FTC Forum

தமிழ்ப் பூங்கா => பொதுப்பகுதி => Topic started by: Global Angel on September 09, 2011, 05:10:21 PM

Title: வெற்றி-தன்னம்பிக்கை.
Post by: Global Angel on September 09, 2011, 05:10:21 PM
ஒரு மாபெரும் வெற்றிக்கதை  
                                                             (http://i1027.photobucket.com/albums/y338/jimikki/andrew-carnegie.jpg)

கொடுமையான வறுமையில் வாழ்க்கையை ஆரம்பித்து உலகப் பெரும் பணக்காரராக முன்னேறுவது அரசியலில் ஈடுபடாத ஒரு மனிதருக்கு அவ்வளவு சுலபமானதல்ல. ஆனாலும் மன உறுதியும், கூர்மையான அறிவும், புத்திசாலித்தனமான உழைப்பும் இருந்து விதியும் அனுகூலமாக இருந்து அப்படி சாதனை படைத்தவர்கள் இருந்திருக்கிறார்கள். அதெல்லாம் வெற்றிக் கதைகளே. ஆனால் அந்த வெற்றியின் பலனை தான் முழுமையாக அனுபவித்து மீதியைத் தன் சந்ததிக்கு விட்டுப் போவதாகவே அந்த வெற்றியாளர்களின் வாழ்க்கைக் கதைகள் இருந்திருக்கின்றன. தர்ம காரியங்களுக்காக ஒரு குறிப்பிட்ட பெரும் தொகையைத் தந்தவர்கள் அதிலும் உண்டு. ஆனால் வாழ்க்கையில் பெருமளவு செல்வம் சேர்த்து ஒரு கட்டத்தில் தன் வியாபாரத்தை நிறுத்தி விட்டு சேர்த்த செல்வத்தை எல்லாம் பொது நலத்திற்காக செலவு செய்வதற்காக மீதமுள்ள வாழ்க்கையை அர்ப்பணித்துக் கொண்ட ஒரு மாமனிதர் இந்த உலகில் வாழ்ந்திருக்கிறார் என்றால் அது ஒருவராகத் தான் இருக்க முடியும். அவர் தான் ஆண்ட்ரூ கார்னீஜி (1835-1919).


ஒரு ஏழை கைத்தறி நெசவாளரின் மூத்த மகனாக ஸ்காட்லாந்தில் பிறந்தவர் ஆண்ட்ரூ கார்னீஜி. தொழிற்சாலைகள் பெருகிய பின் கைத்தறிக்கு வேலை இல்லாத போது கைத்தறிகளை விற்று விட்டு பிழைப்பதற்காக அமெரிக்கா சென்றது அவரது குடும்பம். அப்போது ஆண்ட்ரூ கார்னீஜிக்கு வயது பன்னிரண்டு. அவருடைய தந்தை ஆரம்பத்தில் அமெரிக்காவிலும் தனக்குத் தெரிந்த நெசவு வேலையையும் பின் மேசை விரிப்புத் துணி விற்பனையாளராகவும் வேலை செய்ய, அவர் தாயோ செருப்புத் தைக்கும் வேலையைச் செய்தாள். ஆனாலும் இருவர் சம்பாத்தியமும் அமெரிக்காவில் அவர்கள் குடும்பம் நடத்தப் போதுமானதாக இருக்கவில்லை. படிப்பதில் மிகவும் ஆர்வம் இருந்த ஆண்ட்ரூ கார்னீஜியை படிக்க வைக்க அந்தப் பெற்றோர் எவ்வளவோ விரும்பிய போதிலும் அவர்கள் நிதி நிலைமை அமெரிக்காவில் அவர் படிப்பைத் தொடர அனுமதிக்கவில்லை. ஆண்ட்ரூ கார்னீஜியைப் பஞ்சாலையில் வாரக்கூலி ஒரு டாலர் 20 செண்ட்ஸ்களுக்கு வேலைக்குச் சேர்த்தார்கள்.


படிக்கத் திறமையும், ஆர்வமும் அதிகமாக இருந்த போதிலும் விளையாட்டுப் பருவத்தில் வேலைக்குப் போக நேர்ந்த அவலத்தை நினைத்து அவர் வருத்தத்தில் ஆழ்ந்து விடவில்லை. புன்முறுவலுடன் அதிகாலைக் குளிரில் எழுந்து காலை ஆறு மணிக்கு வேலைக்குப் போவார். எந்த நிலையிலும் புலம்பிக் கொண்டே இருக்காத நல்ல வேலைக்காரனிற்கு அதற்கு மேலான வேலை விரைவாகவே கிடைக்கும் என்ற அனுபவ உரைக்கு ஏற்ப சிறிது காலத்திலேயே அவருக்குத் தந்தி நிலையத்தில் வேலை கிடைத்தது. வாரம் ஒன்றிற்கு இரண்டரை டாலர் சம்பளத்தில் ஆண்ட்ரூ கார்னீஜிக்கு வேலை கிடைத்த போது அவருடைய பெற்றோர் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவில்லை.


தந்திப் பையனின் கையாளாக வேலைக்குச் சென்ற ஆண்ட்ரூ கார்னீஜி தன் சுறுசுறுப்பாலும், கடின உழைப்பாலும், தனக்கு விதிக்கப்பட்ட வேலை தவிர மற்ற வேலைகளை அறிந்து கொள்ள காட்டிய ஆர்வத்தாலும் படிப்படியாக முன்னேறினார். தந்தியை இயக்குவோனாக மாதம் ஒன்றிற்கு 25 டாலர் சம்பாதிக்க ஆரம்பித்த போது அவருக்கு வயது பதினாறு. வேலைப் பளுவின் நடுவிலும் நூல்களைப் படித்தல், கட்டுரை எழுதி பத்திரிக்கைகளுக்கு அனுப்புதல் சொற்பொழிவாற்றுதல் போன்றவற்றில் ஈடுபடவும் செய்தார்.


இவரது சுறுசுறுப்பாலும், திறமைகளாலும் கவரப்பட்டு பென்சில்வேனியா புகைவண்டிச் சாலை செயலாளராக இருந்த ஸ்காட் என்பவர் தங்கள் புகை வண்டிச்சாலையில் தந்தி இயக்கும் வேலைக்கு மாதம் 35 டாலர் ஊதியம் தருவதாகச் சொல்லி அழைத்தார். ஆண்ட்ரூ கார்னீஜி அதை ஏற்றுக் கொண்டு புகைவண்டிச் சாலையில் பணிக்குச் சென்றார். அங்கும் அவர் சிறப்பாகப் பணியாற்றினார்.


ஒரு சமயம் விபத்தொன்றின் காரணமாக எல்லாப் பாதைகளிலும் புகைவண்டிகள் ஓடாது நிற்பதாகச் செய்தி வந்தது. அந்தப் புகைவண்டிகள் எல்லாம் எப்படிச் செயலாற்ற வேண்டும் என்று உத்தரவிட வேண்டிய பொறுப்புடைய ஸ்காட் அவர்களோ அந்த சமயத்தில் அங்கு இல்லை. அவர் வர கால தாமதமானதால் எல்லா புகைவண்டிகளும் முடங்கி அங்கங்கே அப்படியே நின்றிருந்தன. புத்தி கூர்மையால் என்ன செய்ய வேண்டும் என்று அறிந்திருந்தாலும் ஸ்காட்டின் அதிகாரத்தை எடுத்துக் கொண்டு உத்தரவிடுவது தவறு என்பது ஒருபுறம், ஏதாவது சிக்கலாகி புகைவண்டிகள் ஒன்றுக்கொன்று மோதிக் கொண்டால் பெரும்பழி வருவதோடு வேலையும் போய் விடும் என்பதும் ஒருபுறமாக அவர் மனதில் சிந்தனைகள் எழுந்தன. ஆனால் ஆளுமைத் திறம் படைத்த கார்னீஜி ஆனது ஆகட்டும் என்று ஸ்காட் அவர்களின் பெயரில் அப்படிச் செய்யுங்கள், இப்படிச் செய்யுங்கள் என்று கற்றை கற்றையாக தந்திகள் அனுப்பி வேலையைத் துவக்கி விட்டார்.


ஸ்காட் அலுவலகத்திற்கு வந்தவுடன் தயக்கத்துடன் நடந்ததைக் கூறினார். ஒன்றும் சொல்லாமல் ஸ்காட் அவர் அனுப்பிய தந்திகளை ஒவ்வொன்றாகப் படித்துப் பார்த்தார். எல்லாமே அறிவு பூர்வமானதாகவும், சமயோசித முடிவுகளாகவும் இருந்தன. பாராட்டிய ஸ்காட் பின்னர் தன் விடுமுறை நாட்களில் ஆண்ட்ரூ கார்னீஜியிடமே தன் பொறுப்புகளை ஒப்படைத்துச் செல்ல ஆரம்பித்தார். கூடிய சீக்கிரமே ஆண்ட்ரூ கார்னீஜி அந்த புகைவண்டிச் சாலையின் உதவித் தலைவரானார். வருமானமும் பல மடங்கு அதிகரித்தது. பணத்தைக் கவனமாக சேமித்து அதைக் கொண்டு இலாபம் அதிகம் தரும் பங்குகளை அவர் வாங்கி வருமானத்தை மேலும் அதிகமாக்கிக் கொண்டார்.


அக்காலத்தில் பெரும்பாலும் மரப்பாலங்களே அதிகம் இருந்தன. இன்னும் சில ஆண்டுகளில் மரப்பாலங்கள் எல்லாம் நீக்கப்பட்டு அவை இருந்த இடங்களில் இரும்புப் பாலங்கள் போடப்படும் என்பதைத் தன் தொலைநோக்கறிவால் உணர்ந்த ஆண்ட்ரூ கார்னீஜி தன் முப்பதாவது வயதில் பென்சில்வேனியா புகைவண்டிச்சாலையில் இருந்து விலகி சில கூட்டாளிகளுடன் சேர்ந்து இரும்புத் தொழிலில் ஈடுபட்டார். அவருக்கு 33 வயதான போது இரும்புத் தொழிலில் இருந்தும் மற்ற பங்குகளில் இருந்தும் சேர்ந்து ஆண்டொன்றிற்கு ஐம்பதாயிரம் டாலர்கள் வருமானம் வர ஆரம்பித்தது.


அப்போது இரும்பிலிருந்து எஃகு செய்யும் முறை கண்டுபிடிக்கப்பட்டது. இரும்பு உடைந்து விடும் போது எஃகு உறுதியானதாகவும், வளையக் கூடிய தன்மை உடையதாகவும் இருந்தது. உடனே எதிர்காலம் இனி எஃகில் தான் இருக்கிறது என்று உணர்ந்த ஆண்ட்ரூ கார்னிஜி எஃகுத் தொழிலில் ஈடுபட எண்ணினார். நல்ல வருமானம் தந்து கொண்டிருந்த இரும்புத் தொழிலை விட்டு புதிய எஃகுத் தொழிலில் ஈடுபட அவருடைய பங்காளிகள் விரும்பவில்லை. ஆனால் ஆண்ட்ரூ கார்னிஜி வேறு கூட்டாளிகளை சேர்த்துக் கொண்டு தைரியமாக எஃகுத் தொழிலில் இறங்கினார். எத்தொழிலைத் தொடங்கினாலும் அந்த முழுவேகத்தோடு ஈடுபட்ட அவர் திறமை வாய்ந்த ஊழியர்களுக்குக் கை நிறைய சம்பளமும், பெரிய பதவியும் தந்து அவர்களைத் திருப்தியாக வைத்துக் கொண்டார். சிலருக்கு தன் தொழில் லாபத்தில் பங்கும் தந்து உற்சாகப்படுத்தினார். ”உயர்வான சரக்கு, மலிவான விலை, அதிகமான உற்பத்தி” என்பது அவரது தாரக மந்திரமாக இருந்தது. வெற்றி மேல் வெற்றியைக் குவித்த அவர் உலகப் பெரும் பணக்காரர் என்ற அந்தஸ்தை விரைவிலேயே பெற்றார்.


பணம் ஒரு போதை வஸ்து. அதை சுவைத்தவன் பெரும்பாலும் அதற்கு அடிமையாகி விடாமல் இருக்க முடிவதில்லை. அதை மேன்மேலும் அதிகரித்துக் கொண்டே போவதில் சலித்துப் போவதில்லை. அனுபவித்ததில் திருப்தியும் அடைந்து விடுவதில்லை. ஆனால் ஆண்ட்ரூ கார்னிஜியின் வெற்றிக் கதையில் பெரிய திருப்பமே அவரால் தொழிலிற்கு தன் 65 ஆம் வயதில் முழுக்குப் போட முடிந்தது தான். யாரும் எதிர்பாராத வண்ணம் தன் தொழிலை நல்ல தொகைக்கு விற்று விட்டார். மீதமுள்ள வாழ்க்கையில் சேர்த்த செல்வத்தை பொது நலனுக்காக அறப்பணிகளில் செலவிட ஆரம்பித்தார். நல்ல காரியங்களுக்கு தன் செல்வத்தை வாரி வாரி வளங்கினார். ஆனால் தன் தனிப்பட்ட செலவுகளிலோ கடைசி வரை சிக்கனமாகவே இருந்தார். பத்தில் ஒன்பது பகுதி சொத்தைப் பொது நலனுக்காகவே செலவிட்டு மகிழ்ந்த அவர் தன் 84ம் வயதில் உலகை விட்டுப் பிரிந்தார். அவர் இறந்து விட்ட போதிலும் அவர் ஆரம்பித்து வைத்த அறப்பணிகள் இன்றும் செவ்வனே நடந்து வருகின்றன.


அவருடைய மரணத்திற்குப் பின் அவருடைய உடைமைகளை எடுத்துப் பார்த்த போது அவர் தன் 33 ஆம் வயதில் எழுதியிருந்த ஒரு குறிப்பு இருந்தது. அதில் தம்முடைய தேவைக்கு மேற்பட்ட பொருள்களை எல்லாம் பொதுநலனுக்காக செலவிடுவதாக உறுதி கூறி தன்னுடைய கையொப்பத்தை இட்டிருந்தார். ஆனால் வாழ்ந்த நாள் வரை அந்தக் குறிப்பை அவர் யாருக்கும் காட்டியதே இல்லை. இப்படிப்பட்ட மகத்தான உறுதிமொழியை இளமையிலேயே எடுத்துக் கொண்டது மட்டுமல்லாமல் எடுத்துக் கொண்ட உறுதிமொழியின்படி கடைசி வரை வாழ்ந்தே காட்டினார் என்பது தான் அவர் அடைந்த வெற்றிகளின் சிகரமாக இருந்தது.

Title: Re: வெற்றி-தன்னம்பிக்கை.
Post by: Global Angel on September 09, 2011, 05:19:28 PM
எல்லாம் தகரும் தருணங்களில்....!  

விதி வலியது. அது சில சமயங்களில் நம் வாழ்க்கையை அப்படியே புரட்டிப் போட்டு விடும். அந்த சமயங்களில், இருந்தது எல்லாம் தகர்ந்து போய் ஒரு பூஜ்ஜியமாய், எதிர்கால வாழ்க்கையே ஒரு கேள்விக்குறியாய் போய் விடுவதுண்டு. இனி ஒன்றுமில்லை, வாழ ஒரு வழியுமில்லை என்கிற நிலைக்கு வந்து நமக்கு நேர்ந்ததை ஜீரணிக்கவும் முடியாமல் நம்மை திகைக்க வைத்து விடுவதும் உண்டு. அது போன்ற ஒரு நிலை பிரபல ஆங்கில எழுத்தாளர் ஒருவரின் நல்ல கதை ஒன்றில் முக்கியப் பாத்திரத்திற்கு வந்து விடுகிறது.

அவன் ஒரு பெரிய தேவாலயத்தைப் பராமரிக்கிற வேலையில் இருந்தான். சிறு வயதிலிருந்தே அங்கே வேலை பார்த்துக் கொண்டிருந்த அவன் வயோதிகப் பருவத்தையும் அடைந்து விட்டிருந்தான். அந்த தேவாலயத்திற்கு ஒரு பாதிரியார் புதிதாகப் பொறுப்பேற்று வந்தார். அவர் தேவாலயத்தைப் பராமரிக்கிறவன் எழுதப் படிக்கத் தெரிந்தவனாக இருக்க வேண்டும் என்று உறுதியாக எண்ணினார். ஆனால் இவனுக்கோ எழுதப்படிக்கத் தெரியாது.

அவர் அவனை அழைத்து ஆறு மாத காலத்திற்குள் அவன் எழுதப் படிக்கக் கற்றுக் கொள்ள வேண்டும் என்றும், இல்லா விட்டால் அவன் வேலையை விட்டு நீக்கப்படுவான் என்றும் கறாராகச் சொல்லி விட்டார். இந்த வயதில் இனி எழுதப்படிக்கக் கற்றுக் கொள்வது கஷ்டம் என்று அவன் அவரிடம் மன்றாடிப் பார்த்தான். கல்வியறிவு மிக முக்கியம் என்று நினைத்த அவர் அவன் சொன்னதைக் காதில் போட்டுக் கொள்ளவே இல்லை. கற்றுக் கொள் இல்லையேல் வேலை இல்லை என்று முடிவாகவே சொல்லி விட்டார். ஆனால் அவனால் கற்றுக் கொள்ள முடியவில்லை. கடைசியில் வேலையில் இருந்து நீக்கப்பட்டான்.

அவனுக்கு அந்த தேவாலய வேலையைத் தவிர வேறு எந்த வேலையும் தெரியாது. வேலையை இழந்து தேவாலயத்தை விட்டு வெளியே வந்த அவன் மனதில் இருந்த துக்கத்திற்கு அளவில்லை. பெரிய சேமிப்பும் கிடையாது. அவனை ஆதரிக்கிறவர்களும் இல்லை. கவலையுடன் அவன் தன் வீடு நோக்கி நடக்க ஆரம்பித்தான். நடந்து செல்கையில் சுருட்டுப் பிடிக்கும் பழக்கம் உள்ள அவனுக்கு சுருட்டுப் பிடிக்க வேண்டும் என்று தோன்றியது. தன்னுடைய பையில் துழாவினான். சுருட்டு இல்லை.

சரி கடையில் இருந்து வாங்கிக் கொள்ளலாம் என்று எண்ணி தேடி நடந்தான். சுமார் இரண்டு மைல் தூரம் நடந்தும் அந்தப் பகுதியில் அவனால் சுருட்டு விற்கும் கடை ஒன்றைக் கூடப் பார்க்க முடியவில்லை. தன்னைப் போல் எத்தனை பேர் இந்தப் பகுதியில் சுருட்டுக் கடை இல்லாமல் அவதிப்பட்டிருப்பார்கள் என்று எண்ணிய அவன் உடனடியாகத் தன்னிடம் இருந்த சிறிய சேமிப்பில் அந்தப் பகுதியில் சிறியதாக ஒரு சுருட்டுக் கடை வைத்தான்.

அந்தப் பகுதியில் சுருட்டுக் கடை வேறு எதுவும் இல்லாததால் அவனுக்கு வியாபாரம் நன்றாக நடந்தது. கடையை விரிவுபடுத்தினான். வேறு பொருள்களையும் சேர்த்து விற்றான். அவன் விரைவிலேயே பெரிய பணக்காரன் ஆகி விட்டான். வங்கியிலும் அவன் கணக்கில் பெரும் தொகையை வைத்திருந்தான்.

தன் வங்கிக் கணக்கை சரி பார்க்கிற விஷயமாக ஒரு நாள் அவன் வங்கிக்குச் சென்றிருந்த போது வங்கி அறிக்கை ஒன்றில் அவன் கையெழுத்து இட வேண்டி இருந்தது. அவன் தனக்கு எழுதப்படிக்கத் தெரியாது என்று சொல்லி அதைப் படித்துக் காட்டும் படி வங்கி அதிகாரியைக் கேட்டுக் கொண்டான்.

திகைப்படைந்த அதிகாரி “எழுதப்படிக்கத் தெரியாமலேயே இவ்வளவு பெரிய பணக்காரர் ஆகி விட்டீர்களே, தெரிந்திருந்தால் இன்னும் என்ன ஆகியிருப்பீர்களோ” என்று சொன்னார்.

“எழுதப்படிக்கத் தெரிந்திருந்தால் தேவாலயத்தில் பணியாளனாகவே இருந்திருப்பேன்” என்றான் அவன்.

இது என் மனதில் நின்ற ஒரு கதை. நான் ஆரம்பத்தில் சொன்னது போல தேவாலயப் பணி போன போது அவன் வாழ்க்கையில் எல்லாமே தகர்ந்து போய் எதிர்காலமே கேள்விக் குறியாக நின்றது. படிக்கத் துவங்கும் வயதோ, அதற்குரிய திறமைகளோ இல்லாத அந்த முதியவன் வாழ்க்கையே அஸ்தமனமாகி விட்டது என்று நினைத்திருந்தால் அது ஆச்சரியமல்ல. தேவாலயப் பணி தவிர வேறு வேலை தெரியாத அவனுடைய அந்த நேரத்து நிலைமை பரிதாபகரமானது தான். ஆனால் சுருட்டு பிடிக்க நினைத்து அதை வாங்க கடை ஒன்றும் அப்பகுதியில் இல்லாத போது ’இந்த சின்ன விஷயத்தில் கூட என் விதி எனக்கு சதி செய்கிறதே. எல்லாம் என் நேரம்” என்று வருந்தி நிற்பதற்குப் பதிலாக அந்த சூழ்நிலையில் வாழ்க்கையின் அடுத்த நிலைக்குக் கிடைத்த அருமையான வாய்ப்பாக அவன் பயன்படுத்திக் கொண்டது அவனுடைய புத்திசாலித்தனம்.

இது போன்ற சூழ்நிலைகள் பலருக்கு வரலாம். நல்லதாக, சௌகரியமான ஒரு வேலையில் பல வருடங்கள் வேலை செய்து அதிலேயே வாழப் பழகிய பின் எதிர்பாராமல் அந்த வேலையைப் பறி கொடுக்க நேரிடலாம். அப்படி ஒரு நிலை வரும் என்று சிறிதும் எதிர்பார்த்திராத போது அது ஏற்படுத்தும் எதிர்காலப் பயம் சாதாரணமானதல்ல. நின்று கொண்டிருக்கும் தரையோடு எல்லாம் தகர்வது போலக் கூட சிலர் உணரக்கூடும். ஆனால் அது போன்ற சந்தர்ப்பங்களில் சில உண்மைகளை நினைவு வைத்திருப்பது நல்லது.

உலகில் நாம் பிறந்திருப்பது ஒரு வேலையை மட்டுமே நம்பி அல்ல. ஒரு வேலையோ, ஒரு உதவியோ நம்மிடமிருந்து பறிக்கப்படும் போது வாழ்க்கையே பறிக்கப்பட்டு விடுவது போல உணர்வது உடனடி மனித சுபாவம் என்றாலும் அதை அப்படியே நம்பி ஸ்தம்பித்து விடுவது விவேகமல்ல. இறைவன் ஒரு கையால் நம்மிடமிருந்து ஒன்றைப் பறிக்கையில் இன்னொரு கையால் இன்னொரு நல்ல சந்தர்ப்பத்தை நீட்டாமல் இருப்பதில்லை. எனவே ஒன்று பறிக்கப்படும் போது கண்களை மூடிக்கொண்டு எல்லாம் அஸ்தமித்து விட்டது என்று முடிவுக்கு வருவதற்கு பதிலாகக் கண்களைத் திறந்து அந்த இன்னொரு சந்தர்ப்பம் கண்டிப்பாக இருந்தாக வேண்டும் என்ற நம்பிக்கையோடு சுற்றும் முற்றும் பார்ப்பது அவசியம்.

ஒரு தம்ளரில் தண்ணீர் நிரம்பி இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம். அதில் பாலை நிரப்ப வேண்டுமென்றால் நீங்கள் அந்தத் தண்ணீரைக் கொட்டியே தீர வேண்டும். பின்னர் தான் அந்த தம்ளரில் பாலை நிரப்ப முடியும். அப்படி தண்ணீரைக் கொட்டும் போது அதை ஒரு இழப்பாக நாம் கருதினால் எப்படி அது அறிவீனமாய் இருக்குமோ அது போல தான் சில சில்லறை இழப்புகளை நாம் பேரிழப்பாகக் கருதுவதும். அதை இழக்க வைத்து கடவுள் நம்மிடம் நிரப்ப முன் வருவதென்ன என்ற கவனமாகப் பார்த்தால் கண்டிப்பாக உங்களால் அதற்கு கண்டிப்பாக நன்றி சொல்ல முடியும்.

நாம் முன்பு பார்த்த கதையில் தேவாலயப் பணியாளன் தனக்கு தெரிந்த ஒரே வேலையை இழந்ததும், தம்ளரில் இருந்த தண்ணீர் கொட்டப்பட்டது போல உண்மையில் நல்ல நிகழ்வே. ஏனென்றால் அப்படி இழக்காமல் இருந்திருந்தால் அதை விட பன்மடங்கு மேலான உன்னதமான ஒரு நிலையை அவன் அடைந்திருக்க முடியாது.

எனவே எல்லாம் தகரும் தருணங்களில் நிலைகுலைந்து போய் விடாதீர்கள். நடப்பதை ஜீரணிக்க முடியாமல் திண்டாடாதீர்கள். எதையும் நம்பி யாரும் இல்லை என்று தைரியமடையுங்கள். இறைவன் ஒன்றை எடுத்துக் கொண்டால் இன்னொன்றைத் தராமலிருக்க மாட்டான் என்ற நம்பிக்கையை வைத்திருங்கள். அமைதியாக அந்த இன்னொன்றைத் தேடுங்கள். அந்த நேரங்களில் அமைதியிழக்காமல், நம்பிக்கை இழக்காமல் நீங்கள் அப்படித் தேடுவீர்களானால் பெறுவது இழப்பதற்கு முன்னிருந்த நிலையை விட உயர்வான நிலையாகவே இருக்கும், அல்லது உயர்வான நிலைக்குப் போகும் பாதையின் துவக்கமாக இருக்கும்.!
Title: Re: வெற்றி-தன்னம்பிக்கை.
Post by: Global Angel on September 10, 2011, 07:15:59 PM
பயத்தை வெல்வது எப்படி?  

                                                                                 

(http://i1027.photobucket.com/albums/y338/jimikki/conquer-fear.jpg)பயம் மனித உணர்ச்சிகளில் மிக இயல்பானது. அது தேவையானதும் கூட. பல சந்தர்ப்பங்களில் அது நம் பாதுகாப்பிற்கு உதவுகிறது. முட்டாள்தனமாகவும், கண்மூடித் தனமாகவும் நாம் நடந்து கொள்ளாமல் இருக்க உதவுகிறது. ஆபத்தான சூழ்நிலைகளில் அஜாக்கிரதையாய் இருந்து விடாமல் நம்மைத் தடுக்கிறது. எனவே தான் “அஞ்சுவது அஞ்சாமை பேதைமை” என்றார் திருவள்ளுவர்.

பலரும் குற்றங்களில் ஈடுபடாமல் இருக்க முக்கியக் காரணம் தண்டனைக்குப் பயந்து தான். அந்தப் பயம் இல்லா விட்டால் சமூகத்தில் சீரழிவே ஏற்படும். எனவே பயப்பட வேண்டியதற்கு பயப்பட்டுத் தான் ஆக வேண்டும். தவறுகள் செய்ய அஞ்சவே வேண்டும். விளைவுகளை எண்ணிப் பார்க்காமல் ஆபத்தான செயல்களில் ஈடுபட பயப்படுவதே புத்திசாலித்தனம். குற்றங்களில் ஈடுபட அஞ்சவே வேண்டும். இதில் எல்லாம் பயம் ஏற்படுவது இயற்கை நமக்கு அளித்திருக்கும் பாதுகாப்பு அரணே. தோன்றியபடியெல்லாம் நடந்து கொள்ளாமல் தடுத்து நம்மை சிந்திக்க வைப்பதால், நம் வேகத்தைப் பல சந்தர்ப்பங்களில் கட்டுப்படுத்துவதால் பயம் நமக்கு நன்மையை செய்கிறது என்பதில் சந்தேகமேயில்லை.

ஆனால் பயம் ஒரு எல்லையை மீறும் போது, அறிவு சாராமல் இருக்கும் போது அது நமக்கு நன்மையை விட அதிக தீமையையே செய்வதாகிறது. அந்த சமயங்களில் அது பாதுகாப்பு அரணாக இருப்பதற்குப் பதிலாக அடிமைச்சங்கிலியாக மாறி நம்மை செயலிழக்க வைத்து விடுகிறது.

நம்மை செயலிழக்க வைக்கும் பயத்திற்கு மிக முக்கிய காரணம் விளைவுகளைக் குறித்து நமக்கு ஏற்படும் விபரீதக் கற்பனைகளே. என்ன எல்லாம் நேரக் கூடும் என்று ஒருவன் கற்பனைக் குதிரையைத் தட்டி விடும் போது அவன் மனம் வரக் கூடிய பயங்கர விளைவுகளை எல்லாம் பட்டியல் இட ஆரம்பித்து விடுகிறது. இப்படி எல்லாம் ஆனால் என்ன செய்வது என்று யோசிக்க ஆரம்பிக்கும் போது பயம் விஸ்வரூபம் எடுக்க ஆரம்பித்து விடுகிறது. சமாளிப்பது எப்படி என்று தெரியாமல் அவன் ஸ்தம்பித்துப் போகிறான்.


அதே போல் புதியதாக ஒன்றைத் தொடங்கும் முன் மற்றவர்கள் என்ன நினைப்பார்களோ என்கிற பயம், குறைத்து மதிப்பிட்டு விடுவார்களோ என்கிற பயம், தோற்று விட்டால் என்ன செய்வது என்கிற பயம் ஏற்பட்டு அந்த செயலை ஆரம்பிக்கவே விடாமலும் செய்து விடுகின்றது. வெற்றிக்காகவே முயல்கிறோம் என்றாலும் தோல்வி வெட்கப்பட வேண்டிய ஒன்றல்ல.

உலகில் மிக உயர்ந்த வெற்றிகளைக் குவித்த வெற்றியாளர்களை ஆராய்ந்தவர்கள் அவர்கள் கூட 60 சதவீத முயற்சிகளில் தான் வெற்றி அடைந்து இருக்கிறார்கள் என்று தெரிவிக்கிறார்கள். அதாவது நாம் போற்றும் பெரிய வெற்றியாளர்களே பத்து முயற்சிகளில் நான்கு முயற்சிகளில் தோற்றுப் போகிறார்கள் என்றால் தோல்வி சாதாரணமான ஒன்று தானே. அதில் வெட்கித் தலைகுனிய என்ன இருக்கிறது?

இரண்டாம் உலகப்போருக்கு முன்னால் அமெரிக்கா பொருளாதார நிலையில் மிகவும் சீரழிவை சந்திக்க வேண்டி வந்தது. வேலையில்லா திண்டாட்டம், வங்கிகளில் பணமில்லாமை எல்லாம் மக்கள் மனதில் தங்கள் எதிர்காலத்தைப் பற்றி பெரியதொரு பயத்தை ஏற்படுத்தியது. அப்போதைய ஜனாதிபதி பொருளாதாரத்தில் பட்டம் பெற்றவர். ”இப்படிப்பட்டவராலேயே நம் நாட்டின் இன்றைய நிலையைத் தவிர்க்க முடியவில்லையே, இனி நம் எதிர்காலம் என்ன?” என்ற பயம் மக்களிடம் பரவி இருந்தது.

அந்த சமயத்தில் தான் ஃப்ராங்க்ளின் டிலானோ ரூஸ்வெல்ட் அமெரிக்க அதிபராகப் பதவியேற்றார். அவர் தன் நாட்டு மக்களுக்கு ஆற்றிய முதல் உரையில் சொன்ன செய்தி வரலாற்று சிறப்பு மிக்கது. “நாம் பயப்பட வேண்டிய ஒரே விஷயம் பயமே. ஏனெனில் அந்த இனம் புரியாத, ஆதாரமற்ற, உண்மையைச் சார்ந்திராத பயம் நம் பின்னடைவை மீறி முன்னேற விடாமல் நம்மை செயலிழக்க வைப்பதில் வல்லதாக இருக்கிறது”

அவர் அதிபராக இருந்த காலத்தில் இரண்டாம் உலகப் போரையும் மீறி அமெரிக்கா பொருளாதாரத்தில் முன்னேறியதோடு வல்லரசு நாடாகவும் உருமாறியது. அதற்கு மிக முக்கிய காரணம் பயத்தை நிராகரித்து தைரியத்தைத் துணை கொண்டு செயல்படும் ஒரு தலைமை அந்த நாட்டிற்கு இருந்தது தான் என்பதில் சந்தேகம் இல்லை.

அதெல்லாம் சரி, பயம் இயல்பாகவே வந்து விடுகிறதே, அதை விலக்கி வெற்றி பெறுவது எப்படி என்று கேட்போருக்கு சில ஆலோசனைகள்-

முதலில் பயத்திற்கான காரணங்கள் கற்பனையா இல்லை உண்மை தானா
என்று அலசுங்கள். அந்த காரணங்கள் உண்மைக்குப் புறம்பான அனுமானத்தின் அடிப்படையில் ஏற்பட்டவையாக இருந்தால் உறுதியான மனத்தோடு புறக்கணியுங்கள். அந்த கற்பனை காரணங்களிலும், அனுமானங்களிலும் அதிக நேரம் எண்ணங்களைத் தங்க விடாதீர்கள். ஏனென்றால் அதிக காலம் அந்த எண்ணங்களிலேயே இருந்தால் அதையே உண்மை என மனம் நம்ப ஆரம்பித்து விடும். பின் பயம் நம்மை ஆட்கொள்ளவும் ஆரம்பித்து விடும்.

ஒருவேளை அந்தக் காரணங்கள் கற்பனை அல்ல, உண்மையின் அடிப்படையில் தான் எழுந்தவை என்றானால் அந்தக் காரணங்களை அங்கீகரியுங்கள். உண்மையை புறக்கணிப்பது எக்காலத்திலும் நல்லதல்ல. ஆனால் பயத்தினால் செயலிழப்பதும் புத்திசாலித்தனமல்ல என்பதை மறந்து விடாதீர்கள். பயப்படும் படியான விளைவுகளையும், சூழலையும் மாற்ற என்ன செய்ய வேண்டும் என்பதை அறிவுபூர்வமாக சிந்தியுங்கள்.

மனம் உடனடியாக அந்த செயலை செய்யாமல் இருப்பதே சிறந்தது என்று உடனடியாகச் சொல்லும். அந்த செயல் தேவையற்றதாகவும், எவ்விதத்திலும் நம் முன்னேற்றத்திற்கு உதவாததாகவும் இருந்தால் இரண்டாவது சிந்தனையே தேவையில்லை. அச்செயலைத் தவிர்ப்பது புத்திசாலித்தனம். ஆனால் அந்த செயல் நம்மை நல்ல சூழலுக்கு மாற்ற உதவுவதாகவும், உண்மையான முன்னேற்றத்திற்கு உதவக்கூடியதாகவும் இருந்தால் செயல்படாமல் இருப்பது
ஒரு புத்திசாலித்தனமான தீர்மானம் அல்ல என்பதை உணருங்கள். அதிகம் பாதிக்கப்படாமல் செயலைச் செய்து முடிக்கும் வழிகளை சிந்தியுங்கள். இந்த சூழ்நிலைகளை சமாளித்து வென்றவர்கள் என்ன செய்தார்கள், எப்படி சமாளித்தார்கள் என்றும் கவனியுங்கள். அவர்களிடமிருந்து கற்றுக் கொள்ளுங்கள்.

தோல்வியைப் பற்றிய பயம் என்றால் ஒரு உண்மையைத் திரும்பத் திரும்ப மனதில் பதியுங்கள். ”இந்த உலகில் எதிலுமே தோல்வி அடையாதவன் இது வரை தோன்றவில்லை. இனி தோன்றப் போவதுமில்லை”. நீங்களும் விதிவிலக்கல்ல என்பதை உணருங்கள். முன்பு கூறியது போல மாபெரும் வெற்றியாளர் கூட பத்து முயற்சிகளில் சராசரியாக நான்கு முயற்சிகளில் தோல்வி அடைகிறார்கள் என்றால் தோற்பதில் வெட்கப்பட என்ன இருக்கிறது?

மரியோ புஸோ எழுதிய “காட் ஃபாதர்” நாவலில் முக்கிய கதாபாத்திரமான காட் ஃபாதர் பயத்தையே அறியாதவனாக படைக்கப்பட்டது. அதற்கு முக்கியமான காரணம் அவன் ”ஒரு மனிதனுக்கு ஒரு விதி தான் இருக்க முடியும்” என்று விஷயத்தை உறுதியாக நம்பியது தான். என்ன நடக்குமோ அது நடந்தே தீரும் என்றால் பின் பயந்து நடுங்க என்ன இருக்கிறது? இது கூட ஒரு வகையில் பயத்தைப் போக்கும் சித்தாந்தமல்லவா?

நீங்கள் இறை நம்பிக்கை உடையவராக இருந்தால் உங்களுக்கு கடவுளின் துணை என்றும் இருப்பதாக நம்புங்கள். கடவுள் துணையாக இருக்கையில் எது தவறாகப் போக முடியும்? தன்னம்பிக்கையைக் குறைக்க முடிந்த பயம் கடவுள் நம்பிக்கை முன் சக்தியற்றுப் போவது நிச்சயம்.


அப்படியும் பயம் போகவில்லை என்றாலும் பயந்து கொண்டே ஆனாலும் செய்ய வேண்டியதைச் செய்ய ஆரம்பியுங்கள். செயல் புரிய ஆரம்பித்தவுடனேயே பெரும்பாலான பயங்கள் நம்மை விட்டு தானாக அகல ஆரம்பிக்கின்றன. சூரியனைக் கண்ட பனித்துளி போல அவை இருந்த இடம் தெரியாமல் மறைந்து போகின்றன.

மொத்தத்தில் எப்படியாவது பயம் உங்களைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கு முன் பயத்தை உங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வாருங்கள். முடிவில் பயம் அர்த்தமற்றது என்பதை நீங்கள் கண்டிப்பாக உணர்வீர்கள்.
Title: Re: வெற்றி-தன்னம்பிக்கை.
Post by: Global Angel on September 12, 2011, 02:16:59 AM
உங்கள் காலம் திருடப்படுகிறதா?  

