FTC Forum

தமிழ்ப் பூங்கா => வாழ்வியல் கருவூலங்கள் ( நூல் ) => Topic started by: MysteRy on February 25, 2013, 11:08:11 PM

Title: ~ அவ்வையார் நூல்கள் (Avvaiyar Books) ~
Post by: MysteRy on February 25, 2013, 11:08:11 PM
அவ்வையார் நூல்கள் (Avvaiyar Books)

(http://i1033.photobucket.com/albums/a419/tabitha_057/avvaiyar.jpg)


அவ்வையார் என்ற பெயரில் தமிழகத்தில் ஒரு பெண் பால் புலவர் இருந்துள்ளனர் என்பது வெளிப்படையான உண்மை. ஆனால் அவ்வையார் என்ற பெயரில் நான்கு புலவர்கள் பல்வேறு காலக்கட்டங்களில் இருந்திருப்பதாக வரலாற்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

முதலாவதாக வாழ்ந்தவர் சங்ககால அவ்வையார். இவர் தொண்டை நாட்டு மன்னர் அதியமானுக்கு நல்ல நண்பர். நீண்டநாள் வாழ்வைத் தரும் நெல்லிக்கனியை மன்னர் அதியமான் தான் உண்ணாது அவ்வை நீண்டநாள் வாழவேண்டும் எனக் கருதி கொடுத்தார் என்பது வரலாற்றுக்கதை. இந்த அவ்வையார் சங்க இலக்கியத்தில் 59 பாடல்களைபாடியுள்ளார்.

பக்திக்கால இறுதியில் விநாயகர் அகவலைப் பாடியவர் இரண்டாவது அவ்வையார். இவர் பாடிய விநாயகர் அகவலைத்தான் விநாயகரை வழிபடுபவர்கள் முதல் நூலாகக் கொள்வர். இது மிகுந்த பக்திச் சுவையுடைய நூல். ஆழ்ந்தபொருளுடையது. அதற்குப் பலர் பல விளக்கங்கள் எழுதியுள்ளனர்.

மூன்றாவது அவ்வையார், ஆத்திசூடி, கொன்றைவேந்தன், மூதுரை, நல்வழி போன்ற நீதி நூல்களைப் பாடியவர். சங்ககால அவ்வையார் அரசர்களோடு பழகி வாழ்ந்தவர். இரண்டாம் அவ்வையார் பக்தர்களோடு வாழ்ந்தவர். மூன்றாம் அவ்வையார் குழந்தைகளோடு வாழ்ந்தவர். குழந்தைகளுக்காக நீதி நூல்களை எழுதியவர். சிறுவயதில் மனப்பாடம் செய்து கொண்டு, வயதான பின்பு பொருளைத் தெளிவாக உணரும் நிலையில் அமைந்தவை இவர் பாடல்கள்.

நான்காவது அவ்வையார் தனிப்பாடல்கள் மிகுதியாகப் பாடியவர். முருகன் குழந்தை நிலையில் சுட்ட பழம் வேண்டுமா? சுடாத பழம் வேண்டுமா? என்று அவ்வைப்பாட்டியிடம் கேட்க, அவன் மரத்தை உலுப்ப, பழங்கள் மண்ணில் விழ, பழத்திலுள்ள மண்ணை நீக்க அவ்வை ஊத, 'பழம் சுடுகிறதா? பாட்டி, என்ற கதையுடன் தொடர்புடைய அவ்வையார். இவர் மிகச் சிறந்த கருத்துள்ள தனிப்பாடல்களைப் பாடியுள்ளார்.


அவ்வையாரின் நூல்களில் 7 மட்டுமே கிடைத்துள்ளன. அவை :

ஆத்திசூடி (Atticcuti)
கொன்றை வேந்தன் (Konraiventan)
மூதுரை (Moodurai)
நல்வழி (Nalvazhi)
ஞானக்குறள் (Gnanakural)
விநாயகர் அகவல் (Vinayakar Akaval)
நாலு கோடிப் பாடல்கள் (4 Kodi Padalkal)
Title: Re: ~ அவ்வையார் நூல்கள் (Avvaiyar Books) ~
Post by: MysteRy on February 25, 2013, 11:23:31 PM
ஆத்திசூடி (Atticcuti)

