Author Topic: ஒலிம்பிக்  (Read 4742 times)

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 500
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
ஒலிம்பிக்
« on: January 06, 2012, 11:50:03 PM »
ஒலிம்பிக்




இந்த ஐந்து ஒலிம்பிக் வளையங்களும் 1913ல் வடிவமைக்கப்பட்டு, 1914ல் அங்கீகரிக்கப்பட்டு, 1920 கோடை ஒலிம்பிக் விளையாட்டுக்களில் முதன் முதலில் பயன்படுத்தப்பட்டன

ஒலிம்பிக் விளையாட்டுக்கள் (Olympic Games அல்லது Olympics) என்பது இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை கோடை காலத்திலும் குளிர் காலத்திலும் மாற்றி மாற்றி பல்வேறு விளையாட்டுக்களுக்கு நடத்தப்படும் அனைத்துலகப் போட்டி ஆகும். பண்டைய கிரீஸ் நாட்டில் இந்தப் போட்டிகளை நடத்தும் வழக்கம் இருந்து வந்தது. பின்னர், Pierre de Coubertin|Pierre Frèdy, Baron de Coubertin என்ற பிரான்ஸ் நாட்டு பிரபுவால் (nobleman) 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இந்தப் போட்டிகளை நடத்தும் வழக்கம் மீண்டும் வந்தது. உலகப் போர் நடைபெற்ற ஆண்டுகள் தவிர்த்து, 1896 முதல், நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை கோடை ஒலிம்பிக் விளையாட்டுக்கள் நடைபெற்று வருகின்றன.
 
ஆதி கால ஒலிம்பிக்ஸ் போட்டிகள் கி.மு.776 இல் கிரேக்க நாட்டிலுள்ள ஒலிம்பியாவில் தொடங்கி கி.பி.393 வரை நடைபெற்றன. கிரேக்க கவிஞர் பானாஜியோடிஸ் ஸௌட்ஸாஸ் கி.பி.1833இல் எழுதிய "இறந்தவர்களின் உரையாடல்" என்னும் கவிதை இப்போட்டிகளை மீண்டும் தொடங்கும் ஆர்வத்தை உருவாக்கியது.
 
பனிக்கால விளையாட்டுப் போட்டிகளை நடத்தும் பொருட்டு 1924 முதல் குளிர் கால ஒலிம்பிக் விளையாட்டுக்கள் நடத்தப்படுகின்றன. தொடக்கத்தில் கோடை கால மற்றும் குளிர் கால ஒலிம்பிக் விளையாட்டுக்கள் ஒரே ஆண்டில் நடத்தப்பட்டு வந்தன. 1994 முதல் கோடை கால ஒலிம்பிக் விளையாட்டுக்கள் முடிந்து இரண்டு ஆண்டுகள் கழித்து குளிர் கால ஒலிம்பிக் விளையாட்டுக்கள் நடத்தப்படுகின்றன.


ஒலிம்பிக்ஸ் நடந்த இடங்கள்



1896 - ஏதென்ஸ், கிரீஸ
 
1900 - பாரீஸ், பிரான்ஸ்
 
1904 - செயிண்ட் லூயிஸ், ஐக்கிய அமெரிக்கா USA
 
1908 - லண்டன், இங்கிலாந்து
 
1912 - ஸ்டாக்ஹோம், ஸ்வீடன்
 
1920 - ஆண்ட்வெர்ப், பெல்ஜியம்
 
1924 - பாரீஸ், பிரான்ஸ்
 
1928 - ஆம்ஸ்டர்டாம், ஹாலந்து
 
1932 - லாஸ் ஏஞ்சலீஸ், ஐக்கிய அமெரிக்கா USA
 
1936 - பெர்லின், ஜெர்மனி
 
1948 - லண்டன், இங்கிலாந்து
 
1952 - ஹெல்சின்கி, பின்லாந்து
 
1956 - மெல்போர்ன், ஆஸ்திரேலியா
 
1960 - ரோம், இத்தாலி
 
1964 - டோக்கியோ, ஜப்பான்
 
1968 - மெக்ஸிகோ சிட்டி, மெக்ஸிகோ

1972 - ம்யூனிச், ஜெர்மனி
 
1976 - மாண்ட்ரீல், கனடா
 
1980 - மாஸ்கோ, சோவியத் யூனியன்
 
1984 - லாஸ் ஏஞ்சல்ஸ், ஐக்கிய அமெரிக்கா USA
 
1988 - சியோல், தென் கொரியா
 
1992 - பார்சிலோனா, ஸ்பெயின்

1996 - அட்லாண்டா, ஐக்கிய அமெரிக்கா USA
 
2000 - சிட்னி, ஆஸ்திரேலியா
 
2004 - ஏதென்ஸ், கிரீஸ்
 
2008 - பெய்ஜிங், மக்கள் சீனக் குடியரசு
 
2012 - இலண்டன், ஐக்கிய இராச்சியம்
 
2016 - ரியோ டி ஜனேரோ, பிரேசில்



உலகப் போர் சமயங்களில் மட்டும் (1916, 1940 & 1944) ஒலிம்பிக்ஸ் நடைபெறவில்லை.
 