                                                                   (http://i1027.photobucket.com/albums/y338/jimikki/time_graphic.jpg)

வாழ்க்கையில் இழந்தால் திரும்பப் பெற முடியாத உன்னதமான விஷயங்களில் ஒன்று காலம். வாழ்க்கை என்ற பெயரில் எவ்வளவு காலம் நமக்கு எழுதி வைக்கப்பட்டிருக்கிறது என்பதை நாம் அறிய மாட்டோம். செயல்படுகிறோமோ, வீணடிக்கிறோமோ காலம் இரண்டிலும் செலவாகிக் கொண்டே தான் போகின்றது. காலம் செல்லச் செல்ல நாம் மரணத்தினை நெருங்கிக் கொண்டே போகிறோம். அது எத்தனை நெருக்கம் என்பதை அறியாததால் அதற்கு இன்னமும் நிறைய தூரம் இருக்கிறது என்ற பிரமையில் இருந்து விடுகிறோம்.

காலத்தின் மதிப்பைக் குறிப்பிடும் போது ஒரு நிமிடத்தின் மதிப்பை அறிய புறப்பட்டுப்போன ரயிலைத் தவற விட்டவரைக் கேட்க வேண்டும,. ஒரு நொடியின் மதிப்பை அறிய விபத்திலிருந்து தப்பியவரைக் கேட்கவேண்டும், ஒரு மில்லிசெகண்டின் மதிப்பை அறிய ஒலிம்பிக் ஓட்டப்பந்தயத்தில் வெள்ளிப்பதக்கம் வென்றவரைக் கேட்க வேண்டும் என்றெல்லாம் சொல்வார்கள்.

பணத்திற்கு தரும் முக்கியத்துவத்தை நாம் அதை விடப் பல மடங்கு மதிப்புள்ள காலத்திற்குத் தருவதில்லை. இழந்த செல்வத்தை ஒருவன் மீண்டும் சம்பாதிக்க முடியும். ஆனால் இழந்த காலம் இழந்தது தான்.

ஜனனம் முதல் மரணம் வரை நமக்கு அளக்கப்பட்ட அளவான காலத்தை பெரும்பாலான சமயங்களில் நாம் செலவு செய்வதில்லை. மாறாக அந்த காலப் பொக்கிஷம் நம்மிடமிருந்து நிறையவே திருடப்படுகிறது என்ற உண்மை நமக்கு புலப்படாமலேயே போய் விடுகிறது. நம்மிடமிருந்து பணமோ, சொத்தோ திருடப்பட்டால் கொதித்தெழுகிற நாம் நம் காலம் திருடப்படுவதில் கொதித்தெழுவதில்லை என்பது மட்டுமல்ல அப்படி திருட்டுப் போக நாம் முட்டாள்தனமாக உதவியும் செய்கிறோம்.

காலப் பொக்கிஷம் நம்மிடம் இருந்து எப்படியெல்லாம் திருட்டுப் போகிறது, அதைத் தடுத்து நிறுத்த என்ன நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்பதைப் பார்ப்போமா?

1) தொலைக்காட்சி – டெலிவிஷன் என்று சொல்லப்படும் தொலைக் காட்சிப் பெட்டியை முட்டாள் பெட்டி என்று பலரும் கூறுவதுண்டு. மூளையை மழுங்கடிப்பதில் அதற்கு இணை வேறு எதுவும் இல்லை என்பதால் அப்படி அழைக்கப்படுகிறது. அதை காலத் திருட்டுப் பெட்டி என்று அழைப்பது மேலும் பொருத்தமாக இருக்கும். நேரம் போவதே தெரியாமல் அதன் முன்னால் அமர்ந்து கொண்டு நாம் வீணாக்கும் காலத்திற்கு அளவே இல்லை. அதை முழுமையாக நாம் ரசித்து மகிழ்கிறோமா என்றால் அப்படியும் சொல்ல முடியாது. பிடிக்கிறதோ இல்லையோ சேனல்களை மாற்றிக் கொண்டே எதிலாவது ஒரு நல்ல சுவாரசியமான நிகழ்ச்சி எதிலாவது போட மாட்டார்களா என்ற எதிர்பார்த்து காலத்தை வீணாக்குகிற வேலையை நம்மில் பலரும் செய்கிறோம். பிடித்த நிகழ்ச்சி என்றாலும் கூட இடையிடையே நிகழ்ச்சி நேரத்தை விட அதிகமாக விளம்பரங்கள் ஒளிபரப்பாவதை வேறு வழியில்லாமல் (?) பார்க்க நேரிடுகிறது. பல சமயங்களில் ஐந்து நிமிடங்கள் பார்க்கிறேன் என்று அமர்ந்து அதை மணிக்கணிக்கில் பார்த்து விட நேர்ந்து விடுகிறது. சில தொடர் நிகழ்ச்சிகளோ தினம் தினம் கண்டிப்பாக பார்க்கக் கட்டாயப்படுத்தும் பழக்கமாகி விடுகிறது.

தொலைக்காட்சியில் வீணாக்கும் நேரத்தை எத்தனையோ வழிகளில் நம் நன்மைக்காகவும், முன்னேற்றத்திற்காகவும் பயன்படுத்த முடியும். இந்த உண்மையை மனதில் ஆழமாக உணர்கையில் இந்த வகைக் காலத் திருட்டை நாம் தவிர்க்க முடியும். முக்கியமாக குறிப்பிட்ட ஒருசில நல்ல நிகழ்ச்சிகளை மட்டுமே தேர்ந்தெடுத்து பார்ப்பது என்று முடிவு செய்து கொண்டு அதை மட்டுமே பார்த்து மற்ற நேரங்களில் தொலைக்காட்சி பெட்டியை அணைத்து வையுங்கள். பிடித்த நிகழ்ச்சிகள் பார்க்கும் போதும் இடையிடையே விளம்பரங்கள் வரும் போது வேறு சேனலில் என்ன இருக்கிறது என்று வெறுமனே பார்க்கப் போகாமல் அந்த இடைவெளி நேரங்களில் வேறு சிறு சிறு வேலைகளைப் பாருங்கள். இந்த விதத்தில் நீங்கள் காலத் திருட்டை பெருமளவு தடுத்து விடலாம்.

2) அலை பேசி – செல் போன் என்றழைக்கப்படும் அலைபேசி அடுத்த பெரிய காலக் களவாணி என்று சொல்லலாம். அலை பேசியில் மணிக்கணக்கில் பேசி காலத்தை வீணாக்குவது இக்காலத்தில் இளைய தலைமுறையிடம் நிறையவே நாம் பார்க்க முடிகிறது. அலைபேசியில் பேசக் கட்டணத்தைக் குறைத்தும், அடியோடு விலக்கியும் சலுகை செய்யப்படுவதால் அதை முழுமையாகப் பயன்படுத்துகிறேன் பேர்வழி என்று சொல்லி காலத்தை முழுமையாக வீணாக்குகிற முட்டாள்தனத்தை பலரும் செய்கிறோம்.

அலைபேசியில் தெரிவிக்க வேண்டியதைத் தெரிவித்து விட்டு உடனடியாக அணைக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். அப்படிச் செய்வதன் மூலம் உங்கள் நேரத்தை மட்டுமல்ல அடுத்தவர் நேரத்தையும் நீங்கள் வீணாக்காமல் தவிர்க்கிறீர்கள்.

3) ஒழுங்கின்மை – நமது வாழ்க்கை முறையில் ஒழுங்கின்மை இருக்கும் போது காலம் பெருமளவில் வீணாகிறது. உதாரணமாக ஏதாவது ஒரு பொருளை எங்கே வைத்தோம் என்று தெரியாமல் எல்லா இடங்களிலும் தேடி காலத்தை வீணாக்குகிற வேலையைப் பலரும் செய்வதுண்டு. அது போல செய்கிற வேலையில் ஒழுங்குமுறை இல்லாத போது அது தவறாகப் போக வழி இருக்கிறது. அந்த வேலையை இரண்டாவது முறையாகச் செய்தாலும், திருத்தம் செய்ய முனைந்தாலும் அதனால் காலம் தேவை இல்லாமல் வீணாகிறது.

வீட்டிலும் வேலை செய்யும் இடத்திலும் பொருட்களை ஒழுங்குபடுத்தி வைக்கப் பழகுங்கள். உபயோகப்படுத்திய பிறகும் அதனதன் இடத்திலேயே வைக்க நீங்கள் பழகிக் கொண்டால் “தேடுதல்” என்ற பெயரில் நீங்கள் காலத்தை வீணாக்க நேரிடாது. அது போல வேலை செய்யும் போதும் ஒரு ஒழுங்குமுறையோடு நீங்கள் செய்தீர்களானால் குறைவான நேரத்தில் நிறைவான வேலையை உங்களால் முதல் முறையிலேயே செய்ய முடியும். காலத்தையும் சேமிக்க முடியும்.

4) தேவையற்ற செயல்கள், பேச்சுகள் – நமக்கு சம்பந்தமில்லாத வேலைகளை நாமாகவே இழுத்துப் போட்டுக் கொண்டு அவற்றில் ஈடுபடுவதும் காலத்தை நம்மிடம் இருந்து திருடிக் கொள்கிறது. பல நேரங்களில் நாம் அடுத்தவர் வேலையைக் கூட செய்து கொண்டிருக்க நேரிடலாம். ஒரு இக்கட்டான சூழ்நிலையில் அடுத்தவருக்கு உதவ முனைவது வேறு, தேவையே இல்லாமல் அடுத்தவர் வேலையை நாம் செய்வது வேறு. இந்த இரண்டிற்கும் இடையே நிறையவே வித்தியாசம் இருக்கிறது. அது போல ஊர்வம்பு பேசுவதிலும் காலம் நிறைய வீணாகிறது.

எனவே தேவையில்லாமல் உங்களுக்கு சம்பந்தமே இல்லாத, உங்கள் முன்னேற்றத்திற்கு எந்த விதத்திலும் உதவாத செயல்களை செய்யப் போகாதீர்கள். எந்த வேலையில் ஈடுபடும் முன்னும், அடுத்தவர் பற்றி பேசும் முன்னும் அது உங்கள் வேலை தானா, அதற்கு அவசியம் உள்ளதா என்ற ஒரு சிறிய கேள்வியைக் கேட்டுக் கொண்டால் அது அந்த வகைக் காலத் திருட்டைத் தவிர்க்கும்.

5) திட்டமிடத் தவறுதல் – முன் கூட்டியே நம் காலத்தைத் திட்டமிடத் தவறும் போது காலம் நம்மிடமிருந்து அர்த்தமில்லாத வழிகளில் திருட்டுப் போவதை நாம் தடுக்க முடிவதில்லை. ஒரு நாளில் என்ன எல்லாம் செய்ய வேண்டும் என்று முன்பே திட்டமிட்டு வைத்திருந்தால் உங்கள் கவனம் எல்லாம் அந்த நாளில் செய்ய வேண்டிய வேலைகளில் தான் இருக்குமே ஒழிய மற்ற அனாவசிய வேலைகளில் கவனம் செலுத்த தங்களுக்கு நேரமிராது.

உங்கள் வாழ்க்கையில் என்ன சாதிக்க விரும்புகிறீர்கள் என்பதில் தெளிவாக இருங்கள். உங்கள் லட்சியங்களை நீண்ட கால லட்சியம், குறுகிய கால லட்சியங்கள் என்று திட்டமிட்டு வைத்துக் கொள்ளுங்கள். உங்கள் நாட்களைத் திட்டமிடும் போது இருவகை லட்சியங்களை அடைவதற்கும் செய்ய வேண்டிய செயல்களுக்கு கண்டிப்பாக இடமிருக்கட்டும். எப்போதும் அப்படிக் ஒழுங்காகத் திட்டமிட்டு லட்சியங்களில் எப்போதும் கவனமாக இருந்தால் காலம் கண்டிப்பாக உங்களிடமிருந்து திருட்டுப் போகாது.


காலம் இந்த வகைகளில் மட்டும் தான் என்றில்லை இன்னும் பல வகைகளிலும் நம்மிடம் இருந்து திருடப்படுகிறது என்றாலும் இவை ஐந்தும் காலத் திருட்டில் பெரும் பங்கு வகிப்பவை. இந்த ஐந்து வகைத் திருட்டுகளை நீங்கள் தடுத்தால் நீங்கள் விரும்பியதை எல்லாம் செய்ய உங்களுக்குத் தேவையான காலம் கண்டிப்பாகக் கிடைக்கும். ’எனக்கு நேரமில்லை’ என்ற சப்பைக்கட்டு கட்டி செய்ய வேண்டியவற்றை செய்யாமல் இருக்க நேரிடாது. செய்ய வேண்டியவற்றை செய்ய முடிந்த எந்த மனிதனும் தன் முன்னேற்றம் உறுதியானது என்பதில் சந்தேகப்படவும் அவசியமில்லை. எனவே குறுகிய வாழ்வில் மிகுதியாய் சாதிக்க காலத்தை வீணாக்காமல் முறையாகப் பயன்படுத்துங்கள்!
Title: Re: வெற்றி-தன்னம்பிக்கை.
Post by: Global Angel on September 18, 2011, 03:04:40 AM
குறையையும் நிறையாக்கலாம்!  

                                                      (http://i1027.photobucket.com/albums/y338/jimikki/judo.jpg)

ஒரு கார் விபத்தில் தன் இடது கையை இழந்திருந்த ஒரு பத்து வயது சிறுவனுக்கு ’ஜூடோ’ என்ற ஜப்பானிய மற்போர்க் கலையைக் கற்றுக் கொள்ள ஆவலாக இருந்தது. அவன் ஒரு வயதான ஜப்பானிய ஜூடோ ஆசிரியரிடம் தன் ஆவலைத் தெரிவித்தான். அந்த ஆசிரியர் அவன் ஊனத்தைக் கவனித்தும் பொருட்படுத்தாமல் அவனுக்கு ஜூடோ கற்றுக் கொடுக்க ஒப்புக் கொண்டார். அந்த சிறுவனும் அவரிடம் அந்த மற்போர்க் கலையைக் கற்றுக் கொள்ள பயிற்சியை ஆரம்பித்தான்.

சில மாதங்கள் கழிந்த பின்னும் அந்த ஆசிரியர் அவனுக்கு ஜூடோவின் ஒரே ஒரு ஆக்கிரமிப்புப் பயிற்சியை மட்டுமே திரும்பத் திரும்ப மிக நுணுக்கமான முறையில் கற்றுத் தந்திருந்தார். அந்த சிறுவன் அந்தப் பயிற்சியை ஓரளவு நன்றாகவே கற்றுத் தேர்ந்த பின் ஆசிரியரிடம் சொன்னான். ”ஐயா எனக்கு நீங்கள் வேறு பயிற்சிகளையும் கற்றுத் தாருங்களேன்”

அந்த வயதான ஆசிரியர் “நீ இந்த ஒரு பயிற்சியை சிறு குறையும் இல்லாமல் முழுமையாகக் கற்றுத் தேர்ந்தால் அதுவே போதுமானது. இதைத் தவிர வேறு எந்த பயிற்சியும் நீ கற்க வேண்டிய அவசியமில்லை” என்று கூறி விட்டார். அந்த சிறுவனுக்கு அவர் வேறு பயிற்சிகள் கற்றுத் தராமல் இருப்பது ஏமாற்றத்தைத் தந்த போதும் அவர் மீது அவனுக்கு நம்பிக்கை இருந்தபடியால் அவர் கூறியபடி அந்த ஒரு பயிற்சியையே தொடர்ந்து மேலும் சில மாதங்கள் செய்து அதில் முழு ஆளுமை பெற்றான்.

அவன் அந்த ஒரு பயிற்சியில் ஒரு சிறு குறையும் இல்லாமல் முழுமையான ஆளுமை பெற்று விட்டான் என்பதை உறுதிப் படுத்திக் கொண்ட பின் அந்த வருடத்திய தேசிய ஜுடோ போட்டியில் அந்தச் சிறுவனைக் கலந்து கொள்ளச் செய்தார் அந்த ஆசிரியர். அந்த சிறுவனுக்கோ திகைப்பு தாளவில்லை. அந்த தேசியப் போட்டியில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து பல திறமையான வீரர்கள் கலந்து கொள்வார்கள். அவனோ ஒரே ஒரு ஆக்கிரமிப்புப் பயிற்சியை மட்டுமே முழுமையாகக் கற்றுத் தேர்ந்திருக்கிறான். ஜூடோவில் அவனுக்குக் கற்றுக் கொள்ள இன்னும் எத்தனையோ இருக்கின்றன.
“ஐயா எனக்கு அந்த ஒரு பயிற்சி தவிர வேறு எதுவும் தெரியாத நிலையில் தேசிய அளவு போட்டியில் எப்படி கலந்து கொள்வது?”

அப்போதும் அந்த ஆசிரியர் அவனுக்குச் சொன்னார். “உனக்கு அந்த ஒரு பயிற்சி போதும். உனக்குக் கிடைக்கும் முதல் சந்தர்ப்பத்திலேயே உன் எதிரியிடம் இந்த ஆக்கிரமிப்பு முறையை பயன்படுத்து. மற்ற எதைப் பற்றியும் நீ கவலைப்படாதே”

அவர் அந்த அளவு உறுதியாக கூறிய பிறகு அவன் மேற்கொண்டு ஒன்றும் சொல்லாமல் போட்டியில் கலந்து கொள்ள சம்மதித்தான். ஆசிரியர் அவனை போட்டிக்கு அழைத்துச் சென்றார். முதல் இரண்டு போட்டிகளில் அவர் சொன்னது போலவே செய்து அவன் மிக எளிதாக வென்று காலிறுதிப் போட்டியில் வெற்றி பெற்றான். அவனுக்கே அது அதிசயமாக இருந்தது.

அரையிறுதிப் போட்டியில் வெற்றி அவ்வளவு எளிதாகக் கிடைக்கவில்லை. ஆனால் சிரமங்களுக்கு இடையில் அவனுக்கு சந்தர்ப்பம் கிடைத்த போது அந்த ஆக்கிரமிப்பு முறையைப் பிரயோகித்து வென்று முன்னேறினான்.

இறுதிப் போட்டியில் அவனுக்கு எதிராக போட்டியிட்ட ஆள் வயதிலும், வலிமையிலும், திறமையிலும் அவனுக்கு மேற்பட்டவனாகவே இருந்தான். போட்டியில் ஆரம்பத்தில் அவனால் அந்த நபரை வெல்ல முடியவில்லை. அவனுடைய இடது கை இல்லாத குறையையும், படும் சிரமத்தையும் பார்த்த நடுவர்கள் இடைவேளையின் போது அவன் போட்டியில் இருந்து விலகிக் கொள்ள அனுமதி தருவதாகக் கூறினார்கள். அவனுடைய ஆசிரியரோ அதற்கு சம்மதிக்கவில்லை. “அவன் போட்டியில் தொடர்வான்” என்று உறுதியாகக் கூறினார்.
அவர் தன் மேல் வைத்திருந்த நம்பிக்கையைக் கண்ட அந்த சிறுவனுக்கு புத்துணர்ச்சி ஏற்பட்டது. இடைவேளைக்குப் பின் தொடர்ந்த போட்டியில் எதிராளி சற்று அசந்திருந்த போது தன் முழு பலத்தையும் திரட்டி அந்த ஆக்கிரமிப்பு முறையைப் பயன்படுத்தி எதிராளியை செயலிழக்க வைத்து வெற்றி பெற்றான். அவனுக்கே அந்த வெற்றி ஆச்சரியமாகத்தான் இருந்தது.

பதக்கத்தைப் பெற்ற போதும் அவனுக்கு பிரமிப்பு நீங்கவில்லை. வீடு திரும்புகையில் அவன் ஆசிரியரிடம் தன்னால் எப்படி அந்த ஒரு பயிற்சி மட்டும் கற்றுக் கொண்டு வெற்றி பெற முடிந்தது என்று கேட்டான்.

ஆசிரியர் சொன்னார். “அதற்கு இரண்டு காரணங்கள். முதலாவது, நீ அந்த ஒரு பயிற்சியில் குறைவில்லாமல் முழுமையாகப் பயிற்சி செய்திருக்கிறாய். இரண்டாவது, இந்த ஆக்கிரமிப்பிலிருந்து விடுபட எதிராளிக்கு ஒரே வழி தான் இருக்கிறது. அந்த வழி ஆக்கிரமிப்பவரின் இடது கையைப் பிடித்துக் கொள்வதில் தான் இருந்து தான் ஆரம்பிக்கிறது”
இடது கை இல்லாதவன் ஆக்கிரமித்தால் அந்தப் பிடியில் இருந்து தப்பிக்க வேறு வழியே இல்லை. அந்த சிறுவனின் மிகப் பெரிய குறை மிகப் பெரிய பலமாகப் போய்விட்டது பாருங்கள்.

பல சந்தர்ப்பங்களில் குறைகள் வேறு விதத்தில் நிறைகளாக முடியும். சில குறைகள் இருப்பவர்கள் அதை ஈடுகட்ட முயற்சித்து அந்த குறையில்லாதவர்களை விடவும் அதிகமாக சாதித்து விடுவதை பல சமயங்களில் நம்மால் பார்க்க முடிகிறது. குருடு, செவிடு, ஊமை என்ற மூன்று ஊனங்களை உதாசீனப்படுத்தி விட்டு உலக அளவில் பெரும் சாதனை புரிந்த ஹெலன் கெல்லரை இதற்கு உதாரணமாகச் சொல்லலாம்.

குறைகளை மீறி சாதிப்பதற்குத் தேவையான மிக முக்கியமான பண்பு தன்னிரக்கத்தோடு தளர்ந்து ஒடுங்கி விடாமையே. தன்னிரக்கத்தில் ஆரம்பித்து அடுத்தவர் இரக்கத்தையும் தேடி நிற்பவர்கள் வாழ்க்கை தேக்கமடைந்து விடுகிறது. ’எனக்கு இந்தக் குறை இருப்பதால் நான் இனி ஒன்றும் செய்வதற்கில்லை’ என்ற அறிவிப்புக்கு குடும்பத்தினரும், மற்றவர்களும் கூட அங்கீகாரம் தந்து ஆதரிக்க ஆரம்பிக்கும் போது அந்த மனிதரின் முன்னேற்றம் முடங்கிப் போகிறது.

எனவே உடலின் குறைகளையோ, வசதி வாய்ப்புகளின் குறைகளையோ கண்டு தளர்ந்து விடாதீர்கள். அவற்றிற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து உங்களை மட்டுப்படுத்திக் கொள்ளாதீர்கள். சில குறைகளை இன்னொரு கோணத்தில் பார்த்தீர்களானால் அதுவே வேறு சில முன்னேற்றங்களுக்கு அனுகூலமாகலாம். உண்மையான குறை மனதின் குறைகளே. வெளிப்புறக் குறைகள் தோற்றத்தில் இருக்குமளவு நம் முன்னேற்றத்தை தடுக்க சக்தி படைத்தவை அல்ல. இதை தங்களுக்கு இருக்கும் குறைகளைப் பெரிதாக நினைக்கும் ஒவ்வொருவரும் உணர வேண்டும். அதே போல அவர்கள் நம்பிக்கை இழக்கும் தருணங்களில் நண்பர்களும், உறவினர்களும் அந்த அவநம்பிக்கைக்கு துணை போகாமல் தங்கள் அன்பாலும் நம்பிக்கையாலும் அவர்களைத் தாக்குப் பிடிக்க வைக்க வேண்டும். அப்படி செய்தால் மட்டுமே குறைகள் ஒருவரைக் குறைத்து விடாமல் நிறைகளாகப் பரிணமிக்க முடியும்.


Title: Re: வெற்றி-தன்னம்பிக்கை.
Post by: Global Angel on September 21, 2011, 01:27:47 AM
வெற்றியில் ஏமாந்து விடாதீர்கள்!  

                                                                (http://i1027.photobucket.com/albums/y338/jimikki/success.jpg)

தோல்வியில் துவண்டு விடாதீர்கள், தன்னம்பிக்கை இழந்து விடாதீர்கள், முயற்சியை நிறுத்தி விடாதீர்கள் என்று எல்லாம் பலர் அறிவுரை சொல்லக் கேட்டிருக்கிறோம். ஆனால் வெற்றி பெற்றவர்களுக்கு யாரும் அதிகம் அறிவுரை சொல்வதில்லை. காரணம் வெற்றி பெற்றவர்கள் அறிவு மிக்கவர்கள், நல்ல உழைப்பாளிகள், எல்லாம் தெரிந்தவர்கள் என்ற அபிப்பிராயம் பலர் மனதிலும் இருப்பது தான். அதெல்லாம் மற்றவர்கள் மனதில் இருந்தால் பரவாயில்லை. வெற்றி பெற்றவர்கள் மனதிலேயே அந்த அபிப்பிராயம் உறுதியாகத் தோன்றும் போது அது எதிர்கால ஆபத்திற்கு அஸ்திவாரம் போடுகிறது.

வெற்றி எப்பேர்ப்பட்டவரையும் ஏமாற்ற வல்லது. அது மூன்று குணாதிசயங்களை வெற்றியாளர்களிடம் ஏற்படுத்த வல்லது.

1) கர்வம்

2) அலட்சியம்

3) எந்த அறிவுரையும் கேளாமை

முதலாவதாக, வெற்றி ஒருவரிடம் “என்னை மிஞ்ச ஆளில்லை” என்ற கர்வத்தை ஏற்படுத்தலாம். கர்வத்தைப் போல வீழ்ச்சிக்கு வழி வகுக்கும் ஒரு குணாதிசயம் வேறொன்று இருக்க முடியாது. புராணங்களில் அரக்கர்கள் கடவுளிடம் வரம் பெற்று பெரும் சக்தி பெறுவார்கள். பெரும் சக்தி பெற்ற அவர்களது கர்வம் அவர்களை சும்மா இருக்க விடாது. பலரைத் துன்புறுத்த முனைவார்கள், எங்களை எதிர்க்க யாரிருக்கிறார்கள் என்று அறைகூவல் விடுப்பார்கள். முடிவு அவர்கள் அழிவு தான் என்பதை நாம் புராணங்களில் படித்து இருக்கிறோம்.


புராணங்களில் மட்டுமல்லாமல் வரலாறிலும் இதற்கு ஏகப்பட்ட உதாரணங்களைப் பார்க்க முடியும். ஹிட்லர், முசோலினி, நெப்போலியன் போன்றவர்கள் பெற்ற ஆரம்ப வெற்றிகள் சாதாரணமானதல்ல. அது அவர்கள் மனதில் தாங்கள் யாராலும் வெல்ல முடியாதவர்கள் என்ற கர்வத்தை ஏற்படுத்தியது. கர்வம் ஒரு மனிதனை உள்ளதை உள்ளது போல் பார்க்க விடாது. அறிவுக் கண்ணை அது அழகாக மறைக்க வல்லது. நன்மைகளை செய்ய கர்வம் பெரும்பாலும் அனுமதிப்பதில்லை. தான் செய்வதே சரி என்கிற எண்ணம் ஒருவரை எதையும் சீர்தூக்கிப் பார்க்க வைப்பதில்லை. அதன் விளைவு அவர்களை பெரும் வீழ்ச்சி காண வைக்கிறது.

உலக வரைபடத்தில் உகாண்டா என்ற ஆப்பிரிக்க நாட்டை சிரமத்திற்கு இடையே தான் கண்டு பிடிக்க முடியும். அத்தனை சிறிய நாட்டில் சர்வாதிகாரியாக இருந்த இடி அமீன் சென்ற நூற்றாண்டில் தன்னை கிட்டத்தட்ட கடவுளாகவே நினைத்துக் கொண்டு நடந்து கொண்ட விதத்தை வரலாற்றின் பார்வையாளர்கள் மறந்திருக்க முடியாது.

இன்றைய கால கட்டத்திலும் அரசியலைக் கூர்ந்து பார்ப்பவர்களுக்கு இதற்கு எத்தனையோ சான்றுகளைக் காண முடியும். சில இமாலய வெற்றி பெற்றவர்கள் தங்களை நிரந்தர தலைவர்களாக தாங்களாக நினைத்துக் கொண்டு செயல்பட்டு அடுத்த தேர்தலில் காணாமல் போவது சர்வ சாதாரணமாக நிகழ்கிறது அல்லவா?

இரண்டாவதாக, வெற்றி அலட்சியத்தையும் உண்டு பண்ணக் கூடியது. அதுவும் தொடர்ந்து சில வெற்றிகள் கிடைத்து விட்டால் தங்களை ஒரு அபூர்வ மனிதராக ஒருவர் நினைத்துக் கொள்ள வாய்ப்பு அதிகம். இனி எனக்கு தோல்வியே கிடைக்க முடியாது என்று ஒருவன் நினைக்க ஆரம்பிக்கும் போது அவனுடைய முயற்சிகள் தரத்திலும் அளவிலும் குறைய ஆரம்பிக்கின்றன.

சிறு வயதில் நாம் படித்த முயல், ஆமைக் கதை இந்த உண்மையை மிக அழகாகச் சொல்வது நினைவிருக்கலாம். முயலை எக்காலத்திலும் ஆமை வெல்ல முடியாது என்று நாம் நினைத்தாலும் முயல் தூங்கி விடுமானால், ஆமை விடாமல் முயற்சி செய்து வருமானால் ஆமை வெற்றி பெறுவது நடக்கக் கூடியதே. பள்ளி, கல்லூரிகளில் மிக நல்ல மதிப்பெண்கள் வாங்கி பிரகாசித்து நிஜ வாழ்க்கையில் கோட்டை விட்ட எத்தனையோ பேரை நான் அறிவேன். அதே போல் படிக்கையில் சாதாரணமான மதிப்பெண்களே பெற்று வந்த எத்தனையோ பேர் தங்கள் திறமைக் குறைவை உணர்ந்து உழைப்பால் அதை ஈடுகட்டி பின் வாழ்க்கையில் வெற்றி பெறுவதையும் நான் பார்த்திருக்கிறேன். முன்னவர்களின் தோல்விக்கான காரணத்தை ஆராய்ந்து பார்த்த போது அவர்கள் தோல்விக்குக் காரணம் வெற்றிகளால் அவர்கள் அடைந்திருந்த அலட்சியமே என்ற பதில் தான் கிடைத்தது.

இதை விடப் பெரிய விஷயங்களில் எல்லாம் வெற்றி பெற்றிருக்கிறேன், இது என் திறமைக்கு முன் எம்மாத்திரம் என்ற எண்ணத்தோடு இறங்கி சிறிய விஷயங்களில் தோற்று மூக்குடைந்த மேதாவிகளை நாம் அனைவரும் பார்த்திருக்க முடியும்.

மூன்றாவதாக, வெற்றி பெற்றவர்களுக்கு யாருடைய அறிவுரையும் தேவை இல்லை என்ற எண்ணம் மேலோங்கி நிற்க வாய்ப்பு உண்டு. ஒருவன் எத்தனை தான் புத்திசாலியானாலும் அவன் அறிந்திராதவையும் எத்தனையோ இருக்கக் கூடும். அந்த அறிந்திராத விஷயங்கள் அவனுடைய எதிர்கால வெற்றிக்கு முக்கியமானவையாக இருக்கக் கூடும். ஆனால் எல்லாம் எனக்குத் தெரியும், தெரியாமலா இத்தனை வெற்றிகள் கண்டிருக்கிறேன் என்று நினைக்கிற சில வெற்றியாளர்கள் அறிவுரை கூற வருபவர்களை ஏளனமாகப் பார்க்க முற்படுகிறார்கள். அவர்களுக்கு அறிவுரை வேம்பாகக் கசக்கிறது.

எனவே அவர்கள் தங்களைச் சுற்று துதிபாடிகள் இருப்பதையே அதிகம் விரும்புகிறார்கள். உள்ளதை உள்ளபடி சொல்பவர்களை அவர்கள் ஒதுக்க ஆரம்பிக்கிறார்கள். யாரானாலும் சரி மற்றவர்கள் கூறுவதில் உண்மை இருக்கிறதா என்று கூட சிந்திக்க மறுக்கும் போது, புதியனவற்றை அறிந்து கொள்ளத் தவறும் போது தோற்கவே ஆரம்பிக்கிறார்கள்.

எனவே தோல்வி அடையும் சமயத்தை விட அதிகமாய் வெற்றி அடையும் சமயத்தில் எச்சரிக்கையாக இருங்கள். தோல்வி அடையும் போது இருப்பதை விட அதிகமாய் வெற்றி அடைகையில் அடக்கமாய் இருங்கள். கர்வமும், அலட்சியமும், அடுத்தவர்களைத் துச்சமாய் நினைக்கும் தன்மையும் உங்களை அண்ட விடாதீர்கள். அப்படி கவனமாய் இருந்தால் மட்டுமே வெற்றியை நீங்கள் தக்க வைத்துக் கொள்ள முடியும். வாழ்க்கையில் தொடர்ந்து முன்னேறுவதும் அப்படி இருக்கும் போது மட்டுமே சாத்தியமாகும்.


Title: Re: வெற்றி-தன்னம்பிக்கை.
Post by: Global Angel on September 21, 2011, 07:35:27 PM
தனியே ஒரு குரல்  
                                           

(http://i1027.photobucket.com/albums/y338/jimikki/galileo.jpg)பெரும்பாலான மனிதர்கள் காலத்தோடு ஒத்துப் போகிறார்கள். எல்லோரையும் போல சிந்திப்பது, செயல்படுவது, எல்லோரும் எப்படி வாழ்கிறார்களோ அப்படியே வாழ்வது என்று இருந்து விடுகிறார்கள். அவர்கள் வித்தியாசமாக சிந்தித்து, செயல்பட்டு, வாழ்ந்து சமூகத்தை பயமுறுத்துவதில்லை. சமூகத்தை தர்மசங்கடத்துக்கு உள்ளாக்குவதில்லை. ஆனால் எல்லோராலும் அப்படி இருக்க முடிவதில்லை. சிலர் விதிவிலக்குகளாக இருந்து தனிக்குரல் எழுப்புகிறார்கள். அந்தத் தனிக்குரல் சமூகத்தின் காதுகளில் நாராசமாக ஒலிக்கிறது. அந்தத் தனிக்குரலை ஒடுக்க சமூகம் பாடுபட ஆரம்பித்து, பெரும்பாலான சமயங்களில் வெற்றியும் பெற்று விடுகிறது. ஆனாலும் அந்த தனிக்குரல் பல நூற்றாண்டுகள் கழித்தும் ஒலிப்பதுண்டு. அந்தக் குரலுக்கு பிற்கால சமூகம் செவி சாய்ப்பதுண்டு. அப்போது அந்தத் தனிக்குரல் சரித்திரம் படைக்கிறது. மனித குலத்தின் மகத்தான அத்தனை முன்னேற்றங்களுக்கும் இது போன்ற தனிக்குரல்களே மூல காரணமாக இருந்திருக்கின்றன.

பதினாறாம் நூற்றாண்டில் இத்தாலியில் ஒலித்த அப்படிப்பட்ட ஒரு தனிக்குரல் கலிலியோ கலிலி(Galileo Galilei) என்ற அறிஞருடையது. கி.பி 1564 ஆம் ஆண்டு பிறந்த கலிலியோ எதையும் மிக நுணுக்கமாக கவனிப்பவராக விளங்கினார். கிறித்துவக் கோயிலுக்கு அவர் சென்றிருந்த ஒரு சமயத்தில் தொங்கு விளக்கு ஒன்று காற்றால் ஆடிக் கொண்டு இருந்தது. காற்று வேகமாக வீசுகையில் விளக்கு வேகமாகவும், வேகம் குறைவாக வீசும் போது விளக்கு குறைவான வேகத்துடனும் ஆடிக் கொண்டிருந்ததைப் பார்த்துக் கொண்டே இருந்த கலிலியோவுக்கு அதில் மாறாத ஒரு விஷயம் இருப்பது கவனத்தைக் கவர்ந்தது.

தன் நாடியைப் பிடித்து அந்த விளக்கின் அசைவுகளை கலிலியோ ஆராய்ந்தார். வேகமாக அசையும் போதும் சரி, நிதானமாக அசையும் போதும் சரி அந்த விளக்கு ஒவ்வொரு முறையும் போய் திரும்பி வர ஒரே கால அவகாசத்தை எடுத்துக் கொண்டது அவருக்கு வியப்பை அளித்தது. அந்தக் கண்டுபிடிப்பு ஊசல் விதியாக எடுத்துக் கொள்ளப்பட்டு பிற்காலத்தில் கடிகாரங்களை உருவாக்க உதவியது. அவர் அந்த ஊசல் விதி கண்டு பிடித்த போது அவருக்கு வயது இருபது.


அரிஸ்டாட்டில் சொன்ன விதி ஒன்று யாராலும் கலிலியோவின் காலம் வரை சரியா என்று ஆராயப்படாமலேயே இருந்தது. அது ‘எடை கூடிய பொருள்கள் எடை குறைந்த பொருள்களை விட வேகமாய் கீழே விழக் கூடியவை’ என்பது தான். கலிலியோவிற்கு அது சரியாக இருக்கும் என்று தோன்றவில்லை. எனவே அவர் பல வித எடைகளில் இரும்புக் குண்டுகளை எடுத்துக் கொண்டு பைசா கோபுரத்தின் மேலே சென்று ஒவ்வொன்றையும் கீழே போட்டுப் பார்த்தார். எல்லாம் கீழே விழ ஒரே நேரத்தை எடுத்துக் கொண்டன. இதன் மூலம் அது வரை நம்பப்பட்டு வந்த அரிஸ்டாட்டிலின் அந்த குறிப்பிட்ட விதி தவறென்று கலிலியோ நிரூபித்துக் காட்டினார்.

கலிலியோ பல்கலைக் கழகப் படிப்பை நிறைவு செய்யவில்லை. காரணம் அவருக்கு கல்வியில் கணிதம் தவிர வேறெந்த துறையிலும் ஈடுபாடு இருக்கவில்லை. அவருடைய காலத்தில் ஒற்றர் கண்ணாடி (spy glass) என்றழைக்கப்பட்ட ஒரு விதக் கண்ணாடி வெகு தொலைவில் இருப்பதையும் அருகில் இருப்பதாகக் காட்ட வல்லது என்றும் அதை ஒரு டச்சு கண்ணாடித் தயாரிப்பாளர் செய்திருக்கிறார் என்றும் கலிலியோ கேள்விப்பட்டார். அதுவரை அந்தக் கண்ணாடியைக் கண்டிராத அவர் அந்த சாத்தியக் கூறால் கவரப்பட்டு கேள்விப்பட்ட சில விஷயங்களையும் தன் உள்ளுணர்வுகளையும் வைத்து அது போன்ற ஒரு கண்ணாடியை உருவாக்கினார். அதன் சக்தியை அதிகரித்துக் கொண்டே போய் மிக சக்தி வாய்ந்த கண்ணாடியை உருவாக்கினார். அது தான் பிற்காலத்தில் டெலஸ்கோப் என்று அழைக்கப்பட்டது.