(http://www.netanimations.net/Moving-animated-eyes-finger-pointing-down.gif)


http://www.friendstamilchat.com/forum/index.php?topic=1030.0
Title: Re: ~ அவ்வையார் நூல்கள் (Avvaiyar Books) ~
Post by: MysteRy on February 25, 2013, 11:30:27 PM
கொன்றை வேந்தன் (Konraiventan)

(http://www.netanimations.net/Moving-animated-eyes-finger-pointing-down.gif)


http://www.friendstamilchat.com/forum/index.php?topic=1043.0
Title: Re: ~ அவ்வையார் நூல்கள் (Avvaiyar Books) ~
Post by: MysteRy on February 25, 2013, 11:32:37 PM
மூதுரை (Moodurai)

(http://www.netanimations.net/Moving-animated-eyes-finger-pointing-down.gif)


http://www.friendstamilchat.com/forum/index.php?topic=1044.0
Title: Re: ~ அவ்வையார் நூல்கள் (Avvaiyar Books) ~
Post by: MysteRy on February 26, 2013, 12:22:45 AM
நல்வழி (Nalvazhi)

வாழ்க்கைக்கு நல்ல வழியைக் காட்டும் நூல் என்றதால் இப்பெயர் பெற்றது. கடவுள் வாழ்த்து உட்பட 41 வெண்பாக்களையுடைய நூல்.



கடவுள் வாழ்த்து


பாலும் தெளிதேனும் பாகும் பருப்புமிவை
நாலும் கலந்துனக்கு நான் தருவேன்-கோலம்செய்
துங்கக் கரிமுகத்துத் தூமணியே நீ எனக்குச்
சங்கத் தமிழ் மூன்றும் தா.


நூல்



புண்ணியம் ஆம் பாவம் போம் போன நாள் செய்த அவை
மண்ணில் பிறந்தார்க்கு வைத்த பொருள்- எண்ணுங்கால்
ஈதொழிய வேறில்லை; எச்சமயத்தார் சொல்லும்
தீதொழிய நன்மை செயல்.    1

சாதி இரண்டொழிய வேறில்லை; சாற்றுங்கால்
நீதி வழுவா நெறிமுறையின் -மேதினியில்
இட்டார் பெரியோர்; இடாதார்இழி குலத்தோர்
பட்டாங்கில் உள்ள படி.    2

இடும்பைக்கு இடும்பை இயல்பு உடம்பு இது அன்றே
இடும் பொய்யை மெய் என்று இராதே - இடும் கடுக
உண்டாயின் உண்டாகும் ஊழில் பெரு வலி நோய்
விண்டாரைக் கொண்டாடும் வீடு.    3

எண்ணி ஒரு கருமம் யார்க்கும் செய்ய ஒண்ணாது
புண்ணியம் வந்து எய்த போது அல்லால்-கண் இல்லான்
மாங்காய் விழ எறிந்த மாத்திரைக் கோல் ஒக்குமே
ஆங்காலம் ஆகும் அவர்க்கு.    4

வருந்தி அழைத்தாலும் வாராத வாரா
பொருந்துவன போமின் என்றால் போகா-இருந்து ஏங்கி
நெஞ்சம் புண்ணாக நெடுந்தூரம் தாம் நினைத்து
துஞ்சுவதே மாந்தர் தொழில்.    5

உள்ளது ஒழிய ஒருவர்க்கு ஒருவர் சுகம்
கொள்ளக் கிடையா குவலயத்தில் வெள்ளக்
கடல் ஓடி மீண்டு கரையேறினால் என்
உடலோடு வாழும் உயிர்க்கு.    6

எல்லாப் படியாலும் எண்ணினால் இவ்வுடம்பு
பொல்லாப் புழுமலி நோய்ப் புன்குரம்பை - நல்லார்
அறிந்திருப்பார் ஆதலினால் ஆம் கமல நீர் போல்
பிரிந்திருப்பர் பேசார் பிறர்க்கு.    7

ஈட்டும் பொருள் முயற்சி எண்ணிறந்த ஆயினும் ஊழ்
கூட்டும்படி அன்றிக் கூடாவாம்-தேட்டம்
மரியாதை காணும் மகிதலத்தீர் கேண்மின்
தரியாது காணும் தனம்.    8

