளக்காதல்' என்று கூறப்படுவது வேடிக்கை.
கள்ளக்காதல் என்று கூறுவதற்குக் அக்காதலில் ஈடுபடுகின்ற இருவருக்கும் சட்டப்படி வேறு மனைவியோ கணவனோ இருப்பது என்பது காரணமாக கூறப்படுகிறது. சமுதாயத்தில் பெண்களுக்கு ஒவ்வொரு வயதிலும் ஒவ்வொரு வகையான எழுதப்படாத பல சட்டங்களை சமுதாயம் வைத்து இருக்கிறது, ஆனால் அதே சமுதாயத்தில் திருமணமான ஆண் தனது சுகத்திற்க்காக விபசாரியை நாடுவதற்கும், மது அருந்துவதற்கும் வேறு பெண்களுடன் உறவு வைத்துக் கொள்வதற்கோ தடை விதித்து எவ்வித எழுதப்படாத சட்டதிட்டங்களையும் விதிப்பதில்லை. இதனால் விபசாரம் என்பதும் மது அருந்துவதும் பெரும்பாலும் ஆண்களுக்குரியதாக காலம் காலமாக சமுதாயம் தருகின்ற எழுதப்படாத சுதந்திரம். கள்ளக்காதலின் அடிப்படையே சமுதாயத்தில் பெண்கள் மீது விதிக்கப்பட்டிருக்கும் பலவித கட்டுப்பாடுகளின் தீவிரத்தை நமக்கு காட்டுகிறது.
கலாச்சாரம் என்பதைப்பற்றிய அக்கறை உள்ளவர்கள் அதன் சீரழிவை பற்றி அக்கறைபடுபவர்கள் பெண்கள் உடுத்துகின்ற உடை, பெண்களின் நடத்தை மீது மட்டுமே குறிப்பாக குறைகூறுவது எந்த விதத்தில் நியாயம் என்பது விளங்கவில்லை. கலாச்சாரத்தை காக்கின்ற பொறுப்பு பெண்கள் மட்டுமே காரணமா என்பது பதிலில்லாத கேள்வி. சமுதாயத்தில் பெரும் பொறுப்பை பெண்கள் மீது சுமத்திவிட்டு கலாச்சார சீரழிவிற்கு பெண்கள் மட்டுமே காரணம் என்பது போன்ற எழுதப்படாத விதியை சுமத்துகிற சமுதாயம் கள்ளக்காதலை உருவாக்கிய பொறுப்பு மிகுந்த நற்ப்பணியை இலவசமாக பெண்களுக்கு வழங்கிவருகிறது.