அடுத்த கோடை கால ஒலிம்பிக் விளையாட்டுக்கள், அண்மையில் 2008-ஆம் ஆண்டு மக்கள் சீனக் குடியரசு நாட்டின் பெய்ஜிங் நகரில் நடந்தேறியது. இன்றைய ஒலிம்பிக்ஸ் 1896ல் ஏதென்ஸ் நகரில் தான் துவங்கியது


பனி ஒலிம்பிக்ஸ் நடந்த இடங்கள்


1924 - சாமொனிக்ஸ், பிரான்ஸ்
 
1928 - செயிண்ட் மோரிட்ஜ், ஸ்விட்சர்லாந்து
 
1932 - ப்ளாசிட் ஏரி, ஐக்கிய அமெரிக்கா USA
 
1936 - கார்மிஷ்ச், ஜெர்மனி
 
1948 - செயிண்ட் மோரிட்ஜ், ஸ்விட்சர்லாந்து
 
1952 - ஆஸ்லோ, நார்வே
 
1956 - கார்டினா, இத்தாலி
 
1960 -ஸ்குவாவ் வேலி, ஐக்கிய அமெரிக்கா USA
 
1964 - இன்ஸ்ப்ரக், ஆஸ்திரியா
 
1968 - க்ரெநோபில், பிரான்ஸ்
 
1972 - சாப்போரோ, ஜப்பான்
 
1976 - இன்ஸ்ப்ரக், ஆஸ்திரியா
 
1980 - ப்ளாசிட் ஏரி, ஐக்கிய அமெரிக்கா USA
 
1984 - சாராஜெவோ, யுகோஸ்லாவியா
 
1988 - கால்கேரி, கனடா
 
1992 - ஆல்பர்ட்வில்லே, பிரான்ஸ்
 
1994 - லில்லேஹாம்மர், நார்வே
 
1998 - நாகானோ, ஜப்பான்
 
2002 - ஸால்ட் லேக் ஸிட்டி, ஐக்கிய அமெரிக்கா
 
2006 - தோரீனோ, இத்தாலி

 
2010 - வான்கூவர், கனடா


உலகப் போர் சமயங்களில் மட்டும் (1940 & 1944) பனி ஒலிம்பிக்ஸ் நடைபெறவில்லை.
 
1992 வரை பனி ஒலிம்பிக்ஸ§ம் சம்மர் ஒலிம்பிக்ஸ§ம் ஒரே வருடத்திலேயே நடைபெற்று வந்தது. இதை மாற்ற வேண்டி 1994ல் மீண்டும் ஒரு பனி ஒலிம்பிக்ஸை நடத்தினார்கள். அதன்படி தற்பொழுது சம்மர் ஒலிம்பிக்ஸ் நடந்து 2 ஆண்டுகள் கழித்து பனி ஒலிம்பிக்ஸ் நடக்கும்.
 
                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 500
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: ஒலிம்பிக்
« Reply #1 on: January 07, 2012, 12:03:52 AM »
பெய்சிங்கில் ஒலிம்பிக் கல்வி


ஒலிம்பிக் என்றால் என்ன பொருள் என்பது உங்களுக்குத் தெரியுமா?"இளைஞர்களும் சமாதானமும்"என்பதுதான் பொருள். சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியும், பல்வேறு ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளை நடத்திய நகரங்களும் இளைஞர்கள்மீதான கல்வியிலும் செல்வாக்கிலும் எப்பொழுதும் கவனம் செலுத்திவருகின்றன. இளைஞர்களிடையில் ஒலிம்பிக் எழுச்சியை பரப்புவதற்கு மேலும் முக்கியத்துவம் கொடுத்துவருகின்றன. 2008ஆம் ஆண்டு, ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் முதல் முறையாக சீனாவில் நடைபெறும். சீனாவில் குறிப்பாக பெய்சிங்கில் இளைஞர்களிடையில் ஒலிம்பிக் எழுச்சி பற்றிய கல்வி எப்படி நடத்தப்பட்டு வருகின்றது என்பதை இப்பொழுது அறியலாம்.

2005ஆம் ஆண்டு டிசம்பர் 6 ஆம் நாள், பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிக்கான ஏற்பாட்டு கமிட்டியும், சீனக் கல்வி அமைச்சகமும் "2008ஆம் ஆண்டு பெய்சிங்கின் துவக்கநிலை மற்றும் இடைநிலை பள்ளிக்கூட மாணவர்களுக்கான கல்வி பற்றிய திட்டத்தை"கூட்டாக வகுத்து, பெய்சிங் வட்டாரத்திலுள்ள 20 ஒலிம்பிக் கல்விக்கான மாதிரி பள்ளிகளின் பட்டியலை வெளியிட்டன. இந்த பள்ளிக்கூடங்களில் பெய்சிங் 9வது பள்ளிக்கூடம் இடம்பெறுகின்றது. இந்த பள்ளிக்கூடத்தில் ஒலிம்பிக் கல்வி எப்படி நடத்தப்பட்டது என்பது பற்றி மாணவர்கள் வருமாறு கூறுகின்றார்கள்-