ஆற்றுப் பெருக்கற்று அடிசுடும் அந்நாளும் அவ்ஆறு
ஊற்றுப் பெருக்காம்உலகு ஊட்டும்-ஏற்றவர்க்கு
நல்ல குடிப் பிறந்தார் நல்கூர்ந்தார் ஆனாலும்
இல்லை என மாட்டார் இசைந்து.    9

ஆண்டாண்டு தோறும் அழுது புரண்டாலும்
மாண்டார் வருவாரோ? மாநிலத்தீர் - வேண்டாம்
"நமக்கும் அது வழியே; நாம் போம் அளவும்
எமக்கு என்" என்று இட்டு உண்டு இரும்.    10

ஒரு நாள் உணவை ஒழி என்றால் ஒழியாய்
இரு நாளுக்கு ஏல் என்றால் ஏலாய்-ஒரு நாளும்
என் நோவு அறியாய் இடும்பை கூர் என் வயிறே!
உன்னோடு வாழ்தல் அரிது.    11

ஆற்றங் கரையின் மரமும் அரசு அறிய
வீற்றிருந்த வாழ்வும் வீழும் அன்றே - ஏற்றம்
உழுது உண்டு வாழ்வதற்கு ஒப்பு இல்லை கண்டீர்
பழுது உண்டு வேறு ஓர் பணிக்கு.    12

ஆவாரை யாரே அழிப்பார்? அது அன்றிச்
சாவாரை யாரே தவிர்ப்பவர்? ஓவாமல்
ஐயம் புகுவாரை யாரே விலக்குவார்?
மெய் அம்புவி அதன் மேல்.    13

பிச்சைக்கு மூத்தகுடி வாழ்க்கை பேசுங்கால்
இச்சை பல சொல்லி இடித்து உண்கை - சீச்சி
வயிறு வளர்க்கைக்கு மானம் அழியாது
உயிர் விடுகை சால உறும்.    14

சிவாய நம என்று சிந்தித்து இருப்போர்க்கு
அபாயம் ஒரு நாளும் இல்லை - உபாயம்
இதுவே; மதியாகும்; அல்லாத எல்லாம்
விதியே மதியாய் விடும்.    15

தண்ணீர் நில நலத்தால் தக்கோர் குணம் கொடையால்
கண் நீர்மை மாறாக் கருணையால் - பெண்ணீர்மை
கற்பு அழியா ஆற்றால்; கடல் சூழ்ந்த வையகத்துள்
அற்புதமாம் என்றே அறி.    16

செய் தீவினை இருக்கத் தெய்வத்தை நொந்தக்கால்
எய்த வருமோ இரு நிதியம்?-வையத்து
அறும் பாவம் என்ன அறிந்து அன்று இடார்க்கு இன்று
வெறும் பானை பொங்குமோ மேல்!    17

பெற்றார் பிறந்தார் பெரு நாட்டார் பேருலகில்
உற்றார் உகந்தார் என வேண்டார்-மற்றோர்
இரணங் கொடுத்தால் இடுவர்; இடாரே
சரணம் கொடுத்தாலும் தாம்.    18

சேவித்தும் சென்று இரந்தும் தெண் நீர்க்கடல் கடந்தும்
பாவித்தும் பாராண்டும் பாட்டு இசைத்தும் போவிப்பம்
பாழின் உடம்பை வயிற்றின் கொடுமையால்
நாழி அரிசிக்கே நாம்.    19

அம்மி துணையாக ஆறு இழிந்தவாறு ஒக்கும்
கொம்மை முலை பகர்வார் கொண்டாட்டம்-இம்மை
மறுமைக்கும் நன்று அன்று மாநிதியம் போக்கி
வறுமைக்கு வித்தாய் விடும்.    20

நீரும் நிழலும் நிலம் பொதியும் நெல் கட்டும்
பேரும் புகழும் பெரு வாழ்வும் - ஊரும்
வருந்திருவும் வாழ் நாளும் வஞ்சமில்லார்க்கு என்றும்
தரும் சிவந்த தாமரையாள் தான்.    21

பாடுபட்டுத் தேடிப் பணத்தைப் புதைத்து வைத்துக்
கேடுகெட்ட மானிடரே கேளுங்கள்;-கூடுவிட்டு இங்கு
ஆவிதான் போயின பின்பு யாரே அனுபவிப்பார்
பாவிகாள் அந்தப் பணம்?    22