அதை வெனிஸ் நகர செனெட்டில் கொண்டு போய் கலிலியோ காட்டினார். அது செனெட்டின் பேராதரவைப் பெற்றது. அவருடைய புகழ் நாடெங்கும் பரவியது. அதோடு அவர் நிறுத்தியிருந்தால் அவர் புகழோடும், செல்வத்தோடும் மீதமுள்ள வாழ்நாள் முழுவதும் வாழ்ந்திருக்கலாம். ஆனால் அவர் பெயர் சரித்திரத்தில் சிறிதாகத் தான் எழுதப்பட்டிருக்கும். அவர் தன் அறிவியல் ஆராய்ச்சியின் அடுத்த கட்டங்களுக்குச் சென்றார். அது அவருடைய பிரச்னைகளுக்கு அஸ்திவாரம் போட்டது.

அந்த டெலஸ்கோப்பால் சந்திரனைப் பார்த்தார். சந்திரன் மிக அழகாக சமதளமாக இருக்கும் என்று எதிர்பார்த்தவருக்கு அதில் பாறைகளும், மலைகளும், மேடு பள்ளங்களும் இருப்பது வியப்பாய் இருந்தது. தன் டெலெஸ்கோப்பின் சக்தியை மேலும் பன்மடங்கு கூட்டி ஜனவரி 7, 1610 அன்று அந்த டெலஸ்கோப்பை ஜூபிடர் கிரகம் பக்கம் திருப்பினார். ஜூபிடர் கிரகம் அருகில் மூன்று நட்சத்திரங்கள் நேர்கோட்டில் இருப்பதைக் கண்டார். சிறிது நேரம் கழித்துப் பார்க்கையில் அந்த நட்சத்திரங்கள் இடம் மாறி அதே போல் நேர்கோட்டில் இருப்பதைக் கண்டார். அப்போது தான் அவை ஜூபிடரின் உபகிரகங்கள் என்றும் அவை ஜூபிடரைச் சுற்றி சுழன்று கொண்டு இருக்கின்றன என்றும் அவர் முடிவுக்கு வந்தார். அந்த சித்தாந்தத்தை மேலும் சிந்தித்துப் பார்த்த போது கோபர்நிகஸ் பூமியைப் பற்றி சொன்னது உண்மை என்ற முடிவுக்கு வந்தார். கோபர்நிகஸ் பூமியைச் சுற்றி சூரியன் சுழல்வதில்லை., சூரியனைச் சுற்றியே பூமி சுழல்கிறது என்று பல ஆண்டுகளுக்கு முன்பே சொல்லி இருந்தார்.

கலிலியோ கோபர்நிகஸ் சொன்னது சரியே, பூமி சூரியனைச் சுற்றுகிறது என்று கூறியதுடன் அந்த கண்டுபிடிப்புகளை ஒரு புத்தகமாக கிபி 1610ல் வெளியிட்டது அவருக்கு வினையாயிற்று. கி.பி.1600ல் கியார்டானோ ப்ரூனோ (Giordano Bruno)என்ற நபர் இதை நம்பியதற்கும், பூமியைப் போல் பல்லாயிரக் கணக்கான கோள்கள் பிரபஞ்சத்தில் உள்ளன என்று சொன்னதற்கும் உயிரோடு எரிக்கப்பட்டிருந்தார். பைபிளில் சொல்லி இருப்பதற்கு எதிர்மாறாக அவன் சொல்வதாகக் காரணம் சொல்லி அவனை எரித்தவர்கள் கலிலியோவையும் விடவில்லை. அவரிடம் விசாரணை நடத்தினார்கள். இனி கோபர்நிகஸ் சொன்னதை பிரபலப்படுத்தக் கூடாது என்று சொல்லி அவரை விடுதலை செய்தார்கள்.

கலிலியோ தன் ஆய்வுகளைத் தொடர்ந்தார். அவர் மேலும் கண்ட உண்மைகள் அவரை சும்மா இருக்க விடவில்லை. தன் ஆய்வுகளை "Dialogue" புத்தகத்தில் மூன்று கற்பனைக் கதாபாத்திரங்கள் பேசிக் கொள்வது போல எழுதினார். ஒரு கதாபாத்திரம் இவரது கருத்துகளை அறிவுபூர்வமாகப் பேசுவது போலவும், ஒரு கதாபாத்திரம் முட்டாள்தனமாக எதிர்ப்பது போலவும், இன்னொரு கதாபாத்திரம் திறந்த மனதுடன் அவற்றை பரிசீலிப்பது போலவும் எழுதினார். உடனடியாக அந்த நூலைத் தடை செய்து, அவரைக் கைது செய்து அவரை விசாரணைக்கு உட்படுத்தினர்.

68 வயதாகி இருந்த கலிலியோவிற்கு கண்பார்வையும் மங்க ஆரம்பித்திருந்தது. அவர் நோய்வாய்ப்பட்டும் இருந்தார். இந்த நிலையில் அவரை சித்திரவதைப் படுத்துவோம் என்று அதிகாரவர்க்கம் அச்சுறுத்தவே தான் சொன்னது எல்லாம் தவறென்று கலிலியோ பகிரங்கமாக ஒப்புக் கொண்டார். பூமி அசையாமல் இருந்த இடத்தில் இருக்க சூரியனே அதைச் சுற்றி வருகிறது என்று பூமியைப் பற்றிச் சத்தமாகச் சொன்ன அந்த நேரத்தில், கடைசியில் “ஆனாலும் அது நகர்கிறது” என்று முணுமுணுத்ததாக சிலர் சொல்வதுண்டு. வீட்டு சிறையிலேயே தன் மீதமுள்ள வாழ்நாளைக் கழிக்க வேண்டி வந்த கலிலியோ இந்த வானவியல் ஆராய்ச்சிகளை விட்டு மற்ற விஞ்ஞான ஆராய்ச்சிகளில் தன்னை மரணம் வரை ஈடுபடுத்திக் கொண்டார்.

கோபர்நிகஸின் கண்டுபிடிப்பு சரியே என்பது பிற்காலத்தில் சந்தேகத்திற்கு இடமில்லாமல் நிரூபிக்கப்பட்டதால் 1822 ஆம் ஆண்டு அவருடைய "Dialogue" நூலுக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டது. பின்னர் சில நூற்றாணடுகள் கழித்து வாடிகன் 1992 ஆம் ஆண்டு பகிரங்கமாக கலிலியோ குற்றமற்றவர் என்றும், அவரை விசாரித்து சிறைப்படுத்தியது தவறு என்றும் ஒத்துக் கொண்டது.

சில நேரங்களில் உண்மை என்று உணர்வதை வெளியே சொல்லும் போது அது அக்கால கட்டத்தில் இருப்போரின் அந்த சூழ்நிலைக்கு ஏற்க முடியாததாக இருக்கலாம். ஆனாலும் உண்மை அப்படி தனியாகவே ஒரு குரலில் ஒலித்தாலும், பிற்காலத்தில் அந்த தனிக்குரல் உண்மையென்று அனைவரும் உணரும் நிலை வருவது நிச்சயம்.

எனவே சில நேரங்களில் தனிக்குரலாக உங்கள் கருத்து ஒலிப்பதில் வெட்கம் கொள்ளாதீர்கள். அக்குரல் உங்களை வரலாற்றுப் பக்கங்களில் பதிய வைக்கும் குரலாகக் கூட இருக்கலாம்.
Title: Re: வெற்றி-தன்னம்பிக்கை.
Post by: Global Angel on September 24, 2011, 07:43:44 PM
சோம்பல் ஒரு சோக காரணி  

                                              (http://i1027.photobucket.com/albums/y338/jimikki/lazy-lounger.png)

ஒருவன் வேலை தேடி ஒரு செல்வந்தரிடம் போனான். என்ன வேலையானாலும் செய்யத் தயார் என்றான். எவ்வளவு சம்பளமானாலும் சம்மதமே என்றான். அந்த செல்வந்தருக்கோ மட்டற்ற மகிழ்ச்சி. இப்படியும் ஒருவன் வேலையாளாகக் கிடைப்பது என்பது அதிர்ஷ்டமே அல்லவா?

அவன் தொடர்ந்து சொன்னான். “ஆனால் எனக்கு இரண்டே இரண்டு நிபந்தனைகள் .....”

அவர் கேட்டார். “என்ன நிபந்தனைகள்?”

அவன் சொன்னான். “முதலாவது நிபந்தனை- எனக்கு சாப்பிட்டவுடனேயே சிறிது நேரம் உறங்க வேண்டும்”

அவர் சொன்னார். “அது ஒரு பிரச்னையல்ல. அடுத்த நிபந்தனை என்ன?”

அவன் சொன்னான். “உறக்கத்தில் இருந்து விழித்த உடனேயே சிறிதாவது சாப்பிட வேண்டும்”

அந்த செல்வந்தரிடம் ஆரம்பத்தில் ஏற்பட்ட மகிழ்ச்சி கோபமாக மாறியது என்பதைச் சொல்லத் தேவையில்லை. உண்பதும் உறங்குவதுமே அவனுக்கு முழு நேர வேலை என்றால் அதற்கு சம்பளம் தர அவருக்கு பைத்தியமா பிடித்திருக்கிறது. அவனை அவர் அடித்து விரட்டினார்.

இது படிக்க ஒரு நகைச்சுவைக் கதை போல் தெரியலாம். ஆனால் நிறைய பேர் ஆசைப்படுவது இப்படித் தானிருக்கிறது. இந்த மனநிலை தான் சோம்பல். வாழ்க்கை சுமுகமாகப் போக வேண்டும், ஆனால் அது தங்கள் முயற்சியில்லாமல் நடந்தேற வேண்டும் என்று ஆசைப்படும் மனநிலை பலரிடம் இருக்கிறது. வார்த்தைகளில் சொல்லா விட்டாலும் எதிர்பார்ப்பு என்னவோ இப்படித்தான்.

சோம்பேறிகள் எந்த வித உழைப்பையும் மலைப்போடு பார்ப்பார்கள். கடுகளவு வேலையும் மலையளவாய் அவர்களுக்குத் தோன்றும். முயற்சி, வேலை என்றாலே ஒருவகை வெறுப்பை தங்கள் மனதில் வளர்த்து வைத்திருப்பார்கள். அப்படி வேறு வழியில்லாமல் வேலை செய்தே ஆக வேண்டும் என்று நிர்ப்பந்தம் வந்தால் அந்த வேலை தங்கள் வசதிக்கேற்ப இருக்க வேண்டும் என்று எண்ணுவார்கள். அந்த வேலையும் குறைந்த அளவாக இருக்க வேண்டும் என்றும், வேலையில் எந்த சிரமங்களும் இருக்கக்கூடாது என்று எண்ணுவார்கள். வேலை செய்வது எப்படி என்பதை அறிவதற்குப் பதிலாக அந்த வேலையில் இருந்து தப்பிப்பது என்பதை அறிந்து வைத்திருப்பார்கள்.
முடிந்த வரை அடுத்தவர்கள் தயவில், அடுத்தவர்கள் உழைப்பில் வாழத் துடிக்கும் இவர்கள் சோம்பல் தங்கள் வாழ்வில் மிகப்பெரிய சோக காரணி என்பதை உணர மறந்து விடுகிறார்கள்.

ஜெரிமி டெய்லர் சொல்வார். “உயிர் வாழும் மனிதனைப் புதைப்பது போன்றது சோம்பல்”. செஸ்டர் ஃபீல்டு பிரபு கூறுவார். “முயற்சி செய்யாமல் முடங்கிக் கிடைக்கும் சோம்பலை நான் ஒரு விதத் தற்கொலையாகவே கருதுகிறேன்”. அவர்கள் சொல்வது போல சோம்பேறித்தனம் மரணமடைவதற்கு சமமானது. இறந்தவனால் ஒன்றும் செய்ய முடியாது. சோம்பேறியோ ஒன்றும் செய்ய மாட்டான். இந்த இயக்கமின்மையை வைத்துப் பார்க்கும் போது இருவரும் ஒன்று தானே. இறக்கும் வரை இயங்கவே பிறந்திருக்கிறோம். இயங்க மறுப்பது வாழ்க்கையையே மறுப்பது போலத் தான்.


ஆனால் மேலும் ஆராய்ந்து பார்த்தால் சோம்பேறி பிணத்தைக் காட்டிலும் மோசமானவன். பிணம் மற்றவரை உபத்திரவிப்பதில்லை. சோம்பேறியோ யாரையெல்லாம் சார்ந்து இருக்கிறானோ அவர்களுக்கெல்லாம் பெரும் பாரமாகவும் உபத்திரவமாக இருக்கிறான். பிணம் யாரிடமிருந்தும் எதையும் எதிர்பார்க்காது. ஆனால் சோம்பேறிக்கோ அடுத்தவர்களிடம் நிறைய எதிர்பார்ப்பு இருக்கிறது.

மனிதன் பயன்படுத்தாத எதுவும் வலிமை குன்றிப் போகிறது. உடலை உழைக்க வைக்காத போது உடல் வலிமை குறைந்து கொண்டே போய் உடல் நோய்வாய் படுகிறது. அறிவைப் பயன்படுத்தாத போதோ சிந்திக்கும் திறன் குறைந்து கொண்டே போய் புத்தி மந்தமாகி விடுகிறது. சோம்பேறி இந்த இரண்டையும் பயன்படுத்தாமல் ஆரோக்கியத்திலும், புத்தியிலும் தனக்கே கேடு விளைவித்துக் கொள்கிறான்.

உலகில் உழைப்பில்லாமல் எந்த நல்ல காரியமும் நடந்து விடுவதில்லை. நம்மைச் சுற்றிப் பாருங்கள். நாம் வசிக்கும் வீடு உழைப்பால் உருவாக்கப்பட்டது. நாம் பயன்படுத்தும் ஒவ்வொரு பொருளும் உழைப்பால் உருவானவை. உழைப்பில்லாமல் உருவாவது களைகள் மட்டுமே. நல்ல செடிகளை நட்டு, நீருற்றி பேணிக்காக்க வேண்டி இருக்கிறது. அங்கு உழைப்பு தேவைப்படுகிறது.

சோம்பேறித்தனத்தால் நல்லது எதுவும் நடப்பதில்லை என்பது மட்டுமல்ல, ஏராளமான தீமைகளுக்கு சோம்பல் விளைநிலமாக இருக்கிறது என்பது கவனிக்கப்பட வேண்டிய விஷயம். சோம்பேறியின் மூளை தீமைகளின் தொழிற்சாலை என்று சொல்வார்கள். அது உண்மையே. தேங்கிக் கிடக்கும் நீரில் நோய்க்கிருமிகளும், புழு பூச்சிகளும் உருவாவது போல இயக்கம் இல்லாத சோம்பேறியின் மூளையில் தீய சிந்தனைகள் தழைக்கின்றன. திருட்டு, கொள்ளை எல்லாம் உழைக்கத் தயங்கும் சோம்பேறித்தனத்தின் விளைவுகளே அல்லவா?

சோம்பலின் தீமைகளை திருவள்ளுவரும் அருமையாக விளக்குவார்.

முயற்சி திருவினை ஆக்கும் முயற்றின்மை
இன்மை புகுத்தி விடும். (616)

(முயற்சி செல்வத்தை உருவாக்கும். சோம்பலோ வறுமையை சேர்த்து விடும்)

603 ஆம் குறளில் “மடிமடிக் கொண்டொழுகும் பேதை” என்பார். ”அழிக்கும் இயல்புடையதாகிய சோம்பலை தன்னிடம் கொண்டு நடக்கும் அறிவிலி” என்பது இதற்குப் பொருள்.

அவர் சொல்வது போல சோம்பேறித்தனம் முட்டாள்தனமே ஆகும். உழைப்பு கடினமானது என்பது ஒரு தவறான அஸ்திவாரத்தில் எழுப்பப்பட்ட கருத்து ஆகும். உண்மையில் பார்த்தால் உழைப்பை விட சோம்பலே கடினமானது. உழைக்கும் போது உடலுக்கும் அறிவிற்கும் வேலை இருப்பதால் காலம் வேகமாக ஓடி விடும். முடிவில் செல்வமும் நன்மையும் விளைந்திருக்கும். ஆனால் சோம்பலில் காலம் நகர்வதே இல்லை என்று தோன்றும். முடிவில் வெறுமையும் துக்கமுமே மிஞ்சும்.

எனவே சோம்பலை உங்களிடம் இருந்து விலக்குங்கள். சோகத்தையும், அர்த்தமின்மையையும் சேர்த்து நீங்கள் உங்கள் வாழ்க்கையிலிருந்து விலக்குவதாக அது அமையும்.
Title: Re: வெற்றி-தன்னம்பிக்கை.
Post by: Global Angel on October 02, 2011, 08:42:54 PM
இன்றைய இளைஞர்கள் நாளைய மன்னர்கள்-சாத்தியமா?  

                                                                    (http://i1027.photobucket.com/albums/y338/jimikki/youthpower.jpg)


இன்று ஆட்சியிலும், பல்வேறு துறைகளிலும் முடிசூடா மன்னர்களாக இருப்பவர்கள் எல்லாம் நேற்றைய இளைஞர்கள். எனவே இன்றைய இளைஞர்கள் நாளைய மன்னர்களாக மாறப் போவது சந்தேகத்திற்கு இடமில்லாதது. பின் ஏன் இந்த தலைப்புக் கேள்வி எழுந்தது என்றால் இன்று உப்புசப்பில்லாமல், ஊமைச்சனங்களாய், அடிமைகளாய் வாழ்ந்து கொண்டிருக்கும் கூட்டத்தினரும் நேற்றைய இளைஞர்களே. அது போல் இன்றைய இளைஞர்களில் எத்தனை பேர் மன்னர்களாவார்கள், எத்தனை பேர் அடிமைகளாக, ஆட்டுமந்தைகளாய் வாழ்ந்து மடிவார்கள் என்ற சந்தேகத்தின் பேரில் தான் இந்த தலைப்புக் கேள்வி எழுந்திருக்க வேண்டும். மேலும் மன்னர்களாக உயர்பவர்களும் சரித்திரம் படைக்கும் மன்னர்களாக இருப்பார்களா இல்லை சரித்திரம் பழிக்கும் மன்னர்களாக இருப்பார்களா என்பதும் ஊகத்திற்குட்பட்ட விஷயமே. எனவே இன்றைய இளைஞர்கள் நாளைய வரலாறு படைக்கும் மன்னர்களாவது சாத்தியமா என்பது தான் நம் முன் நிற்கும் பெரிய கேள்வி.

இந்தக் கேள்விக்கு பதிலை ஒரு கதையின் மூலம் அறிந்து கொள்ளலாம். எல்லாம் அறிந்த ஒரு முனிவர் ஒரு ஊரிற்கு வந்தார். பலரும் அவரிடம் சென்று தங்கள் எதிர்காலங்களை அறிந்து வந்தனர். ஒரு குறும்புக்கார இளைஞன் அந்த முனிவரால் பதில் சொல்ல முடியாத ஒரு கேள்வியைக் கேட்கத் திட்டமிட்டான். தன் உள்ளங்கையில் நடுவே ஒரு பட்டாம்பூச்சியை வைத்து இரு கைகளாலும் மூடியபடி அந்த முனிவரிடம் சென்றான்.

“முனிவரே. என் கையில் உள்ள பட்டாம்பூச்சி உயிருள்ளதா? உயிரற்றதா?” என்று முனிவரிடம் அவன் கேட்டான்.

அவர் அது உயிருள்ளது என்றால் கைகளால் அழுத்தி நசுக்கி அந்தப் பட்டாம்பூச்சியைக் கொன்று விட்டு ’பாருங்கள். உயிரில்லையே’ என்று சொல்ல நினைத்தான். அவர் அது உயிரற்றது என்று சொன்னால் அந்தப் பட்டாம்பூச்சியை ஒன்றும் செய்யாமல் கைகளைத் திறந்து பறக்க விட்டு “உயிருடன் இருக்கிறது பாருங்கள்” என்று சொல்ல நினைத்தான். இந்தக் கேள்விக்கு சரியான பதிலை அந்த முனிவரால் சொல்ல முடியாத தர்மசங்கடத்தில் ஆழ்த்துவது தான் அவன் குறிக்கோள்.

அவன் எண்ணத்தைப் புரிந்து கொண்ட அந்த முனிவர் புன்னகையுடன் சொன்னார். “அது உயிருடன் இருப்பதும், இறப்பதும் உன் விருப்பத்தைப் பொருத்தது”

அது போல இன்றைய இளைஞர்கள் நாளைய மன்னர்களாவதும், மண்ணாங்கட்டிகளாவதும் அவர்களுடைய எண்ணங்களையும், பண்புகளையும், ஈடுபாடு காட்டும் விஷயங்களையும், வாழும் முறைகளையும், மன உறுதியையும் பொருத்தது.

பதினாறு வயதில் அரபு வியாபாரிகளிடம் வேலைக்குச் சென்ற திருபாய் அம்பானி என்ற இளைஞன் மனதில் பெரியதொரு கனவிருந்தது. அந்தக் கனவை நனவாக்கும் மன உறுதியும் இருந்தது. அதை நனவாக்க என்ன விலையும் தரவும் அந்த இளைஞன் தயாராக இருந்தான். அந்த இளைஞன் இந்திய வணிகத்துறையில் முடிசூடா மன்னனாக மாறியதை சரித்திரம் இன்று சொல்கிறது.

மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி என்ற குஜராத்தி இளைஞன் மனதில் சத்தியத்திற்கு ஒரு பெரிய முக்கியத்துவம் இருந்தது. ஒடிசலான உடல்பலமற்ற அந்த இளைஞன் வக்கீல் படிப்பு படித்த போதும் பெரிய வக்கீல் ஆகும் திறமை ஒன்றும் அவனுக்கு இருக்கவில்லை. ஆனால் அந்த இளைஞன் மனதில் இருந்த அந்த அசைக்க முடியாத உறுதி இந்திய மண்ணில் வேரூன்றி இருந்த ஆங்கிலேய சாம்ராஜ்ஜியத்தை வேரோடு பிடுங்கி எறிந்து சரித்திரம் படைத்தது. எத்தனையோ இளைஞர்கள் காந்தியடிகளால் கவரப்பட்டு விடுதலை வேட்கையுடன் சுதந்திரத்திற்காகப் போராட்டத்தில் குதித்தார்கள். ‘கத்தியின்றி, இரத்தமின்றி’ நடந்த ஒரே மிகப்பெரிய சுதந்திரப் போராட்டம் உலக சரித்திரத்தில் பதிவாகியது.

சிறுவனாக இருந்த போது முதல் முறையாக திசை காட்டும் கருவி (காம்பஸ்) ஒன்றைப் பார்த்து அதிசயித்தான் ஐன்ஸ்டீன் என்ற அந்த சிறுவன். எப்படி திசையை மாற்றினாலும் அதிலிருந்த முள் வடக்கு நோக்கியே நகர்ந்ததைக் கண்டு, அப்படி அதை இயக்கும் கண்ணுக்குத் தெரியாத அந்த சக்தியைப் பற்றி ஐன்ஸ்டீன் அறியத் துடித்தான். அவனுடைய அந்த ஆவல் விஞ்ஞானத் துறை நோக்கி அவனைப் பயணம் செய்ய வைத்தது. இளமை முழுவதும் ஐன்ஸ்டீனுக்கு இருந்த அந்த அறிவியல் தாகம் சென்ற நூற்றாண்டின் இணையற்ற விஞ்ஞானியாக பின்னாளில் அவனை மாற்றியது. அது வரை இருந்த பல விஞ்ஞானக் கோட்பாடுகளைத் தலைகீழாகப் புரட்டிப் போட்டு புதிய சரித்திரம் படைத்தார் ஐன்ஸ்டீன்.

இப்படி வியாபாரமாகட்டும், ஆட்சியாகட்டும், விஞ்ஞானமாகட்டும், வேறெந்த துறையுமாகட்டும் இளைஞர்கள் இளமைக் காலத்தில் தங்கள் மனதில் விதைத்த கனவுகள், சிந்தித்த சிந்தனைகள், உழைத்த உழைப்புகள் எல்லாம் சேர்ந்து தான் பெருத்த மாற்றங்களை உருவாக்கி இருக்கின்றன.

இளமைக்காலம் விதைக்கும் காலம். கவிஞர் கண்ணதாசன் இளமைக்காலத்தை “கற்பூரப் பருவம்” என்பார். அந்தப் பருவத்தில் எதுவும் சீக்கிரம் இளம் மனங்களில் பற்றிக் கொள்ளுமாம். அந்தக் காலத்தில் இளைஞர்கள் தங்கள் இதயங்களில் எதை விதைக்கிறார்கள், எதற்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள், எதை அடையப் பாடுபடுகிறார்கள் என்பது கவனிக்க வேண்டிய முக்கிய விஷயம். ஏனென்றால் அதைப் பொறுத்தே அவர்கள் எதிர்காலத்தில் மாறுகிறார்கள்.

இளைஞர் சக்தி உலகில் பிரம்மாண்டமான சக்தி. அந்த சக்தி ஆக்கபூர்வமாகப் பயன்படுத்தப்படுகிறதா, அழிவை நோக்கிப் பயன்படுத்தப்படுகின்றதா, பயன்படுத்தாமலேயே புதைந்து போகிறதா என்பதைத் தீர்மானிப்பதில் அவர்களுக்குக் கிடைக்கும் முன்மாதிரிகளுக்கும், அவர்கள் மனதில் பதியும் நிகழ்வுகளுக்கும் பெரும் பங்கு உண்டு.

இந்தியா சுதந்திரம் பெற்ற போது இந்திய முன்னால் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் அவர்கள் இராமேசுவரம் பள்ளியில் படித்துக் கொண்டிருந்தார். 16-8-1947 தேதிய தமிழ் நாளேட்டில் நாட்டு மக்களுக்கு பண்டித நேரு விடுத்த வரலாற்றுப் புகழ்மிக்க உரை பதிவானதை மிகுந்த ஆர்வத்தோடு படித்தார். அந்தச் செய்திக்கு அருகிலேயே இன்னொரு செய்தியும் இருந்தது. நவகாளியில் கலவரத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உதவி செய்வதற்காக மகாத்மா காந்தி வெறும் காலுடன் நடந்து போய்க் கொண்டிருந்த படத்துடன் விவரித்திருந்த அந்த செய்தி அப்துல் கலாமை மிகவும் நெகிழ வைத்து விட்டது. தேசத்தந்தை என்ற நிலையில் செங்கோட்டையில் முதன்முதலில் தேசியக்கொடியை ஏற்ற வேண்டிய மனிதர் அதை விட்டு விட்டு பொது சேவையில் தன்னை அந்தக் கணத்தில் ஈடுபடுத்திக் கொண்டது பள்ளி மாணவர் அப்துல் கலாம் மனதில் பசுமரத்தாணியாகப் பதிந்ததாக அவரே ஒரு புத்தகத்தில் குறிப்பிடுகின்றார். தன்னலமில்லா ஒரு விஞ்ஞானியாகவும், தலைவராகவும் பின்னாளில் அவர் உருவானதற்கான விதை என்று கூட அதைச் சொல்லலாம்.

“ரோமானியப் பேரரசின் ஏற்றமும், வீழ்ச்சியும்” என்ற நூலில் உலக நாகரிகத்தின் சிகரத்திற்கே சென்ற ரோமாபுரி மக்கள் உயர்ந்த விதத்தையும், வீழ்ச்சி அடைந்த விதத்தையும் வரலாற்றாசிரியர் மிக அழகாக விளக்குகிறார். வீழ்ச்சிக்கான காரணங்களை அவர் கூறும் போது முக்கியமான காரணமாக அந்நாட்டு இளைஞர்கள் மதுவிலும், ஆடம்பரங்களிலும், கேளிக்கைகளிலும் மூழ்கி அறிவுசார்ந்த சிந்தனைகளையும், உழைப்பையும் கைவிட்டதைக் குறிப்பிடுகிறார். விதையாக இருந்தவை எவை, விளைச்சலாக நேர்ந்தது என்ன என்பது சிந்திக்க வேண்டிய செய்தி. எனவே இந்த இளைஞர் சக்தி இன்று எந்த நிலையில் இருக்கிறது. எப்படி பயன்படுத்தப் படுகிறது, பதப்படுத்தப்படுகிறது என்பதில் அனைவரும் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

ஒரு காலத்தில் மனித குலம் மேம்பட பயன்படுத்தப்பட்ட கல்வி இன்று அந்த ஆரம்ப நோக்கத்திலிருந்து நிறையவே விலகி விட்டிருக்கிறது என்பது வருத்தமளிக்கும் விஷயம். இன்று கல்வி வேலை வாய்ப்புக்கான சாதனமாக மட்டுமே மாறி விட்டது. ஏராளமான தகவல்களை மாணவர்களுக்குள்ளே திணிக்கிறதே ஒழிய அவர்களுடைய பண்புகளை வளர்ப்பதில் அலட்சியமே காட்டுகிறது. ஒரு காலத்தில் நல்ல விஷயங்களைச் சொல்ல நீதிப்பாடம் (Moral Science) என்று ஒரு பாடவகுப்பு இருந்தது. அதில் நீதிக்கதைகள், சான்றோர் பற்றிய செய்திகள், பெரியோர்களின் வாழ்க்கை வரலாறெல்லாம் மாணவர்களுக்கு சொல்லித் தருவார்கள். இன்று அது போன்ற பாடவகுப்புகள் எங்கும் இருப்பதாகத் தெரியவில்லை.

எந்த அறிவும் நன்மைக்காகப் பயன்படுத்த வேண்டுமென்றால் எது நன்மை, எது தீமை என்ற சிந்தனை ஆழமாக மனதில் பதிந்திருக்க வேண்டும். இல்லா விட்டால் அழிவே விளையும் என்பதற்கு இக்காலத்தில் ஏராளமான உதாரணங்கள் உள்ளன. அணுவைப் பிளந்து பெரும் சக்தியைக் கண்டு பிடிக்க விஞ்ஞானிகளால் முடிந்தது. ஆனால் அதை ஆக்க பூர்வமாகப் பயன்படுத்துவதை விட அதிகமாக அழிவுக்காக அல்லவா உலகம் அதிகம் பயன்படுத்துகிறது. அணுகுண்டாக விழுந்து அந்த அறிவு எத்தனை கோடி உயிர்களைப் பலி வாங்கி இருக்கிறது.

இளம் வயதிலேயே எத்தனை இளைஞர்களை மதம் என்ற பெயரில் மூளைச்சலவை செய்து தீவிரவாதிகளை சிலர் உருவாக்கி அழிவை அரங்கேற்றுகிறார்கள். அந்த இளைஞர்களில் பலர் மிக நன்றாகப் படித்தவர்கள் என்பதை செய்தித்தாளில் படிக்கிற போது நம் மனம் பதைக்கிறது. மனிதத்தன்மையைக் கூட அவர்கள் கற்ற கல்வியால் தக்க வைத்துக் கொள்ள முடிவதில்லையே!

கவிஞர் கண்ணதாசன் குறள் வடிவில் ஒரு முறை நகைச்சுவையாக எழுதினார்.

கற்காலம் நோக்கி கற்றவரை ஓட்டுவதே
தற்கால நாகரி கம்!

ஆனால் நம் முன்னோர் கல்வியை தகவல்களைச் சேர்க்கும் சாதனமாக நினைத்ததில்லை. சம்ஸ்கிருதத்தில் “தத் த்வித்யம் ஜன்மா” என்ற வாக்கியம் உண்டு. இதற்கு ’கல்வி இரண்டாம் பிறப்பு போன்றது’ என்று பொருள். படிப்பது இன்னொரு முறை பிறப்பது போல், புதுப்பிறவி பெறுவது போல் மேன்மையானது என்று நம் முன்னோர் நினைத்தார்கள். கல்வி கற்றவனை மேம்படுத்தி மற்றவனையும் மேம்படுத்தப் பயன்பட வேண்டும். அப்படிக் கல்வி கற்ற இளைஞர்களே வரலாறு படைக்கும் நாளைய மன்னர்களாகப் பரிணமிக்க முடியும்.

அப்படி இல்லாமல் வெறும் பட்டப்படிப்பு சான்றிதழுக்காகவும், வேலைக்காகவும் கற்கும் கல்வியை வைத்து நம் நாட்டில் இத்தனை பேர் கல்வி பெற்று விட்டார்கள் என்று புள்ளி விவரம் சொல்வது பேதைமை. கற்ற கல்வி நம்மைப் பண்படுத்தா விட்டால், சமூகத்திற்குப் பயன் தருவதாக இல்லா விட்டால் அந்தக் கல்வியால் என்ன பயன்?

இக்காலக் கல்விமுறை பெரிதும் ஒருவரைப் பண்படுத்தப் பயன்படுவதில்லை என்ற போதும் நாம் மனம் தளர வேண்டியதில்லை. இக்காலக் கல்வியின் உதவியில்லா விட்டாலும் சிந்திக்க முடிந்த, நன்மை தீமை என்று பகுத்தறியக் கூடிய நல்ல இளைஞர்கள் இன்றும் கணிசமான அளவில் உள்ளார்கள் என்பது ஆறுதல் அளிக்கக் கூடிய விஷயம். அவர்களுக்கு நல்ல முன்மாதிரிகள் இருந்தால், வழி நடத்தக் கூடிய பண்பாளர்கள் இருந்தால் அவர்கள் பெரும் சாதனையாளர்களாக கண்டிப்பாக மலர்வார்கள்.

நல்ல முன்மாதிரி என்று சொல்லும் போது நமக்கு அப்துல் கலாம் நினைவு தான் வருகிறது. நாட்டின் ஒவ்வொரு மூலைக்கும் சென்று மாணவர்களை சந்திக்கும் வழக்கம் உள்ள அவர் இளைய சமுதாயத்தில் பெரும் நம்பிக்கை வைத்து இருக்கிறார். அவர்களிடம் நேரடியாகத் தொடர்பு கொண்டு பேசும் அவருக்கு இளைய சமுதாயத்தின் நாடித் துடிப்பை உணர முடிகிறது. அவர் அனுபவம் இன்றைய இளைஞர்கள் நாளைய நல்ல மன்னர்களாக மாறுவது சாத்தியமே என்று சொல்கிறது.

ஆனால் இன்றைய இளைஞர்களைப் பண்படுத்தும் வேலையை அப்துல் கலாம் போன்றவர்களுக்கு ஒதுக்கி விட்டு மற்றவர்கள் ஒதுங்கி விட முடியாது. நம் பங்கிற்கு நாமும் ஏதாவது செய்தாக வேண்டும் என்பதை நாம் ஒவ்வொருவரும் உணர்வது முக்கியம். எத்தனையோ இளைஞர்கள் வேர்களை மறந்து அலைகிறார்கள். எந்திரம் போல வாழ்கிறார்கள். தீவிரவாதம் போன்ற அழிவுப் பாதையில் போகிறார்கள். அவர்களுக்கெல்லாம் நம்மால் முடிந்த வரை நல்ல முன்மாதிரிகளாக இருக்க முயற்சிக்க வேண்டும். வீட்டிலும், சமூகத்திலும் நாணயமான, பொறுப்புணர்வுள்ள மனிதர்களாக நாம் நடந்து கொண்டாலே போதும். நல்லதைச் சொல்லி, நல்லதைச் செய்து வாழ்ந்தால் அது நல்ல சிந்தனை அலைகளை நம்மை சுற்றி ஆரம்பித்து வைக்கும். அந்த அலைகளால் உங்கள் வீட்டிலோ, நீங்கள் இருக்கும் பகுதியிலோ ஒரு இளைஞர் ஈர்க்கப்பட்டு நல்ல விதத்தில் மாறினாலும் அது பெரும் வெற்றியே. நம்மில் ஒவ்வொரு மனிதராலும் இப்படி நல்ல அலைகளை அனுப்ப முடிந்தால், இளைய சமுதாயத்திடம் நல்ல விதைகளை விதைக்க முடிந்தால் அதன் அறுவடையாக இன்றைய இளைஞர்களை நாளைய வரலாற்றை மேன்மையான முறையில் எழுதும் மன்னர்களாக நாம் காண முடிவது நூறு சதவீதம் சாத்தியமே!
Title: Re: வெற்றி-தன்னம்பிக்கை.
Post by: Global Angel on October 06, 2011, 03:45:57 PM
எண்ணங்கள் பிரம்மாக்கள்  


                                               (http://i1027.photobucket.com/albums/y338/jimikki/Thoughts.jpg)

எல்லா செயல்களுக்கும், நிகழ்ச்சிகளுக்கும் மூல விதை எண்ணங்களே. எண்ணங்கள் இல்லாமல் செயல்கள் இல்லை. நிகழ்ச்சிகள் இல்லை. நம்மைச் சுற்றி இருக்கும் ஒவ்வொரு பொருளும் யாரோ ஒருவர் எண்ணத்தில் கருவாகி பின்னால் உருவாகியது தான். ஒவ்வொருவரின் வெற்றிக்கும், தோல்விக்கும் அவரவர் எண்ணங்களே மிக முக்கிய காரணங்களாக இருக்கின்றன.

இதைப் பெரும்பாலோருக்கு ஏற்க கடினமாக இருக்கலாம். நான் தோல்வி அடைய வேண்டும் என்று எண்ணுவேனா, நான் கஷ்டப்பட வேண்டும் என்று எண்ணுவேனா? பின் எதனால் எனக்குத் தோல்வி வந்தது? எதனால் கஷ்டம் வந்தது? என்று கேட்கலாம். கேட்பது நியாயமாகக் கூட நமக்குத் தோன்றலாம். ஆனால் ஆராய்ந்து பார்த்தால் தான் உண்மை விளங்கும்.

உதாரணத்திற்கு எனக்குத் தெரிந்த ஒரு மனிதரைச் சொல்லலாம். அவர் வியாபாரத்தில் பெரிய வெற்றியடைய வேண்டும் என்பதே தனக்கு லட்சியம் என்று அடிக்கடி சொல்லிக் கொள்வார். தந்தையின் சொத்தில் ஒரு நல்ல தொகை அவருக்குக் கிடைத்து அதை மூலதனமாகப் போட்டு அவர் வியாபாரம் ஆரம்பித்தார். காலையில் ஏழரை மணிவாக்கில் தான் எழுந்திருப்பார். அரை மணி நேரம் செய்தித்தாள் படிப்பார். பத்து மணிக்குத் தான் கடையைத் திறப்பார். மதியம் ஒன்றரை மணிக்கு வீட்டுக்கு வந்தாரானால் சாப்பிட்டு விட்டுத் தூங்கி எழுந்து மறுபடி ஐந்து மணிக்குத் தான் கடைக்கு செல்வார். எட்டரை மணிக்கு கடையை மூடி விட்டு வீடு திரும்புவார். அவருடைய போட்டியாளர்கள் எல்லாம் காலை ஒன்பது மணி முதல் இரவு ஒன்பது மணி வரை மதியம் அரை மணி சாப்பாட்டு நேரம் தவிர கடையில் இருந்து வியாபாரம் செய்தார்கள்.