"ஒவ்வொரு வாரமும் தேசியக் கொடி ஏற்ற விழா"நடைபெறுவது வழக்கம். முன்பு விழா நடைபெறும் போது, தேசியக் கொடியின் கீழே உரை நிகழ்த்த வேண்டும். இப்பொழுது, இதை ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளுடன் இணைத்து, ஒலிம்பிக் அறிவுப் பற்றிய உரையை மாணவர்கள் நிகழ வேண்டும். வாரத்துக்கு ஒரு வகுப்பு ஒரு முறை. அனைவரும் உரை நிகழ்த்தும் வாய்ப்பு உண்டு. இவ்வாறு, நாங்கள் ஒலிம்பிக் பற்றிய அறிவை சேகரிக்க வேண்டும். இதன் மூலம், ஆசிரியர் மாணவர்களுக்கு நேரடியாக பாடம் சொல்லிக்கொடுப்பதைவிட மேலும் அதிக அறிவை பெறலாம். அத்துடன் ஒவ்வொரு வாரமும் ஒரு வகுப்பு கூட்டம் நடைபெறும் போது, இது பற்றிய கல்வியும் நடத்தப்படும் என்று மாணவர்கள் கூறினார்கள்.

உரை நிகழ்த்துவதை தவிர, ஒலிம்பிக் அறிவுப் போட்டிக்கான பல ஒலிம்பிக் கல்வி நடவடிக்கைகள் நடைபெறும். இந்த நடவடிக்கைகள் மூலம், ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் பற்றிய அறிவை மாணவர்கள் அறிந்து கொள்வதோடு, விளையாட்டுகள், ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் ஆகியவற்றில் மேலும் ஆர்வம் கொண்டுள்ளனர். மேலும் முக்கியமானது என்னவென்றால், அவர்கள் ஒலிம்பிக் எழுச்சியின் சில முக்கிய அம்சங்களை படிப்படியாக கிரகித்துகொள்ளலாம். செங் மொங் என்பவர், 9வது பள்ளிக்கூடத்தில் ஒரு சாதாரன மாணவர், அவர் செய்தியாளரிடம் கூறியதாவது-

ஒலிம்பிக் விளையாட்டுகளின் எழுச்சியில், எங்களுக்கு தெரிந்த சில அறிவை தவிர, எங்களின் அன்றாட படிப்பு மற்றும் வாழ்க்கையும் இந்த அறிவை பிரதிபலிக்க வேண்டும். எடுத்துக்காட்டாக, "மேலும் உயரம், மேலும் வேகம், மேலும் வலிமை"என்பது, ஒருவரின் சுய நம்பிக்கையைப் பிரதிபலிக்க வேண்டும். போன முறை நான் நிகழ்த்திய உரையின் தலைப்பு "சவாலை எதிர்நோக்கிய எனக்கு துணிவு உண்டு"என்பதாகும். எனது துணிவு என்றால், இன்னல்களையும் சவாலையும் எதிர்நோக்க துணிவைக் கொண்டுள்ள நான் நம்பிக்கையுடன் இருக்கின்றேன் என்பதாகும் என்றார்.




9வது இடைநிலை பள்ளிக்கூட மாணவர்கள் ஒலிம்பிக் கல்வியில் பெற்றுள்ள உணர்வை, தமது நடவடிக்கைகளில் வெளியிட்டுள்ளனர். எடுத்துக் காட்டாக, பள்ளிகூடத்தின் சுற்றுப்புற தூய்மையில் மாணவர்கள் மேலும் கவனம் செலுத்துகின்றனர், சுற்றுச்சூழல் பாதுகாப்பில் அவர்கள் மேலும் அக்கறையை அதிகரித்துள்ளனர். முன்பைவிட மேலும் அதிகமான நேரத்தை விளையாட்டுகளில் செலவழிகின்றனர்.

9வது பள்ளிக்கூடம் தவிர, இதர ஒலிம்பிக் கல்வி மாதிரி பள்ளிகூடங்களும் பல வேடிக்கையான நடவடிக்கைகளில் கலந்துகொண்டனர். பெய்சிங் மாநகரின் சுங்வென் பகுதியிலுள்ள குவாங் சி மென் பள்ளிக்கூடத்தின் வாசலின் இரு பக்கங்களிலும் உருவாக்கப்பட்ட பத்து மீட்டர் உயரமுடைய 4 ஒலிம்பிக் பண்பாட்டு சுவர்கள் ஒலிம்பிக்கின் கடந்த காலம் நிகழ்காலம் மற்றும் எதிர்காலத்தை விளக்கிக் கூறுகின்றன. ஹைதியன் பகுதியிலுள்ள யாங் பாங்தியன் மைய துவக்கப் பள்ளிகூடத்தில் உள்ள சிறு மாணவர்கள் ஒரு வகுப்பு, ஒரு நாடு என்ற வடிவத்தில் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளின் துவக்க விழா மாதிரியில் ஒரு நிகழ்ச்சியை நடத்தினார்கள். பெய்சிங் மாநகர அரசின் கல்வி கமிட்டிக்கு இன்னொரு திட்டம் உண்டு. அதாவது, பெய்சிங்கிலிருந்து 200 பள்ளிகூடங்களைத் தேர்ந்தெடுத்து, சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் சுமார் 200 நாடுகள் மற்றும் பிரதேசங்களின் ஒலிம்பிக் கமிட்டிகளுடன் ஒன்றுக்கு ஒன்று தொடர்பை உருவாக்குவதாகும். பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளை ஏற்பாடு செய்யும் போது, இந்த பள்ளிக்கூடங்கள் அதனதன் தொடர்பு நாட்டிடம் அல்லது பிரசேதத்திடம் மொழியையும் பண்பாட்டையும் கற்றுக்கொள்கின்றன. பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளின் போது, இந்த பள்ளிக்கூட மாணவர்கள் உரிய பிரதிநிதிகளுடன் ஒலிம்பிக் கிராமத்தில் கொடியேற்ற விழாவில் கலந்துகொண்டு, அவர்களின் போட்டிகளைப் பார்வையிடுவார்கள்.