வேதாளம் சேருமே வெள் எருக்குப் பூக்குமே
பாதாள மூலி படருமே - மூதேவி
சென்றிருந்து வாழ்வளே சேடன் குடிபுகுமே
மன்றோரம் சொன்னார் மனை.    23

நீறில்லா நெற்றிபாழ்; நெய்யில்லா உண்டிபாழ்
ஆறில்லா ஊருக்கு அழகுபாழ் - மாறில்
உடன்பிறப் பில்லா உடம்புபாழ்; பாழே
மடக்கொடி இல்லா மனை.    24

ஆன முதலில் அதிகம் செலவானால்
மானம் அழிந்து மதிகெட்டுப் - போனதிசை
எல்லார்க்கும் கள்ளனாய் ஏழ்பிறப்பும் தீயனாய்
நல்லார்க்கும் பொல்லனாம் நாடு.    25

மானம் குலம் கல்வி வண்மை அறிவுடைமை
தானம் தவம் உயர்ச்சி தாளாண்மை - தேனின்
கசிவந்த சொல்லியர் மேல் காமுறுதல் பத்தும்
பசி வந்திடப் பறந்து போம்.    26

ஒன்றை நினைக்கின் அதுஒழிந்திட் டொன்றாகும்
அன்றி அதுவரினும் வந்தெய்தும்-ஒன்றை
நினையாத முன் வந்து நிற்பினும் நிற்கும்
எனையாளும் ஈசன் செயல்.    27

உண்பது நாழி உடுப்பது நான்கு முழம்
எண்பது கோடி நினைந்து எண்ணுவன - கண் புதைந்த
மாந்தர் குடி வாழ்க்கை மண்ணின் கலம்போலச்
சாந்துணையும் சஞ்சலமே தான்.    28

மரம் பழுத்தால் வௌவாலை வாவென்று கூவி
இரந்தழைப்பார் யாவருமங் கில்லை - சுரந்தமுதம்
கற்றா தரல்போல் கரவாது அளிப்பரேல்
உற்றார் உலகத் தவர்.    29

தாம்தாம்முன் செய்தவினை தாமே அனுபவிப்பார்
பூந்தா மரையோன் பொறிவழியே - வேந்தே
ஒறுத்தாரை என்செயலாம் ஊரெல்லாம் ஒன்றா
வெறுத்தாலும் போமோ விதி.    30

இழுக்கு உடைய பாட்டிற்கு இசை நன்று; சாலும்
ஒழுக்கம் உயர்குலத்தின் நன்று - வழுக்குடைய
வீரத்தின் நன்று விடாநோய்; பழிக்கஞ்சாத்
தாரத்தின் நன்று தனி.    31

ஆறிடும் மேடும் மடுவும்போ லாம்செல்வம்
மாறிடும் ஏறிடும் மாநிலத்தீர் - சோறிடும்
தண்ணீரும் வாரும்; தருமமே சார்பாக
உண்ணீர்மை வீறும் உயர்ந்து.    32

வெட்டனவை மெத்தனவை வெல்லாவாம்; வேழத்தில்
பட்டுருவும் கோல் பஞ்சில் பாயாது - நெட்டிருப்புப்
பாரைக்கு நெக்குவிடாப் பாறை பசுமரத்தின்
வேருக்கு நெக்கு விடும்.    33

கல்லானே ஆனாலும் கைப்பொருள்ஒன் றுண்டாயின்
எல்லாரும் சென்றாங் கெதிர்கொள்வர் - இல்லானை
இல்லாளும் வேண்டாள்; மற்றீன்றெடுத்த தாய்வேண்டாள்
செல்லாது அவன்வாயிற் சொல்.    34

பூவாதே காய்க்கும் மரமும் உள மக்களும் உளும்
ஏவாதே நின்று உணர்வார் தாம் உளரே - தூவா
விரைத்தாலும் நன்றாகா வித்தெனவே பேதைக்கு
உரைத்தாலும் தோன்றாது உணர்வு.    35

நண்டுசிப்பி வேய்கதலி நாசமுறும் காலத்தில்
கொண்ட கருவளிக்கும் கொள்கைபோல் - ஒண்தொடீ
போதம் தனம்கல்வி போன்றவரும் காலம் அயல்
மாதர்மேல் வைப்பார் மனம்.    36

