என்னைத் தவிர மற்ற எல்லோருமே மகிழ்ச்சியாக இருக்கிறார்களே அது எப்படி"? என குருவை கேட்டான் சீடன்.
குரு சொன்னார்," அவர்கள் எதிலும் நல்லதையே பார்க்கிறார்கள்.அதனால் அவர்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள்."
"நான் ஏன் நல்லதை பார்க்க முடியவில்லை?" சீடன் கேட்டான்.
குரு சொன்னார், " உன் உள்ளே இருப்பதையே நீ வெளியில் பார்க்கிறாய். உன் உள்ளே நல்லது இருந்தால் வெளியிலும் நீ நல்லதையே காண்பாய். உன் உள்ளே தீயது இருந்தால் நீ தீயதையே காண்பாய்."
உலகம் இன்பமானது என்கிறான் ஒருவன். உலகம் துன்பமானது என்கிறான் இன்னொருவன். இருப்பது ஒரு உலகம் தான். அது எப்படி ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு மாதிரி இருக்க முடியும்?
உலகில் நல்லது, தீயது இரண்டும் இருக்கிறது. நல்லதை பார்ப்பவன் உலகம் நல்லது என்கிறான். தீயதை பார்ப்பவன் உலகம் தீயது என்கிறான்.
துரோணர் தருமரை அழைத்தார். " இந்த ஊரில் கெட்டவர்கள் யாராவது இருக்கிறார்களா, பார்த்துவிட்டு வா" என்று அனுப்பினார். அவனும் புறப்பட்டுப் போனான்.
துரியோதனை அழைத்தார். " இ ந்த ஊரில் நல்லவர்கள் யாராவது இருக்கிறார்களா, பார்த்துவிட்டு வா என அனுப்பினார். அவனும் புறப்பட்டு போனான்.
ஊரெல்லாம் சுற்றிப் பார்த்துவிட்டு இருவரும் திரும்பி வந்தார்கள்.
" ஊரில் எல்லோரையும் பார்த்தேன். கெட்டவன் ஒருவன் கூட இல்லை." எனறான் தருமன்.
" நானும் எல்லோரையும் பார்த்தேன். ஊரில் நல்லவன் ஒருவன் கூட இல்லை." என்று சொன்னான் துரியோதனன்.
இருவருமே ஒரே மனிதர்களைத்தான் பார்த்தார்கள்.ஒவ்வொரு மனிதனிடமும் நல்லதும் உண்டு. கெட்டதும் உண்டு.
தருமன் நல்லவன். அவன் நல்லதை மட்டுமே பார்த்தான். அவனால் அப்படித்தான் பார்க்க முடியும்.அதனால் அவனுக்கு எல்லோரும் நல்லவர்களாக தெரிந்தார்கள்.
துரியோதனன் கெட்டவன்.அவன் கெட்டதை மட்டுமே பார்த்தான். அவனால் அபடித்தான் பார்க்க முடியும். அதனால் அவனுக்கு எல்லோருமே கெட்டவர்களாக
தெரிந்தார்கள்.
உலகம் நம் பார்வையை பொறுத்தது. நமக்குள் நல்லது
இருந்தால் வெளியிலும் நல்லதே தெரியும். நமக்குள் கெட்டது இருந்தால் வெளியிலும் கெட்டதாகவே தெரியும். நமக்குள் அழகு இருந்தால் உலகம் அழகாக தெரியும். நமக்குள் அசிங்கம் இருந்தால் உலகம் அசிங்கமாகவே தெரியும்.
நாம் மகிழ்ச்சியாக இருக்கும் போது வாழ்க்கையும் மகிழ்ச்சியாக தோன்றுகிறது. நாம் துன்பப்படும்போது வாழ்க்கையும் துன்பமாக தோன்றுகிறது.
உலகத்தை நல்லதாக, அழகானதாக, இன்பமானதாக ஆக்குவது நம் கையில் தான் இருக்கிறது.
நமக்குள் நன்மையை அழகை இன்பத்தை நிரப்பிக் கொண்டால் உலகமும் நல்லதாக அழகானதாக இன்பமானதாக ஆகிவிடும்.
நமக்குள் தீமையை அசிங்கத்தை துன்பத்தை நிரப்பிக் கொண்டால் உலகமும் தீயதாக அசிங்கமானதாக துன்பமானதாக மாறிவிடும்.
சுயநலம், பொறாமை, பேராசை இவை தீமையிம் விதைகள்.
நம் இதயத்தில் இவற்றை விதைத்தால் உலகமும் துன்பமானதாக மாறிவிடும்.
மனிதன் தன்னிடம் இல்லாததை நினைத்து துயரப்படுகிறான். அதனால் இருப்பதை காணத் தவறுகிறான்.
த்ன்னிடம் இருப்பதை காண்பவனின் வாழ்வு மகிழ்வுருகிறது.
"செருப்பில்லையே என கவலைபட்டேன். காலில்லாதவனை பார்த்தபோது எனக்கு காலிருக்கிறதே என மகிழ்ந்தேன். அதற்காக கடவுளுக்கு நன்றி சொன்னேன்." என்றார் பாரசீக கவிஞன் சஅதி.
அழகிய மனம் படைத்தவன், உலகத்தையும் அழகாக்குகிறான்.