பெய்சிங் ஒலிம்பிக் அமைப்புக் கமிட்டி மற்றும் சீனக் கல்வியமைச்சகத் திட்டத்தின் படி, ஒலிம்பிக் பற்றிய கல்வி இவ்வாண்டு முழு சீனாவிலும் 40 கோடி இளைஞர்களிடையில் மேற்கொள்ளப்படும். இதற்காக, சீனக் கல்வியமைச்சகம் இவ்வாண்டு நாடு முழுவதிலும் 500க்கும் அதிகமான முன்மாதிரி ஒலிம்பிக் கல்வி பள்ளிக்கூடங்களை நிறுவும்





அடுத்த இரண்டு ஆண்டுகளில், பெய்சிங் ஒலிம்பிக் கமிட்டி ஒவ்வொரு ஆண்டின் ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் திங்களில் நாடுமுழுவதிலும் இடைநிலை மற்றும் துவக்க நிலை பள்ளி மாணவர்களிடையில், பசுமை ஒலிம்பிக், அறிவியல் தொழில் நுட்ப ஒலிம்பிக், சமூகவியல் ஒலிம்பிக், ஒரே உலகம், ஒரே கனவு என்ற தலைப்பில் ஒலிம்பிக் கல்வியை மேற்கொள்ளும். இந்த நடவடிக்கையில், படம் எடுப்பது, ஓவியம் தீட்டுவது, கவிதை, அழகு கையெழுத்துக் கலை முதலிய நடவடிக்கைகள் இடம்பெறுகின்றன.

ஒழுக்கப் பயிற்சியை நம்பிக்கையை வலுப்படுத்தும் அதே வேளையில், உடல் பயிற்சியில் ஈடுபட்டு, துணிவு எழுச்சியையும் தனி குணத்தையும் வளர்க்க வேண்டும். இதுவே, ஆற்றல் மிக்க புதிய கல்வி அமைப்புமுறையாகும். எனவே, ஒலிம்பிக்கின் முக்கிய அம்சம், கல்வியாகும். இளைஞர்கள் உலகின் எதிர்காலமாவர். ஒலிம்பிக்கின் எதிர்காலமும் அவர்களே. அவர்களிடையில் ஒலிம்பிக் பற்றிய கல்வியை நடத்துவது, ஒலிம்பிக் விளையாட்டுகள் மற்றும் சமூகத்தின் வளர்ச்சிக்கு பெரும் முக்கியத்துவம் வாய்ந்தது. 9வது இடைநிலை பள்ளிக்கூடத்தின் தலைவர் மா பௌ செங் கூறியதாவது-

ஒலிம்பிக் கல்விக்கான முன்மாதிரி பள்ளிக்கூடங்களை நிறுவுவதன்மூலம், நாங்கள் பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளுக்கு செழுமையான ஒலிம்பிக் கல்வி மரபுரிமை செல்வத்தை தயாரிக்க வேண்டும். சீனாவிற்கும் பெய்சிங்கிற்கும் முழு ஒலிம்பிக் விளையாட்டுகளுக்கும் எங்கள் சொந்த பங்கை ஆற்ற வேண்டும் என்றார்.

                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 500
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: ஒலிம்பிக் (சுவாதி.சுவாமி)
« Reply #2 on: January 07, 2012, 12:05:50 AM »
ஒலிம்பிக் போட்டிகள் பற்றிய சுவாதி.சுவாமி...


உரோமச் சக்கரவர்த்தி முதலாம் தியோடியோஸ் என்பவரால் தடைசெய்யப்பட்ட ஒலிம்பிக் போட்டிகள் 1500 வருடங்களின் பின் 1896 ஏப்பிரல் 6ம் திகதி அன்று திரும்பவும் தொடக்கப்பட்டது. ஏதென்ஸில் தொடக்கப்பட்ட இந்த ஒலிம்பிக் போட்டிகளின் முதல் நாள் 13 நாடுகளிலிருந்து வந்த விளையாட்டு வீரர்களை 60,000 ரசிகர்களுடன் கிரேக்க மன்னரான முதலாம் ஜோர்ஜியாஸ் வரவேற்று சிறப்பித்தார்