வினைப்பயனை வெல்வதற்கு வேதம் முதலாம்
அனைத்தாய நூலகத்தும் இல்லை - நினைப்பதெனக்
கண்ணுறுவது அல்லால் கவலைப் படேல் நெஞ்சேமெய்
விண்ணுறுவார்க் கில்லை விதி.    37

நன்றென்றும் தீதென்றும் நானென்றும் தானென்றும்
அன்றென்றும் ஆமென்றும் ஆகாதே - நின்றநிலை
தானதாம் தத்துவமாம் சம்பறுத்தார் யாக்கைக்குப்
போனவா தேடும் பொருள்.    38

முப்பதாம் ஆண்டளவில் மூன்றற்று ஒருபொருளைத்
தப்பாமல் தன்னுள் பெறானாயின் - செப்பும்
கலையளவே ஆகுமாம் காரிகையார் தங்கள்
முலையளவே ஆகுமாம் மூப்பு.    39

தேவர் குறளும் திருநான் மறைமுடிவும்
மூவர் தமிழும் முனிமொழியும் - கோவை
திருவா சகமும் திருமூலர் சொல்லும்
ஒருவாசகம் என்று உணர்.    40



நல்வழி முற்றிற்று.
Title: Re: ~ அவ்வையார் நூல்கள் (Avvaiyar Books) ~
Post by: MysteRy on February 26, 2013, 11:59:16 AM
ஞானக்குறள் (Gnanakural)

(http://www.netanimations.net/Moving-animated-eyes-finger-pointing-down.gif)


http://www.friendstamilchat.com/forum/index.php?topic=11966.0
Title: Re: ~ அவ்வையார் நூல்கள் (Avvaiyar Books) ~
Post by: MysteRy on February 26, 2013, 01:27:19 PM
விநாயகர் அகவல் (Vinayakar Akaval)

பக்திக்கால இறுதியில் வெளியான நூல். இந்த நூலைத்தான் விநாயகரை வழிபடுபவர்கள் முதல் நூலாகக் கொள்வர். இது மிகுந்த பக்திச் சுவையுடைய நூல். ஆழ்ந்தபொருளுடையது. இதற்குப் பலர் பல விளக்கங்கள் எழுதியுள்ளனர்



நூல்


சீதக் களபச் செந்தா மரைப்பூம்
பாதச் சிலம்பு பல்லிசை பாட
பொன்னரை ஞாணும் பூந்துகில் ஆடையும்
வன்ன மருங்கில் வளர்ந்தழ(கு) எறிப்பப் .   4

பேழை வயிறும் பெரும்பாரக் கோடும்
வேழ முகமும் விளங்குசிந் தூரமும்
அஞ்சு கரமும் அங்குச பாசமும்
நெஞ்சில் குடிகொண்ட நீல மேனியும் .   8

நான்ற வாயும் நாலிரு புயமும்
மூன்று கண்னும் மும்மதச் சுவடும்
இரண்டு செவியும் இலங்குபொன் முடியும்
திரண்டமும் புரிநூல் திகழ்ஒளி மார்பும் .   12

குளிர்ச்சியும் நறுமணமும் உடைய செந்தாமரைப் பூவின் நிறத்தையுடைய பாதங்களில் அணிந்துள்ள சிலம்பு பலவிதமான இசை ஒலிகளை எழுப்ப, இடுப்பினிலே பொன்னாலான அரைஞாண் கயிறும், அழகிய வெண்பட்டு ஆடையும் அழகிற்கு மேலும் அழகேற்ற, பெரிய பேழை போன்ற வயிறும், பெரிய உறுதியான தந்தமும், யானை முகமும், நெற்றியில் ஒளிவீசும் குங்குமப் பொட்டும், ஐந்து கைகளும், அவற்றில் இரண்டில் அங்குசம், பாசம் ஆகிய ஆயுதங்களும், மிகப் பெரிய வாயும், நான்கு பருத்த புயங்களும், மூன்று கண்களும், மூன்று மதங்களின் கசிவினால் உண்டாண சுவடு போன்ற அடையாளங்களும், இரண்டு காதுகளும், ஒளிவீசுகின்ற பொன்கிரீடமும், மூன்று நூல்கள் சேர்த்து திரித்து செய்யப்பட்ட முப்புரி நூல் அலங்கரிக்கும் அழகிய ஒளிவீசுகின்ற மார்பும்..