அதைச் சிலர் சுட்டிக்காட்டிய போது அவரோ “மதியம் சற்று தூங்கினால் ஒழிய எனக்கு உடல் ஒத்துக் கொள்கிறதில்லை. அந்த மதிய நேரத்தில் பெரிதாக என்ன வியாபாரம் ஆகி விடப்போகிறது” என்று சொன்னார். எட்டரை மணிக்கு கிளம்பி வருவது ஏன் என்று ஒருவர் கேட்ட போது “ஒன்பது மணி சீரியல் ஒன்று டிவியில் நன்றாக இருக்கிறது. எனவே எட்டரைக்குக் கிளம்பினால் தான் சரியாக அதைப் பார்க்க சரியாக இருக்கிறது” என்றார். வியாபாரத்தில் சிலர் அவருக்கு சற்று மரியாதை குறைவாகக் கொடுப்பது போல் தோன்றினாலும் அவரிடம் வியாபாரம் செய்வதை நிறுத்தி விடுவார். அவர் வியாபாரத்தில் படுநஷ்டம் ஏற்பட்டது என்பதை கூறத் தேவையில்லை.

வெற்றியடைய வேண்டும் என்ற எண்ணம் அவருக்கு இருந்தது உண்மையாக இருக்கலாம். ஆனால் மதிய நேரம் மூன்று மணி நேரமாவது தூங்க வேண்டும் என்ற எண்ணமும், இரவு ஒன்பது மணி சீரியலைப் பார்த்தே தீர வேண்டும் என்ற எண்ணமும், நல்ல மரியாதை தனக்கு கிடைக்க வேண்டும் என்ற எண்ணமும் வெற்றியடைய வேண்டும் என்ற எண்ணத்தையும் விட பல மடங்கு வலிமையாக ஆணித்தரமாக அவரிடம் இருந்தன. அந்த பலமான, ஆணித்தரமான எண்ணங்கள் செயல்களாகின. தூங்க முடிந்தது. சீரியல் பார்க்க முடிந்தது. மரியாதை தருபவர்களுடன் மட்டுமே வியாபாரம் செய்ய முடிந்தது. வெற்றியடைய வேண்டும் என்ற எண்ணத்தை விட வெற்றிக்கு எதிர்மறையான எண்ணங்கள் வலிமையாக இருந்ததால் வெற்றி மட்டும் கிடைக்கவில்லை.

எனவே வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணம் எனக்கு அதிகம் இருந்தும் எனக்கு வெற்றியே கிடைக்கவில்லை என்று யாராவது சொன்னால் அவர் வெற்றி பற்றிய எண்ணத்தோடு கூட இருக்கும் மற்ற எண்ணங்களையும் பரிசோதித்துப் பார்ப்பது நல்லது.

வாய் விட்டுச் சொல்லும் எண்ணங்கள் தான் முக்கியமானது என்றில்லை. பெரும்பாலான நேரங்களில் வாய் விட்டுச் சொல்லாத, வார்த்தையாகாத எண்ணங்கள் நம்முள்ளே வலிமையாக இருக்குமானால் அந்த வலிமையான எண்ணங்கள் தான் செயல்களாகும். மேலே சொன்ன உதாரணத்தில் தோல்வியடைய வேண்டும் என்பது அவரது எண்ணமாயில்லை என்றாலும் தோல்விக்கு இட்டுச் செல்கின்ற எண்ணங்கள் அவரிடம் வலிமையாக இருந்ததால் தோல்வி நிஜமாகியது.

ஒரு முறை எண்ணிய உடனேயே அந்த எண்ணம் சக்தி படைத்ததாக மாறி விடுவதில்லை. ஒரு எண்ணம் திரும்பத் திரும்ப எண்ணப்படும் போது அது சக்தி பெற ஆரம்பிக்கிறது. அந்த சக்தி அதை செயல்படுத்தத் தூண்டுகிறது. அதே எண்ணங்கள் கொண்டவர்களை தன் பக்கம் ஈர்க்கிறது. மேலும் வலுப்பெறுகிறது. அது அலைகளாகப் பலரையும் பாதிக்கிறது. பலரையும் செயலுக்குத் தூண்டுகிறது. அந்த எண்ணம் வலிமையானதாக இருந்தால் அது தனி மனிதர்களை மட்டுமல்ல, ஒரு சமூகத்தையே மாற்றலாம், நாட்டையே மாற்றலாம்.

சூரியன் அஸ்தமிக்காத பேரரசாகத் திகழ்ந்த ஆங்கிலேயர் ஆட்சியை கத்தியின்றி, இரத்தமின்றி போராடி இந்தியாவை விட்டு விரட்ட முடியும் என்ற எண்ணம் மகாத்மா காந்தியிடம் இருந்தது. எண்ண அளவிலே அது நகைப்பிற்கு இடமளிப்பதாகவே தோன்றினாலும் அந்த எண்ணத்தின் வலிமை இந்திய தேசத்தின் சரித்திரத்தையே பின்னாளில் மாற்றியமைத்ததை நாம் அறிவோம். அந்த எண்ணத்தின் வீரியம் எண்ணற்ற மனிதர்களைத் தொட முடிந்ததும், அந்த மனிதர்களை மாற்ற முடிந்ததும், சுதந்திரப் போராட்ட பேரலையை இந்தியாவில் உருவாக்க முடிந்ததும் வரலாறு அல்லவா? ஆங்கிலேய சூரியன் இந்திய மண்ணை விட்டு மறைந்தது சரித்திரம் அல்லவா?

ஒவ்வொரு புரட்சிக்குப் பின்னும், ஒவ்வொரு பெரிய மாற்றத்திற்குப் பின்னும், வலிமை வாய்ந்த எண்ணங்கள் ஆரம்பங்களாக இருந்திருக்கின்றன. வரலாற்றின் மாற்றத்திற்கே விதைகள் எண்ணங்களாக இருக்கின்றன என்றால் தனி மனித மாற்றத்திற்கு எண்ணங்கள் எந்த அளவு முக்கியம் என்பதை சொல்லத் தேவையில்லை.

நான் அதிர்ஷ்டமில்லாதவன் என்கிற எண்ணமே அடிக்கடி ஒருவர் மனதில் எழுமானால் அதற்கான ஆயிரம் நிரூபணங்களை அந்த எண்ணம் அவர் வாழ்வில் ஏற்படுத்திக் கொடுக்கும். என்னால் முடியும் என்ற உறுதியான எண்ணமே எப்போதும் ஒருவர் மனதில் மேலோங்கி நின்றால் அந்த எண்ணம் உண்மையில் அந்தக் காரியத்தை கண்டிப்பாக முடித்துக் காட்டும்.

எண்ணங்கள் பிரம்மாக்கள். அவை எண்ணியதை உருவாக்கும் சக்தி படைத்தவை. ஒரு எண்ணம் செயலாக முடியாமல் போகிறதென்றால் அதை விட சக்தி வாய்ந்த வேறொரு எண்ணம் அதனுடனேயே இருந்து போராடி அதனைப் பலமிழக்க வைத்திருக்கிறது என்று பொருள். எனவே உங்கள் மனதில் அதிகமாக மேலோங்கி நிற்கும் எண்ணங்கள் எத்தகையவை என்பதை அடிக்கடி சோதித்துப் பாருங்கள். அவை இன்று உங்களை இந்த நிலைக்குக் கொண்டு சேர்த்த பெருமை உடையவை. உங்களுடைய இன்றைய நிலை திருப்திகரமாக இல்லையென்றால் முதலில் உங்கள் எண்ணங்களை மாற்றுங்கள். எண்ணங்கள் மாறுகிற போது அதற்கேற்ப எல்லாமே மாறும். இது மாறாத உண்மை.


Title: Re: வெற்றி-தன்னம்பிக்கை.
Post by: Global Angel on October 12, 2011, 06:56:11 PM
அறிவைப் பெருக்கும் தோப்புக்கரணம்  


                                              (http://i1027.photobucket.com/albums/y338/jimikki/brain-exercise.png)

ஒரு காலத்தில் தோப்புக்கரணம் போடுவது என்பது பள்ளிகளில் மிகச் சாதாரணமான விஷயம். தவறு செய்தாலோ, வீட்டுப்பாடம் எழுதி வரா விட்டாலோ ஆசிரியர்கள் மாணவர்களைத் தோப்புக்கரணம் போட வைப்பது வாடிக்கை. பரிட்சை சமயத்தில் பக்தி அதிகரித்து மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற தாங்களாகவே பிள்ளையார் முன் தோப்புக்கரணம் போடுவதுமுண்டு. ஆனால் இக்காலத்தில் தோப்புக்கரணம் போடுவதை அதிகமாக நாம் காண முடிவதில்லை.

ஆனால் இந்த தோப்புக்கரணம் அமெரிக்காவில் ஆராய்ச்சிக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது என்று சொன்னால் ஆச்சரியமாக இருக்கிறதல்லவா? லாஸ் ஏஞ்சல்ஸைச் சேர்ந்த மருத்துவர் எரிக் ராபின்ஸ் (Dr.Eric Robins) இந்த எளிய உடற்பயிற்சியால் மூளையின் செல்களும் நியூரான்களும் சக்தி பெறுகின்றன என்கிறார். அவர் தன்னிடம் வரும் நோயாளிகளுக்கு அந்த உடற்பயிற்சியை சிபாரிசு செய்வதாகக் கூறுகிறார். பரிட்சைகளில் மிகக் குறைந்த மதிப்பெண்கள் எடுக்கும் ஒரு பள்ளி மாணவன் தோப்புக்கரண உடற்பயிற்சியைச் சில நாட்கள் தொடர்ந்து செய்த பின் மிக நல்ல மதிப்பெண்கள் வாங்க ஆரம்பித்ததாகக் கூறுகிறார்.


யேல் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த நரம்பியல் நிபுணரான டாக்டர் யூஜினியஸ் அங் (Dr. Eugenius Ang) என்பவர் காதுகளைப் பிடித்துக் கொள்வது மிக முக்கிய அக்குபஞ்சர் புள்ளிகளைத் தூண்டி விடுகின்றன என்று சொல்கிறார். அதனால் மூளையின் நரம்பு மண்டல வழிகளிலும் சக்தி வாய்ந்த மாற்றங்கள் ஏற்படுவதாக அவர் தெரிவிக்கிறார். இடது கையால் வலது காதையும், வலது கையால் இடது காதையும் பிடித்துக் கொண்டு உட்கார்ந்து எழுகையில் மூளையின் இரு பகுதிகளும் பலனடைகின்றன என்று சொல்கிறார்.

தோப்புக்கரணம் போடுவதால் ஏற்படும் மாற்றங்களை EEG கருவியால் டாக்டர் யூஜினியஸ் அங் அளந்து காண்பித்தார். மூளையில் நியூரான்கள் செயல்பாடுகள் அதிகரிப்பதை பரிசோதனையில் காண்பித்த அவர் மூளையின் வலது, இடது பாகங்கள் சமமான சக்திகளை அடைவதாகவும் சொன்னார். மிக நுண்ணிய தகவல் அனுப்பும் காரணிகள் வலுப்பெறுவதும் பரிசோதனையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. டாக்டர் யூஜினியஸ் அங் தானும் தினமும் தோப்புக்கரணம் போடுவதாகக் குறிப்பிடுகிறார்.
                                                                                                      (http://i1027.photobucket.com/albums/y338/jimikki/ear.jpg)
Autism, Alzheimer போன்ற இக்காலத்தில் அதிகரித்து வரும் நோய்களுக்குக் கூட இந்த தோப்புக்கரண உடற்பயிற்சியை ஆராய்ச்சியாளர்கள் பரிந்துரைக்கிறார்கள். தோப்புக்கரணம் தினமும் செய்வதன் மூலம் மேற்கண்ட நோய்களால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் மிக நல்ல பலன்களைப் பெறுவதாக அவர்களது பரிசோதனைகள் சொல்கின்றன.

ப்ராணிக் சிகிச்சை நிபுணர் கோ சோக் சூயி (Master Koa Chok Sui) தன்னுடைய Super Brain Yoga என்ற புத்தகத்தில் தோப்புக்கரணத்தைப் பற்றியும் அதன் பலன்கள் பற்றியும் குறிப்பிட்டுள்ளார். தன்னுடைய சொற்பொழிவுகளிலும் இதை அதிகம் குறிப்பிடுகிறார்.

இதனால் தான் தோப்புக்கரணம் பள்ளிகளில் நம் முன்னோர்களால் நடைமுறைப்படுத்தப்பட்டு இருக்கலாம் என்று தோன்றுகிறது. படிக்காத மாணவர்கள் தோப்புக்கரண முறையால் தண்டிக்கப்படுவதன் மூலம் அவர்களது அறிவுத் திறன் அ(http://i1027.photobucket.com/albums/y338/jimikki/ear1.jpg)திகரிக்க வழியும் காண்பிக்கப்பட்டிருக்கிறது என்று தோன்றுகிறது.

இந்த தோப்புக்கரணப்பயிற்சியை தினந்தோறும் மூன்று நிமிடங்கள் செய்தால் போதும் வியக்கத் தக்க அறிவு சார்ந்த மாற்றங்களைக் காணலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகிறார்கள். அவர்கள் பரிந்துரைக்கும் தோப்புக்கரண பயிற்சியை அவர்கள் சொல்கின்ற முறையிலேயே காண்போமா?

உங்கள் கால்களை உங்கள் தோள்களின் அகலத்திற்கு அகட்டி வைத்து நின்று கொள்ளுங்கள். உங்கள் பாதங்கள் நேராக இருக்கட்டும். வலது காதை இடது கையின் பெருவிரலாலும் ஆட்காட்டி விரலாலும் பிடித்துக் கொள்ளுங்கள். அதே போல் இடது காதை வலது கையின் பெருவிரலாலும் ஆட்காட்டி விரலாலும் பிடித்துக் கொள்ளுங்கள். பிடித்துக் கொள்ளும் போது இடது கை உட்புறமாகவும், வலது கை வெளிப்புறமாகவும் இருக்க வேண்டும் என்பது முக்கியம்.

மூச்சை நன்றாக வெளியே விட்டபடி அப்படியே உட்கார்ந்து மூச்சை உள்ளே நன்றாக இழுத்தபடி எழுந்து நில்லுங்கள். மூச்சும், உட்கார்ந்து எழுவதும் ஒரு தாளலயத்துடன் இருக்கட்டும்.

செய்து பழக்கமில்லாதவர்களுக்கு ஆரம்பத்திலேயே மூன்று நிமிடங்கள் தொடர்ந்து தோப்புக்கரணம் செய்வது கடினமாக இருக்கலாம். அப்படிப்பட்டவர்கள் ஒரு நிமிடம் செய்வதில் இருந்து ஆரம்பித்து நாட்கள் செல்லச் செல்ல இரண்டு நிமிடங்கள், பிறகு மூன்று நிமிடங்கள் என்று அதிகரியுங்கள்.

ஆராய்ச்சியாளர்கள் சொல்லும் மிக நல்ல பலன்களைப் பார்க்கும் போது உங்கள் அறிவுத் திறனின் வளர்ச்சிக்காக மூன்று நிமிடங்கள் தினமும் செலவழிப்பது மிகப்பெரிய விஷயமல்ல அல்லவா?
Title: Re: வெற்றி-தன்னம்பிக்கை.
Post by: Global Angel on October 21, 2011, 04:56:25 AM
அறிவார்ந்த முயற்சியால் ஆகாததில்லை!  
                                                                     (http://i1027.photobucket.com/albums/y338/jimikki/try-is-the-best.jpg)

முன்னொரு காலத்தில் சீனாவில் ஒரு பெரிய வியாபாரி தனக்குப் பின் வியாபாரத்தை தன் மூன்று மகன்களில் யார் வசம் ஒப்படைப்பது என்று தீர்மானிக்க அவர்களுக்கு ஒரு போட்டி வைத்தான். யார் அதிக அளவு சீப்புகளை புத்த மடாலயத்திற்கு விற்கிறார்களோ அவன் தான் தன் வியாபாரத்தை நிர்வகிக்கத் தகுதியானவன் என்று அறிவித்தான்.

மொட்டை அடித்துள்ள புத்த பிக்குகளிடம் சீப்பு வியாபாரமா என்று மகன்கள் மூவரும் ஆரம்பத்தில் திகைத்தனர். ஒரு சீப்பைக் கூட விற்க முடியாதே என்று நினைத்தனர். ஆனால் பின் மூவரும் முயற்சி எடுப்பது என்று முடிவு செய்தனர். அவர்கள் தங்கள் திறமையை வெளிப்படுத்த சில நாட்கள் அவகாசம் கொடுத்த அந்த வியாபாரி அது முடிந்தவுடன் மகன்களை அழைத்து அவர்கள் எந்த அளவு வெற்றி பெற்றிருக்கிறார்கள் என்று கேட்டான்.

ஓரு மகன் சொன்னான். “நான் இரண்டு சீப்புகள் புத்த மடாலயத்திற்கு விற்றேன்”

வியாபாரி கேட்டான். “எப்படி?”

“புத்த பிக்குகளிடம் இந்த சீப்பை முதுகு சொறியவும் உபயோகிக்கலாம் என்று சொல்லிப் பார்த்தேன். இரண்டு புத்த பிக்குகளுக்கு அது சரியென்றுபட்டது. அதனால் அவர்கள் இருவரும் இரண்டு சீப்புகள் வாங்கினார்கள்:”

இன்னொரு மகன் சொன்னான். “நான் பத்து சீப்புகள் விற்பனை செய்தேன்”

வியாபாரி ஆச்சரியத்துடன் கேட்டான். “எப்படி?”

“வழியெல்லாம் காற்று அதிகமாக உள்ளதால் மலை மேல் உள்ள அந்தப் புத்த மடாலயத்திற்குப் போபவர்கள் தலைமுடியெல்லாம் பெரும்பாலும் கலைந்து விடுகிறது. அப்படிக் கலைந்த தலைமுடியுடன் புத்தரை தரிசிக்க பக்தர்கள் செல்வது புத்தருக்குச் செய்யும் அவமரியாதையாகத் தோன்றுகிறது என்று புத்த மடாலயத்தில் சொன்னேன். ஒரு பெரிய கண்ணாடியும் சில சீப்புகளும் வைத்தால் அவர்கள் தங்கள் தலைமுடியைச் சரி செய்து கொண்டு புத்தரை தரிசிக்க செல்வது ந்ன்றாக இருக்கும் என்ற ஆலோசனையும் சொன்னேன். ஒத்துக் கொண்டு பத்து சீப்புகள் வாங்கினார்கள்”

வியாபாரி அந்த மகனைப் பாராட்டினான்.

மூன்றாம் மகன் சொன்னான். “நான் ஆயிரம் சீப்புகள் விற்பனை செய்தேன்”

வியாபாரி ஆச்சரியத்தின் எல்லைக்கே சென்றான். “எப்படி?”

“அந்த புத்த மடாலயத்திற்கு ஏராளமானோர் வந்து பொருளுதவி செய்கிறார்கள். அவர்கள் உதவியை மெச்சி புத்தரின் ஆசிகள் அவர்களை வழிநடத்தும் வண்ணம் அவர்களுக்கு ஏதாவது ஒரு நினைவுப் பரிசு வழங்கினால் அது மேலும் பலரும் புத்த மடாலயத்திற்கு உதவி செய்யத் தூண்ட உதவும் என்றேன். அந்த மடாலயத் தலைவர் என்ன நினைவுப் பரிசு தரலா என்று மடாலயத் தலைவர் கேட்டார். நான் புத்தரின் வாசகங்களைப் பதித்து வைத்திருந்த சில சீப்புகளை நீட்டினேன். அந்த சீப்புகளை தினமும் உபயோகிக்கும் பக்தர்களுக்கு அந்த உபதேசங்களைத் தினமும் காணும் வாய்ப்பும் கிடைக்கும், அந்த உபதேசங்கள் அவர்களைத் தினமும் வழிநடத்துபவையாகவும் இருக்கும் என்று தெரிவித்தேன். அது நல்ல யோசனை என்று நினைத்த மடாலயத்தலைவர் உடனடியாக அப்படி புத்தரின் வாசகங்கள் பதித்த ஆயிரம் சீப்புகள் வாங்க ஒப்புக் கொண்டார்”

அந்த வியாபாரி எந்த மகனிடம் தன் வியாபாரத்தை ஒப்படைத்தார் என்று சொல்ல வேண்டியதில்லை.

மொட்டை பிக்குகளிடம் சீப்பு விற்கப் போவது கண்டிப்பாக ஆகாத வேலை என்று நினைப்பது தான் பொதுவாக நாம் காணக்கூடிய மனோபாவம். விதி சில சமயங்களில் நம்மைக் கொண்டு சேர்க்கும் சூழ்நிலையும் கிட்டத்தட்ட இதே போலத் தான் இருக்கும். அதிலிருந்து மீள்வதற்கு வழியே இல்லை என்று முதலில் தோன்றும். ஆனால் அதை ஒப்புக் கொண்டு முடங்கி நிற்போமானால் நாம் தோல்வியை ஒப்புக் கொண்டு விட்டோம் என்பது பொருள்.

அந்த வியாபாரியின் மகன்கள் ஏதாவது முயற்சி செய்ய வேண்டும் என்று தீர்மானித்தது புத்திசாலித்தனமான செயல். நாமும் நாம் இருக்கும் அந்த மோசமான சூழ்நிலைக்குத் தீர்வே இல்லை என்று ஆரம்பத்தில் தோன்றினாலும் ஏதாவது செய்து நல்ல தீர்வைக் காண வேண்டும் என்று தீர்மானிப்பதுவே அறிவு.

முயற்சிகளிலும் பல வகை உண்டு என்பதற்கு வியாபாரியின் மூன்று மகன்கள்
முயற்சிகளே உதாரணம். ஒரு மகன் புத்த பிக்குகளிற்குத் தலை வார சீப்பு பயன்படா விட்டால் வேறெதற்காவது பயன்படுமா என்று யோசித்ததன் பலனாக இரண்டு சீப்புகள் அவனால் விற்க முடிந்தது. புத்த பிக்குகளுக்கு சீப்பு பயன்படாமல் போனாலும் அவர்களைச் சார்ந்தவர்களுக்கு சீப்பு பயன்படுமா என்று இன்னொரு மகன் யோசித்ததால் அந்த புத்த மடாலயத்தின் முன்புறம் சில சீப்புகள் வைத்து பக்தர்கள் தலைமுடியை முறையாக வாரிக் கொண்டு உள்ளே நுழைய உதவியாக பத்து சீப்புகள் விற்க முடிந்தது.

ஆனால் இந்த இரண்டு மகன்களுடைய முயற்சியாலும் தொடர்ந்து அந்த புத்த மடாலயத்திற்கு சீப்பு விற்க வழியில்லை. அவர்களுடைய விற்பனை ஒரு முறையோடு முடிந்து போய் விட்டது.

மூன்றாம் மகன் கூட இரண்டாம் மகன் போலவே புத்த பிக்குகளுக்குப் பயனில்லா விட்டாலும் அவர்களுடன் சம்பந்தப்படும் மற்றவர்களுக்குப் பயன்படுமல்லவா என்கிற சிந்தனையைத் தான் செய்தான். அந்த வெறும் சீப்பை புத்தரின் உபதேசங்களைச் செதுக்கி அதை அவர்கள் விரும்பும் வண்ணம் உயர்த்தி அதை நன்கொடை வழங்கும் பக்தர்களுக்கு புத்தரின் ஆசியாக மாற்றி விற்பனை செய்தான். அவனுடைய வித்தியாசமான சிந்தனை அதற்காக அவன் எடுத்துக் கொண்ட உழைப்பு எல்லாம் மற்றவர்களை மிஞ்சும் வண்ணம் வெற்றி பெற்றது. மேலும் மற்ற இருவரைப் போல் இவனுடைய விற்பனை ஒரு முறையோடு முடிகிற விற்பனை அல்ல. புத்த மடாலயத்திற்கு நன்கொடைகள் தருகிறவர்கள் அதிகரிக்க அதிகரிக்க இவன் விற்பனையும் அதிகரிக்கும்.

ஒரு சூழ்நிலையை ஒரே நேர்கோணத்தில் பார்ப்பது இரண்டு சீப்பு விற்ற மகனைப் போல அற்ப விளைவுகளையே ஏற்படுத்தும். பார்வையை சற்று விரிவுபடுத்தி வேறு கோணங்களிலும் சிந்தித்து செயல்படுவது பத்து சீப்பு விற்றவன் முயற்சி போல நல்ல விளைவுகளை அதிகரிக்கும். மேலும் பல கோணங்களிலும் சிந்தித்து, தன் திறமையையும் உழைப்பையும் சேர்த்து முயற்சி செய்பவன் அடையும் நன்மைகள் ஆயிரம் சீப்புகள் விற்பனை செய்தவன் முயற்சியைப் போல பலமடங்கு அதிகரிக்கும். ஆரம்பத்தில் வழியே இல்லை என்று தோன்றியது போய் புதிய பிரதேசங்களுக்கு நம்மை அழைத்துச் செல்லும் வாய்ப்பாக அமையும்.

எனவே எந்தவொரு கடினமான சூழ்நிலையிலும் மனம் துவண்டு விடாதீர்கள். முடியாது என்று தோன்றும் ஆரம்ப அபிப்பிராயத்திற்கு அடிபணியாதீர்கள். பார்வையை விரிவுபடுத்துங்கள். புதிய புதிய கோணங்களில் சிந்தியுங்கள். சில சிறிய மாற்றங்களால் பெரிய விளைவுகளை ஏற்படுத்த முடியுமா என்று யோசியுங்கள். பொறுமையுடனும், நம்பிக்கையுடனும், துடிப்புடனும் முயன்றால் அந்தக் கடினமான சூழ்நிலையே நீங்கள் அடையப் போகும் அளப்பரிய வெற்றிகளுக்கு அஸ்திவாரமாக அமையக்கூடும்.

Title: Re: வெற்றி-தன்னம்பிக்கை.
Post by: Global Angel on November 02, 2011, 04:37:52 AM
கலைந்த கனவும் கலையாத மனமும்  


                                                         (http://i1027.photobucket.com/albums/y338/jimikki/N_R_Narayana_Murthy.jpg)

அறிவு கூர்மையும், உழைக்கும் உறுதியும் இருந்து விட்டால் கூட காணும் கனவு நனவாக முடியும் என்கிற கட்டாயமில்லை. விதியின் தீர்மானமும் ஒத்துழைத்தால் மட்டுமே ஒரு கனவு நனவாக முடியும் என்ற கசப்பான உண்மையை ஒரு ஏழை இளைஞன் தன் வாழ்வில் உணர்ந்தான்.

மைசூரைச் சேர்ந்த அந்த இளைஞன் ஒரு ஆசிரியரின் மகன். பள்ளிக்கூடத்தில் அவன் மிக புத்திசாலியான மாணவன் என்று பெயரெடுத்தான். அவனுடைய நீண்ட நாள் கனவு ஐஐடியில் (IIT- Indian Institute of Technology) பொறியியல் வல்லுனராகப் பட்டம் பெற வேண்டும் என்பது தான். அதற்கு நுழைவுத் தேர்வில் மிக நல்ல மதிப்பெண்கள் பெற்று வெற்றி பெற வேண்டும். நுழைவுத் தேர்வு மிகக் கடினமானது. அதற்கான விலை உயர்ந்த புத்தகங்கள் வாங்குமளவு வசதி இல்லை. அதற்கு அளிக்கப்படும் பயிற்சி வகுப்புகளுக்கு செல்லும் பண வசதியும் இல்லை. ஆனாலும் அந்த இளைஞனும் அவனுடைய நண்பர்கள் சிலரும் சேர்ந்து அந்த நுழைவுத் தேர்வை எழுத எண்ணினர்.

முந்தைய வருடக் கேள்வித்தாள்களுக்கான பதிலை எல்லாம் எல்லோரும் கலந்து விவாதித்து எழுதிப் பார்த்துக் கொண்டு என்னவெல்லாம் கேட்கக் கூடும் என்று ஆலோசித்து அனைவரும் கடினமாக உழைத்தனர். அந்தக் கடினமான நுழைவுத் தேர்வில் அந்த இளைஞன் அகில இந்திய அளவில் பதினேழாம் இடத்தில் வந்தான். புத்தகங்கள் வாங்காமல், பயிற்சி வகுப்புகளுக்குச் செல்லாமல் அந்த இடத்தைப் பிடிப்பது சாதாரண விஷயமில்லை. அவன் அடைந்த ஆனந்தத்திற்கு அளவேயில்லை.

ஆனால் ஐஐடியில் பட்டப்படிப்பு முடிக்க ஆகும் செலவை அறிந்த போது அவனுடைய தந்தை அதிர்ச்சி அடைந்தார். ஐந்து மகள்களும், நான்கு மகன்களும் உடைய அந்தத் தந்தைக்கு ஒரு மகனின் கல்வியை மட்டும் கவனித்தால் போதாதல்லவா? ஆசிரியரான அவருக்கு அந்த அறிவாளியான மகனின் கனவுக்கு உதவ முடியவில்லையே என்ற வருத்தம் எந்த அளவு இருந்திருக்கும் என்பதை சொல்ல வேண்டியதில்லை. மகனை அழைத்து அவன் கனவுப் படிப்பு தற்போதைய குடும்ப சூழ்நிலையில் சாத்தியமல்ல என்று சொன்னார்.

இறுதியில் அந்த இளைஞன் தன் கனவைக் கலைக்க வேண்டியதாயிற்று. அவனை விடக் குறைந்த மதிப்பெண்கள் பெற்ற அவனுடைய சில நண்பர்கள் ஐஐடியில் சேர அவர்களை வழியனுப்பி விட்டு வந்த அந்த இளைஞன் மனம் பட்ட பாடு கொஞ்ச நஞ்சமல்ல. ஆனாலும் அவன் இடிந்து போய் உட்கார்ந்து விடவில்லை. விதி கொடுமையானது என்று புலம்பிக் கொண்டு செயலற்று இருந்து விடவில்லை. தன்னுடைய வாழ்விற்குத் தானே பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டும், எது முடிகிறதோ அதை சிறப்பாகச் செய்து வாழ்வைத் தொடர வேண்டும் என்று எண்ணிய அந்த இளைஞன் மைசூரிலேயே உள்ள ஒரு கல்லூரியில் பொறியியல் வல்லுனர் பட்டப் படிப்பு பெற்றார். சிறு சிறு வேலைகள் செய்து கொண்டே 1967ல் அந்தப்பட்டப் படிப்பையும், 1969ல் கான்பூரில் முதுகலைப் பட்டத்தையும் பெற்றான் அந்த இளைஞன். எழுபதுகளில் கணினி(கம்ப்யூட்டர்) என்ற அபூர்வ இயந்திரம் இந்தியாவிலும் அடியெடுத்து வைத்தது. அந்தக் காலக் கட்டத்தில் பெரிய பெரிய நிறுவனங்களிலும், சில அரசாங்கத் துறைகளிலும் மட்டுமே கணினிகள் பயன்படுத்தப்பட்டன. அந்த இளைஞன் "பத்னி கம்ப்யூட்டர்ஸ்" என்ற நிறுவனத்தில் 1977ல் பொது மேலாளராகச் சேர்ந்தான். அப்போது கணினிகளின் நுணுக்கத்தை அறிந்து வர அந்த இளைஞனை அந்த நிறுவனம் அமெரிக்காவுக்கு அனுப்பியது.

பட்டப்படிப்பு காலங்களில் கூட வேலைகள் செய்து கொண்டு பணத்தோடு அறிவையும் சேர்த்துக் கொள்ளும் பழக்கத்தைப் பெற்றிருந்த அந்த இளைஞனுக்கு அந்தப் பயணம் ஒரு திருப்பு முனையாக அமைந்தது. அமெரிக்காவில் கணினிகள் பற்றி முழுவதுமாக அறிந்து வந்த அந்த இளைஞன் எதிர்காலத்தில் கணினிகளின் தாக்கம் இந்தியாவிலும் கண்டிப்பாக அதிகமாகவே இருக்கும் என்பதைக் கணித்தான். கணினிகளின் தொழில்நுட்ப நிறுவனம் ஒன்றைத் தானே ஆரம்பிக்க எண்ணினான். சேமிப்பு ரூபாய் பத்தாயிரம் மட்டுமே கையில் இருந்தது.

அப்போது அவனுக்கு திருமணமும் ஆகியிருந்தது. மனைவியும் படித்து நல்ல உத்தியோகத்தில் இருந்தவள். அவளிடம் அவன் ஆலோசனை கேட்ட போது நல்ல சம்பளம் உள்ள வேலையை விட்டு விட்டு சேமிப்பை எல்லாம் போட்டு ஒரு புதிய முயற்சியில் ஈடுபடுவது புத்திசாலித்தனமல்ல என்று சொன்னாள். நடைமுறைக்கு ஏற்ற நல்ல அறிவுரையாக அது இருந்த போதும் எதிர்காலத்தில் கணினிகள் ஆதிக்கம் கண்டிப்பாக அதிகம் இருக்கும் என்று கணக்குப் போட்ட அந்த இளைஞன் துணிவுடன் தன் மனைவியின் துணையுடனும், தன் நண்பர்கள் சிலர் துணையுடனும் ஒரு புதிய நிறுவனம் ஆரம்பித்தான். புனேயில் 7-7-1981ல் ஒரு சிறிய வீட்டில் ஆரம்பிக்கப்பட்ட அந்த நிறுவனம் இன்று உலக நாடுகளில் எல்லாம் கிளைகள் கொண்ட பிரம்மாண்டமான நிறுவனமாக கோலோச்சி நிற்கின்றது. அந்த நிறுவனம் இன்போசிஸ். அந்த இளைஞன் நாராயணமூர்த்தி.

ஐஐடியில் பட்டப்படிப்பு என்ற ஒரு கனவு கலைந்த போது அவர் தன்னை அதிர்ஷ்டமில்லாதவனாக முத்திரை குத்திக் கொள்ளவில்லை. என்ன செய்தாலும் நமக்கு வாய்ப்பதென்னவோ இவ்வளவு தான் என்று முயற்சிகளை அவர் குறைத்துக் கொள்ளவில்லை. ஒரு கதவை மூடும் இறைவன் அதை விடச் சிறந்த இன்னொரு கதவைத் திறந்து விடக்கூடும். சில கடினமான சூழ்நிலைகள் நம்மைப் பதப்படுத்தவே ஏற்படவும் கூடும். அதற்கெல்லாம் தயாராக இருந்து செயல்படுகிற மனிதனே காலப்போக்கில் வெற்றியடைகிறான் என்பதற்கு நாராயணமூர்த்தி ஒரு நல்ல உதாரணம்.

இறைவன் ஆலமரத்தை பெரியதாக வளர்ந்த மரமாகவே கொண்டு வந்து நட்டு விடுவதில்லை. ஒரு விதையாக உருவாகும் அது ஓர் பெரிய ஆலமரமாக வேண்டுமென்றால் கிடைக்கின்ற காற்று, நீர், பூமியின் சத்துக்கள் எல்லாவற்றையும் பயன்படுத்திக் கொள்ளத் தெரிந்திருக்க வேண்டும். காலத்தோடு பொறுமையாகச் செயல்படவும் காத்திருக்கவும் அறிந்திருக்க வேண்டும். அது ஒரு நாள் மரமாகலாம். சில காலம் கழித்து காடே ஆகலாம். ஆனால் அதன் ஆரம்பம் மிகச் சிறிய விதை தான். அது அந்த நிலையில் தாழ்வு மனப்பான்மை கொண்டு விட்டால், சலிப்படைந்து விட்டால் மரமாகும் வாய்ப்பையும், காடாகும் வாய்ப்பையும் என்றுமே இழக்க நேரிடும்.

அறிவு கூர்மையும், உழைக்கும் உறுதியும் இருந்து விட்டால் கூட காணும் கனவு நனவாக முடியும் என்கிற கட்டாயமில்லை. விதியின் ஒத்துழைப்பும் தேவை தான். ஆனால் விதி ஒத்துழைக்காத போதும் மன உறுதியை இழந்து விடாமல் முன்னேறும் மனிதனை மெச்சி அதே விதி அவனுக்கு உதவத் தீர்மானிக்கிறது. எனவே இளைஞர்களே, உங்களுடைய ஓரிரு கனவுகள் கலையக்கூடும். எல்லாக் கனவுகளும் கைகூடும் மனிதர்கள் இது வரை பூமியில் வாழ்ந்ததில்லை. நாம் இன்று போற்றி பிரமிக்கும் எத்தனையோ பெரிய மனிதர்கள் கூட நினைத்தபடியெல்லாம் இருக்க முடிந்ததில்லை. அதை நினைவில் வையுங்கள். கனவு கலைந்தாலும், மனம் கலையாமல் பார்த்துக் கொள்ளுங்கள். உங்களுக்குள்ளும் ஒரு நாராயணமூர்த்தி இருக்கலாம். நீங்களும் காடுகளை உருவாக்கும் விதையாக இருக்கலாம். அந்த சாத்தியக்கூறை கௌரவியுங்கள். நம்பிக்கையும், விடாமுயற்சியும் இருக்குமானால் நீங்களும் நிறைய சாதிப்பீர்கள். சிகரங்களை எட்டுவீர்கள்!
Title: Re: வெற்றி-தன்னம்பிக்கை.
Post by: Global Angel on November 06, 2011, 11:05:59 PM
மாற்றங்கள் உருவாக்கும் வாய்ப்புகள்  

வெற்றியாளர்களுக்கும் தோல்வியாளர்களுக்கும் இடையே எத்தனையோ வேறுபாடுகள் இருக்கின்றன என்றாலும் ஒரு வேறுபாடு மிகவும் பிரதானமாக இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கருதுகிறார்கள். அது என்னவென்றால் வெற்றியாளர்கள் மாற்றங்கள் நிகழும் போது அதற்குத் தகுந்தாற் போல் உடனடியாக மாறி அந்த மாற்றங்களுடன் வரும் வாய்ப்புகளைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்கிறார்கள். தோல்வியாளர்களோ நிகழும் மாற்றங்களைக் கண்டு முகம் சுளிக்கிறார்கள். மனம் வருந்துகிறார்கள். புலம்புகிறார்கள். எனவே அந்த மாற்றங்களை ஏற்றுக் கொள்ளவும், மாற்றங்களுடன் வரும் வாய்ப்புகளைக் கண்டு கொள்ளவும், பயன்படுத்தவும் தவறி விடுகிறார்கள்.

உலகில் மாறுதல் ஒன்றே மாறாத நியதி என்று சொல்வார்கள். மாறுதல் உலகம் இயங்குவதன் அறிகுறி. உலகம் இயங்கிக் கொண்டு இருக்கும் வரை மாறுதலும் இருந்து கொண்டே இருக்கும். உலகம் யாருடைய தனிப்பட்ட கருத்தின்படியும் இயங்குவதில்லை. அவர்கள் கருத்தைப் பொருட்படுத்துவதுமில்லை. அது பிடிக்காதவர்கள் உலகில் பின்னுக்குத் தள்ளப்படுவார்கள்.

