தமிழ்.வெப்துனியா.காம்: எதிர்கால பாதுகாப்பிற்காக சேமித்து வைப்பதற்கு பதிலாக பலரும் வீட்டு மனைகளை வாங்கிப் போடுகிறார்கள். இப்படி வீட்டு மனைகளை வாங்குவது ஒரு சேமிப்பாகவும், எதிர்கால பாதுகாப்பாகவும் செய்வது என்பது எந்த அளவிற்கு சரியானது?
ஜோதிட ரத்னா முனைவர் க.ப.வித்யாதரன்: பூமிக்காரகன் என்று செவ்வாயைச் சொல்கிறோம். அதே செவ்வாயைத்தான் தைரியத்திற்கும் உரிய கிரகம் என்று சொல்கிறோம். பூமி என்பது என்ன? அது ஒரு அழியா சொத்து, அசையா சொத்து (Immovable Property), அதனால் எல்லோருக்குமே அதன் மீது விருப்பம் உண்டாகிறது. அது ஒரு வகையில் நல்லதும் கூட. அதைப் பார்க்கும் போது, இது நம்முடையது என்று அவர்களுக்கு உளவியல் அடிப்படையில் தைரியம், தன்னம்பிக்கை இதெல்லாம் வருகிறது.
இருந்தாலும் தேவைகளுக்குத் தகுந்த மாதிரி ஒன்று, இரண்டு வாங்கி வைத்துக் கொண்டால் நல்லது. ஏக்கர் கணக்கில் வாங்கிப் போட்டு மடக்கி வைப்பது என்பது சரியல்ல. ஆக மொத்தத்தில், வருங்கால நோக்கில் பார்க்கும் போதும், பூமியினுடைய விலை முன்பு போலவே அதிகமாக உயருவதற்கான சாத்தியக் கூறுகள் இருக்கிறது. அதனால் அதில் முதலீடு செய்வதில் ஒன்றும் தவறு இல்லை.