சொற்பதம் கடந்த துரியமெய்ஞ் ஞான
அற்புதம் நின்ற கற்பக் களிரே!
முப்பழம் நுகரும் மூஸிக வாகன
இப்பொழுது என்னை ஆட்கொள வேண்டித் .   16

தாயாய் எனக்குத் தானெழந்(து) அருளி
மாயாப் பிறவி மயக்கம் அறுத்துத்
திருந்திய முதல்ஐந் தெழுத்தும் தெளிவாய்ப்
பொருந்தவே வந்தென் உளந்தனில் புகுந்து .   20

குருவடி வாகிக் குவலயந் தன்னில்
திருவடி வைத்துத் திறம் இதுபொருள்என
வாடா வகைதான் மகிழ்ந்தெனக் கருளிக்
கோடா யுதத்தால் கொடுவினை களைந்தே.   24

சொற்களால் விபரிக்க முடியாத துரியம் எனப்படும் நிலையில் உண்மையான ஞானமானவனே, மா,பலா,வாழை ஆகிய மூன்று பழங்களையும் விரும்பி உண்பவரே, மூஞ்சூறினை வாகனமாக கொண்டவரே, இந்தக்கணமே என்னை ஏற்றுக்கொள்ள வேண்டி, தாயைப்போல் தானாக வந்து எனக்கு அருள் புரிபவரே, மாயமான இந்த பிறவிக்கு காரணமான அறியாமையை அறுத்து எறிபவரே, திருத்தமானதும் முதன்மையானதும் ஐந்து எழுத்துகளின் ஒலிகளின் சேர்க்கையினால் ஆனதுமான பஞசாட்சர மந்திரத்தின் பொருளை தெளிவாக விளங்க என்னுடைய உள்ளத்தில் புகுந்து, குரு வடிவெடுத்து மிக மேன்மையான தீட்சை முறையான திருவடி தீட்சை மூலம் இந்த பூமியில் உண்மையான நிலையான பொருள் எது என்று உணர்த்தி, துன்பமில்லாமல் என்றும் இன்பத்துடன் இருக்கும் வழியை மகிழ்ச்சியுடன் எனக்கு அருள் செய்து, கோடாயுதத்தால் என்னுடைய பாவ வினைகளை அகற்றி..

உவட்டா உபதேசம் புகட்டிஎன் செவியில்
தெவிட்டாத ஞானத் தெளிவையுங் காட்டி
ஐம்புலன் தன்னை அடக்கும் உபாயம்
இன்புறு கருணையின் இனிதெனக் கருளிக் .   28

கருவிகள் ஒடுங்கும் கருத்தினை அறிவித்(து)
இருவினை தன்னை அறுத்திருள் கடித்து
தலமொரு நான்கும் தந்தெனக் கருளி
மலமொரு மூன்றின் மயக்கம் அறுத்தே.    32

ஒன்பது வாயில் ஒருமந் திரத்தால்
ஐம்புலக் கதவை அடைப்பதுங் காட்டி
ஆறா தாரத்து அங்குச நிலையும்
பேறா நிறுத்திப் பேச்சுரை அறுத்தே .   36

வெளியாய் உபதேசிக்கக் கூடாத உபதேசத்தை எனது காதுகளில் உபதேசித்து, எவ்வளவு அனுபவித்தாலும் திகட்டாத ஞானத்தை தெளிவாய் எனக்கு காட்டி, தங்கள் இனிய கருணையினால் மெய், வாய், கண், மூக்கு செவி ஆகிய ஐந்து பொறிகளினால் ஆன செயல்களை அடக்குகின்ற வழியினை இனிதாக எனக்கு அருளி, மேலே சொன்ன ஐந்து பொறிகளும் ஒடுங்கும் கருத்தினை அறிவித்து, நல்வினை தீவினை என்ற இரண்டு வினைகளையும் நீக்கி அதனால் ஏற்பட்ட மாய இருளை நீக்கி, 1) சாலோகம் 2) சாமீபம் 3) சாரூபம் 4) சாயுச்சியம் என்ற நான்கு தலங்களையும் எனக்கு தந்து, 1) ஆணவம் 2) கன்மம் 3) மாயை என்ற மூன்று மலங்களினால் ஏற்படக்கூடிய மயக்கத்தை அறுத்து, உடலில் இருக்கும் ஒன்பது துவாரங்களையும், ஐந்து புலன்களையும் ஒரே மந்திரத்தால் அடைக்கும் வழியினைக் காட்டி, 1) மூலாதாரம் 2) சுவாதிட்டானம் 3) மணிபூரகம் 4) அநாகதம் 5) விசுத்தி 6) ஆக்ஞை என்ற ஆறு ஆதாரங்களில் நிலை நிறுத்தி அதன் பயனாக பேச்சில்லா மோன நிலையை அளித்து,