மாறுகின்ற காலத்தில் மாறுகின்ற தேவைகளுக்கேற்ப தங்கள் வழி முறைகளை மாற்றிக் கொண்டு செயல்படும் மனிதர்கள் மட்டுமே வெற்றியடைகிறார்கள். நேற்றைய தேவைகளுக்கேற்ப உங்களது இன்றைய செயல்பாடுகள் இருந்தால் எப்படி வெற்றி கிடைக்கும்?

அல்கெமிஸ்ட் என்ற பிரபல நாவலில் இதற்கு ஒரு அழகான உதாரணத்தைக் காணலாம். ஒரு சிறிய மலை மேல் அழகான கண்ணாடிப் பொருள்க¨ள் விற்கும் கடை ஒன்று இருந்தது. ஒரு காலத்தில் மிக நன்றாக வியாபாரம் நடந்த கடையில் காலம் செல்லச் செல்ல வியாபாரத்தில் தொய்வு ஏற்பட்டது. மலை அடிவாரத்திலேயே நிறைய கடைகள் வந்து விட யாரும் கண்ணாடிப் பொருட்களை வாங்க அந்த மலைக்கு மேல் வருவதை நிறுத்தினர். அந்த கடைக்காரருக்கோ அந்த வியாபாரம் தவிர வேறு வியாபாரமும் தெரியாததால் வேறு வழியில்லாமல் அதையே நடத்திக் கொண்டு வந்தார்.

சாண்டியாகோ என்ற இளைஞன் அவர் கடையில் வேலைக்குச் சேர்ந்தான். சம்பளம் மிகக் குறைவாகவே தந்த கடைக்காரர் நடக்கும் விற்பனையில் அதிக கமிஷன் தருவதாகச் சொன்னார். வியாபாரமே இல்லாததால் கமிஷன் எங்கே தரப் போகிறோம் என்ற எண்ணம் அவருக்கு. இரண்டே நாளில் உண்மை நிலவரத்தை சாண்டியாகோ உணர்ந்தான். வேறு கடைகளே இல்லாத காலத்தில் செய்த வியாபார முறையையே இப்போதும் கடைக்காரர் பின்பற்றுகிறார் என்று புரிந்தது. அவன் அவரிடம் கடைக்கு வெளியே ஒரு ஷோ கேஸ் வைத்து அழகான புதிய பொருட்களைப் பார்வைக்கு வைத்தால் கீழே செல்பவர்களில் சிலரை அது ஈர்க்கக்கூடும் என்று சொன்னான். கடைக்காரருக்கு பெரிய ஆர்வம் இல்லா விட்டாலும் அப்படியே செய்தார். புதியவர்கள் பலரும் வர ஆரம்பிக்க விற்பனையும் அதிகரித்தது.

ஒரு நாள் மலையேறிய ஒருவர் குடிக்க நல்ல தேநீர் கடை கூட இல்லை என்று அங்கலாய்த்தது சாண்டியாகோ காதில் விழுந்தது. அவன் கடைக்காரரிடம் சொன்னான். "நாம் தேநீரும் தயாரித்து நம்முடைய அழகான கண்ணாடிக் கோப்பைகளில் தந்தால் தேநீரும் விற்கலாம். பலரும் வீடுகளிலும் அது போல் குடிக்க கண்ணாடிக் கோப்பைகளை வாங்கிக் கொண்டு போவார்கள்" என்றான். அவருக்கு அதிலும் பெரிய பலன் கிடைக்கும் என்று தோன்றவில்லை. ஆனால் சம்மதித்தார்.

அவன் சொன்னபடியே பலரும் வந்து தேநீர் குடித்து அது போன்ற அழகான கோப்பைகளை வாங்கிக் கொண்டு போனார்கள். நாளடைவில் அந்தக் கடை பிரபலமாகி வியாபாரமும் அதிகரித்து மேலும் இரண்டு பேரை வேலைக்கு எடுத்துக் கொண்டு கூட்டத்தை சமாளிக்க வேண்டி இருந்தது. சாண்டியாகோ வந்திராவிட்டால், காலத்தின் மாறுதல்களுக்கு ஏற்ப புதிய வழிகளைப் பின்பற்றியிரா விட்டால் அந்தக் கடையை அவர் விரைவில் மூடி விட வேண்டி இருந்திருக்கும்.

மாறுதல் இயற்கை என்றாலும் அது ஏற்படுத்தும் புதிய சூழல் நமக்குப் பிடிபடாமலும், புரியாமலும், சிறிது அசௌகரியமாகவும் இருப்பது இயல்பே. ஆனால் மாறுதல் ஏற்படும் போது இது வரை கிடைத்திராத வாய்ப்புகளும் கிடைக்கும் என்ற ஞானத்தோடு மாறுதல்களை எதிர்கொள்வதே அறிவு.

சில சமயங்கள் மாறுதல்கள் நம் வாழ்க்கையின் அஸ்திவாரத்தையே அசைப்பனவாகவும் இருப்பது உண்மையே. இருப்பவை அனைத்தையும் இழக்க நேர்வது போன்ற மாறுதல்கள் பூதாகாரமாக இருக்கலாம். ஆனால் கவலையில் ஆழ்வதும், விதியை நொந்து கொள்வதும் அதற்குத் தீர்வாகாது. மாறுதல்கள் உணர்த்தும் பாடங்களைப் படித்து, தரும் வாய்ப்புக¨ளை முறையாகப் பயன்படுத்தி மீண்டு வருவதே வெற்றி. சிலவற்றை இழந்தால் ஒழிய நம் பார்வை வேறுபக்கம் திரும்பாது என்பதற்காகவே கூட விதி நம்மை சிலவற்றை இழக்க வைக்கலாம். ஒருவிதத்தில் அது நமக்கு அனுகூலமே ஒழிய நஷ்டமல்ல.

சொய்சீரோ ஹோண்டா என்ற இளைஞர் படிக்கும் காலத்திலேயே கார்களுக்குப் பயன்படுத்தும் புதிய பிஸ்டன் ஒன்றை உருவாக்கி அதை டயோட்டா கார் கம்பெனிக்கு அனுப்பினார். அந்த வகை பிஸ்டனைப் பயன்படுத்தினால் பல விதங்களில் காரோட்டம் மேம்பாடடையும் என்று அவர்களுக்குத் தெரிவித்தார். அது தங்களுடைய தேவைகளைப் பூரணமாகப் பூர்த்தி செய்யவில்லை என்று தெரிவித்து டயோட்டா கம்பெனியினர் திருப்பி அனுப்பி விட்டனர். மீண்டும் இரண்டு வருடங்கள் கழித்து அந்தப் பிஸ்டனை மேம்படுத்தி வடிவமைத்து அதை டயோட்டாவுக்கு மறுபடி அனுப்ப அந்தப் புதிய பிஸ்டனை அவர்கள் ஏற்றுக் கொண்டார்கள். அதைத் தயாரித்துத் தரும் உரிமை ஹோண்டாவுக்கு அளிக்கப்பட்டது.

ஹோண்டா தன்னிடம் இருப்பவை அனைத்தையும் முதலீடாகப் போட்டு பிஸ்டன் தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்றைக் கட்டத் தொடங்கினார். தொழிற்சாலை கட்டும் பணி முடியும் தருவாயில் ஜப்பானில் நிலநடுக்கம் ஏற்பட்டு தொழிற்சாலை தரைமட்டமாகியது. ஹோண்டா தன் மனைவியின் நகைகளை விற்று, நண்பர்களிடம் கடனை வாங்கி மீண்டும் தொழிற்சாலை கட்டத்துவங்கினார். துரதிர்ஷ்டவசமாக அந்தக் கட்டிடம் முடிவடையும் நேரம் இரண்டாம் உலகப் போர் ஆரம்பமானது. எதிரிகளின் விமானத் தாக்குதலால் அந்தக் கட்டிடமும் தவிடுபொடியானது.

இதையெல்லாம் மாற்றம் என்று சொல்வதை விட நாசம் என்று சொல்வது மிகப் பொருத்தமாக இருக்கும் என்றாலும் ஹோண்டா விதியை நொந்து கொண்டு முடங்கவில்லை. இரண்டாம் உலகப் போரின் இறுதியில் கடுமையான பெட்ரோல் மற்றும் கேஸ் தட்டுப்பாடு ஜப்பானைத் தாக்கியது. கார்களை இயக்க முடியாமல் பலரும் அவதியுற்றனர். ஹோண்டாவும் எங்கும் காரை எடுத்துச் செல்ல முடியாமல் தத்தளித்தார். வேறு வழி இல்லாமல் தன் சைக்கிளுக்கு மோட்டார் ஒன்றைப் பொருத்திக் கொண்டு வீட்டுக்குப் பொருட்கள் வாங்கச் சென்றார். அதைப் பார்த்த அக்கம்பக்கத்து வீட்டாரெல்லாம் தங்களுக்கும் அது போன்ற ஒரு மோட்டார் பொருத்திய சைக்கிள் செய்து தருமாறு கேட்க ஆரம்பித்தனர். ஹோண்டா செய்து தர ஆரம்பித்தார். சீக்கிரமே அவரிடமிருந்த மோட்டார்கள் எல்லாம் தீர்ந்து போயின.

தன் முயற்சிகளில் சிறிதும் தளராத விக்கிரமாதித்தன் போல் ஹோண்டா மீண்டும் ஒரு தொழிற்சாலை கட்ட எண்ணினார். இந்த முறை பிஸ்டன் தயாரிக்கும் தொழிற்சாலை அல்ல, தன் புதிய கண்டுபிடிப்பான மோட்டார் பைக் தயாரிக்கும் தொழிற்சாலையாக. ஆனால் இருப்பதையெல்லாம் முன்பே இரு முறை தொழிற்சாலை கட்டித் தொலைத்திருந்த அவருக்கு முதலீடு செய்யப் பணம் இருக்கவில்லை. சிந்தித்துப் பார்த்து ஒரு முடிவெடுத்தார்.

ஜப்பான் முழுவதும் இருந்த 18000 சைக்கிள் கடைக்காரர்களுக்கு தன் புதிய கண்டுபிடிப்பைப் பற்றிக் கடிதம் எழுதினார். அன்றைய சூழ்நிலையில் மிகவும் சுலபமாக விலை போகும் பைக்கைத் தயாரிக்க அவர்களால் முடிந்த அளவு முதலீடு செய்தால் நல்ல லாபம் ஈட்டலாம் என்று அவர் விவரித்தார். 18000 கடைக்காரர்களில் சுமார் 5000 பேர் முதலீடு செய்ய முன் வந்தனர். அவருடைய கனவுத் தொழிற்சாலை உருவாகியது.

முதலில் அவர்கள் தயாரித்த மோட்டார் பைக் பெருமளவில் விலை போகவில்லை. காரணம் அதன் எடையும், பெரிய வடிவமும். எனவே ஹோண்டா அந்த இரண்டையும் சரி செய்து சில மாற்றங்களுடன் புதிய மோட்டார் பைக்கை உருவாக்கினார். அது உடனடியாக வெற்றி பெற்றது. பின் வெற்றி அவரை நிழலாகப் பின் தொடர்ந்தது. கார்களையும் உருவாக்க ஆரம்பித்தார். இன்று ஹோண்டா கார்ப்பரேஷன் உலகப் புகழ் பெற்ற பெரிய நிறுவனமாக இருப்பது அனைவருக்கும் தெரியும்.

மாற்றங்கள் தவிர்க்க முடியாதவை என்பதை ஆழமாக உணர்ந்திருங்கள். வழக்கம் என்கிற சுகமான சங்கிலி புதியன வரும் போது அதிருப்தி கொள்ளக் கூடும். ஆனாலும் வழக்கமான வாழ்க்கையில் சிறைப்பட்டு இருந்து விடாதீர்கள். மேற்போக்காகப் பார்க்கையில் பிரச்னைகள் போலத் தோன்றினாலும் எல்லா மாற்றங்களும் தங்களுடன் வாய்ப்புகளையும் சேர்த்தே அழைத்து வருகின்றன. வரும் மாற்றங்கள் நம் அபிப்பிராயங்களுக்கேற்ப மாறிவிடுவதில்லை. மாற்றங்கள் காலடி மண்ணையே அசைக்கிறதாகக் கூட சில நேரங்களில் இருக்கலாம். செயலிழந்து மட்டும் போய் விடாதீர்கள். அது கண்டிப்பாய் தோல்வி என்னும் புதைகுழியில் உங்களை ஆழ்த்தி விடும். எனவே பிடிக்கிறதோ, பிடிக்கவில்லையோ உங்கள் அபிப்பிராயங்களை ஒதுக்கி விட்டு வாய்ப்புகளைக் கவனியுங்கள். எப்படிப் பயன்படுத்தலாம் என்று சிந்தியுங்கள். நம்பிக்கையுடனும் உறுதியுடனும் செயல்படுங்கள். கண்டிப்பாக வெற்றிவாகை சூடுவீர்கள்.
Title: Re: வெற்றி-தன்னம்பிக்கை.
Post by: Global Angel on November 16, 2011, 05:11:01 PM
ஒழுக்கம் அவசியமா?  

                                                     
(http://i1027.photobucket.com/albums/y338/jimikki/self-discipline.jpg)

ஒழுக்கம் என்ற சொல்லே பல இளைஞர்களுக்கு கசப்பான சொல்லாகத் தெரிகிறது. வாழ்க்கையை வாழத் துடிக்கும் வயதில் வாழ்ந்து முடித்த கிழடுகள் தங்களுக்குப் போடும் அனாவசியக் கடிவாளமாக பல இளைஞர்கள் நினைக்கிறார்கள். வாழ்வது ஒரு முறை அதில் அத்தனை அனுபவங்களையும் சுகித்து விட வேண்டாமா என்று நினைக்கிறார்கள். உண்மையில் வள்ளுவர் காலத்திலிருந்து இன்றைய காலம் வரை ஒழுக்கத்திற்கு தேவைக்கும் அதிகமாக முக்கியத்துவம் தந்து விடுகிறோமா? விடைக்கு ஒரு கதை...

கதிர் ஒரு கட்டிளங்காளை. மிகவும் ஒழுக்கமானவன். எல்லா விஷயங்களிலும் கட்டுப்பாடுடையவன். தன் உடலை உடற்பயிற்சிகளாலும், யோகாசனங்களாலும் நன்கு பாதுகாக்கிறவன். அவன் ஒரு முறை தங்கள் யோகா வகுப்பினர் நடத்தும் ஒரு சொற்பொழிவில் கலந்து கொள்ள அழைப்பு விடுக்க ஒரு புகழ்பெற்ற மருத்துவரைக் காணச் சென்றான். அந்த மருத்துவமனையில் கூட்டம் நிரம்பி வழிந்தது. அவரைக் காண அவன் காத்திருந்தான்.

அப்போது அந்த மருத்துவமனைக்கு தள்ளாத வயதுடைய முதியவர் ஒருவர் நுழையக் கண்டான். அந்த வயதிலும் அந்த முதியவர் கைத்தடி எதுவும் இல்லாமல் மருத்துவமனைக்கு தனியாக வந்தது அவனுக்கு வியப்பை அளித்தது. அவர் அவனருகே அமர்ந்தார். மருத்துவரைப் பார்க்க நேரம் அதிகமானதால் பொழுதைப் போக்க இருவரும் பேசிக்கொண்டார்கள்.

அந்த முதியவர் அவனிடம் ஒரு கட்டத்தில் கேட்டார். "நீ புகை பிடிப்பதுண்டா?"

கதிர் பெருமையாகச் சொன்னான். "இல்லை"

அவர் சொன்னார். "நான் தினமும் மூன்று பேக்கட் சிகரெட்டுகள் புகைப்பேன். பன்னிரண்டாம் வயதில் ஆரம்பித்த பழக்கம் அது. நீ மது குடிப்பதுண்டா?"

கதிர் சொன்னான். "இல்லை"

அவர் பெருமையாகச் சொன்னார். "நான் பதினாறாம் வயது முதல் மது குடிக்கிறேன். தற்போது தினந்தோறும் இரண்டு முறை இரண்டு புட்டி மதுவைக் காலையிலும், இரவிலும் குடிப்பேன்."

கதிருக்கு வியப்பாக இருந்தது.

முதியவர் மிகவும் ரகசியமாகக் கேட்டார். "உனக்கு பெண்களுடன் அனுபவம் எப்படி?"

கதிர் சொன்னான். "எனக்கு இன்னும் திருமணமாகவில்லை....."

முதியவர் புன்னகையுடன் சொன்னார். "நானும் திருமணம் செய்து கொள்ளவில்லை. ஆனால் பதினெட்டாம் வயது முதல் கணக்கில்லாத பெண்களுடன் உல்லாசமாக இருந்திருக்கிறேன்....."

முதியவருடன் பேசிக் கொண்டே போனதில் அவருக்கு இல்லாத தீயபழக்கங்கள் இல்லை என்று கதிருக்குத் தெரிந்தது. முதியவர் வாழ்க்கையில் எல்லாவற்றையும் முழுமையாக அனுபவித்து விட வேண்டும் என்ற வெறியுடன் இருப்பவராகத் தெரிந்தார். எதிலும் எப்போதும் கட்டுப்பாடில்லாமல் அனுபவித்து இத்தனை வருடங்கள் வாழ்ந்த அவர் அவனை ஆச்சரியப்படுத்தினார். ஒவ்வொன்றிலும் கட்டுப்பாடோடு வாழ்ந்ததன் மூலம் நிறைய இழந்து விட்டோமா என்று கூட கதிருக்குத் தோன்ற ஆரம்பித்தது.

"இப்போது எதற்காக மருத்துவரைப் பார்க்க வந்திருக்கிறீர்கள்?" என்று கதிர் கேட்டான்.

சில நாட்களாக மூச்சுத் திணறல், நரம்புத்தளர்ச்சி, பலவீனம் போன்றவற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக முதியவர் கூறினார். இந்த வயதில் இது பெரிய விஷயமல்ல என்று நினைத்த கதிர் ஆவலுடன் அவர் வயதைக் கேட்டான்.

அவர் சொன்னார். "27"

இவ்வளவு நேரம் தன்னுடன் பேசிக் கொண்டிருந்தவர் முதியவரே அல்ல, இளைஞர் தான் என்று தெரிந்த கதிர் அதிர்ச்சி அடைந்தான். இது தான் ஒழுக்கமில்லாத வாழ்க்கையின் முடிவு.

திருவள்ளுவர் ஒழுக்கத்தின் அவசியத்தை ரத்தினச் சுருக்கமாக பல குறள்களில் கூறியுள்ளார். அவற்றுள் சில-

ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம்
உயிரினும் ஓம்பப்படும்.
(ஒழுக்கமே எல்லோருக்கும் மேன்மையைத் தருவதால் அந்த ஒழுக்கம் உயிரையும் விடச் சிறந்ததாகப் போற்றப்படும்)

நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கம் தீயொழுக்கம்
என்றும் இடும்பைத் தரும்.
(நல்லொழுக்கம் இன்பமான நல்வாழ்க்கைக்குக் காரணமாக இருக்கும். தீயொழுக்கம் எப்போதும் துன்பத்தைத் தரும்)

பரிந்தோம்பிக் காக்க ஒழுக்கம் தெரிந்தோம்பித்
தேரினும் அ·தே துணை.
(ஒழுக்கத்தை வருந்தியும் போற்றிக் காக்க வேண்டும். பலவற்றையும் ஆராய்ந்து போற்றித் தெரிந்தாலும் உண்மையில் அந்த ஒழுக்கமே வாழ்க்கையில் துணையாக நிற்கும்)

இந்தக் குறள்களின் கருத்துகளுக்கு எத்தனையோ உயிருள்ள உதாரணங்களை இன்றும் நம்மால் பார்க்க முடியும். எத்தனையோ அறிவாளிகள், புத்திசாலிகள் கூட ஒழுக்கம் என்ற ஒரு விஷயத்தில் தவறி விட்டு தீய பழக்கங்களுக்கு அடிமையாகி வாழ்க்கையையே கோட்டை விட்டு நிற்பதை நம்மால் காண முடியும். அவர்களை விடக் குறைந்த அறிவிருந்தாலும், குறைந்த கல்வியே பெற்றிருந்தாலும் ஒழுக்கமாக இருப்பவர்கள் எத்தனையோ நிம்மதியாகவும், நிறைவாகவும் வாழ்வதையும் நாம் காணலாம்.

ஒழுக்கத்துடனும், கட்டுப்பாட்டுடனும் இருப்பது ஆரம்பத்தில் கஷ்டமாக இருக்கலாம். ஆனால் முடிவில் அது பெரிய பாதுகாப்பு வளையமாக இருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை. அதே போல் ஒழுக்கமின்மை ஆரம்பத்தில் கிளர்ச்சிகளைத் தரலாம். கடைசியில் அது எத்தனையோ பிரச்னைகளுக்கு வேராக நின்று துன்புறுத்தும் என்பதிலும் சந்தேகமில்லை.

ஒழுக்கமான வாழ்க்கை ஏதோ உப்புசப்பில்லாத வாழ்க்கை என்பது போல் சிலர் உருவகப்படுத்தி விடுகிறார்கள். அதில் சிறிதும் உண்மை இல்லை. ஒழுக்கமான வாழ்க்கையில் உண்மையான ஆனந்தத்திற்குக் குறைவில்லை. நல்ல வழியிலேயே இங்கு ஆனந்தம் ஏராளமாக இருக்கிறது. நல்ல இசையிலும், நல்ல புத்தகத்திலும், நல்ல வாழ்க்கைத் துணையிலும் கிடைக்காத ஆனந்தமா புகையிலும், மதுவிலும், தவறான உடலுறவிலும் கிடைத்து விடப்போகிறது? அழகான இயற்கைக் காட்சிகளிலும், மழலைகளின் பேச்சுகளிலும் கிடைக்காத மகிழ்ச்சியா போதையில் கிடைத்து விடப்போகிறது?

மேலும் நல்ல வழிகளில் கிடைக்கும் ஆனந்தம் முடிவில் மனிதனை உயர்த்தி விடுகிறது. தீய வழிகளில் கிடைக்கும் கிளர்ச்சிகள் கடைசியில் மனிதனின் தரத்தை தாழ்த்தி விடுகிறது. இன்னொரு உண்மை என்னவென்றால் ஒழுக்கமாக வாழ்பவன் தான் மட்டுமல்லாமல் தன் குடும்பத்தாரையும், தன்னைச் சேர்ந்தவர்களையும் கூட நிறைவாக இருக்க விடுகிறான். அதே சமயம் ஒழுக்கமில்லாதவன் தன் குடும்பத்தினருக்கும், தன்னைச் சேர்ந்தவர்களுக்கும், தீராத மன உளைச்சலை ஏற்படுத்தி விடுகிறான்.

நம்மையும் உயர்த்தி, நம்மைச் சார்ந்தவர்களையும் நிம்மதியாக இருக்க விடும் ஒழுக்கம் மேன்மையா? இல்லை நம்மை சீரழித்து, நம்மைச் சேர்ந்தவர்களைத் துயரத்தில் ஆழ்த்தும் ஒழுக்கமில்லாத வாழ்க்கை தேவையா?

சிந்தித்துப் பார்த்து பதில் சொல்லுங்கள். ஒழுக்கம் அவசியமா? இல்லையா?
Title: Re: வெற்றி-தன்னம்பிக்கை.
Post by: Global Angel on November 17, 2011, 05:12:22 PM
கருத்துகள் எல்லாம் தீர்ப்புகள் அல்ல

                                                    (http://i1027.photobucket.com/albums/y338/jimikki/judge.jpg)

பெரும்பாலான மனிதர்கள் எதனுடைய மதிப்பையும் அடுத்தவர்களுடைய கருத்துகளை வைத்தே எடை போடுகிறார்கள். பலரும் ஒரு சாதாரண விஷயத்தை ஒஹோ என்று புகழ்ந்தால் அது உன்னதமாகத் தெரிகிறது. ஒரு உயர்ந்த விஷயத்தையும் பலரும் பரிகசித்தால் அது செல்லாக் காசாகி விடுகிறது. ஆனால் உண்மையான மதிப்பை பெரும்பாலானோரின் கருத்துகளை வைத்து எடை போடுவது சரியானதாக இருக்காது. ஏனென்றால் எல்லோரும் ஆழமாக அறிந்தே ஒன்றைப் பற்றிக் கருத்து கொள்ள வேண்டும் என்பது கட்டாயமில்லை. பெரும்பாலான மனிதர்கள் தங்கள் அறிவிற்கேற்பவே கருத்து கொள்கிறார்களே ஒழிய உண்மையான தன்மையின் அடிப்படையில் அல்ல. அவரவர் மனநிலை, அறிவு, அனுபவம், விருப்பு வெறுப்புகளை ஒட்டியே விமரிசனங்கள் எழுகின்றன. சிலர் அந்த சிரமத்தைக் கூட மேற்கொள்வதில்லை. அவர்கள் மதிப்பவர்கள் என்ன சொல்கிறார்களோ அதுவே அவர்களுடைய கருத்தாகியும் விடுகின்றது.

நோர்மா ஜீன் பேக்கர் என்ற இளம்பெண் மாடலாகும் கனவுடன் ஒரு மாடலிங் கம்பெனிக்குச் சென்று வாய்ப்பு கேட்டார். அங்கே அவளை "நீயா, மாடலா?" என்று பரிகசித்தார்கள். "ஏதாவது குமாஸ்தா வேலைக்குச் செல். இல்லா விட்டால் திருமணம் செய்து கொண்டு வீட்டைக் கவனி" என்று அறிவுரையும் செய்து அனுப்பினார்கள். அவர்கள் கருத்தைத் தீர்ப்பாக எடுத்துக் கொண்டு தன் கனவை கலைத்து விட்டிருந்தால் ஹாலிவுட் உலகத்திற்கு "மர்லின் மன்றோ" என்ற அற்புதக் கதாநாயகி கிடைத்திருக்க மாட்டார். இன்றும் பேசப்படும் சிறப்பை இழந்திருப்பார்.

தமிழ்நாட்டில் அந்தக் காலத்தில் ஸ்ரீதர் ஒரு மிகப் பெரிய இயக்குனர். அப்படிப்பட்டவரிடம் திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு கேட்டு ஒரு தமிழ்ப்பெண் சென்றார். ஸ்ரீதர் "இந்த முகம் காமிராவுக்குப் பொருத்தமல்ல" என்று சொல்லி அனுப்பி விட்டார். அந்தப் பெண் தான் ஹிந்தித் திரையுலகில் கனவுக் கன்னியாக பல ஆண்டுகள் கோலோச்சிய ஹேமா மாலினி. "இவ்வளவு பெரிய இயக்குனர் சொல்லி விட்டாரே. உண்மையில் எனக்கு திரையுலக முகம் இல்லை" என்று திரும்பி இருந்தால் ஹேமா மாலினி அடையாளம் காணப்படாமலேயே போயிருப்பார்.

"மிகவும் மந்த புத்திக்காரன். அறிவு கூர்மை போதாது" என்று ஆசிரியர்களால் கருதப்பட்ட ஒரு இளைஞர் அதை ஏற்றுக் கொண்டு தன் திறமைகளில் நம்பிக்கை இழந்து பின்வாங்கி இருந்தால் இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற விஞ்ஞானியாக உலகம் கருதும் ஆல்பர்ட் ஐன்ஸ்டீனை உலகம் இழந்திருக்கும்.

விமான இயந்திரவியல் படிக்க விண்ணப்பித்து பன்னிரண்டு பேர் டேராடூனில் நேர்முகத் தேர்வுக்குச் சென்றார்கள். அந்தப் பன்னிரண்டு பேர்களில் ஒருவர் மட்டும் தகுதியில்லை என்று நீக்கப்பட்டார். அவர் தான் டாக்டர் அப்துல் கலாம். விமான இயந்திரவியலுக்குத் தகுதியில்லை என்று நீக்கப்பட்டவர் பின்னாளில் இந்திய விண்வெளி ஆராய்ச்சித் துறையில் இயக்குனர் பதவி வகுத்து பல சாதனைகள் புரிந்தது விந்தையல்லவா?

பள்ளிக்கூட கூடைப்பந்தாட்டக் குழுவில் விளையாடத் தகுதியில்லாதவர் அன்று மறுதலிக்கப்பட்ட ஒருவர் பின்னாளில் உலகப் புகழ்பெற்ற கூடைப் பந்தாட்ட வீரராகப் புகழ்பெற்றார். அவர் தான் மைக்கேல் ஜோர்டான். பள்ளிக்கூட அளவிலேயே அவர் சோர்ந்து ஆடுவதை விட்டிருந்தால் வாழ்ந்த சுவடு தெரியாமல் அவர் போயிருப்பார்.

"ஒரு மெழுகுவர்த்தியைக் கொளுத்தக் கூடத் திராணியற்றவள்" என்று கேவலமாக ஒரு கன்னியாஸ்திரீயைப் பார்த்து பெரிய மதகுரு சொன்னார். தன் இயக்கத்திற்காக லொரெட்டோ கன்னிமடத்தைத் துறக்க அனுமதி கேட்ட போது தான் இந்த வார்த்தைகளை அவர் கேட்க வேண்டி வந்தது. இதற்குக் கூடத் திராணியில்லாத நீ ஒரு இயக்கத்தையா வழிநடத்தப் போகிறாய் என்கிற ரீதியில் பேசப்பட்ட கன்னியாஸ்திரீ வேறு யாரும் அல்ல கல்கத்தா வீதிகளில் பெரும் சேவை புரிந்த, நோபல் பரிசு பெற்ற அன்னை தெரசா தான்.

ஒரு செய்தித்தாளில் "கார்ட்டூனிஸ்டா"கத் தன் வேலையை ஆரம்பித்த இளைஞருக்கு வேலை சில நாட்களிலேயே போய் விட்டது. அந்தப் பத்திரிக்கையின் ஆசிரியர் சொன்ன காரணம் "உனக்குக் கற்பனைத் திறமையே இல்லை" அந்த இளைஞர் யார் தெரியுமா? கார்ட்டூன் உலகின் மேதை வால்ட் டிஸ்னி. அவர் உருவாக்கிய டிஸ்னிலேண்ட் என்ற பரவச உலகம் பல நாடுகளில் இன்றும் கற்பனைத் திறனின் சிகரமாகக் கருதப்படுகிறது.

இப்படி உதாரணங்களால் நூற்றுக்கணக்கான பக்கங்களை ஆதாரத்தோடு நிரப்ப முடியும் என்றாலும் செய்தி இது தான் - மற்றவர்களுடைய மோசமான கருத்துக்களை தீர்ப்புகளாக எடுத்துக் கொள்ளாதீர்கள். மனம் சோர்ந்து விடாதீர்கள். உங்களுக்குள் இருக்கும் உற்சாகத் தீயை அணைந்து விட அனுமதிக்காதீர்கள். அப்படி அணைய விடும் போது தான் அவர்கள் கருத்து தீர்ப்பாகிறது. எதில் உங்களுக்கு அளவிட முடியாத ஆர்வம் இருக்கிறதோ, அதற்காக உழைக்கவும் நீங்கள் தயாரோ அதில் நீங்கள் தாக்குப்பிடித்தால் போதும், நிச்சயமாக வெற்றியடைவீர்கள்.


Title: Re: வெற்றி-தன்னம்பிக்கை.
Post by: Global Angel on November 18, 2011, 06:53:33 PM
வெற்றிக்குணங்கள் 13  
                                                                        (http://i1027.photobucket.com/albums/y338/jimikki/225px-Benjamin_Franklin_by_Joseph_Siffred_Duplessis.jpg)

ஒரு துறையில் வெற்றியடைந்து சாதனையாளராக உலகால் அடையாளம் காணப்படுவது சிறப்பு என்றால் பலதரப்பட்ட துறைகளில் பல சாதனைகள் புரிந்து சரித்திரம் படைக்க முடிவது சிறப்பின் சிகரமே. அப்படிப்பட்ட சிகரங்கள் சரித்திரத்தில் விரல் விட்டு எண்ணக்கூடிய அளவு அபூர்வமே. ஏனென்றால் ஒரு துறையில் சாதனை புரியவே ஒரு வாழ்க்கை ஆயுள் போதாதென்று பலரும் எண்ணுகையில் அந்தக் குறுகிய வாழ்க்கையில் பல துறைகளில் சாதனைகள் புரிந்திட ஒருவரால் முடிகிறது என்றால் அது கவனிக்கப்பட வேண்டிய வாழ்க்கை அல்லவா? அது எப்படி சாத்தியமாயிற்று என்றறிய ஆர்வம் காட்டுதல் வெற்றியடையத் துடிக்கும் அனைவருக்குமே இயல்பல்லவா?

எழுத்தாளர், விஞ்ஞானி, அரசியல் வல்லுனர், கல்வியாளர், பத்திரிக்கையாளர், இசைக்கலைஞர், தத்துவஞானி, நாட்டின் உயர்பதவிகள் பலவற்றை அலங்கரித்தவர் என்றெல்லாம் ஒரே மனிதரைப் பற்றி சொல்ல முடியும் என்றால் அது பிரமிக்க வைக்கும் செய்தியே. ஏனென்றால் இவற்றில் சில ஒன்றுக்கு ஒன்று சிறிதும் சம்பந்தப்படாத, அல்லது நேர்மறையான துறைகளே. அவர் சாதனை புரிந்த துறைகளாக வேறு சிலவற்றின் பெயர்களைக் கூடக் கூறலாம். இத்தனை அடைமொழிகளுக்கும் பொருந்தக் கூடிய ஒரு மனிதராக உலகம் ஒரே ஒருவரைத் தவிர வேறொருவரை இதுவரை கண்டதில்லை. அவர் தான் பெஞ்சமின் ·ப்ராங்க்ளின்.

அவர் - அமெரிக்க சுதந்திரப் பிரகடனத்தை எழுதிக் கையெழுத்திட்ட ஐவரில் ஒருவர், அமெரிக்காவை உருவாக்கியவர்களில் ஒருவர், இடிதாங்கியைக் கண்டுபிடித்தவர், மின்சாரம் குறித்த பல ஆராய்ச்சிக் கண்டுபிடிப்புகளை வெளியிட்டவர், அர்மோனிகா என்ற ஒருவகைக் கண்ணாடியைக் கண்டுபிடித்தவர், பெனிசில்வேனியா பல்கலைக்கழகம் அமையக் காரணமாய் இருந்தவர், வயலின் மற்றும் கிடார் கலைஞர், சிறந்த செஸ் ஆட்டக்காரர், நிறைய விஷயங்களைப் பற்றி நிறைய எழுதியவர் - இப்படி இன்னும் எத்தனையோ சொல்லிக் கொண்டு போகலாம். ஒரு வாழ்க்கையில் இத்தனை முத்திரைகள் பதிக்க முடிந்தவர் தன் வாழ்க்கையில் மிக நல்ல மனிதர் என்றும் அறிந்தவர்களால் கருதப்பட்டார். இதை விடப் பெரிய வெற்றி வாழ்க்கை இருக்க முடியுமா?

அப்படிப்பட்ட வெற்றி வாழ்க்கை வாழ்ந்த மனிதர் தான் பின்பற்ற வேண்டிய பண்புகளாகப் பதின்மூன்று குணங்களை தன் இளமையிலேயே குறித்துக் கொண்டு வாழ முயற்சித்ததாகக் கூறினார். அவை-

1) மிதத்தன்மை : உண்பதிலும், அருந்துவதிலும் மிதத்தன்மை முக்கியம். ஊக்கத்தைக் கெடுக்கும் அளவு உண்ணாதே. வெறி கொள்ளும் அளவு குடிக்காதே.

2) நாவடக்கம் : பிறருக்கோ, உனக்கோ நலம்புரியும் சொற்களை அன்றி வேறு சொற்க¨ளைப் பேசாதே. வெறும் நேரம் போக்கும் பேச்சில் எப்போதும் கலந்து கொள்ளாதே.

3) ஒழுங்குமுறை : உன் பொருள்கள் ஒவ்வொன்றையும் உரிய இடத்தில் வைக்கப் பழகு. உன் தொழிலின் ஒவ்வொரு பகுதிக்கும் உரிய ஒரு காலத்தை ஒதுக்கி வை.

4) உறுதியுடைமை : செய்ய வேண்டியவற்றைச் செய்ய உறுதி கொள். உறுதி கொண்டவற்றைத் தவறாது செய்.

5) சிக்கனம் : உனக்கோ, பிறருக்கோ நன்மை செய்வதற்காக அல்லாமல் வேறெதற்காகவும் பணத்தை செலவழிக்காதே. அதாவது, வீண் செலவு செய்யாதே.

6) முறையான உழைப்பு : காலத்தை சிறிதும் இழக்காதே. எப்போதும் பயனுள்ள எதையாவது செய்து கொண்டிரு. தேவையற்ற செயல்கள் யாவையும் ஒழித்து விடு.

7) வாய்மை : பிறரைப் புண்படுத்தும் சூழ்ச்சி செய்யாதே. இரண்டகமில்லாமலும், நேர்மையுடனும் சிந்தனை செய். பேசும் போதும் அப்படியே பேசு.

8) நேர்மை : தீங்கு செய்து அதன்மூலம் யாருக்கும் தீமை உண்டாக்காதே. அது போல கடமைகளை செய்யாமல் விட்டும் அடுத்தவருக்கு தீங்கு செய்யாதே.

9) நடுநிலையுணர்வு : எதிலும் அதீதத் தன்மையை விலக்கு. உனக்கு இழைத்த தீங்குகளுக்காகக் கூட நீ அடுத்தவரிடம் சினம் கொள்ளாதிரு.

10) துப்புரவு : உடல், உடை, இருக்குமிடம் ஆகியவற்றில் எத்தகைய துப்புரவுக் கேட்டுக்கும் இடம் அளிக்காதே.

11) மன அமைதி : சின்னச் சின்ன விஷயங்களுக்காகவோ, தவிர்க்க முடியாத மற்றும் தற்செயலாய் நிகழும் நிகழ்ச்சிகளுக்காகவோ மன அமைதி இழக்காதே.

12) ஒழுக்கமுடைமை : அயர்வு அல்லது பலவீனம் அடையும் அளவுக்கோ, உன்னுடைய மற்றும் அடுத்தவருடடைய அமைதிக்கோ, புகழுக்கோ கேடு உண்டாக்கும் அளவுக்கோ இன்பம் நுகராதே.

13) பணிவுடைமை : இயேசுநாதரையும், சாக்ரடீசையும் பின்பற்று.

