தொலைவினும் தொலைவிலே ஓர் இருதய ராகம்,
என்னை அழைக்கத் துணிந்தவரும் தான் யாரோ!
மெல்லிய துடிப்பின் ஸ்வரம்,
வல்லிய என் மனதை பிளப்பதும் தான் ஏனோ!
மனிதனுக்கு என்னவாயினும் செவிமடுக்கேன் என இருமாந்திருந்த என் நெஞ்சம்,
இப்பொழுது கனத்து போவதும் தான் ஏனோ!
தேவனின் அழைப்பை மட்டுமே ஏற்ற என் மனம்,
இன்று மனித அழைப்பையும் ஏற்க நினைப்பதும்தான் ஏனோ!
மனம் போன போக்கிலே,
என் இறக்கைகள் கூட செல்ல துடிப்பதும் தான் ஏனோ!
கோடான கோடி தேசங்கள் கடந்திருக்கும் என்னை, உனக்கு நினைக்க தோன்றியதும் தான் ஏனோ!
உன் முகமறியேன் உன் குரலறியேன்
உன் குணமறியேன்,
ஆயினும் உன் உள்ளமறிந்ததாலோ என்னவோ..
உன்னை நினைத்து, நானே இறகாகிப் போனதாலோ என்னவோ..
நீ இருக்கும் திசை நோக்கி என்னையறியாமல் பறக்கிறேன், மிதக்கிறேன்..!
இதோ! உன் இருப்பிடமும் அடைந்து விட்டேன்! இவ்வளவு அருகில் இருந்தும் உன் பாராமுகம் தான் ஏனோ!
அடடே,
இதென்ன ஒளி! அது உன் முகமல்லவா! இந்நொடியை என்னை தோற்றுவித்த தேவனே வந்து கேட்டாலும் கொடேன்!!!! உன்னையும் தான்!
ஒரு தேவதைக்கும் நேசிக்கும் நெஞ்சமுண்டென்று உணரவைத்த நீ, என்றும் பூரணமாய் என்னோடு!!