இடைபிங், கலையின் எழுத்தறி வித்துக்
கடையில் சுழிமுனைக் கபாலமும் காட்டி
மூன்றுமண் டலத்தின் முட்டிய தூணின்
நான்றெழு பாம்பின் நாவில் உணர்த்திக்.    40

குண்டலி அதனில் கூடிய அசபை
லிண்டெழு மந்திரம் வெளிப்பட உரைத்து
மூலா தாரத்து மூண்டெழு கனலைக்
காளால் எழுப்பும் கருத்தறி வித்தே .   44

அமுத நிலையும் ஆதித்தன் இயக்கமும்
குமுத சகாயன் குணத்தையும் கூறி
இடச்சக் கரத்தின் ஈரெட்டு நிலையும்
உடற்சக் கரத்தின் உறுப்பையுங் காட்டிச்.    48

இடகலை, பிங்கலை எனப்படும் இடது, வலது பக்க நாடிகளின் மூலம் உள்ளிழுக்கப்படும் காற்றானது நடு நாடியான சுழுமுனை வழியே கபாலத்தையடையும் மந்திர மார்க்கத்தைக் காட்டி, 1) அக்னி 2) சூரியன் 3) சந்திரன் ஆகிய மூன்று மண்டலங்களின் தூண் போன்ற சுழுமுனையின் மூலம் நான்றெழு பாம்பான குண்டலனி சக்தியை எழுப்பி, அதனில் ஒலிக்கும் பேசா மந்திரமான அசபை மந்திரத்தை வெளிப்படையாகச் சொல்லி, மூலாதாரத்தில் மூண்டு எழுக்கூடிய அக்னியை மூச்சுக்காற்றினால் எழுப்பும் முறையை தெரிவித்து, குண்டலினி சக்தி உச்சியிலுள்ள சகஸ்ரதள சக்கரத்தை அடையும் போது உருவாகும் அமிர்தத்தின் நிலையையும் சூரிய நாடி, சந்திர நாடி ஆகியவற்றின் இயக்கத்தையும், குணத்தையும் கூறி, இடையிலிருக்கும் சக்கரமான விசுத்தி சக்கரத்தின் பதினாறு இதழ்களின் நிலையையும், உடலில் உள்ள எல்லா சக்கரங்களினதும் அமைப்புகளையும் காட்டி,

சண்முக தூலமும் சதுர்முக சூட்சமும்
எண்முக மாக இனிதெனக்(கு) அருளிப்
புரியட்ட காயம் புலப்பட் எனக்குத்
தெரிஎட்டு நிலையும் தெரிசனப் படுத்தி .   52

கருத்தினில் கபால வாயில் காட்டி
இருத்தி முத்தி இனிதெனக்கு அருளி
என்னை அறிவித்து எனக்கருள் செய்து
முன்னை வினையின் முதலைக் களைந்து .   56

வாக்கும் மனமும் இல்லா மனோலயம்
தேக்கியே என்றன் சிந்தை தெலிவித்து
இருள்வெளி இரண்டுக்கும் ஒன்றிடம் என்ன
அருள்தரும் ஆனந்தத்(து)- அழுத்திஎன் செவியில்.   60

உருவமான தூலமும் அருவமான சூட்சுமமும் எனக்கு எளிதில் புரியும்படி அருளி, மூலாதாரம் முதல் சகஸ்ரதளம் வரையிலான எட்டு நிலைகளையும் எனக்கு தெரிசனப்படுத்தி அதன் மூலம் உடலின் எட்டு தன்மைகளையும் புலப்படுத்தி கபால வாயிலை எனக்கு காட்டித் தந்து, சித்தி முத்திகளை இனிதாக எனக்க அருளி, நான் யார் என்பதை எனக்கு அறிவித்து, பூர்வ ஜென்ம கன்ம வினையை அகற்றி, சொல்லும் மனமும் இல்லாத பக்குவத்தை எனக்கு தந்து அதன் மூலம் எண்ணங்களை தெளிவாக்கி, இருளும் ஒளியும் இரண்டிற்கும் ஒன்றே அடிப்படையானது என்பதை உணர்த்தி, அருள் நிறைந்த ஆனந்தத்தை உன் காதுகளில் அழுத்தமாக கூறி