கி.மு 776 கிரேக்கத்தின் மாகாணங்களில் ஒன்றான எலிஸ்ஸின் ஒலிம்பியா நகரில் நடந்த விளையாட்டுப் போட்டியே முதலாவது ஒலிம்பிக் போட்டி என வரலாற்றுப் பதிவுகளில் காணப்பட்டாலும் அப்போட்டியை உத்தியோகபூர்வமாக ஏற்றுக் கொள்ள அப்போது 500 வருடங்களானது. புரதான ஒலிம்பிக் போட்டிகளும் நாலு வருடங்களுக்கு ஒரு முறை தான் நடத்தப்பட்டது. இந்த ஒலிம்பிக் போட்டிகள் கிரேக்கரின் முக்கிய கடவுளான ஸீஸஸ் (Zeus) என்பவருக்கு எடுக்கப்படும் திருவிழாக்காலங்களிலேயே நடத்தப்பட்டன.



கி.மு 8ம் நூற்றாண்டில் 12க்கும் மேற்பட்ட கிரேக்க நகரங்களிலிருந்து போட்டியாளர்கள் கலந்து கொண்ட இப்போட்டியில் காலம் செல்ல செல்ல போட்டியாளார்கள் 100க்கும் அதிகமான நகரங்களிலிருந்து வந்து கலந்து கொள்ள தொடங்கினர். முதலில் தடகள ஓட்டப்பந்தயங்களால் மட்டும் மட்டுறுத்தப்பட்டிருந்த ஒலிம்பிக் போட்டிகள் பிற்காலத்தில் மற்றைய விளையாட்டுக்களான மல்யுத்தம், குத்துச் சண்டை, குதிரையோட்டம், மற்றும் இராணுவம் சம்மந்தமான வீர விளையாட்டுகள் போன்றவையும் சேர்க்கப்பட்டன, பெந்தலோன் ( The pentathlon,) எனப்படும் யாரவதொரு விளையாட்டு வீரர் ஐந்து வெவ்வேறு வகை போட்டிகளில் வெற்றி பெற்று முன்னணி வீரராக கருதப்படும் விதி முறை ஒலிம்பிக்கில் கி.மு 708 ல் அறிமுகப்படுத்தப்பட்டது. புரதான காலத்தில் இவ் விளையாட்டுப் பிரிவில் ஓட்டப் பந்தயம், உயரம் தாண்டல், நீளம் பாய்தல், குண்டெறிதல், தட்டெறிதல், ஈட்டியெறிதல் , மல்யுத்தம் என்பவை சேர்க்கப்பட்டிருந்தனவாம்.

பின்னாளில் உரோம சாம்ராஜ்யங்களின் வீழ்ச்சியில் கி.பி 393 அளவில் உரோமின் சக்கரவர்த்தியாகிய முதலாம் தியோடோசியஸ் என்ற கிறிஸ்தவ மன்னர் ஒலிம்பிக் போட்டிகளை தடை செய்தார்,

அதன் பின் பல நூற்றாண்டுகளாக ஒலிம்பிக் போட்டி நடத்தப்படாமல் வரலாற்றில் பிரபலமாகாது போய்விட்டது. ஆனால் பல நூற்றாண்களாக இடம்பெற்ற குடிபெயர்வு, கலாச்சார பரிமாற்றம் போன்றவற்றினால் திரும்பவும் ஐரோப்பாவில் உரோமானியர்களின் நாகரீகம், விளையாட்டுத் துறை போன்றவற்றினைப் பற்றிய வரலாற்று ஆய்வுகள் போன்ற பலதரப்பட்ட முனைப்புகள் 18ம், 19ம் நூற்றாண்டுகளில் புதிதாக ஏற்பாடு செய்யப்பட்ட கலாச்சாரங்களின் அடையாளங்களுடனான விளையாட்டுப் போட்டிக்கு அதே பழைய பெயரையே வழங்கி ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் என்று தொடக்கப்பட்டு கௌரவிக்கப்பட வித்திட்டன.



ஒலிம்பிக் போட்டிகளை திரும்பவும் தொடக்கவேண்டும் என்று 1892 ஆம் ஆண்டு பிரெஞ் நாட்டுக்காரரான பைரே டீ கோப்பேர்டின் (Pierre de Coubertin) என்ற இளைஞரால் முன்னெடுக்கப்பட்ட கோரிக்கை முயற்சி வலுவடைந்து இறுதியில் பாரிஸில் 1894 ஆம் ஆண்டு ஜூன் மாதம் நடந்த அகில உலக விளையாட்டுத்துறை மாநாட்டில் விவாதிக்கப்பட்டது. 9 நாடுகளைச் சேர்ந்த 79 அங்கத்தவர்கள் அவரது கோரிக்கையை மனப்பூர்வமாக ஆதரித்து ஒலிம்பிக் போட்டிகளை திரும்பவும் தொடக்கலாம் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாம். புரதான கால ஏற்பாட்டைப் போலவே நவீன ஒலிம்பிக் போட்டிகளும் நான்கு வருடங்களுக்கு ஒரு முறை நடத்தப்பட வேண்டும் என்றும் அந்த தீர்மானத்தில் முடிவெடுக்கப்பட்டது. அதன் பின் அகில உலக ஒலிம்பிக் சங்கம் (IOC)ஆரம்பிக்கப்பட்டு முதலாவது நவீன ஒலிம்பிக் போட்டி கிரேக்கத்தின் தலைநகரான ஏதென்ஸ் நகரிலேயே 1896 ஆம் ஆண்டு நடத்துவதற்கு முடிவு செய்யப்பட்டது.



