நமக்கென்ன குறை
மாதம் மும்மாரி பொழிகிறது
கண்ணீர் மழை
வியர்வை மழை
ரத்த மழை
வர்ண பகவானுக்க்கு
ஜெபிக்கமலே
பிணி பஞ்சம் பசி
எனும் துன்பக் கடவுள்களால்
தானே வந்து பெய்கிறது
கண்ணீர் மழை
பருவ காலத்துக்கு காத்திருக்காமல்
எப்போதும் பெய்கிறது
வியர்வை மழை
ஏழைகள் தினம் குளிப்பதும்
இந்த மழையில் தான்
வானிலை அறிக்கை இன்றி
மதத் தலைவர்களின்
அரசியல்வாதிகளின் கருணையால்
எதிர்பாராமல் பெய்கிறது
ரத்த மழை
நல்லார் ஒருவர் உளரேல்
அவர் பொருட்டு
எல்லோருக்கும் பெய்கிறது
கோயில்கள் மீதும்
மசூதிகள் மேலும்
சர்ச்சுகள் மீதும்
பாகுபாடின்றி பெய்கிறது
ரத்த மழை
நமக்கென்ன குறை
நம் நாட்டில் மாதம்
மும்மாரி பொழிகிறது
சில நேரம் தினமும் கூட