எல்லை இல்லா ஆனந்தம் அளித்து
அல்லல் களைந்தே அருள்வழி காட்டிச்
சத்தத்தின் உள்ளே சதாசிவம் காட்டிச்
சித்தத்தின் உள்ளே சிவலிங்கம் காட்டி.    64

அணுவிற்கு அணுவாய் அப்பாலுக்(கு) அப்பாலாய்க்
கணுமுற்றி நின்ற கரும்புள்ளே காட்டி
வேடமும் நீறும் விளங்க நிறுத்திக்
கூடுமெய்த் தொண்டர் குழாத்துடன் கூட்டி.    68

அஞ்சக் கரத்தின் அரும்பொருள் தன்னை
நெஞ்சக் கருத்தின் நிலையறிவித்துத்
தத்துவ நிலையைத் தந்தெனை ஆண்ட
வித்தக விநாயக! விரைகழல் சரணே .   72

அளவில்லாத ஆனந்தத்தை தந்து, துன்பங்கள் எல்லாவற்றையும் அகற்றி, அருள் வழி எது எனக்காட்டி, சத்-சித் அதாவது உள்ளும், புறமும் சிவனைக் காட்டி, சிறியனவற்றிற்கெல்லாம் சிறியது பெரியனவற்றிற்கு எல்லாம் பெரியது எதுவோ அதை கணுமுற்றி நின்ற கரும்பு போல என் உள்ளேயே காட்டி, சிவவேடமும் திருநீறும் விளங்கும் நிலையிலுள்ள உள்ள உண்மையான தொண்டர்களுடன் என்னையும் சேர்த்து, அஞ்சக் கரத்தினுடைய உண்மையான பொருளை எனது நெஞ்சிலே அறிவித்து, உண்மை நிலையை எனக்குத் தந்து என்னை ஆட்கொண்ட ஞான வடிவான வினாயகப் பெருமானே மணம் கமழும் உமது பாதார விந்தங்கள் சரணம்.


விநாயகர் அகவல் முற்றிற்று.
Title: Re: ~ அவ்வையார் நூல்கள் (Avvaiyar Books) ~
Post by: MysteRy on February 26, 2013, 01:31:38 PM
நாலு கோடிப் பாடல்கள் (4 Kodi Padalkal)

ஔவையார் ஒரு சமயம் சில புலவர்களைக் காணச் சென்றபோது அப்புலவர்கள் கவலைதோய்ந்த முகத்தோடு காணப்படவே அதன் காரணத்தை வினவினார்.

"நாளைப் பொழுது விடிவதற்குள் நான்கு கோடிப் பாடல்கள்" இயற்றவேண்டும் என மன்னவன் ஆணையிட்டுள்ளான். அதனால் தான் கவலையடைந்துள்ளோம்" என்று அவர்கள் கூறினராம்.

இதைக்கேட்ட ஔவையார், "இவ்வளவுதானா, இதற்காகவா கவலை கொண்டுள்ளீர்கள்" என்று கூறி கோடி என்ற வார்த்தையை அடக்கிய 4 பாடல்களைக் சொன்னார். இதுவே நாலு கோடிப் பாடல்கள் எனப்படும்.



நூல்



"மதியாதார் முற்றம் மதித்தொரு கால்சென்று
மிதியாமை கோடி பெறும்"


"உண்ணீர் உண்ணீரென்று உபசரியார் தம்மனையில்
உண்ணாமை கோடி பெரும்"


"கோடி கொடுப்பினும் குடிப்பிறந்தார் தம்முடனே
கூடுதலே கோடி பெறும்"


"கோடானு கோடி கொடுப்பினுந் தன்னுடைநாக்
கோடாமை கோடி பெறும்"




நாலு கோடிப் பாடல்கள் முற்றிற்று.