பெஞ்சமின் ·ப்ராங்க்ளின் இந்த பண்புகளைத் தன் வாழ்க்கையில் இளமையில் இருந்தே பின்பற்றத் துவங்கியது தான் தன் வெற்றிகளுக்கும் மன அமைதிக்கும் காரணம் என்று கருதினார். எல்லா நேரங்களிலும் இதைப் பின்பற்றியதில் வெற்றி பெற முடிந்ததில்லை என்பதை ஒத்துக் கொள்ளும் அந்தப் பேரறிஞர் ஆனாலும் திரும்பத் திரும்ப இவற்றைத் தன் வாழ்க்கையில் பின்பற்ற முயன்றதாகவும் சிறிது சிறிதாக பின்பற்றுவதில் வெற்றி பெற முடிந்ததாகவும் கூறுகிறார்.

அவர் வாழ்வில் எளிய வாழ்க்கையே இந்தப் பண்புகளுக்கு அஸ்திவாரமாக இருந்தது என்றும் சொல்லலாம். தன் சுய சரிதத்தில் ஓரிடத்தில் கூறுகிறார். "நான் எளிய வாழ்க்கையையே முக்கியமாக எடுத்துக் கொண்டேன். ஏனென்றால் நல்லறிவையும் மூளைத் தெளிவையும் தரத் தக்க பண்பு அதுவே. வாழ்க்கையில் இடைவிடாது குறுக்கிடும் மாயக்கவர்ச்சிகளை எதிர்த்து நிற்கவும், பழைய பழக்கங்களின் ஓய்வொழிவில்லாத ஈர்ப்பாற்றலைத் தடுத்து சமாளிக்கவும் தளராத விழிப்புணர்வு தேவை. மூளைத் தெளிவும் அமைதியும் இல்லா விட்டால் இந்தத் தளரா விழிப்புணர்வு ஏற்படாது"

பல துறைகளில் வெற்றி பெறுவதில் மட்டுமல்லாமல் தனிப்பட்ட மனநிலையிலும் ஒரு நிறைவை அவர் காண இந்த 13 பண்புகளும் அவருக்கு உதவியிருக்கின்றன என்பதில் எள்ளளவும் சந்தேகமிருக்க முடியாது. ஏனென்றால் இந்தப் பதின்மூன்றில் எந்த நல்ல பண்பும் விட்டுப் போகவில்லை. ஒரு மாபெரும் வெற்றியாளர் பின்பற்றி வெற்றி பெற்ற பண்புகளை நாமும் ஏன் பின்பற்றி வெற்றி பெறக் கூடாது?


Title: Re: வெற்றி-தன்னம்பிக்கை.
Post by: Global Angel on November 26, 2011, 04:34:09 AM
ஒரு கேள்வியின் தாக்கமே நோபல் பரிசு


இன்று வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன் என்ற ஒரு தமிழர் நோபல் பரிசு வாங்கிய பெருமையிலும் மகிழ்ச்சியிலும் நாம் அனைவரும் திளைத்திருக்கும் இந்த வேளையில் நோபல் பரிசின் கதையை அறிந்து கொள்வது பொருத்தமாக இருக்கும் அல்லவா?(http://i1027.photobucket.com/albums/y338/jimikki/225px-AlfredNobel_adjusted.jpg)

தன்னுடைய மரணச் செய்தியைப் பத்திரிக்கையில் படிக்கும் பாக்கியம் பெரும்பாலானோருக்குக் கிடைப்பதில்லை. ஆனால் சுவீடன் நாட்டைச் சேர்ந்த, டைனமைட்டைக் கண்டுபிடித்த, ஆல்ப்ரட் நோபல் என்பவருக்கு 1888ல் அந்த சந்தர்ப்பம் கிடைத்தது. ஒரு பிரெஞ்சுப் பத்திரிக்கை "மரணத்தின் வர்த்தகன் மரணம்" என்று பெரிய எழுத்தில் தலைப்புச் செய்தியாக தவறாக அவரது மரணச் செய்தியை வெளியிட்டது. அந்தச் செய்தியை முழுவதும் ஆல்ப்ரட் நோபல் படித்துப் பார்த்தார்.

"மனிதர்களை விரைவாகக் கொன்று குவிக்கும் வழிகளைக் கண்டு பிடித்து கோடிக்கணக்கில் பணம் சம்பாதித்த டாக்டர் ஆல்ப்ரட் நோபல் நேற்று காலமானார்" என்பது தான் அந்தச் செய்தியின் முக்கியக் கருவாக இருந்தது. ஆல்ப்ரட் நோபலை அந்தச் செய்தி மிகவும் பாதித்தது. "நான் இறந்த பின் உலகம் என்னை இப்படியா நினைவு வைத்துக் கொள்ள வேண்டும்?" என்ற ஒரு கேள்வி அவர் மனதில் பிரதானமாக எழுந்தது. அவர் மனம் தன் வாழ்க்கையை ஒரு கணம் திரும்பிப் பார்த்தது.

அவருடைய தந்தை இம்மானுவல் நோபலும் மிகச் சிறந்த அறிவாளி. இப்போது நாம் உபயோகிக்கும் 'ப்ளைவுட்'டைக் கண்டுபிடித்தது இம்மானுவல் நோபல் தான் என்று சொல்கிறார்கள். அத்தகைய தந்தைக்குப் பிறந்த ஆப்ல்ரட் நோபல் தந்தையைக் காட்டிலும் பலமடங்கு அறிவு படைத்தவராக விளங்கினார். பதினேழு வயதிற்குள் ஐந்து மொழிகளில் (ஆங்கிலம், ப்ரெஞ்சு, ரஷிய, ஜெர்மன், சுவீடிஸ்) நல்ல புலமை பெற்றிருந்தார். (பிற்காலத்தில் இத்தாலிய மொழியையும் படித்தார்) வேதியியல், பௌதிகம் இரண்டிலும் மிகவும் ஆர்வம் கொண்டிருந்த அவருக்கு ஆங்கில இலக்கியத்திலும் நல்ல புலமை இருந்தது. மகனின் இலக்கிய தாகம் அவருடைய தந்தைக்கு அவ்வளவாக ரசிக்காததால் வேதியியல் பொறியாளராக மேற்படிப்பு படிக்க வெளிநாடுகளுக்கு அனுப்பி வைத்தார்.

ஒரு பல்கலைகழகத்தில் அவருடன் படித்த இத்தாலிய மாணவர் அஸ்கேனியோ சொப்ரேரோ கண்டுபிடித்த நைட்ரோக்ளிசரின் என்ற வெடிமருந்து திரவம் ஆல்ப்ரட் நோபலை மிகவும் ஈர்த்தது. தன் அறிவுத் திறமையை நன்றாக வளர்த்துக் கொண்டு தாயகம் திரும்பிய பிறகு ஆல்ப்ரட் நோபல் வெடிமருந்துகளைத் தயாரிப்பதில் மிகுந்த ஆர்வம் காட்டினார். ஒரு முறை அவருடைய தொழிற்சாலை வெடித்துச் சிதறியதில் அவருடைய இளைய சகோதரர் உட்பட பலர் மரணமடைந்தனர். ஆனாலும் அவருடைய ஆர்வம் அந்தத் துறையில் குறையவில்லை. பின்னர் அவர் டைனமட்டைக் கண்டுபிடித்தார். அதன் பிறகு வெற்றியும், செல்வமும் அவரிடம் பெருக ஆரம்பித்தன.

இத்தனை சாதனைகள், வெற்றிகளுக்குப் பின்னால் தன் மரணத்திற்குப் பிறகு "மரணத்தின் வர்த்தகன்" என்று தானா தன்னை உலகம் நினைவுகூர வேண்டும் என்ற கேள்வி அவரை நிறையவே நெருடியது. குறுகிய காலமே அவருக்குக் காரியதரிசியாக இருந்த பெர்தா வோன் சட்னர் என்பவரும் அவர் வாழ்க்கையில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தினார் என்று அவருடைய வாழ்க்கை வரலாற்றை எழுதியவர்கள் கருதினார்கள். பலர் அந்த ஆஸ்திரியப் பெண்மணியை அவருடைய காதலி என்று கூறினாலும் அந்தப் பெண்மணி அவரைப் பிரிந்து வேறு ஒருவரை விரைவிலேயே மணந்து கொண்டாள். ஆனாலும் அவர்களுடைய நட்பு கடிதப் போக்குவரத்து மூலம் அவருடைய மரணகாலம் வரை நீடித்தது. அந்தப் பெண்மணியும் அமைதியின் முக்கியத்துவத்தையும், போரின் கொடுமைகளையும் குறித்து அவரிடம் உறுதியாக சொல்பவராக இருந்தார். அந்தப் பெண்மணி எழுதிய "ஆயுதங்களைக் கைவிடுங்கள்" என்ற புத்தகம் அந்தக் காலத்தில் மிகவும் புகழ்பெற்றது.

அந்தக் கேள்வியும், அந்தத் தோழியின் நட்பும் வாழ்க்கையில் ஆக்கபூர்வமாக ஏதாவது செய்ய ஆல்ப்ரட் நோபலைத் தூண்டியது. உலகம் தன்னை ஆக்கபூர்வமான விஷயங்களுக்காகவே நினைவு கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில் தான் இதுவரை சேர்த்த சொத்துகளை உலக நன்மைக்குப் பயன்படும் மனிதர்களுக்கும், (http://i1027.photobucket.com/albums/y338/jimikki/berta.jpg)நிறுவனங்களுக்கும் அளிக்கும் நோபல் பரிசுகளாக வருடாவருடம் அளிக்கப் பயன்படுத்துமாறு உயிலை எழுதினார். 1896ஆம் ஆண்டு ஆல்ப்ரட் நோபல் காலமானார். ஆரம்பத்தில் வேதியியல், பௌதிகம், மருத்துவம், இலக்கியம் என்ற நான்கு பிரிவுகளுக்கு மட்டுமே நோபல் பரிசுகள் வழங்கப்பட்டது. பின்னர் அமைதிக்காகவும் வழங்க முடிவு செய்யப்பட்டது. கடைசியாக பொருளாதாரமும் நோபல் பரிசிற்கான துறையாக சேர்த்துக் கொள்ளப்பட்டது.

1901 முதல் ஆரம்பமான நோபல் பரிசுகள் இன்றும் உலகத்தின் மிகப்பெரிய பரிசாகக் கருதப்படுகின்றன. (ஆல்ப்ரட் நோபலின் தோழியும், அமைதிக்காக வாழ்நாள் முழுவதும் குரல்கொடுத்தவருமான பெர்தா வோன் சட்னர் 1905 ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசினைப் பெற்றது ஒரு சுவாரசியமான விஷயம்.) உலகம் ஆல்ப்ரட் நோபலை அவர் நினைத்தபடியே இன்று நல்ல விஷயத்திற்காகவே நினைவு வைத்திருக்கிறது.

ஒரு மனிதரை ஒரு கேள்வி அழியாப் புகழ் பெற வைத்ததென்றால் அந்தக் கேள்வி மிக உன்னதமானது தானே. இந்தக் கேள்வியை நாமும் கேட்டுக் கொண்டாலென்ன? உலகம் நம்மை நம் மறைவிற்குப் பின்னும் எப்படி நினைவு வைத்திருக்க வேண்டும்? இருந்த சுவடே தெரியாமல் போய் விடும்படி நாம் அர்த்தமற்ற வாழ்க்கை வாழ்ந்துவிட வேண்டாம். தவறான விதத்தில் நினைவுபடுத்திக் கொள்ளும் மனிதனாகவும் இருந்து மடிந்து விட வேண்டாம். நன்மையின் சின்னமாய் நாம் பலர் நினைவில் தங்கிவிடும் படியான நற்செயல்கள் நிறைந்த வாழ்க்கை வாழ முயற்சிப்போமா?
Title: Re: வெற்றி-தன்னம்பிக்கை.
Post by: Global Angel on November 27, 2011, 04:52:06 AM
ஒரு கேள்வி ஏற்படுத்தும் மாற்றம்  


நம் இன்றைய வாழ்க்கை நேற்றைய சிந்தனை மற்றும் செயல்களின் விளைவு. நேற்று என்ன விதைத்தோம் என்பதை விவரிக்கும் அறுவடையே இன்றைய வாழ்க்கை. எப்படி இருந்திருக்கிறோம், எப்படி வாழ்ந்திருக்கிறோம் என்பதை நாம் சொல்லாமலேயே நம் வாழ்க்கை உரத்துச் சொல்லும்.

விதைப்பவன் யார் கண்ணிற்கும் தெரிவதில்லை என்று நினைத்து கோணல் மாணலாக இன்று விதைத்துச் செல்லலாம். ஆனால் நாளை வளரும் பயிர் அதைக் கண்டிப்பாகக் காண்பித்துக் கொடுக்கும்.

நம் வாழ்க்கைக்கு நாமே பிரம்மாக்கள். நமக்கு அதை எப்படியும் உருவாக்கும் சக்தி இருக்கிறது. ஆனால் உருவாக்கிய பின் அதை நாமே சந்தித்தாக வேண்டும். நாமே அதற்குப் பொறுப்பேற்க வேண்டும். நாம் உருவாக்கியவைகளிடமிருந்து ஓடி ஒளியும் வசதி நமக்கு அளிக்கப்படவில்லை. எனவே நாம் நம் வாழ்க்கையை எப்படி உருவாக்கிக் கொண்டிருக்கிறோம் என்பதில் மிக அதிகக் கவனம் வேண்டும்.

நம் நாட்டில் 'கர்மா' என்ற வார்த்தை மிகப் பிரபலம். அந்த வார்த்தையை இப்போதெல்லாம் மேலை நாடுகளிலும் அதிகம் உபயோகப்படுத்த ஆரம்பித்திருக்கிறார்கள். கர்மா என்பது செயல் என்பது மட்டுமல்ல. விளைவைத் தரும் செயல் என்று அதற்கு விளக்கம் தருவது மிகவும் பொருத்தமாக இருக்கும். எந்த செயலும் விளைவைத் தராமல் இருப்பதில்லை என்பதை நினைவு படுத்தும் சொல்லாக 'கர்மா'வைச் சொல்லலாம்.
ஒருவன் இன்று தீய விளைவுகளை அனுபவித்துக் கொண்டிருக்கிறான் என்பதைச் சிலர் 'எல்லாம் அவன் கர்மா' என்று சொல்வதுண்டு. நேற்றைய செயலின் விளைவை இன்று அனுபவிக்கிறான் என்பது பொருள்.

என்ன தான் குட்டிக்கரணம் போட்டாலும் நேற்றைய கர்மாவை இன்று அனுபவிக்காமல் தடுத்து விட முடியாது என்பது மாபெரும் உண்மை. இது சிலருக்கு வருத்தத்தை அளித்தாலும் இதில் மறைந்திருக்கும் இன்னொரு உண்மை எவரையும் ஆசுவாசப்படுத்தும். நாளை நன்மையைப் பெற வேண்டுமென்றால் அதற்கேற்ப நல்ல செயல்களை நல்ல முறையில் இன்று செய்தால் போதும் என்பது தான் அது. நாளை எந்த விதமான பலன்கள் நம் வாழ்க்கையில் வர வேண்டும் என்று நினைக்கிறோமோ அதற்கேற்ப இன்றைய செயல்கள் அமைய வேண்டும்.

உங்களது இன்றைய வாழ்க்கை முறை, சிந்தனை, செயல்கள் எல்லாவற்றையும் அமைதியாக அலசுங்கள். இதே போல் தொடர்ந்து அவை இருந்தால் இனி ஐந்து வருடம் கழித்து நீங்கள் எப்படியிருப்பீர்கள் என்று என்று உங்களை நீங்களே கேட்டுக் கொள்ளுங்கள். ஒரு சாதாரண அறிவுத்திறன் இருக்கும் மனிதர்களுக்கு இப்படியே போகும் வாழ்க்கை ஓட்டம் எங்கு போய் முடியும் என்ற கேள்விக்குப் பதிலைப் பெறுவது கஷ்டமல்ல. கிடைக்கும் பதில் உங்களுக்கு மனநிறைவையும், மகிழ்ச்சியையும் அளிக்கிறதாக இருந்தால் மிக நல்லது. இப்படியே வாழ்க்கையைத் தொடருங்கள். (இந்தக் கட்டுரையைத் தொடர்ந்து படிக்க வேண்டிய அவசியம் இனி உங்களுக்கு இல்லை.)

ஆனால் பெரும்பாலானோருக்குக் கிடைக்கிற பதில் திருப்திகரமாக இருக்காது. இந்தக் கேள்வி பலரை ஆழ்ந்த உறக்கத்திலிருந்து தட்டி எழுப்பக் கூடும். பலரும் வாழ்க்கை ஒரு நாள் திருப்திகரமாக மாறும் என்ற அசட்டு நம்பிக்கை வைத்திருக்கிறார்களே ஒழிய அது எப்படி நடக்கும் என்கிற ஞானமோ, அதற்காக என்ன செய்ய வேண்டும் என்கிற சிந்தனையோ அவர்களிடம் இருப்பதில்லை. யாராவது மாற்றினால் ஒழியத் தானாக எதுவும் மாறுவதில்லை என்கிற உண்மையை அவர்கள் உணர்வதில்லை. மற்றவர்களாகப் பார்த்து மாற்றப்படும் வாழ்க்கை நம் வாழ்க்கை நாம் நினைத்தபடி இருக்கும் என்று நாம் எதிர்பார்ப்பதும் முட்டாள்தனம்.

இப்போதைய போக்கிலேயே உங்கள் எதிர்காலமும் இருக்கப் போவது உங்களுக்குப் பிடிக்கவில்லையானால் நீங்கள் இன்றே மாற ஆரம்பிப்பது நல்லது. உங்களுக்குப் பிடித்த நிலைமைக்கு உங்களைக் கூட்டிக் கொண்டு போகும் கர்மாக்களில் ஈடுபடுவது அவசியம்.

உடல்நிலை, மனநிலை, பொருளாதாரநிலை இம்மூன்றிலும் நீங்கள் இனி ஐந்து வருடங்கள் கழித்து எப்படி இருந்தால் நிறைவாக இருக்கும் என்று கற்பனை செய்து பார்த்துக் கொள்ளுங்கள். அந்த மூன்றிலும் இப்போது எப்படி இருக்கிறீர்கள் என்பதை உள்ளதை உள்ளபடி புரிந்து கொள்ளுங்கள். இனி அந்த இரண்டிற்கும் இடையே உள்ள இடைவெளியைக் குறைக்கத் தேவையான செயல்களைப் புரிவதில் முழுமனதோடு ஈடுபடுங்கள்.

நீங்கள் நினைத்தபடி உங்கள் வாழ்க்கை முழுவதுமாக மாறும் நாள் வரை நீங்கள் தினமும் ஒரு கேள்வியை உங்களுக்குள் கேட்டுக்கொள்ளுங்கள். "நான் வாழ்ந்து கொண்டிருக்கும் வாழ்க்கையும், நான் செய்து கொண்டிருக்கும் செயல்களும் என்னை என் இலக்குகள் நோக்கி அழைத்துச் செல்பவையாக இருக்கின்றனவா?" மாற வேண்டும் என்ற எண்ணம் ஆழமாகவும், உண்மையாகவும் இருக்கும் வரை இந்த ஒரு கேள்வி தேவையான சிறு சிறு மாற்றங்களை உங்கள் வாழ்வில் ஏற்படுத்தி பொறுப்புடன் வாழ வைக்கும். சிறப்பாகச் செயல்பட வைக்கும். கடைசியில் நீங்கள் ஆசைப்பட்ட பெரும் மாற்றத்தை வாழ்வில் ஏற்படுத்திக் கொடுக்கும்.

அதுவரை இந்தக் கேள்வியை தினமும் கேட்டுக் கொள்வதை நிறுத்தி விடாதீர்கள்.
Title: Re: வெற்றி-தன்னம்பிக்கை.
Post by: Global Angel on November 28, 2011, 04:20:35 AM
80/20 விதி  

ஆராயப்படாத வாழ்க்கை வாழத்தகுந்ததல்ல என்றான் ஒரு கிரேக்க ஞானி. ஏனென்றால் ஆராயும் போதே வாழ்க்கை ஆழமாகின்றது. சரியையும், தவறையும் கண்டுபிடித்து எதிர்காலத்தை நிர்ணயிப்பது சாத்தியமாகிறது. அப்படி ஆராயவும், ஆராய்ந்தறிந்த உண்மைகளை உபயோகப்படுத்திக் கொள்ளும் ஒரு முறையே இந்த 80/20 விதி.

இந்த விதியை முதலில் இத்தாலிய பொருளாதார நிபுணர் வில்ப்ரெடொ பரெடொ (Vilfredo Pareto) என்பவர் தன் நாட்டின் பொருளாதாரத்தை ஆராய்ந்த போது கண்டுபிடித்தார். தன் நாட்டின் 80% சொத்துக்கள் 20% மக்களிடம் இருப்பதாக 1906 ல் கணக்கிட்டார். 1930-40 களில் அமெரிக்க மேனேஜ்மெண்ட் நிபுணர் டாக்டர் ஜோசப் ஜூரன் (Dr.Joseph Juran) அதே விதி எல்லா விஷயங்களுக்கும் பொருந்தும் என்று கூறி வந்தார். எல்லாவற்றிலும் பெரும்பாலான விளைவுகளை சிறுபாலான காரணங்களே ஏற்படுத்துகின்றன என்று கூறிய அந்த விதி பின்னர் பலராலும் பரெடொ விதி அல்லது 80/20 விதி என்றழைக்கப்பட ஆரம்பித்தது.

இந்த விதியை மையமாக வைத்து ரிச்சர்ட் கொச் (Richard Koch) என்பவர் 1998ல் "80/20 விதி - குறைந்ததைக் கொண்டு நிறைய அடையும் ரகசியம்" என்ற ஒரு நூலை எழுதி அது மிகப்பிரபலமடைந்தது.
இதில் எண்பதும், இருபதும் அதிகத்தையும், குறைவையும் குறிக்கும் குறியீடுகளே தவிர துல்லியமான சதவீதத்தைக் குறிக்கும் என்று எடுத்துக் கொள்ள வேண்டாம்.

ஒரு வியாபாரி தனக்கு பெரும்பாலான (80%) வியாபாரத்தை அளிப்பது குறைவான எண்ணிக்கையுடைய (20%) பெரிய வாடிக்கையாளர்களே என்பதை எளிதாகக் கூற முடியும். ஒரு மனிதன் தனக்கு அதிகமான (80%) திருப்தியைத் தரும் செயல்கள் ஒருசில (20%) தான் என்பதைக் காண முடியும். தனக்கு 80% வருவாயைத் தருவது 20% முக்கிய செயல்பாடுகளே என்பதைக் கணக்கிட முடியும். இப்படி எல்லா விஷயங்களிலும் இந்த விதி பெரும்பாலும் பொருந்துவதாகவே இருக்கிறது.

இந்த விதியை நினைவு வைத்து புத்திசாலித்தனமாகச் செயல்படும் மனிதன் அதிக சிரமமில்லாமல் நிறைய சாதிக்க முடியும். வியாபாரத்தில் ஒருவன் முக்கியமான 20% பெரிய வாடிக்கையாளர்களை மிகத் திருப்திகரமாக வைத்துக் கொண்டால் 80% லாபத்தை உறுதிப்படுத்திக் கொள்ளலாம். இப்படி வாழ்வின் ஒவ்வொரு விஷயத்திலும் அதிக பலனைத் தருவனவற்றை அறிந்து வைத்திருந்து அவற்றை சிறப்பாக செயல்படுத்த முடிபவன் அந்தந்த விஷயங்களில் பெரும் வெற்றியையும், திருப்தியையும் காணலாம்.

மிகவும் ப்ராக்டிகலாகவும், எளிமையாகவும் தெரிகின்ற இந்த உண்மையை பெரும்பாலானோர் உணரத் தவறிவிடுகிறார்கள். முக்கியமானது, முக்கியமில்லாதது, அதிக பலன் தருவது, குறைவான பலன் தருவது என்று பகுத்தறிந்து கொள்ளாமல் கண்மூடித்தனமாக அல்லது எல்லாவற்றையும் ஒரே போல செயல்படுத்துகிறார்கள். பின் 'நான் எவ்வளவு செய்தாலும் எனக்கு அதிக பலனே கிடைப்பதில்லை' என்று புலம்பும் மனிதர்களாகி விடுகிறார்கள்.

முதலில் எது முக்கியம் என்பதில் ஓவ்வொருவரும் தெளிவாக இருத்தல் நல்லது. எது எவ்வளவு பலன் தரும் என்பதை அறிந்து வைத்திருப்பது அவசியம். ஒவ்வொரு மனிதனுக்கும் எல்லாவற்றையும் முழுமையாக சிறப்பாகச் செய்து முடித்தல் சாத்தியம் இல்லை. நேரமும், சூழ்நிலைகளும் பல சமயங்களில் பாதகமாக இருக்கும் போது அவன் பலவற்றைச் செய்ய முடியாமல் போகிறது. அப்படிச் செய்ய முடியாமல் போகும் செயல்கள் 80% பலன் தரும் விஷயங்களாக இருந்து விடாமல் அவன் பார்த்துக் கொள்வது புத்திசாலித்தனம்.

அதே போல் அதிக பலன் தரும் விஷயங்களுக்கு மற்ற விஷயங்களுக்குக் காட்டும் அக்கறையையும், உற்சாகத்தையும் விட அதிக அக்கறையும், உற்சாகமும் காட்டுதல் பலன்களின் அளவையும், தரத்தையும் அதிகரிக்கும். பலர் பலன் குறைவாகத் தரும் அதிக விஷயங்களில் முதலிலேயே முழு சக்தியையும் விரயமாக்கி விட்டு பின்னர் அதிக பலன் தரும் விஷயங்களுக்கு வரும் போது சோர்ந்து விடுகிறார்கள். அதிக வெற்றிகளை அடைய விரும்புபவர்கள் அப்படி முன்யோசனையில்லாதவர்களாக இருந்து விடக்கூடாது.

முடிந்தால் 80% பலன்களைத் தரும் செயல்களை ஓவ்வொரு நாளும் முதலில் செய்வது நல்லது. முக்கியத்துவத்தின் அடிப்படையில் ஒவ்வொரு செயலாகப் புரிவது நல்லது. அது நடைமுறைக்கு ஒத்து வரா விட்டால், பிற்பாடே கூட அந்த முக்கிய செயல்களுக்கு அதிக நேரம், அதிக கவனம், அதிக உற்சாகம் தந்து செயல்படுவது நல்ல விளைவுகளைத் தரும்.

இந்த 80/20 விதியை நீங்கள் உணர்ந்திருக்கிறீர்களா? உங்கள் வாழ்க்கையில் பயன்படுத்தி வருகிறீர்களா? இல்லையென்றால் அதை உணர்ந்து செயல்படுத்த ஆரம்பிக்க இன்றே, இதுவே நல்ல முகூர்த்தம்.
Title: Re: வெற்றி-தன்னம்பிக்கை.
Post by: Global Angel on December 17, 2011, 09:00:53 PM
திட்டமிட்டு வாழுங்கள்  



ஒரு சாதாரண சுற்றுலாப் பயணம் போவதென்றாலும் கூட யாரும் திட்டமிடாமல் போவதில்லை. என்று, எப்போது, எப்படிப் போவது, எங்கு தங்குவது, எந்தெந்த இடத்தில் எவ்வளவு காலம் கழிப்பது என்று முன் கூட்டியே திட்டமிடாமல் கிளம்புவதில்லை. சில நாள் பயணத்திற்கே திட்டம் தேவையென்றால் வாழ்க்கைப் பயணத்திற்குத் திட்டம் எவ்வளவு முக்கியமாக இருக்க வேண்டும்?

ஆனால் வாழ்க்கைப் பயணத்தில் திட்டமிடுவதில் சில வித்தியாசங்கள் இருக்கின்றன. சுற்றுலாப் பயணத்தைப் போல் இதில் பயணத்தை ஆரம்பிக்கும் முன் நாம் என்னென்ன செய்ய வேண்டும் என்று தீர்மானிக்கும் வசதி இல்லை. இங்கு ஆரம்பித்த பின் தான் அவ்வப்போது திட்டமிட்டு பயணிக்க வேண்டி இருக்கிறது. சுற்றுலாப் பயணத்தில் பயணம் எப்போது முடிவடையும் என்பதை முன்கூட்டியே தீர்மானிக்க முடியும். ஆனால் வாழ்க்கைப் பயணத்தில் ஆரம்பத்தைப் போல முடிவு தேதியும் நாம் அறியாதது.

மற்றபடி இரண்டு பயணங்களிலும் திட்டம் முக்கியமே. புத்திசாலித்தனமாகத் திட்டமிட்டு சுற்றுலாப் பயணம் மேற்கொள்பவன் அதை அப்படியே பின்பற்றுவானானால் நிறைய இடங்களுக்கு சௌகரியமாகச் சென்று திருப்தியாகத் திரும்ப முடியும். வாழ்க்கைப் பயணத்திலும் திட்டமிட்டு வாழ்ந்தால் நிறைய சாதித்து திருப்தி பெற முடியும். இரண்டு பயணங்களிலும் திட்டமிடாத போது அர்த்தமில்லாமல் அலைகிறோம். அலைபாய்கிறோம். அடுத்தது என்ன என்று தீர்மானிக்க முடியாமல் குழப்பத்திலேயே நிறைய காலம் வீணாக்குகிறோம். தேவையில்லாமல் சுற்றுகிறோம். அடுத்தவர்கள் எங்கு போகிறார்களோ நாமும் அங்கு போகிறோம். பயணம் முடியும் போது தான் சாதித்ததை விட அர்த்தமில்லாமல் அலைந்தது அதிகம் என்ற உண்மை சம்மட்டி அடியாக நமக்கு உறைக்கிறது.

எனவே நிறைவாக வாழ விரும்பினால், நிறைய சாதிக்க விரும்பினால் திட்டமிட்டு வாழுங்கள். என்ன செய்ய விரும்புகிறீர்கள், என்னவாக விரும்புகிறீர்கள் என்கிற அடிப்படைக் கேள்விகளுக்கான விடையை ஒட்டி உங்கள் திட்டங்கள் இருக்கட்டும். குறுகிய காலத் திட்டம், நீண்ட காலத் திட்டம் என இரண்டு வகைத் திட்டங்கள் தீட்டுங்கள். இப்போதைய தேவைகளை ஒட்டி உங்கள் குறுகிய காலத் திட்டங்கள் இருக்கட்டும். உங்கள் வாழ்க்கையின் லட்சியத்தை ஒட்டி உங்கள் நீண்ட காலத் திட்டம் இருக்கட்டும்.

உங்கள் வாழ்வில் இந்த இரண்டையும் செயல்படுத்தும் விதமாய் உங்கள் நிகழ்கால வார அல்லது மாதத் திட்டங்கள் இருக்கட்டும். இப்போதைய தேவைகளுக்கு 60-75% நேரம் மற்றும் முயற்சிகள் ஒதுக்குவீர்களானால் நீண்ட காலத் திட்டங்களுக்கு 40-25% நேரம் மற்றும் முயற்சிகள் ஒதுக்குங்கள். பலரும் இப்போதைய தேவைகளுக்கான அவசரமான வேலைகள் செய்வதிலேயே இருப்பதில் முக்கியமான தங்கள் நீண்ட காலக் கனவுகளுக்கான செயல்களைச் செய்யாமல் கோட்டை விட்டு விடுகிறார்கள். 'அலை ஓய்வதெப்போது, தலை முழுகுவதெப்போது' என்பது போல இப்போதைக்கு செய்ய வேண்டிய அவசர வேலைகள் என்றும் ஓய்வதில்லை. அதன் நடுவில் உங்கள் நீண்டகால வாழ்க்கை லட்சியத்திற்கான செயல்களையும் புகுத்தி செய்து கொண்டிருங்கள். குறுகிய காலத் திட்டங்கள் ஒன்றன் பின் ஒன்றாக செய்து முடிக்கையில் நீண்ட கால லட்சியத்திற்கான செயல்களையும் செய்து கொண்டே இருப்போமானால் வாழ்க்கையின் முடிவில் இந்த இரண்டிலுமே நிறைய சாதித்திருப்போம்.

'பல தடவை திட்டம் போட்டு பார்த்து விட்டேன். நினைத்தபடி எதுவுமே நடப்பதில்லை. அதனால் இப்போது திட்டமிடுவதையே விட்டு விட்டேன்' என்று சொல்பவர்கள் பலர் இருக்கிறார்கள். நினைக்கிற படி ஒவ்வொன்றும் நடந்து விடுவதில்லை என்பது உண்மையே. எத்தனையோ எதிர்பாராத சூழ்நிலைகள், நிகழ்ச்சிகள் குறுக்கிடும் போது பல சமயங்களில் திட்டப்படி நடக்க முடியாமல் போவது இயற்கையே.

நமது கவனம் இலக்குகளில் இருக்குமானால் அந்த எதிர்பாராத சூழ்நிலைகளிலும் முடிந்த வரை ஏதாவது செய்வதும், அந்த சூழ்நிலைகளையும் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்வதும் சாத்தியமே. அதையும் மீறி திட்டமிட்டு செயல்பட்டாலும் பல விஷயங்கள் நினைத்த நேரத்தில் நினைத்த படி ஆவதில்லை என்றால் கூட அதில் பலவற்றை சாதிக்க முடிகிறது, திட்டமே இல்லாமல் போனால் எதையுமே சாதிக்க முடியாமல் போகிறது என்பதை நாம் மறந்து விடக்கூடாது. ஓடும் வெள்ளத்தில் போடப்பட்ட துரும்பாய் இலக்கில்லாமல் அடித்து செல்லப்படும் நிலை தான் திட்டமிடாத வாழ்க்கையின் முடிவு. கடைசியில் எங்கே போய் சேர்வோம் என்பது ஆண்டவனுக்கே வெளிச்சம்.

நாம் நினைத்தபடி வாழ வேண்டுமா, இல்லை ஓடும் வெள்ளத்தில் விழுந்த துரும்பாய் எப்படி, எங்கு போய்ச் சேர்ந்தாலும் பரவாயில்லையா? திட்டமிட்டு வாழ வேண்டுமா, இல்லை திட்டமே தேவை இல்லையா? முடிவு நம் கையில் இருக்கிறது.
Title: Re: வெற்றி-தன்னம்பிக்கை.
Post by: Global Angel on December 21, 2011, 06:21:46 PM
விதியை வென்ற விடாமுயற்சி

                          (http://i1027.photobucket.com/albums/y338/jimikki/brooklyn_bridge_sunset.jpg)
படுத்த படுக்கையாகக் கிடந்த அந்த மனிதருக்குப் பேசவோ, நடக்கவோ முடியாது. உடலில் ஒரு விரலைத் தவிர வேறெந்த பாகத்தையும் அசைக்க முடியாது. அந்த நிலையில் இருக்கும் மற்ற எவருமே மரணம் சீக்கிரமாக தன்னிடம் கருணை காட்டாதா என்று ஏங்குவதைத் தவிர வேறெதையும் செய்ய முடியாது. ஆனால் வாஷிங்டன் ரோப்ளிங் (Washington Roebling) என்ற அந்த மனிதரின் உடலைத் தான் விதியால் தொட முடிந்ததே தவிர அவருடைய கனவையும், மன உறுதியையும் அந்த ஒரு பரிதாப நிலையிலும் தொட முடியவில்லை. இத்தனைக்கும் அவர் தன் கனவை நிறைவேற்றும் முயற்சியில் தன் தந்தையை இழந்திருந்தார். தன் உடல் இயக்கத்தையும் இழந்திருந்தார். ஆனால் அவரால் தன் கனவை இழக்க முடியவில்லை.

அந்தக் கனவை அவரும் அவர் தந்தையும் சேர்ந்து கண்டிருந்தார்கள். நியூயார்க் நகரத்தில் மன்ஹட்டன் பகுதியையும், லாங் ஐலேண்ட் ப்ரூக்ளின் பகுதியையும் இணைக்க கிழக்கு நதியின் குறுக்கே 5989 அடி நீளமுள்ள தொங்குபாலம் கட்ட இருவரும் எண்ணியிருந்தார்கள். ஆனால் அவர்கள் வாழ்ந்த காலத்தில் (1870 ஆம் ஆண்டில்) அது போன்ற பாலம் சாத்தியமே அல்ல என்று வல்லுனர்கள் கருதினார்கள். வாஷிங்டன் ரோப்ளிங்கும், அவர் தந்தை ஜான் ரோப்ளிங்கும் இருவருமே இஞ்சீனியர்கள். அவர்கள் சாத்தியம் என்று நம்பினார்கள். அந்தப் பாலம் கட்டும் பணியைத் தொடங்கவும் செய்தார்கள்.

பாலம் கட்டும் பணியைத் தொடங்கிய சில மாதங்களிலேயே கட்டுமானப் பணி நடந்த இடத்திலேயே ஒரு விபத்தில் தந்தை ஜான் ரோப்ளிங்க் இறந்து போனார். அந்தப் பணியைத் தொடர்ந்த மகன் வாஷிங்டன் ரோப்ளிங்கும் ஒரு விபத்தில் அடிபட்டு மூளையின் சில பாகங்கள் பாதிக்கப்பட்டு படுத்த படுக்கையானார். எல்லோரும் அந்தப் பாலம் முட்டாள்தனமான முயற்சி என்றும், ராசியுமில்லாதவை என்றும், அந்த விபத்துகள் அதற்கான ஆதாரம் என்றும் விமரிசித்தார்கள்.

சிகிச்சைக்குப் பின் வாஷிங்டன் ரோப்ளினுக்கு அசையும் ஒரு விரலும், அசையாத மனமும் மட்டுமே எஞ்சி இருந்தன. அவர் அந்த பரிதாப நிலையிலும் உள்ளதை வைத்து முடிந்ததைச் செய்ய எண்ணினார். சில நாட்களில் மனைவி எமிலியுடன் விரலாலேயே தன் கருத்துகளைத் தெரிவிக்கும் ஒரு முறையை உருவாக்கிக் கொண்டு பாலம் கட்டும் எஞ்சீனியர்களை வரவழைக்கச் சொன்னார். அவர்களும் வந்தனர். மனைவி மூலம் அடுத்தது என்ன செய்ய வேண்டும் என்று அவர்களுக்கு விளக்கினார்.

மீண்டும் பாலம் கட்டும் பணி ஆரம்பித்தது. கணவருக்காக எமிலி தானும் கணிதம், கட்டிடக் கலை ஆகியவற்றைக் கற்று அந்தப் பணியில் தன்னையும் இணைத்துக் கொண்டார். அவர் மேற்பார்வையில் 11 ஆண்டுகளில் அந்தப் பாலம் நிறைவு பெற்றது. வாஷிங்டன் ரோப்ளினின் அந்தக் கனவு 1883ல் ப்ரூக்ளின் பாலம் என்ற பெயரில் நனவாகி வரலாற்றுச் சின்னமானது. அந்தப் பாலத்தைத் திறந்து வைத்த அமெரிக்க ஜனாதிபதி முதல் வேலையாக வாஷிங்டன் ரோப்ளினின் வீட்டுக்குச் சென்று அவருடைய கைகளைக் குலுக்கி பாராட்டு தெரிவித்தார்.