இந்த முதல் நவீன ஒலிம்பிக் போட்டியில் 280 விளையாட்டு வீரர்கள் 13 நாடுகளிலிருந்து வந்து 43 வகையான போட்டிகளில் பங்காற்றினர். தடகள போட்டிகளோடு, நீச்சல்,ஜிம்னாஸ்டிக், துவிச்சக்கர வண்டியோட்டப் போட்டி,மல்யுத்தம், பளுதூக்கல், துப்பாக்கி சுடல், மற்றும் டென்னிஸ் போன்றவையும் இணைக்கப்பட்டன. அத்தனை விளையாட்டு வீரர்களும் ஆண்கள் என்பது குறிப்பிடத்தக்கது, கி.மு 330ல் கட்டப்பட்ட பனாத்தனிக் விளையாட்டு அரங்கை (Panathenaic Stadium) திரும்பவும் புதிப்பித்து 1896ம் ஆண்டின் தடகளப் போட்டிகளை அங்கேயே நடத்தப்பட்டனவாம்.

இந்த ஒலிம்பிக் போட்டிகளில் அமெரிக்க விளையாட்டு வீரர்கள் 12 போட்டிகளில் 9 போட்டிகளை வெற்றியீட்டினர், 1896ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியில் கி.மு 490 ஆம் ஆண்டு உரோமானியர்கள் பெர்ஸீயன்களை போரில் வென்ற வெற்றிச் செய்தியை மராத்தன் என்ற இடத்திலிருந்து ஏதென்ஸ் நகருக்கு 25 மைல் தொலைவை ஒடிச் சென்று சேர்ப்பித்த கிரேக்க போர்வீரனின் நினைவாக மரத்தான் என்ற ஓட்டப் போட்டியும் சேர்க்கப்பட்டது. 1924ம் ஆண்டு இந்த மராத்தன் ஓட்டப் பந்தயம் 26 மைலும் 385 யார்களுமாக விஸ்தரிக்கப்பட்டது. 1896 ஆம் ஆண்டின் முதலாவது மராத்தன் ஓட்டப் பந்தயத்தில் ஸ்பைரிடோன் லூயிஸ் (Spyridon Louis) என்ற கிரேக்க வீரர் வெற்றி பெற்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

1500 வருடங்களாக தடைசெய்யப்பட்டிருந்த ஒலிம்பிக் போட்டிகளை திரும்பவும் நடத்த பெருமுயற்சி எடுத்த பைரே டீ கௌபேர்ட்டின் (Pierre de Coubertin) அவர்களே முதலாவது தலைவராக அகில உலக ஒலிம்பிக் சங்கத்தில் நியமிக்கப்பட்டு எத்தனையோ பல இடர்களுக்குள்ளும், சிரமங்களுக்குமிடையில் ஒலிம்பிக் போட்டிகளை நடத்தினார் என்றால் மிகையாகாது. அந்த நேரங்களில் இந்த விளையாட்டுப் போட்டிகளைப் பற்றி உலக மக்களால் அதிகம் அறியப்படாமல் இருந்ததால் ஆரம்ப காலங்களில் பல சிரமங்களுக்கிடையில் தான் ஒலிம்பிக் போட்டிகள் நடந்தனவாம். 1924 ல் பாரிஸில் நடந்த ஒலிம்ப் போட்டிகளைத் தான் உத்தியோகபூர்வமான வெற்றிகரமான முழுமையான ஒலிம்பிக் போட்டிகள் எனச் சொல்லலாம். இதில் 3000 விளையாட்டு வீரர்கள் 100க்கும் மேற்பட்ட பெண் விளையாட்டு வீராங்கனைகள் உட்பட 44 நாடுகளிலிருந்து கலந்து கொண்டனர். அவ்வருடம் தான் முதலாவது பனிக்கால ஒலிம்பிக் போட்டிகளும் அறிமுகப்படுத்தப்பட்டன. 1925 ஆம் ஆண்டு ஒலிம்பிக் சங்கத்தின் முதல் தலைவரான பைரே டீ கௌபேர்ட்டின் (Pierre de Coubertin) ஓய்வு பெற்றார்.