இதற்குப் பெயரல்லவோ விடாமுயற்சி. ஒரு சாதாரண மனிதன் தன் முயற்சியை முடியாது என்ற வல்லுனர்களின் கருத்திலேயே நிறுத்தியிருப்பான். சற்று மன உறுதி படைத்த மனிதனோ தந்தையின் மரணத்தில் அந்த நம்பிக்கையை இழந்திருப்பான். மேலும் அதிக மன உறுதி படைத்தவன் தனக்கும் விபத்து ஏற்பட்டவுடன் அந்த வேலையையே விட்டொழித்திருப்பான். ஆரம்பத்திலிருந்தே அபசகுனங்கள் வந்தும் நாம் முயற்சி செய்தது மகா முட்டாள்தனம் என்று நினைத்திருப்பான்.

முடக்க நிலையில் படுக்க நேர்ந்தாலோ எத்தனை மன உறுதியும் உபயோகப்பட்டிருக்கவே வாய்ப்பில்லை. மரணம் மட்டுமே எதிர்பார்க்கத்தக்க பெரிய விடுதலையாக நினைக்கத் தோன்றியிருக்கும். ஆனால் இதெல்லாம் சாதாரண மனிதர்களைப் பொறுத்த வரை நடக்கக் கூடிய நிகழ்வுகள். மாமனிதர்களோ விதிகளை உருவாக்குபவர்கள். பொதுவான விதிக்கு அடங்குபவர்கள் அல்லர்.

மனதிற்குள் ஒன்று சரியெனப்படுகையில், தலைக்கனமோ, முட்டாள்தனமோ துளியும் இல்லாமல் ஒன்றை முடியும் என உணர்கையில், உலகமே முடியாது என்று மறுத்தாலும், விதி தன் முழு சக்தியையும் பிரயோகித்து முடங்கிக் கிடக்க வைத்தாலும் மாமனிதன் நினைத்ததை நடத்தியே முடிக்கிறான். சுற்றிலும் இருள் சூழ்ந்த போதிலும் தன் ஆத்மவிளக்கால் போகும் வழியைக் காண்கிறான். தன் ஆத்மபலத்தால் இலக்கைச் சென்றடைகிறான்.

நண்பர்களே, தொடங்கிய நல்ல காரியங்களுக்குத் தடங்கல் வரும் போதெல்லாம் செயலற்று நின்று விடாதீர்கள். வாஷிங்டன் ரோப்ளினை நினைத்துப் பாருங்கள். அவர் கண்டது எத்தனை தடங்கல்கள், எத்தனை துன்பங்கள். கற்பனையிலும் நினைத்துப் பார்க்க முடியாத மோசமான சூழ்நிலைகள் சூழ்ந்த போதும் மன உறுதியாலும், விடாமுயற்சியாலும் அவர் அவற்றிலிருந்து விடுபட்டு செயல்படவில்லையா? கடைசியில் மிஞ்சியது ஒரு கனவும், ஒரு விரலும் மட்டுமே என்றாலும் அவர் அதை வைத்துக் கொண்டே சரித்திரம் படைக்கவில்லையா? அவரை ஒரு வழிகாட்டியாக எடுத்துக் கொண்டு தொடர்ந்து முயலுங்கள்.

உங்கள் கனவுகளுக்கு நீங்களே பிரம்மாக்கள். அவற்றிற்கு நீங்கள் உயிர் கொடுக்கவில்லையென்றால் அவை உருவாகப் போவதில்லை. நீங்கள் கனவாக மட்டுமே விட்டு வைத்த உயர்ந்த விஷயங்கள் எத்தனை? அவை உருவாக ப்ரூக்ளின் பாலத்திற்காக வாஷிங்டன் ரோப்ளின் செய்த முயற்சிகளின் அளவில் சிறிதாவது செய்திருக்கிறீர்களா? சிந்தியுங்கள். உங்கள் சிந்தனை உங்களைச் செயல்புரிய வைக்கட்டும்.


Title: Re: வெற்றி-தன்னம்பிக்கை.
Post by: Global Angel on August 14, 2012, 03:54:10 AM
வெற்றியில் ஏமாந்து விடாதீர்கள்!  



(http://i1027.photobucket.com/albums/y338/jimikki/success-1.jpg)


தோல்வியில் துவண்டு விடாதீர்கள், தன்னம்பிக்கை இழந்து விடாதீர்கள், முயற்சியை நிறுத்தி விடாதீர்கள் என்று எல்லாம் பலர் அறிவுரை சொல்லக் கேட்டிருக்கிறோம். ஆனால் வெற்றி பெற்றவர்களுக்கு யாரும் அதிகம் அறிவுரை சொல்வதில்லை. காரணம் வெற்றி பெற்றவர்கள் அறிவு மிக்கவர்கள், நல்ல உழைப்பாளிகள், எல்லாம் தெரிந்தவர்கள் என்ற அபிப்பிராயம் பலர் மனதிலும் இருப்பது தான். அதெல்லாம் மற்றவர்கள் மனதில் இருந்தால் பரவாயில்லை. வெற்றி பெற்றவர்கள் மனதிலேயே அந்த அபிப்பிராயம் உறுதியாகத் தோன்றும் போது அது எதிர்கால ஆபத்திற்கு அஸ்திவாரம் போடுகிறது.

வெற்றி எப்பேர்ப்பட்டவரையும் ஏமாற்ற வல்லது. அது மூன்று குணாதிசயங்களை வெற்றியாளர்களிடம் ஏற்படுத்த வல்லது.

1) கர்வம்

2) அலட்சியம்

3) எந்த அறிவுரையும் கேளாமை

முதலாவதாக, வெற்றி ஒருவரிடம் “என்னை மிஞ்ச ஆளில்லை” என்ற கர்வத்தை ஏற்படுத்தலாம். கர்வத்தைப் போல வீழ்ச்சிக்கு வழி வகுக்கும் ஒரு குணாதிசயம் வேறொன்று இருக்க முடியாது. புராணங்களில் அரக்கர்கள் கடவுளிடம் வரம் பெற்று பெரும் சக்தி பெறுவார்கள். பெரும் சக்தி பெற்ற அவர்களது கர்வம் அவர்களை சும்மா இருக்க விடாது. பலரைத் துன்புறுத்த முனைவார்கள், எங்களை எதிர்க்க யாரிருக்கிறார்கள் என்று அறைகூவல் விடுப்பார்கள். முடிவு அவர்கள் அழிவு தான் என்பதை நாம் புராணங்களில் படித்து இருக்கிறோம்.


புராணங்களில் மட்டுமல்லாமல் வரலாறிலும் இதற்கு ஏகப்பட்ட உதாரணங்களைப் பார்க்க முடியும். ஹிட்லர், முசோலினி, நெப்போலியன் போன்றவர்கள் பெற்ற ஆரம்ப வெற்றிகள் சாதாரணமானதல்ல. அது அவர்கள் மனதில் தாங்கள் யாராலும் வெல்ல முடியாதவர்கள் என்ற கர்வத்தை ஏற்படுத்தியது. கர்வம் ஒரு மனிதனை உள்ளதை உள்ளது போல் பார்க்க விடாது. அறிவுக் கண்ணை அது அழகாக மறைக்க வல்லது. நன்மைகளை செய்ய கர்வம் பெரும்பாலும் அனுமதிப்பதில்லை. தான் செய்வதே சரி என்கிற எண்ணம் ஒருவரை எதையும் சீர்தூக்கிப் பார்க்க வைப்பதில்லை. அதன் விளைவு அவர்களை பெரும் வீழ்ச்சி காண வைக்கிறது.

உலக வரைபடத்தில் உகாண்டா என்ற ஆப்பிரிக்க நாட்டை சிரமத்திற்கு இடையே தான் கண்டு பிடிக்க முடியும். அத்தனை சிறிய நாட்டில் சர்வாதிகாரியாக இருந்த இடி அமீன் சென்ற நூற்றாண்டில் தன்னை கிட்டத்தட்ட கடவுளாகவே நினைத்துக் கொண்டு நடந்து கொண்ட விதத்தை வரலாற்றின் பார்வையாளர்கள் மறந்திருக்க முடியாது.

இன்றைய கால கட்டத்திலும் அரசியலைக் கூர்ந்து பார்ப்பவர்களுக்கு இதற்கு எத்தனையோ சான்றுகளைக் காண முடியும். சில இமாலய வெற்றி பெற்றவர்கள் தங்களை நிரந்தர தலைவர்களாக தாங்களாக நினைத்துக் கொண்டு செயல்பட்டு அடுத்த தேர்தலில் காணாமல் போவது சர்வ சாதாரணமாக நிகழ்கிறது அல்லவா?

இரண்டாவதாக, வெற்றி அலட்சியத்தையும் உண்டு பண்ணக் கூடியது. அதுவும் தொடர்ந்து சில வெற்றிகள் கிடைத்து விட்டால் தங்களை ஒரு அபூர்வ மனிதராக ஒருவர் நினைத்துக் கொள்ள வாய்ப்பு அதிகம். இனி எனக்கு தோல்வியே கிடைக்க முடியாது என்று ஒருவன் நினைக்க ஆரம்பிக்கும் போது அவனுடைய முயற்சிகள் தரத்திலும் அளவிலும் குறைய ஆரம்பிக்கின்றன.

சிறு வயதில் நாம் படித்த முயல், ஆமைக் கதை இந்த உண்மையை மிக அழகாகச் சொல்வது நினைவிருக்கலாம். முயலை எக்காலத்திலும் ஆமை வெல்ல முடியாது என்று நாம் நினைத்தாலும் முயல் தூங்கி விடுமானால், ஆமை விடாமல் முயற்சி செய்து வருமானால் ஆமை வெற்றி பெறுவது நடக்கக் கூடியதே. பள்ளி, கல்லூரிகளில் மிக நல்ல மதிப்பெண்கள் வாங்கி பிரகாசித்து நிஜ வாழ்க்கையில் கோட்டை விட்ட எத்தனையோ பேரை நான் அறிவேன். அதே போல் படிக்கையில் சாதாரணமான மதிப்பெண்களே பெற்று வந்த எத்தனையோ பேர் தங்கள் திறமைக் குறைவை உணர்ந்து உழைப்பால் அதை ஈடுகட்டி பின் வாழ்க்கையில் வெற்றி பெறுவதையும் நான் பார்த்திருக்கிறேன். முன்னவர்களின் தோல்விக்கான காரணத்தை ஆராய்ந்து பார்த்த போது அவர்கள் தோல்விக்குக் காரணம் வெற்றிகளால் அவர்கள் அடைந்திருந்த அலட்சியமே என்ற பதில் தான் கிடைத்தது.

இதை விடப் பெரிய விஷயங்களில் எல்லாம் வெற்றி பெற்றிருக்கிறேன், இது என் திறமைக்கு முன் எம்மாத்திரம் என்ற எண்ணத்தோடு இறங்கி சிறிய விஷயங்களில் தோற்று மூக்குடைந்த மேதாவிகளை நாம் அனைவரும் பார்த்திருக்க முடியும்.

மூன்றாவதாக, வெற்றி பெற்றவர்களுக்கு யாருடைய அறிவுரையும் தேவை இல்லை என்ற எண்ணம் மேலோங்கி நிற்க வாய்ப்பு உண்டு. ஒருவன் எத்தனை தான் புத்திசாலியானாலும் அவன் அறிந்திராதவையும் எத்தனையோ இருக்கக் கூடும். அந்த அறிந்திராத விஷயங்கள் அவனுடைய எதிர்கால வெற்றிக்கு முக்கியமானவையாக இருக்கக் கூடும். ஆனால் எல்லாம் எனக்குத் தெரியும், தெரியாமலா இத்தனை வெற்றிகள் கண்டிருக்கிறேன் என்று நினைக்கிற சில வெற்றியாளர்கள் அறிவுரை கூற வருபவர்களை ஏளனமாகப் பார்க்க முற்படுகிறார்கள். அவர்களுக்கு அறிவுரை வேம்பாகக் கசக்கிறது.

எனவே அவர்கள் தங்களைச் சுற்று துதிபாடிகள் இருப்பதையே அதிகம் விரும்புகிறார்கள். உள்ளதை உள்ளபடி சொல்பவர்களை அவர்கள் ஒதுக்க ஆரம்பிக்கிறார்கள். யாரானாலும் சரி மற்றவர்கள் கூறுவதில் உண்மை இருக்கிறதா என்று கூட சிந்திக்க மறுக்கும் போது, புதியனவற்றை அறிந்து கொள்ளத் தவறும் போது தோற்கவே ஆரம்பிக்கிறார்கள்.

எனவே தோல்வி அடையும் சமயத்தை விட அதிகமாய் வெற்றி அடையும் சமயத்தில் எச்சரிக்கையாக இருங்கள். தோல்வி அடையும் போது இருப்பதை விட அதிகமாய் வெற்றி அடைகையில் அடக்கமாய் இருங்கள். கர்வமும், அலட்சியமும், அடுத்தவர்களைத் துச்சமாய் நினைக்கும் தன்மையும் உங்களை அண்ட விடாதீர்கள். அப்படி கவனமாய் இருந்தால் மட்டுமே வெற்றியை நீங்கள் தக்க வைத்துக் கொள்ள முடியும். வாழ்க்கையில் தொடர்ந்து முன்னேறுவதும் அப்படி இருக்கும் போது மட்டுமே சாத்தியமாகும்.
Title: Re: வெற்றி-தன்னம்பிக்கை.
Post by: Global Angel on August 14, 2012, 03:56:44 AM
வெற்றிக்கு முன் வரும் தடைகள்!  


(http://i1027.photobucket.com/albums/y338/jimikki/chicken_soup_for_the__soul.jpg)


ஆன்மாவிற்கான சிக்கன் சூப் கதைகள் (Chicken Soup for the Soul ) பற்றி பலரும் கேள்விப்பட்டிருப்பீர்கள். தன்னம்பிக்கை, அன்பு, அறிவு, வாழ்வியல் ஆகியவற்றை விளக்கும் உண்மைக்கதைகள், கவிதைகள், கட்டுரைகள் ஆகியவற்றின் தொகுப்பு அவை. அந்தத் தலைப்பில் 200 க்கும் மேற்பட்ட புத்தகங்கள் உள்ளன. பதினோரு கோடிக்கும் மேற்பட்ட புத்தகங்கள் விற்பனையாகி உள்ளன. நாற்பதற்கும் மேற்பட்ட மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு இருக்கின்றன.  இந்த அளவு வெற்றியடைந்த அந்த நூல்களில் முதல் நூலைப் பதிப்பிக்க அதன் தொகுப்பாளர்கள் ஜேக் கேன்ஃபீல்டு (Jack Canfield) மற்றும் மார்க் விக்டர் ஹான்சென் (Mark Victor Hansen) இருவரும் சந்தித்த தடைகள் கொஞ்ச நஞ்சமல்ல.


அவர்கள் இருவரும் தன்னம்பிக்கை, சுய முன்னேற்றம் குறித்த முகாம்களை நடத்தி வந்த போது அதற்குத் தேவையான நிஜக்கதைகள் நிறைய சேகரித்து வைத்திருந்தார்கள். அந்த முகாம்களில் கலந்து கொண்ட பலர் அந்த நிஜக் கதைகளைப் புத்தகமாகப் போட்டால் பலருக்கு உதவியாக இருக்கும் என்று சொல்ல, அதைப் புத்தகமாகப் போடும் எண்ணம் அவர்களுக்கு ஏற்பட்டது. 1991ஆம் ஆண்டு இறுதியில் ஒரு புத்தகமாகத் தொகுத்து நியூயார்க் சென்று பதிப்பகங்களை ஒரு ஏஜெண்டின் துணையுடன் அணுகினார்கள். சிலர் அது போன்ற தொகுப்பு நூல் விலை போகாது என்றார்கள், சிலர் அந்தப் பெயரே சரியில்லை, படிக்கவும் ஆளிருக்காது என்றார்கள், சிலர் பரபரப்பு இல்லாத கதைகள் விற்பனையாகாது என்றார்கள். நேரடியாக சந்திக்க முடியாத பதிப்பகங்களுக்கு அந்த பத்தகங்களை தபால் மூலமாக அனுப்பிப் பார்த்தார்கள். அந்தப் பதிப்பகங்களும் அவற்றைப் பிரசுரிக்க ஆர்வம் காட்டவில்லை. இனி ஒன்றும் செய்வதற்கில்லை என்று அவர்கள் ஏஜெண்டும் கைவிரித்து விட்டார்.


விற்பனை ஆகாது, விலை போகாது என்று திரும்பத் திரும்பக் கேட்க நேர்ந்த ஜேக் கேன்ஃபீல்டும், மார்க் விக்டர் ஹான்செனும் அந்த அபிப்பிராயங்கள் உண்மையல்ல என்று புரிய வைக்க வேறு வழி கண்டு பிடித்தனர். அந்த நூல் வெளியானால் கண்டிப்பாக ____ பிரதி/கள் வாங்குவேன் என்ற உறுதி மொழிக்கடிதம் ஒன்றை அச்சிட்டு அதில் பெயர், விலாசம் எல்லாம் எழுத இடம் விட்டு தங்கள் முகாம்களுக்கு வந்தவர்கள் ஒவ்வொருவரிடமும் தந்தனர். 20000 புத்தகங்கள் வாங்க உறுதிமொழிக் கடிதங்கள் சேகரித்த பின் கலிபோர்னியாவில் நடந்த புத்தக விற்பனையாளர்கள் பேரவைக் கூட்டம் ஒன்றிற்குச் சென்று ஒவ்வொரு பதிப்பகத்திடமும் அந்த உறுதிமொழிக் கடிதங்களைக் காட்டிக் கூடப் பேசிப் பார்த்தார்கள். அங்கேயும் அவர்களுக்குத் தோல்வியே கிடைத்தது.


130 மறுப்புகளுக்குப் பிறகு ஒரு சின்ன பிரசுரம் அவர்கள் புத்தகத்தைப் பிரசுரிக்க முன் வந்தது. புத்தகங்கள் வெளி வந்தவுடன் முதலில் அந்த உறுதிமொழிக்கடிதம் கொடுத்தவர்களுக்கு நூல்களை அனுப்பி அவர்கள் காசோலைக்காகக் காத்திருந்தார்கள். கிட்டத்தட்ட அனைவருமே உறுதியளித்த எண்ணிக்கை புத்தகங்களை வாங்கினார்கள். படித்த ஒவ்வொருவரும் மற்றவர்களுக்கு சிபாரிசு செய்ய விற்பனை சூடுபிடிக்க ஆரம்பித்தது. முதல் புத்தகம் எண்பது லட்சம் பிரதிகள் விற்பனையாகி பெரும் சாதனை படைக்க அவர்களது மற்ற தொகுப்பு நூல்களும் பிரசுரமாகி பெரும் வெற்றியைக் கண்டன. 


எந்த ஒரு வெற்றியும் தடைகள் இல்லாமல் சந்திக்கப்படுவதில்லை. அதிலும் வெற்றி மகத்தானதாக இருக்கும் பட்சத்தில் அது சந்திக்கும் தடைகளும் பெரிய அளவிலேயே தான் இருக்கின்றன. தடைகள் ஒன்றிரண்டிலேயே மனம் உடைந்து நிறுத்தப்பட்ட முயற்சிகள் உலகில் கோடிக்கணக்கில் இருக்கக்கூடும். அவற்றில் எத்தனையோ இன்று வெற்றி கண்டவற்றை விட எத்தனையோ விதங்களில் மேன்மையாக இருந்திருக்கவும் கூடும். அதனால் எத்தனையோ பெரும் திறமைகள் உலகத்தின் பார்வைக்கே வராமல் போய் இருந்திருக்கின்றன என்பது தான் மிகவும் வருந்தத் தக்க உண்மை.


உண்மையான வெற்றி பிரபலத்திலும், எண்ணிக்கையிலும் இல்லை தான். ஆனால் திறமை வெளியே தெரியாமலேயே அமுங்கி விடும் போது உண்மையான தோல்வி ஏற்பட்டு விடுகிறது என்பதை நாம் மறுக்க முடியாது. அதனால் உண்மையான திறமை கொண்டிருப்பவர்கள் திறமைக்கு இணையாக தங்களிடம் விடாமுயற்சியையும், சகிப்புத் தன்மையையும் வளர்த்துக் கொள்வது மிக முக்கியம். ஆரம்பத்தடைகளை எதிர்பார்க்காமல் இருந்து விடக் கூடாது. அவற்றை வெற்றியின் பாதையில் கடக்க வேண்டிய மைல்கற்களாகவே கருதி ஏற்றுக் கொள்ள வேண்டும்.


புத்தக வெற்றி மட்டுமல்ல எல்லா மகத்தான வெற்றிகளும் இந்த நிஜத்தை அனுசரித்தே நிகழ்கின்றன. ஒரு ரஜனிகாந்த் ஆகட்டும், மைக்கேல் ஜேக்சன் ஆகட்டும், ஐன்ஸ்டீன் ஆகட்டும், ராமானுஜம் ஆகட்டும், இது போல ஒவ்வொரு துறையிலும் சிகரம் எட்டிய எவரே ஆகட்டும் இது போல பல தடைகள் கடந்து மட்டுமே அடையாளம் காணப்பட்டிருக்கிறார்கள். வெற்றி கிடைத்த பின் கூடும் கூட்டம், புகழ், செல்வம் எல்லாம் பிற்காலத்தையவையே. ஆரம்பத்தில் தனியர்களாகவே அந்த சிரமங்களை சந்தித்திருக்கிறார்கள்.


சிக்கன் சூப் கதைகள் வெளியிட அவர்கள் இருவரும் பட்ட ஆரம்ப சிரமங்களைப் பாருங்கள். சில நேரங்களில் அவர்கள் சந்தித்த சில மறுப்புகள் நமக்கு அவமானமாகக் கூடத் தோன்றலாம். ஆனால் தாங்கள் எடுத்துக் கொண்ட விஷயத்தின் மேல் இருந்த நம்பிக்கை அவர்களைத் தொடர்ந்து முயல வைத்திருக்கிறது. தடைகள் வரும் போது அவர்கள் தயங்கி தங்கள் முயற்சிகளை நிறுத்திக் கொண்டிருந்தால் இன்று அந்த வெற்றி சரித்திரம் விடுபட்டுப் போயிருக்கும். 


எனவே திறமை உள்ளவர்களே ஆரம்பத் தடைகளுக்குத் தயாராகவே இருங்கள். அவற்றை சந்திக்கும் போது மனம் தளர்ந்து விடாதீர்கள். இது உங்களுக்கு மட்டும் நிகழும் தனிப்பட்ட சம்பவங்கள் அல்ல. சொல்லப் போனால் இதுவே நியதி. இதுவே பாதை. இந்த உண்மையை மனதில் அழுத்தமாகப் பதித்து எல்லாவற்றையும் தாக்குப் பிடித்து தொடர்ந்து முயலுங்கள். பல தடைகளைக் கடந்து கடைசியில் கிடைக்கும் வெற்றிக் கனியைப் போல் சுவையானது வேறொன்றும் இல்லை. உங்கள் திறமைகள் வெளிவருவதும், புதைந்து போவதும் வெளிப்புற நிகழ்ச்சிகளாலோ, மற்றவர்களாலோ அல்ல, அதை எதிர்கொள்ளும் உங்கள் மனநிலையால் மட்டுமே என்பதை என்றும் மறந்து விடாதீர்கள்.
Title: Re: வெற்றி-தன்னம்பிக்கை.
Post by: Global Angel on August 14, 2012, 04:01:49 AM
ஒரு வெற்றியாளரின் மூன்று அனுபவ பாடங்கள்!  



(http://i1027.photobucket.com/albums/y338/jimikki/170px-Stevejobs_Macworld2005.jpg)


அறிவுரை வழங்க அறிவு தேவையில்லை. யாரும் யாருக்கும் அறிவுரை வழங்கலாம். காது கொடுத்து கேட்க ஆட்களிருந்தால் காசின்றி அறிவுரை வழங்கவும் ஏராளமான ஆட்கள் தயாராக இருக்கிறார்கள். அறிவுரை வழங்க தங்களுக்கு முழுத் தகுதியும் இருப்பதாகத் தான் பெரும்பாலானோரும் நம்புகின்றனர். அவர்களிடம் மாட்டிக் கொள்ளாமல் தப்பிக்கவே விவரமானவர்கள் ஆசைப்படுகிறார்கள். ஆனால் மிகப்பெரிய சாதனைகள் செய்து காட்டியவர், மிக வெற்றிகரமாக வாழ்ந்து காட்டியவர், மற்றவர்கள் எட்டாத உயரங்களுக்கு சென்று காட்டியவர் அறிவுரை வழங்குவாரேயானால் அவர் சொல்லும் ஒவ்வொரு வார்த்தையும் ஓராயிரம் கோடி பெறும்; வெற்றிக்கு வழி காட்டும்; எத்தனையோ அனுபவங்களுக்கு ஈடாகும். அது போன்ற அறிவுரைகளைக் கேட்டு கடைப்பிடிக்க எந்த ஒரு புத்திசாலியும் தவறி விடக் கூடாது.


ஸ்டீவ் ஜாப்ஸ் என்ற மனிதர் அப்படிப்பட்ட வெற்றிகரமான மனிதர். இன்று நாம் உபயோகிக்கும் கம்ப்யூட்டர்களின் உருவாக்கத்திற்கு அவர் அளித்த பங்கு மிகப்பெரியது. ஆப்பிள் மற்றும் நெக்ஸ்ட் கம்ப்யூட்டர்களை உருவாக்கியவர் அவர். இன்று நாம் உபயோகிக்கும் கம்ப்யூட்டர்களின் செயல்முறைகளில் அவர் முத்திரைகள் எத்தனையோ உண்டு. அமெரிக்காவின் மிகப் பெரிய பணக்காரர்களில் ஒருவராக இருந்தவர். வெற்றிகரமாக பல நிறுவனங்களை நடத்தியவர். உச்சாணிக் கொம்பிலிருந்து ஒருசில முறை அடிமட்டத்திற்கு வந்த போதும் மீண்டும் தன் திறமையாலும், உழைப்பாலும் முன்னேறி முந்தைய உயரத்தை விட அதிக உயரத்தை எட்டியவர். அவர் 2005 ஆம் ஆண்டு ஸ்டான்ஃபோர்டு பல்கலைக் கழகத்தில் உரையாற்றிய போது தன் வாழ்வில் கற்ற பாடங்களை மூன்று முக்கிய நிகழ்வுகள் மூலமாகச் சொன்னார். அவை மூன்றும் அவர் வாழ்க்கையை மாற்றி அமைத்த நிகழ்வுகள். கொஞ்சம் ஏமாந்திருந்தாலும் அடிமட்டத்திற்கு ஒருவரை நிரந்தரமாக அனுப்பி வைத்து புதைக்க வல்லவை அவை. ஆனால் வாழ்க்கையில் தெளிவாகவும், தைரியமாகவும் இருக்க முடிந்ததால் அவற்றை அவர் உபயோகப்படுத்தி சரித்திரம் படைத்தார். அவர் விவரித்த அந்த வாழ்க்கை நிகழ்வுகளையும் அதன் மூலமாகக் கிடைத்த பாடங்களைப் பார்ப்போமா?


முதல் நிகழ்வு/பாடம்:  


17 ஆவது வயதில் கல்லூரிக்குச் சென்ற அவருடைய படிப்புக்கு அவர் வளர்ப்புக் பெற்றோர் செலவழிக்க நேர்ந்த தொகை மிகப் பெரியது. கிட்டத்தட்ட தங்கள் சேமிப்பு முழுவதையுமே அவர்கள் செலவழிக்க வேண்டி இருந்தது. பணவசதி அதிகம் இல்லாத குடும்பத்திலிருந்து வந்த அவருக்கு இத்தனை செலவழித்து படித்து எதை சாதிக்கப் போகிறோம் என்ற மிகப்பெரிய கேள்வி ஆறு மாதம் அலைக்கழித்தது. எந்த விதத்தில் அந்தக் கல்வி அவர் வாழ்க்கையை உயர்த்தப் போகிறது என்ற கேள்விக்கு திருப்திகரமான பதில் கிடைக்காததால் அவர் கல்லூரிப் படிப்புக்கு முற்றுப் புள்ளி வைத்தார். கல்லூரியில் ஒரு பட்டம் பெற வேண்டி பிடித்ததை விடவும் பிடிக்காததை அதிகமாகப் படித்து கல்வியையும் வாழ்க்கையையும் அவர் சுமையாக்கிக் கொள்ள விரும்பவில்லை.


கல்லூரிப் படிப்பை விட்ட அவர் பெற்ற கஷ்டங்கள் கொஞ்ச நஞ்சமல்ல. நண்பர்களின் அறைகளில் தரையில் படுக்க நேர்ந்ததையும், கோகோ பாட்டில்களை சேகரித்து திருப்பித்தந்து கிடைத்த பணத்தில் உணவுக்கு செலவு செய்ததையும், ஹரே கிருஷ்ணா கோயிலில் கிடைக்கும் அன்னதானத்திற்காக ஒவ்வொரு ஞாயிறும் ஏழு மைல் தூரம் நடந்ததையும் நினைவு கூர்ந்த அவர் அத்தனையையும் மீறி அந்தத் தீர்மானம் தனக்கு எப்படி நன்மை செய்தது என்பதைச் சொன்னார். பிறகு பிடித்த விஷயங்களைக் கற்றுக் கொள்ள முடிவு செய்த அவர் தனக்குப் பிடித்த கையெழுத்துக் கலை (calligraphy) வகுப்புகளுக்குச் சென்று அதில் நன்றாகக் கற்றுத் தேர்ந்தார்.


அது பிற்காலத்தில் அவர் வடிவமைத்த முதல் மேசிண்டோஷ் (Macintosh) கம்ப்யூட்டருக்கு பலவித எழுத்துக்களை உருவாக்குவதற்கு மிகவும் உதவியது.  அந்தக மேசிண்டோஷ் கம்ப்யூட்டர் எழுத்துக்களையே விண்டோஸ் அப்படியே பின்னர் எடுத்துக் கொண்டதால் இப்போதுள்ள கம்ப்யூட்டர்கள் அழகான எழுத்து வடிவங்களைப் பயன்படுத்த ஸ்டீவ் ஜாப்ஸின் அன்றைய எழுத்து வகைகள் தான் உதவியது. மேலும் அவர் தனக்குப் பிடிக்காத கல்லூரிப் படிப்பிலேயே தங்கி இருந்தால் ஒரு ஊழியராக ஏதாவது ஒரு நிறுவனத்தில் வேலை பார்த்து அடையாளம் இல்லாமல் போயிருந்திருப்பார் என்பதும் உண்மையே.


மனிதன் ஆட்டு மந்தையாக இருந்து விடாமல் தன் தனித்தன்மையின் படியும் உள்ளுணர்வின் படியும் நம்பிக்கையுடன் இயங்கினால் அது கண்டிப்பாக அவன் வாழ்க்கைக்கும் உறுதுணையாகவும் மிகவும் உபயோகமாகவும் இருக்கும் என்பது அவர் முதல் அறிவுரை. அது ஆரம்ப கட்டத்தில் புரியா விட்டாலும் பிற்காலத்தில் கண்டிப்பாகப் புரிய வரும் என்பது அவர் முதல் அனுபவ அறிவுரை.


(படிக்கிற படிப்பை நிறுத்தி விட வேண்டும் என்பதல்ல பாடம். திறமையும் ஆர்வமும் வேறொன்றாக இருக்கையில் அதற்கு சம்பந்தமில்லாத படிப்பைத் தொடர்வது வெற்றிக்கு எதிரானது என்பதை அவர் சொல்வதாக எடுத்துக் கொள்வது முக்கியம்.)




இரண்டாம் நிகழ்வு/பாடம்


தன் 20வது வயதிலேயே ஆப்பிள் நிறுவனத்தை பெற்றோரின் கிடங்கில் ஆரம்பித்த ஸ்டீவ் ஜாப்ஸ் பத்து வருடங்களில் நூறு கோடி ரூபாய் மதிப்பும், 4000 ஊழியர்களும் கொண்ட நிறுவனமாக உயர்த்தி மாபெரும் வெற்றி கண்டார். ஆனால் அவர் தான் ஆரம்பித்த நிறுவனத்தை விட்டே வெளியேற நேர்ந்தது. அவர் திறமையாளர் என்று எண்ணி நிர்வாகத்தில் சேர்த்த ஒரு நபர் அவருக்கு எதிராக செயல்பட்டு, கம்பெனி டைரகடர்களையும் தன் பக்கம் சேர்த்துக் கொண்டு ஸ்டீவ் ஜாப்ஸை வெளியேற்றி விட்டார். எது அவர் வாழ்வின் எல்லாமாக இருந்ததோ எதை அவர் மிக மிக நேசித்தாரோ அது அவர் வாழ்வில் இருந்து பறிக்கப்பட்டது. சில மாதங்கள் என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்த அவர் விதியையும், வெளியேற்றிய நபரையும் நொந்து கொண்டு முடங்கி விடாமல் இனி என்ன மிஞ்சி இருக்கிறது என்று யோசித்தார். ஆப்பிள் நிறுவனம் கை விட்டுப் போனாலும் தன் திறமையும், ஆர்வமும் தன்னிடம் இன்னமும் மிஞ்சி உள்ளது என்று தெளிந்த அவர் அதை வைத்துக் கொண்டு மறுபடி நெக்ஸ்ட் (NeXT) என்ற நிறுவனத்தைத் தொடங்கினார். அதையும் பின்னர் (Pixar) என்ற நிறுவனத்தையும் ஆரம்பித்த அவர் அந்த இரு நிறுவனங்களையும் திறம்பட நடத்திய பின் இரண்டாம் நிறுவனத்தின் மூலமாக டாய்ஸ் ஸ்டோரி என்ற ’கம்ப்யூட்டர் அனிமேஷன்’ திரைப்படம் எடுத்தார். அந்தத் திரைப்படம் பெரிய வெற்றியைக் கண்டது.


ஒரு கால கட்டத்தில் அவருடைய நெக்ஸ்ட் நிறுவனத்தை ஆப்பிள் நிறுவனமே வாங்கி விட ஸ்டீவ் ஜாப்ஸ் மறுபடி ஆப்பிள் நிறுவனத்திற்குள் நுழைந்தார். அவர் நெக்ஸ்ட் நிறுவனத்தில் உருவாக்கி இருந்த மிக முக்கிய தொழில் நுட்ப மாற்றங்களை ஆப்பிள் நிறுவனம் எடுத்துக் கொண்டு புதிய பரிமாணம் பெற்றது. ஸ்டீவ் ஜாப்ஸ் படிப்படியாக உயர்வையும், உலகப் புகழையும் சந்தித்தார்.


ஆப்பிளில் இருந்து முதல் முறை வெளியேற்றப்பட்டதை நினைவுகூர்ந்த ஸ்டீவ் ஜாப்ஸ் அது பல விதங்களில் நல்லதாகவே முடிந்தது என்று சொன்னார். எத்தனையோ முன்னேற்றங்களும், மாற்றங்களும் ஆரம்பத்தில் இருந்து அங்கேயே இருந்திருந்தால் தன் வாழ்க்கையில் ஏற்பட்டிருக்காது என்கிறார். தான் காதலித்து மணம் புரிந்த மனைவியின் சந்திப்பு முதல், திரைப்படத் துறை பிரவேசம் வரை பல நன்மைகளை அதன் மூலம் சந்தித்ததை அவர் தெரிவித்தார்.


மாற்றங்களும், இழப்புக்களும் நாம் நம்பிக்கையையும் ஆர்வத்தையும் இழக்காத வரை கசப்பாக இருந்தாலும் கூட மிகப்பெரிய நன்மையையே ஏற்படுத்தும் என்பது அவருடைய இரண்டாவது அனுபவ அறிவுரை. அதனால் எதை நேசிக்கிறீர்களோ அதை விட்டு விட வேண்டாம் என்றும் எதை நேசிக்கிறோம் என்று தெரியா விட்டால் அதைக் கண்டுபிடிக்கிற வரை ஒய்ந்து விட வேண்டாம் என்றும் அவர் கூறுகிறார். அதைக் கண்டு பிடிக்கிற போது அதை இதயம் அறியும், அதன் பிறகு எல்லாமே முன்னேற்றப் பாதையில் முடியும் என்றும் அந்த சாதனை மனிதர் கூறுகிறார்.




மூன்றாவது நிகழ்வு/பாடம்

2004 ஆம் ஆண்டு அவருக்கு ஒரு வித கொடிய கான்சர் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அது அவருக்கும் குடும்பத்தாருக்கும் பேரிடியாக இருந்தாலும் அவர் முன்பு போலவே அதையும் நல்ல விதமாகவே எடுத்துக் கொள்ள முடிந்தது பெரும் வியப்பே. தன் சிறு வயதில் படித்த ஒரு வாசகம் தன்னை வெகுவாகக் கவர்ந்ததாக அவர் சொன்னார். “ஒவ்வொரு நாளும் அதுவே வாழ்வின் கடைசி நாள் என்பது போல் வாழ். ஒரு நாள் நீ நினைத்த மாதிரியே அதுவே கடைசி நாளாக அமைந்து விடும்”.  அதன் பின் ஒவ்வொரு நாள் காலையிலும் இது என் கடைசி நாளாக இருந்தால் இதை நான் செய்வேனா என்பதே எனது கேள்வியாக அமைந்து விட்டது என்கிறார். பல நல்ல மாறுதல்களுக்கு அந்த கான்சரும் வழிவகுத்து விட்டதாக அவர் சொல்கிறார்.

மரணம் அருகில் இருக்கிறது என்று தெரியும் போது வாழ்க்கையின் அனாவசியங்களில் ஈடுபடாமல் ஒதுக்கி விடுவதும் எது முக்கியம் என்று உணர்கிறோமோ அதில் முழு மனதுடன் ஈடுபடுவதும் சுலபமாகிறது என்பது அவர் சொன்ன மூன்றாவது பாடம். மரணம் நிச்சயமானது, வாழ்க்கை குறுகியது என்பதால் முழுமையான வெற்றிகரமான வாழ்க்கையை வாழ விரும்புபவன் ஒவ்வொரு நாளையும் வீணாக்காமல் இருக்க அவர் அறிவுறுத்துகிறார். அந்தக் குறுகிய வாழ்க்கையை அடுத்தவர்கள் அபிப்பிராயங்களுக்காக வாழாமல் இருக்கும்படியும் இதயபூர்வமாக உள்ளுணர்வு காட்டும் வழியில் தைரியமாக வாழும்படியும் அவர் கூறுகிறார்.
(2005ல் இதை அவர் குறிப்பிட்டாலும் அக்டோபர் 2011 வரை அவர் உயிர் வாழ்ந்தார். கடைசி நாட்களில் எல்லாவற்றையும் ஒதுக்கி வைத்து விட்டு தன் அன்புக் குடும்பத்துடன் கழித்து அமைதியாக உயிர் விட்டார்.)