இப்போது ஒலிம்பிக் போட்டிகள் உலகம் முழுவதும் எல்லோராலும் எதிர்பார்க்கப்படும் அதி முக்கிய அபிமான போட்டிகளில் முதன்மை பெற்று விளங்குகிறது. 2000ஆம் ஆண்டு அவுஸ்திரேலியாவின் சிட்னியில் நடந்த கோடை கால ஒலிம்பிக் போட்டிகளில் 10,000க்கும் மேற்ப்பட்ட விளையாட்டு வீரர்கள், 4000 பென் வீராங்கனைகள் உட்பட 200 நாடுகலிலிருந்து கலந்து கொண்டனர், 2004 ஆம் ஆண்டு திரும்பவும் கிரேக்கத்தின் தலைநகரான ஏதென்ஸில் நடத்தப்பட்டது, இதில் 11,000 விளையாட்டு வீரர்கள், 202 நாடுகளிலிருந்து கலந்து கொண்டனர். இந்த ஒலிம்பிக் போட்டியில் கிரேக்கத்தின் பெருமையை ஆராதிக்கும் முகமாக தட்டெறிதல் போட்டியை பண்டைய கிரேக்கத்தின் ஒலிம்பியா நகரில் நடத்தியது குறிப்பிடத்தக்கது. 2008ம் ஆண்டு சீனாவில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் நீச்சல் போட்டியில் 10 தங்கப் பதக்கங்களை வென்று அமெரிக்காவின் மைக்கல் பெல்ப்ஸ் என்பவர் சாதனை படைத்தார்.


ஒலிம்பிக் போட்டிகளை வெறும் விளையாட்டுப் போட்டிகளாக பார்க்காமல் கொஞ்சம் ஆழமாக சிந்தித்தால் இதே ஒலிம்பிக் போட்டிகள் பல வழிகளில் சர்வதேச அளவில் அளப்பரிய மாற்றங்களை ஏற்ப்படுத்த அல்லது அடையாளம் காட்ட வழிவகுத்தது என்றால் மிகையாகாது. உலக அளவில் பெண்ணின ஒடுக்கல், இன, நிற,மத வெறி போன்ற சமூகத்தின் கசடுகளை புறந்தள்ளிய ஒரு பாரிய நிகழ்வுகளாக ஒலிம்பிக் போட்டிகளை கருதலாம்




ஒடுக்கப்பட்ட பெண்ணினம் தனக்கான திறமைகளை வெளி உலகுக்கு அடையாளம் காட்ட ஒலிம்பிக் போட்டிகள் வழிகோலியது. 1900 ஆம் ஆண்டு முதன் முதல் ஒலிம்பிக் சர்வதேசப் போட்டிகளில் பெண்கள் விளையாட அனுமதிக்கப்பட்டது.



அந்த ஆண்டு சார்லஸ் கூப்பர் என்ற பெண் வீராங்கனை ஒலிம்பிக்கில் டென்னிஸ் விளையாட்டில் தங்கப்பதக்கம் பெற்ற முதல் பெண்ணானார்.


1948 ஆம் ஆண்டு நடந்த ஒலிம்பிக் போட்டியில் உயரம் தாண்டுதல் போட்டியில் தங்கப்பதக்கம் வென்று ஒலிம்பிக்கில் முதல் தங்கம் வென்ற ஆபிரிக்க -அமெரிக்க கறுப்பின பெண்மணி என்ற பெருமையை அலீஸ் கோச்மான்( Alice Coachman)என்ற வீராங்கனை சாதித்தார்.


1952 ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியில் போலியோ நோயினால் செயலிழந்த முழங்கால் குறிபாட்டுடன் ஒரு பெண் ஆண்களுடன் போட்டியிட்டு வெள்ளிப்பதக்கம் வென்றார். அவர் தான் லிஸ் கார்ட்டல் (Lis Hartel,) என்ற டென்மார்க் ஈக்குவெஸ்ட்டிரியன் (equestrian) (தமிழில் சரியன பதம் தெரியவில்லை) என்ற குதிரையேற்ற வீராங்கனை. அந் நாட்களில் இவ்விளையாட்டுப் போட்டியில் பெண்களுக்கான பிரிவு இருக்கவில்லை. ஆனால் பிரத்தியேகமாக தன்னை இதில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று இந்த பெண்மணியின் விண்ணப்பம் ஏற்றுகொள்ளப்பட்டு இப்போட்டியில் விளையாடிய ஆண்களுடன் இவரை போட்டியிட அனுமதியளிக்கப்பட்டது. இப்போட்டியின் இறுதிக்கட்டத்தில் இவர் குதிரையிலிருந்து கீழே தவறிவீழ்ந்ததால் தங்கப்பதக்கத்தை தவறவிட நேர்ந்தது. ஆனாலும் இவர் ஒருவர் தான் ஒலிம்பிக் வரலாற்றில் ஒலிம்பிக்கின் பதக்க மேடையை ஆண் விளையாட்டு வீரர்களுடன் பங்கிட்ட ஒரே ஒரு பெண்மணியாவார்.



மெக்சிக்கோ நாட்டில் 1968 ஆம் ஆண்டு தான் ஒலிம்பிக்கின் வரலாற்றில் முதன் முதலாக நோர்மா என்ரிக்குவெட்டா பாஸ்சிலியோ (Norma Enriqueta Basilio) என்ற மெக்சிக்கோ நாட்டுப் பெண் ஒலிம்பிக் தீபத்தை ஏற்றிய முதல் பெண் வீராங்கனை என்ற பெருமைக்குரியவரானார்.


முதன் முதலாக 1984 ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியில் தான் பெண்களுக்கான மராத்தன் ஓட்டப் போட்டி சேர்க்கப்பட்டது. இப்போட்டியில் தங்கப்பதக்கத்தை அ மெரிக்காவைச் சேர்ந்த ஜொவான் பெனொய்ட் ( Joan Benoit) என்ற பெண் பெற்றதன் மூலம் ஒலிம்பிக்கின் முதல் மராத்தன் வீராங்கனை என்ற பெருமையைப் பெற்றார்.

ஒலிம்பிக் போட்டிகள் பல சமயம் அரசியல், மனித உரிமை மீறல் போன்றவற்றுக்கு எதிரான எதிர்ப்பையும் பல சமயங்களில் காட்ட உதவியிருக்கிறது.

****


1936 ஆம் ஆண்டு அடல்ப் ஹில்டரின் ஆட்சிக்காலத்தில் ஜேர்மனியில் நடந்த ஒலிம்பிக் போட்டி உலகத்தின் கவனத்தை திசைதிருப்பிய ஒன்று. அகில உலக ஒலிம்பிச் சங்கத்தினதும் , மற்றைய நாடுகளினதும் வேண்டுகோளை ஹிட்லர் நிராகரித்து தனது நாஸிக் கொள்கையை அங்கும் நிலை கொள்ள முயன்ற ஒரு அடையாளம். ஹிட்லர் தனது நாட்டு வீரர்களின் வெற்றியை நாஸிக் வெற்றியாக உலகுக்கு காட்ட விரும்பினார். ஆனால் அமெரிக்காவின் ஜெஸி ஓவ்ன்ஸ் (Jesse Owens) என்னும் கறுப்பின வீரர் 4 தங்கப்பதக்கங்களை வென்றது ஹிட்லரின் முகத்தில் கரி பூசியதற்கு சம்மாக அவ் வெற்றி இன்றளவும் கருதப்படுகிறது. இப்போட்டியின் வெற்றி மூலம் ஜெஸி அடிடாஸ் கம்பனியின் விளம்பரதார மாடலாக பிரபலமானது மட்டுமல்ல இவர் தான் முதன் முதலாக விளம்பர உலகில் அடையாளம் காட்டப்பட்ட முதல் ஆபிரிக்க - அமெரிக்க கறுப்பின ஆணுமாவார். அவருடைய நான்கு தங்கப்பதக்கம் வென்ற சாதனையை 1984ஆம் ஆண்டு ஒலிம்பிக்கில் கார்ல் லூயிஸ் இதே போட்டிகளில் வென்று முறியடித்தார்.

1940 & 1944 ஆம் ஆண்டுகளில் நடக்க வேண்டிய ஒலிம்பிக் போட்டிகள் இரண்டாம் உலகப் போரின் காரணமாக நடைபெறவில்லை.



1968 ஆம் ஆண்டு மெக்சிக்கோவில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் வென்ற தடகள வீரர்களான டொமீ ஸ்மித் (Tommie Smith ) , ஜோன் கார்லோஸ்(John carlos) ஆகிய இருவரும் அமெரிக்காவில் அப்போது நடந்து கொண்டிருந்த நிறவெறிக்கும், கறுப்பினமக்களின் மனித உரிமை ஒடுக்கலுக்கும் எதிராக தமது ஆட்சேபத்தை அமெரிக்காவின் தேசிய கீதம் இசைக்கப்பட்ட போது பதக்க மேடையில் தெரிவித்தார்கள்.

ஒலிம்பிக் போட்டிகள் தற்போது ஊனமுற்றவர்களுக்காகவும் பிரத்தியேகமாக நடத்தப்படுவது எந்தவொரு மனிதப் பிறவியும் எத்தகைய வழியிலும் சாதிக்கும் வல்லமை படைத்தவர்கள் என்பதை நிரூபிக்க இது உதாரணமாக இருக்கின்றது எனலாம்.

இப்படி பல வழிகளிலும் சமூக விழிப்புணர்வுக்கு பெரிதும் வழிகோலும் இப்போட்டிகளுக்கு கூட தற்போது உலகமெங்கும் பரவியிருக்கும் பயங்கரவாதம் அச்சுறுத்தலாக இருப்பதையும் ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும். இருப்பினும்
விளையாட்டுத் துறை என்பது சர்வதேச அளவில் தேசப்பற்று ஒன்றை மட்டுமே முன்னிறுத்தி மற்றைய விரோதங்கள், வேற்றுமைகள், முரண்பாடுகளை கடந்த ஒரு அற்புதமான களம். நாட்டின் எல்லைகளைக் காக்கும் இராணுவவீரர்களுக்கு அடுத்தபடியான கௌரவத்தையும் மரியாதையையும் பெற வேண்டியவர்கள் விளையாட்டு வீரர்கள் என்பது என் தனிப்பட்ட கருத்து. இத்தகைய வீரர்களை உலகுக்கு சாதனையாளராக பரிமளிக்கச் செய்வதில் ஒலிம்பிக் போட்டிகள் முக்கிய பங்காற்றுகிறது என்பது தெள்ளத்தெளிவு. இளைய சமுதாயத்தினரிடம் உத்வேகத்தையும், சாதிக்கும் இலட்சிய நோக்கையும் உருவாக்குவதில் இத்தகைய விளையாட்டுப் போட்டிகள் முக்கிய இடம் வகிக்கின்றன.



« Last Edit: January 07, 2012, 03:07:11 AM by Global Angel »