வெற்றியை பணத்தால் மட்டும் அளக்க முடியாது. மனம் விரும்பிய ஒரு நல்ல வாழ்க்கையை வாழ முடிந்தால் அதுவே மிகப்பெரிய வெற்றி. அப்படி வாழ முடிந்தவன் பணத்தை சம்பாதிக்க முடியாது என்பது முட்டாள்தனம். மனம் விரும்பிய வாழ்க்கையுடன், பணத்தையும், வெற்றியையும் சேர்த்தே ஒருவன் பெற முடியும் என்பதற்கு ஸ்டீவ் ஜாப்ஸ் ஒரு மிக நல்ல உதாரணம். அப்படிப்பட்ட மனிதர் அன்று ஸ்டான்ஃபோர்டு பல்கலைகழக மாணவர்களுக்கு சொன்ன இந்த முப்பெரும் அறிவுரைகள் எக்காலத்திலும் எவருக்கும் ஏற்றுக் கொண்டு வாழத்தக்க அறிவுரைகள். அதை நம் இதயத்திலும், கருத்திலும் ஏற்றுக் கொண்டு பலனடைவோமே!
Title: Re: வெற்றி-தன்னம்பிக்கை.
Post by: Global Angel on August 14, 2012, 04:05:14 AM
அர்த்தமுள்ள அதிருப்தி  



திருப்தியை விடச் சிறந்த செல்வம் இல்லை. அதிருப்தியை விடப் பெரிய வறுமையும் இல்லை. எத்தனை குறைவாகப் பெற்றிருந்தாலும் திருப்தியுடன் வாழ்கின்ற செல்வந்தர்கள் உண்டு. ஏராளமாக வைத்திருந்தாலும் அதிருப்தி கொண்டு வாழ்கின்ற ஏழைகள் உண்டு.

ஆனால் திருப்தியும், அதிருப்தியும் சிலநேரங்களில் எதிர்மறையான பலன்களையும் ஏற்படுத்துகின்றன என்பது அனுபவ உண்மை. எந்த ஒரு மாற்றத்திற்கும் விதை அதிருப்தியே. சரியில்லாத சூழ்நிலைகளையும் ஏற்றுக் கொண்டு திருப்தியுடன் இருக்கும் போது மாற்றம் நிகழ்வதில்லை. அதில் அதிருப்தி ஏற்படும் போது தான் இதை அகற்ற அல்லது மேம்படுத்த என்ன செய்வது என்று மனிதன் சிந்திக்க ஆரம்பிக்கிறான். அதனால் எந்தவொரு அர்த்தமுள்ள மாற்றத்திற்கும் காரணகர்த்தா அதிருப்தியே.

ஆதிமனிதன் வெட்ட வெளியிலும் மரநிழலிலும் வாழ்வதிலேயே திருப்தியடைந்திருந்தால் குடிசைகள் தோன்றியிருக்காது. குடிசைகளிலேயே மனிதன் திருப்தி அடைந்திருந்தால் வசதியான வீடுகள் தோன்றியிருக்காது. இப்படி எல்லா விதங்களிலும் இன்றைய அனைத்து உயர்வான நிலைகளுக்கும் முந்தைய மனிதர்கள் அன்றைய நிலைகளில் கண்ட அதிருப்தியே பிள்ளையார் சுழியாக இருந்திருக்கிறது. அதிருப்தியுடன் முணுமுணுப்பதிலும், புலம்புவதிலும் பலர் நின்று விட்டாலும், அதை மாற்ற என்ன செய்யலாம் என்று ஒரு படி அதிகம் எடுத்து வைத்த சிலருக்கு நாம் நிறையவே கடன்பட்டிருக்கிறோம். அந்த சிலருடைய அதிருப்தியே அர்த்தமுள்ளதாக இருந்திருக்கிறது. அதுவே இத்தனை முன்னேற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.

எல்லாப் புரட்சிகளுக்கும் விதையாக இருந்தது இந்த அர்த்தமுள்ள அதிருப்தியே. பலரும் விதி என்று ஒத்துக் கொண்டு அடங்கி ஒடுங்கி வாழ்ந்தாலும், அப்படி அடிமைப்பட்டு வாழ்வதில் அதிருப்தியடைந்து இந்தத் தளைகளில் இருந்து தப்பிப்பது எப்படி என்று சிலர் சிந்தித்து செயல்பட்டதால் மட்டுமே விடுதலையும், மறுமலர்ச்சியும் வரலாற்றுப் பக்கங்களில் சாத்தியமாகி இருக்கிறது. பிரஞ்சுப்புரட்சி ரஷ்யப்புரட்சி போன்ற பெரும்புரட்சிகளும் சரி, இந்தியாவைப் போன்ற பல நாடுகளின் விடுதலையும் சரி இதற்கு உதாரணங்கள்.

ராஜபோக வாழ்க்கையில் சித்தார்த்தன் திருப்தியடைந்திருந்தால் ஒரு கௌதமபுத்தர் இந்த உலகிற்குக் கிடைத்திருக்க மாட்டார். போதுமான சம்பளத்துடன் இருந்த வேலையில் நாராயணமூர்த்தி திருப்தியடைந்திருந்தால் ஒரு இன்·போசிஸ் நிறுவனம் பிறந்திருக்காது. தன் ஆரம்ப கால குணாதிசயங்களில் மோகந்தாஸ்கரம்சந்த் காந்தி திருப்தியடைந்திருந்தால் ஒரு மகாத்மாவைக் காணும் பாக்கியத்தை இந்த உலகம் இழந்திருக்கும்.

இப்படி தனிமனிதனானாலும் சரி சமுதாயமானாலும் சரி, நாடானாலும் சரி அர்த்தமுள்ள அதிருப்தி தான் அழகான மாற்றங்களை உலகில் ஏற்படுத்தியிருக்கின்றன. ஆன்மீகமானாலும் சரி, அரசியலானாலும் சரி, லௌகீகமானாலும் சரி அர்த்தமுள்ள அதிருப்தியே திருப்புமுனைகளாக இருந்திருக்கின்றன.

எனவே உங்களையும், உங்கள் வீட்டையும், சமூகத்தையும், நாட்டையும் புதிய பார்வையோடு பாருங்கள். இருப்பதெல்லாம் சரி தானா? காண்கின்ற காட்சி உங்களைப் பெருமிதம் கொள்ள வைக்கிறதா? இல்லையென்றால் அவற்றை மாற்ற வேண்டாமா?

முதலில் பாரதி சொன்னது போல்,

'தேடி சோறு நிதம் தின்று
பல சின்னஞ்சிறு கதைகள் பேசி
மனம்வாடி துன்பம் மிக உழன்று
பிறர்வாடப் பல செயல்கள் செய்து
நரைகூடிக் கிழப்பருவம் எய்தி
கொடும் கூற்றுக்கு இரையென மாயும்
பல வேடிக்கை மனிதரைப் போலே' -

வாழும் வாழ்க்கையில் அதிருப்தி கொள்ளுங்கள் நண்பர்களே. அது அர்த்தமில்லாத புலம்பலாக இருந்து விடாமல் அர்த்தமுள்ள அதிருப்தியாக உங்களை மாற்றக்கூடிய உந்துதலாக இருக்கட்டும். உங்கள் அதிருப்தி மேலோட்டமாக இல்லாமல் ஆழமாக இருந்தால் நீங்கள் கண்டிப்பாக மாற ஆரம்பிப்பீர்கள். உங்கள் மாற்றம் உன்னதமாக இருந்தால் அது உங்களை சந்திப்பவர்களையெல்லாம் அலைகளாகத் தொடும். அவர்களில் பக்குவப்பட்டவர்கள் தாங்களும் மாற ஆரம்பிக்கலாம். அப்படியே தொடர்ந்து நீங்கள் ஆரம்பித்து வைத்த அலை பேரலையாக உங்கள் வீட்டையும், சமூகத்தையும், நாட்டையும் கூட மாற்றலாம். காரணம் எல்லா மாற்றங்களும் இப்படி எங்கோ ஒரு இடத்தில் ஆரம்பித்தவை தானே.

அப்படியொரு அலை உங்களிடமிருந்து ஆரம்பிக்குமா?
Title: Re: வெற்றி-தன்னம்பிக்கை.
Post by: Global Angel on August 14, 2012, 04:08:14 AM
காலத்தை வென்று பிரகாசியுங்கள்  


(http://i1027.photobucket.com/albums/y338/jimikki/200px-ChandraNobel.png)

ஒரு துறையில் நீங்கள் சில ஆராய்ச்சிகள் செய்கிறீர்கள். உங்கள் நீண்ட கால ஆராய்ச்சிக்குப் பின் சில விஷயங்களைக் கண்டுபிடிக்கிறீர்கள். அதை உலகுக்கு அறிவிக்க நினைக்கிறீர்கள். அந்த அறிவிப்பு விழாவுக்குஅந்தத் துறையில் உச்சாணிக் கொம்பில் உள்ள அறிஞரை அழைக்கிறீர்கள். அவர் உங்களுடைய ஆதர்ச புருஷரும் கூட. நீங்கள் மிகுந்த சிரத்தையுடன் உங்கள் கண்டுபிடிப்புகளைப் பற்றிச் சொல்கிறீர்கள். சொல்லி முடித்த பின் உங்கள் ஆதர்ச புருஷரின் கருத்துக்காகக் காத்திருக்கிறீர்கள். உங்கள் கண்டுபிடிப்புகளை உலகப்புகழ் பெற்ற அவர் "வடிகட்டிய முட்டாள்தனம்" என்று வர்ணிக்கிறார். பத்திரிக்கையாளர் கூட்டத்தில் முட்டாள்தனம் என்று தான் சொன்னதற்கான காரணங்களைப் புட்டு புட்டு வைக்கிறார்.

உங்கள் மனநிலை எப்படி இருக்கும்? உங்கள் தன்னம்பிக்கை எந்த அளவில் நிற்கும்? அந்தத் துறையில் தொடந்து இருப்பீர்களா இல்லை அதற்கு முழுக்குப் போட்டு விடுவீர்களா?

இப்படி ஒருவர் வாழ்வில் உண்மையாகவே நடந்தது. அவர் சந்திரசேகர் என்ற வானியல் விஞ்ஞானி. அவர் உலகப்புகழ் பெற்ற வானியல் அறிஞர் ஆர்தர் எட்டிங்டன் என்பவரின் எழுத்துக்களால் உந்தப்பட்டு நட்சத்திரங்களை ஆராய்ச்சி செய்ய ஆரம்பித்தார். தன் 24ம் வயதிற்கு முன்பே (1935ல்) நீண்ட ஆராய்ச்சிக்கு பின் தன் கண்டுபிடிப்புகளை வெளியிட முடிவு செய்தார். அவர் ஆர்தர் எட்டிங்டனுக்கும், மற்ற வானியல் அறிஞர்களுக்கும், அறிவியல் பத்திரிக்கைகளுக்கும் அழைப்பு விடுத்து அவர்கள் முன்னிலையில் தன் கண்டுபிடிப்புகளை மிகுந்த ஆர்வத்தோடு வெளியிட்டார்.

ஆனால் யாருடைய எழுத்துக்களால் கவரப்பட்டு அவர் அந்தத்துறையில் ஆராய்ச்சி நடத்தினாரோ, அந்த எட்டிங்டனே இவருடைய நட்சத்திர ஆராய்ச்சியின் முடிவுகளை முட்டாள்தனம் என்று வர்ணித்தார். இவர் கூறியது போல நட்சத்திரங்கள் இயங்குவதில்லை என்று கூறிய அவர் அதற்கான விளக்கங்களையும் அளித்தார். அந்தத்துறையில் ஒரு மேதையான அவரே அப்படிக் கூறியதால், சந்திரசேகர் கருத்துக்களில் உடன்பாடு இருந்த மற்ற அறிஞர்கள் வாயையே திறக்கவில்லை.

சந்திரசேகர் பின்னாளில் அந்த நிகழ்ச்சியை நினைவு கூர்ந்த போது கூறினார். "அவர் என்னை அந்தக் கூட்டத்தில் முட்டாளாக்கி விட்டார். எனக்கு அது ஒரு பெரிய தலைகுனிவாக இருந்தது. அந்தத்துறையில் ஆராய்ச்சிகளை முற்றிலுமாகக் கைவிட்டு விடுவது பற்றி கூட யோசித்தேன்."

தோல்வியும் மனத்தளர்வும் எல்லோருக்கும் சகஜம் என்றாலும் வெற்றியாளர்களுடைய சோர்வும், மனத்தளர்வும் மிகக்குறுகிய காலமே அவர்களிடம் காணப்படுகின்றன. அவர்கள் மிக வேகமாக அதிலிருந்து மீண்டு விடுகிறார்கள். இந்த விஷயத்தில் தான் தோல்வியாளர்கள் முக்கியமாக வித்தியாசப்படுகிறார்கள். இவர்கள் அந்த நிராகரிப்பை ஏற்றுக் கொண்டு பின் வாங்கி விடுகிறார்கள். பின் அந்தப்பக்கம் தலை வைத்தும் படுப்பதில்லை.

அமெரிக்க இந்தியரான சந்திரசேகரும் அந்த கசப்பான அனுபவத்திலிருந்து விரைவாகவே மீண்டு தன் ஆராய்ச்சிகளை அந்தத் துறையில் தொடர்ந்தார். சந்திரசேகருடைய எந்தக் கண்டுபிடிப்புகளை எட்டிங்டன் முட்டாள்தனம் என்று வர்ணித்தாரோ அதற்கு 48 வருடங்கள் கழித்து 1983ல் நோபல் பரிசு கிடைத்தது. வானியல் துறையில் ஒரு வரையறைக்கு "Chandrasekhar's Limit" என்ற பெயர் சூட்டப்பட்டது.

அவர் ஒரு வேளை பின் வாங்கியிருந்தால், தன் கண்டுபிடிப்புகளை தீயிலிட்டுக் கொளுத்தி விரக்தியுடன் அந்தத் துறையிலிருந்து விலகியிருந்தால் என்னவாயிருக்கும் என்று யோசித்துப் பாருங்கள். எத்தனை பெரிய அறிஞரானாலும் சரி அவருடைய கருத்து எல்லா சமயங்களிலும் சரியாக இருக்க வேண்டும் என்று அவசியம் இல்லை. இதை ஒவ்வொருவரும் மனதில் வைத்துக் கொள்வது நல்லது.

சந்திரசேகருக்குத் தூண்டுகோலாய் இருந்தது அந்தத் துறையில் இருந்த இயல்பாகவே இருந்த அதீத ஆர்வம் தான். வெற்றி தோல்விகளைப் பொருட்படுத்தாது ஒன்றில் தொடர்ந்து சாதிக்க வேண்டுமானால் அந்த ஆர்வம் உண்மையானதாக இருக்க வேண்டும். அப்படி இருந்து, போராட்டங்களுக்குப் பிறகு வெற்றியைப் பெற்ற நல்ல உள்ளங்கள் என்றும் அந்தத் துறையில் வளர்ந்து வரும் இளைய சமுதாயத்திற்கு வழிகாட்டியாகவும், அக்கறையுடன் உதவுபவர்களாகவும் இருக்கிறார்கள் என்பதற்கு சந்திரசேகர் ஒரு நல்ல உதாரணம்.

அவர் விஸ்கான்சின் நகரில் உள்ள யெர்க்ஸ் வானிலை ஆராய்ச்சிக் கூடத்தில் பணியாற்றி வந்தார். அப்போது சிகாகோ பல்கலைக்கழகத்தில் வானியல் துறையைக் கற்பிக்கும் பகுதி நேரப் பேராசிரியராகவும் பணி புரிந்தார். வாரம் இரண்டு நாள் வகுப்பு. விஸ்கான்சினிலிருந்து 80 கி.மீ தனது காரில் பயணம் செய்து பாடம் நடத்தினார். கடும் குளிர்காலத்தில் சாலைகளில் எல்லாம் பனிக்கட்டிகள் உறைந்திருக்கும் என்பதால் காரை ஓட்டிச் செல்ல மிகுந்த சிரமப்பட்டார் அவர். ஆனாலும் விடாமல் உற்சாகமாகச் சென்று அவர் பாடம் நடத்தியது எத்தனை பேருக்குத் தெரியுமா? வகுப்பறையில் இருந்த இரண்டே பேருக்குத் தான்.

அவருடைய சிரமத்தைப் புரிந்து கொண்ட சிகாகோ பல்கலைக்கழக நிர்வாகிகள் "இரு மாணவர்களுக்காக இந்தக் கடும்பனியில் 160 கி.மீ பயணம் செய்து நீங்கள் வரவேண்டியதில்லை. எங்கள் பல்கலைகழக விதிகளின் படி ஏதாவது பாடத்தில் நான்கு மாணவர்களுக்குக் குறைவாக இருந்தால் அந்தப் பேராசிரியர் வகுப்பு எடுக்க வேண்டியதில்லை" என்று சொன்னார்கள்.

ஆனால் அதற்கு சந்திரசேகர், "ஆர்வத்தோடு படிக்க வரும் இந்த இரு மாணவர்களை ஏமாற்ற விரும்பவில்லை" என்று கூறி தொடர்ந்து ஒரு வகுப்பு கூட தவறாமல் அந்தக் கோர்ஸின் காலமான ஆறு மாதங்களும் பாடம் எடுத்தார். அவருடைய முயற்சியின் பலன் என்ன தெரியுமா? Chen Ning Yang, Tsaung-Dao Lee என்ற அந்த இரு மாணவர்களும் கூட பின்னாளில் நோபல் பரிசு பெற்று அவருடைய முயற்சிக்குப் பெருமை சேர்த்தார்கள்.

சந்திரசேகரை அந்தக் கடும்பனிப் பாதை பெரியதாகப் பாதிக்கவில்லை என்பதற்குக் காரணமே அவர் அதை விடக் கடுமையான வாழ்க்கைப் பாதைகளைக் கடந்து வந்திருக்கிறார் என்பதே. இளம் வயதில் எட்டிங்டன் கருத்தால் தன்னுடைய ஆர்வத்தை இழந்து விடாமல் காத்துக் கொண்ட அந்த மேதை அதே ஆர்வம் கொண்ட அந்த மாணவர்களுக்கும் அது குறைந்து விடக்கூடாது என்று கொட்டும் பனியில், உறைபனிப் பாதையில் சென்று பாடம் நடத்தினாரே அது இன்னும் பெருமைக்குரிய காரியம் அல்லவா?

உண்மையில் ஒரு துறையில் பேரார்வம் உங்களுக்கு இருக்குமானால் நீங்கள் அதில் ஏதோ சாதித்துப் பிரகாசிக்க முடியும் என்று அர்த்தம். மற்றவர்கள் உங்கள் ஒளியை மறைத்து விட முடியாது. உங்கள் பேரார்வமும், அது தூண்டும் உழைப்புமாகச் சேர்ந்து உங்களைத் தீபமாகப் பிரகாசிக்க வைக்கும். அப்படித் தீபமாகப் பிரகாசிப்பது பெருமைக்கும், பாராட்டுக்கும் உரிய விஷயம் தான். ஆனால் நீங்கள் அணையும் முன் பல தீபங்கள் ஏற்ற உதவியாக இருந்தால் உங்கள் ஜோதி நீங்கள் அணைந்த பின்னும் பல தீபங்களாக ஒளிவீசிக் கொண்டேயிருக்கும். நீங்கள் காலத்தை வென்று பிரகாசித்துக் கொண்டிருக்க முடியும்.

பிரகாசிப்பீர்களா?
Title: Re: வெற்றி-தன்னம்பிக்கை.
Post by: Global Angel on August 14, 2012, 04:11:06 AM
வாழ்க்கை ஒரு விளையாட்டு  


(http://i1027.photobucket.com/albums/y338/jimikki/game.jpg)


ஒரு பக்கத்தில் நீங்கள். மறுபக்கத்தில் கண்ணுக்குப் புலப்படாத இறைவன்.

ஆட்டத்தின் விதிகள் பிரபஞ்ச விதிகள்.

இந்த வினோத விளையாட்டே நீங்கள் ஜெயிக்கிறீர்களா இல்லையா என்பதை நிர்ணயிக்கத்தான். ஆனால் மறு பக்கத்தில் இருக்கும் இறைவனுக்கு இந்த விளையாட்டில் வெற்றி தோல்வி கிடையாது.

நீங்கள் காய்களை நகர்த்தும் விதத்தை வைத்தே இறைவனும் காய்களை நகர்த்துகிறான்.

இறைவன் உங்களை அவசரப்படுத்துவதில்லை. இப்படி ஆடு, அப்படி ஆடு என்று உங்களை நிர்ப்பந்திப்பதில்லை. எப்படிக் காய்களை நகர்த்துகிறீர்கள் என்பதில் உங்களுக்கு பூரண சுதந்திரம் உண்டு. நீங்கள் காய்களை நகர்த்தும் வரை இறைவன் பொறுமையாகவே காத்திருக்கிறான். ஒரு முறை நகர்த்திய பிறகு வாபஸ் வாங்கிக் கொள்கிறேன் என்று சொல்வதற்கு இந்த ஆட்டத்தில் இடமில்லை.

அதேசமயம் நீங்கள் காய்களை நகர்த்திய பிறகு அதை வைத்து இறைவன் காயை நகர்த்தும் போது அதை விமரிசித்தால் இறைவன் பொருட்படுத்துவதில்லை. இறைவனைப் பொறுத்த வரை நீங்கள் காய்களை நகர்த்துவதில் தான் உங்கள் சாமர்த்தியத்தைக் காட்டுகிறீர்களே ஒழிய உங்கள் கருத்துகளுக்கு இந்த ஆட்டத்தில் இடமில்லை.

இறைவன் கண்டிப்பாக விதிகளை மீறுவதில்லை. தப்பாட்டம் ஆடுவதில்லை. நீங்களும் அப்படியே ஆட வேண்டும் என்ற அடிப்படை நாணயத்தை உங்களிடம் அவன் எதிர்பார்க்கிறான். ஆனால் கண்ணுக்குப் புலப்படாதவன் அசந்திருப்பான், கவனிக்க மாட்டான் என்று நீங்கள் அழுகுணி ஆட்டம் ஆடினால் நீங்கள் தோற்பது உறுதி. விதிகளுக்கு புறம்பாக ஆடத்துவங்கும் போதே உங்கள் தோல்வி தீர்மானிக்கப்பட்டு விடுகிறது.

இந்த ஆட்டத்தின் சுவாரசியமான அம்சமே இந்த ஆட்டம் எத்தனை காலம் நீடிக்கும் என்பதை நீங்கள் அறியாதது தான். ஆட்டம் திடீரென்று எந்த நேரமும் இறைவனால் முடித்து வைக்கப்படலாம். இறைவனாக முடிக்கிற வரை எப்படி ஆடிக் கொண்டிருக்கிறீர்கள் என்பதை வைத்து தான் வெற்றி தோல்வி நிர்ணயிக்கப்படுகிறது.

ஆட்டத்தை உற்சாகமாகவும், நேர்மையாகவும், புத்திசாலித்தனமாகவும் ஆடிக் கொண்டிருக்க முடிந்தால் ஆட்டத்தில் நீங்கள் வெற்றியடைந்து விட்டீர்கள் என்று அர்த்தம். எந்திரமாகவோ, வஞ்சகமாகவோ, முட்டாள்தனமாகவோ ஆடி வந்தால் தோல்வியடைந்து விட்டீர்கள் என்று அர்த்தம்.

மற்ற விளையாட்டுகளை விட இந்த விளையாட்டு இன்னொரு விதத்தில் நிறையவே வித்தியாசப்படுகிறது. மற்ற ஆட்டங்களில் முதல் சுற்று, இரண்டாம் சுற்று என்று உங்களை நிரூபிக்க பல சந்தர்ப்பங்கள் உள்ளன. இதில் அப்படி இன்னொரு சந்தர்ப்பம் உங்களுக்கு அளிக்கப்படுவதில்லை. இந்த வாழ்க்கை தான் உங்களுக்கு கிடைக்கும் ஒரே மிகப்பெரிய சந்தர்ப்பம். இது முடியும் போது எல்லாமே முடிந்து போகிறது.

இந்த அரிய சந்தர்ப்பத்தை எப்படி பயன்படுத்தி ஆடிக்கொண்டிருக்கிறீர்கள்?
Title: Re: வெற்றி-தன்னம்பிக்கை.
Post by: Global Angel on August 14, 2012, 04:12:23 AM
நியூட்டனும் ஆப்பிளும்  



(http://i1027.photobucket.com/albums/y338/jimikki/game.jpg)


மரத்திலிருந்து ஆப்பிள் கீழே விழுந்ததைக் கண்ட நியூட்டன் புவியீர்ப்பு விசையைக் கண்டு பிடித்தார் என்பது எல்லோருக்கும் தெரியும். நியூட்டன் காலத்துக்கு முன்னும் கூட மரங்களில் இருந்து ஆப்பிள்கள் விழுந்து கொண்டு தான் இருந்தன. எத்தனையோ நூற்றுக் கணக்கான ஆண்டுகள் உலகமெல்லாம் கோடிக்கணக்கான மக்கள் அதைப் பார்த்துக் கொண்டு தானிருந்தார்கள்.

மரத்திலிருந்த ஆப்பிள் தலையிலேயே விழுந்தாலும் தலையைத் தடவிக் கொண்டு 'எல்லாம் நேரம்' என்று நொந்து கொண்டு ஆப்பிளைப் பொறுக்கி சாப்பிட்டபடி எத்தனையோ பேர் நடையைக் கட்டியிருப்பார்கள். அப்படி தலையிலேயே விழுந்தாலும் 'உதிரும் ஆப்பிள் ஏன் கீழே விழ வேண்டும்' என்ற கேள்வி அந்த மனிதர்களிடம் எழாத போது நியூட்டனுக்கு மட்டும் ஏன் அந்த சாதாரண நிகழ்ச்சியைக் கண்டு அசாதாரணமான ஒரு கேள்வி கேட்கத் தோன்றியது?

இந்தக் கேள்விக்கு தற்செயலாகத் தோன்றியிருக்கலாம் என்பதை பதிலாக நீங்கள் நினைக்கலாம். ஆனால் உண்மையான பதில் நியூட்டன் தயாரான மனநிலையில் இருந்தார் என்பது தான். அந்த சாதாரண நிகழ்ச்சி ஒரு பொறியாய் தாக்க அந்த தயார் நிலை மனம் அதைப் பெற்று அக்னி பற்றிக் கொண்டது. அது சம்பந்தமான எல்லா விடைகளையும் பெற்ற பின் தான், எல்லாக் கேள்விகளையும் சாம்பலாக்கிய பின் தான் அந்த அக்னி அடங்கியது. அந்த தயார் நிலை இருந்திரா விட்டால் ஈர விறகில் பட்ட தீப்பொறியாக அந்த நிகழ்வு ஒரு விளைவையும் ஏற்படுத்தாது போயிருக்கும்.

ஒன்றைப் பெறத் தயாரான நிலையில் இருந்தால் மட்டுமே நாம் அதைப் பெற முடியும். அதனால் பயனடைய முடியும். இறைவன் எத்தனையோ சந்தர்ப்பங்களை மாறுவேடத்தில் நமக்கு தினம் தினம் அனுப்பிய வண்ணம் இருக்கிறார். நாம் தினந்தோறும் அதைக் காணத்தவறிய வண்ணமே இருக்கிறோம். காரணம் அவையெல்லாம் தயார்நிலையில் இருப்பவன் கண்களுக்கு மட்டுமே அவை தென்படும்.

சரியான சந்தர்ப்பம் வரும் போது, தயார் நிலையில் இருந்து அதை சாதகமாக உபயோகித்துக் கொள்ளத் தெரிந்திருப்பதைத் தான் சிலர் அதிர்ஷ்டம் என்றழைக்கிறர்கள். சந்தர்ப்பம் வரட்டும் பிறகு என்னைத் தயார்படுத்திக் கொள்கிறேன் என்று இருப்பவர்களுக்கு சந்தர்ப்பமே சந்தர்ப்பமாகத் தெரியாது. தெரிந்தாலும் அதை வைத்துக் கொண்டு என்ன செய்வது என்று தடுமாறிக் கொண்டு நிற்கும் போது சந்தர்ப்பம் கை நழுவிப் போய் விடும்.

எனவே ஏதாவது ஒன்றில் வெற்றி பெற வேண்டுமென்றால் அதில் வெற்றி பெற எதெல்லாம் தேவையோ அதையெல்லாம் அறிந்து வைத்திருங்கள். சில திறமைகள் உதவுமென்றால் அந்தத் திறமைகளை உங்களுக்குள் வளர்த்து வைத்திருங்கள். எப்போதும் தயார்நிலையில் விழிப்புணர்வுடன் நம்பிக்கையுடன் காத்திருங்கள். வெற்றி தேவதை சந்தர்ப்பம் என்ற மாலையுடன் வருவாள். நிச்சயமாகத் தங்கள் கரம் பிடிப்பாள்.  

Title: Re: வெற்றி-தன்னம்பிக்கை.
Post by: Global Angel on August 19, 2012, 03:18:53 AM
பிரதானப்படுத்துவதையே பெறுகிறீர்கள்!  




மனிதன் தன் வாழ்வில் எதற்கு அதிக முக்கியத்துவம் தருகிறானோ அதையே அதிகம் காண்கிறான், அதுவே அவன் வாழ்வில் அதிகம் பெருகுகிறது என்று ஞானிகள் சொல்கிறார்கள். எதில் ஈடுபாடு அதிகமாகிறதோ, எதை அவன் மிக முக்கியம் என்று நினைக்கிறானோ அது குறித்த அவன் எண்ணங்களும், உணர்வுகளும் சக்தி வாய்ந்தவைகளாகின்றன. தன்னைச் சுற்றிலும் அதை ஈர்க்கும் ஒரு காந்த மண்டலத்தை அவன் உருவாக்கிக் கொள்கிறான். அது சம்பந்தமான சூழ்நிலைகளையும், மனிதர்களையும் அவன் தன்னிடத்தே ஈர்த்துக் கொள்கிறான்.

ஒவ்வொரு துறையிலும் நிறைய சாதனை புரிந்தவர்களைக் கேளுங்கள். அந்தந்த துறையில் அவர்களுக்கு மகத்தான ஈடுபாடு இருந்திருக்கிறதென்று அவர்கள் சொல்வார்கள். அவர்கள் எண்ணமெல்லாம் அதுவாக இருந்திருக்கிறதென்றும், அது மற்ற எல்லாவற்றையும் விட அதிக முக்கியத்துவத்தில் இருந்திருக்கிறதென்றும், அதற்காக மற்ற எத்தனையோ விஷயங்களை அவர்கள் தியாகம் செய்திருக்கிறார்கள் என்றும் சொல்வார்கள்.

பல விஷயங்கள் நமக்கு அதிகம் கிடைப்பதில்லை என்பதற்குக் காரணமே அவற்றிற்கு நாம் நம் வாழ்வில் பிரதான இடத்தை அளிப்பதில்லை என்பது தான். அல்லது அதற்கு எதிர்மாறான ஒன்றிற்கு நாம் அதை விட அதிக முக்கியத்துவம் கொடுக்கிறோம் என்பது கூடக் காரணமாக இருக்கலாம்.

பணத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறேன் ஆனால் அது ஒன்றும் என்னிடம் அதிகம் இல்லை என்று சொன்ன இருவரை நான் தனிப்பட்ட முறையில் அறிவேன். அவர்களை ஆராய்ந்ததில் ஒருவர் பணத்தை விட அதிகமாக சும்மா சோம்பி இருப்பதை விரும்புபவர் என்பதையும், இன்னொருவர் பணத்தை விட அதிகமாக அதை சூதாட்டத்தில் வைப்பதில் விருப்பமுள்ளவர் என்பதையும் நான் காண நேர்ந்தது. அந்த இரண்டுமே பணம் சேரத் தடையாக இருக்கும் பழக்கங்கள். எனவே பணம் நிறைய வேண்டும் என்ற ஆவல் அவர்களுக்கு நிறைய இருந்தாலும், பணத்துக்கு அவர்கள் மிக அதிக முக்கியத்துவத்தை தருபவர்கள் என்ற போதிலும் அதற்கு எதிர்மறையான ஒன்றிற்கு அதை விட அதிக முக்கியத்துவம் தந்ததால் அவர்கள் கடனாளியாகவே இருக்கிறார்கள்.

எனவே நீங்கள் மிக முக்கியம் என ஒன்றை நினைப்பதாக நம்பி இருந்தும் அது அதிகம் உங்களுக்குக் கிடைக்கவில்லை என்றால் நீங்கள் முக்கியத்துவம் அளிக்கும் விஷயங்களின் பட்டியலை மீண்டும் ஒரு முறை ஆராயுங்கள். அந்தப் பட்டியலில் அந்த முக்கியமான விஷயத்திற்கும் அதிகமாக அதற்கு இசைவில்லாத, அல்லது எதிராக உள்ள விஷயம் ஒன்றிற்கு உங்களை அறியாமல் பிரதானத்துவம் நீங்கள் தந்து கொண்டு இருக்கலாம்.

ஆராய்ச்சியாளர்கள் நீங்கள் வாழ்க்கையில் கண்டிப்பாக வேண்டும் என்று நினைப்பதைக் கூட எதிர்மறை வாக்கியங்களில் நினைக்காமல் இருக்க வேண்டும் என்று சொல்கிறார்கள். உதாரணத்திற்கு, ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்பதற்கும், நோயில்லாமல் இருக்க வேண்டும் என்று எண்ணுவதற்கும் இடையே பெரிய வித்தியாசம் இருப்பதாகச் சொல்கிறார்கள். இரண்டாவதான அந்த எதிர்மறை வாக்கியத்தை ஆழ்மனதில் எண்ணும் போது நோய் என்ற வார்த்தையே பிரதானமாகிறது என்றும் அதையே அதிகம் நாம் நம் வாழ்வில் வரவழைக்கிறோம் என்றும் சொல்கிறார்கள்.

எனக்குத் தெரிந்த ஒரு பெண்மணி ஆரோக்கியத்திற்கு மிக முக்கியத்துவம் தருபவர். அவருக்கு கவனமாக இல்லாவிட்டால் எதிலிருந்தும் சீக்கிரம் "infection" ஆகி விடும் என்ற பயம் அதிகம். எங்கு சென்றாலும் infection ஆகி விடக் கூடாது என்று சர்வ ஜாக்கிரதையாக இருக்கும் அவர் எனக்குத் தெரிந்து அடிக்கடி நோய்க்கிருமிகளால் தாக்கப்பட்டு சிகிச்சை பெறுவதைப் பல முறை கண்டிருக்கிறேன். ஆக ஆரோக்கியம் என்ற எண்ணத்தை விட "infection" என்ற எண்ணமே ஆழமாகப் பதிந்து முக்கியத்துவம் பெற்றதன் விளைவே அது என்பது தான் சரியாகத் தோன்றுகிறது.

எனவே அப்படி இருக்கக்கூடாது, இப்படி செய்யக் கூடாது, இது வேண்டாம் என்று எதிர்மறை வாக்கியங்களால் ஒன்றிற்கு முக்கியத்துவம் தருவதை நிறுத்தி விட்டு அப்படி இருக்க வேண்டும், இப்படிச் செய்ய வேண்டும், இது வேண்டும் என்று ஆழமாக நினைப்பது தான் அதை நம் வாழ்வில் வரவழைப்பதற்கு நல்ல வழி.

ஒன்று உங்களுக்கு மிக முக்கியம் என்றால், அதைத் தவிர வேறு எதுவும் அவ்வளவு முக்கியம் இல்லை என்றால் அதைக் காந்தமாக உங்களிடம் ஈர்க்கத் தேவையான சக்திகள் உங்களிடம் கண்டிப்பாக உருவாகும். அதை நிறைவேற்றத் தேவையான சூழ்நிலைகளும், மனிதர்களும் கண்டிப்பாக உங்கள் வாழ்வில் வருவார்கள். இதில் நம்பிக்கை மிக முக்கியம். நம்பிக்கை இல்லாமல் சந்தேகமே பிரதானமாக இருந்தால் அதை உறுதிப்படுத்துகிற மாதிரியான நிஜங்களே நடக்கும்.

எனவே உங்களுக்கு வேண்டியதையே பிரதானப்படுத்துங்கள். அதற்கே முதலிடம் கொடுங்கள். அதைக் கண்டிப்பாகப் பெறுவீர்கள் அல்லது அடைவீர்கள்.
Title: Re: வெற்றி-தன்னம்பிக்கை.
Post by: Global Angel on August 19, 2012, 03:20:02 AM
அடுத்தவர் அறிவையும் பயன்படுத்துங்கள்!  




ஒரு விஞ்ஞானியால் தன் வாழ்நாளில் எத்தனை பேரறிவுடன் இருந்தாலும் எத்தனை கண்டுபிடிப்புகளைச் செய்ய முடியும்? தொடர்ந்து படிப்பதற்கு முன் கண்களை மூடிக் கொண்டு சிந்தித்து ஒரு பதிலை எண்ணி வைத்துக் கொள்ளுங்கள்.

எவ்வளவு நினைத்தீர்கள்? ஐந்து, பத்து, ஐம்பது? விஞ்ஞானத்தைப் பற்றியும் ஆராய்ச்சியைப் பற்றியும் சிறிதாவது தெரிந்து வைத்திருப்பவர்கள் அதற்கும் மேலே செல்வது கடினம். ஆனால் ஒரே ஒரு விஞ்ஞானி 1093 கண்டுபிடிப்புகளைச் செய்து அத்தனைக்கும் patents தன் பெயரில் வைத்திருந்தார் என்றால் ஆச்சரியமாக இருக்கிறதல்லவா? அவர் தான் தாமஸ் ஆல்வா எடிசன். அத்தனைக்கும் அவர் கண்டுபிடிப்புகள் சாதாரணமானவை அல்ல. மின்சார பல்பு முதல் இன்று நாம் கண்டு மகிழும் திரைப்படம் (அவர் அதை Kinetoscope என்று அழைத்தார்) வரை பல மிகப்பெரிய கண்டுபிடிப்புகளும் அதில் அடங்கும்.

அவர் எப்படி அதை சாதித்தார் தெரியுமா? தன்னுடைய அறிவு, அனுபவம் மட்டுமல்லாமல் அடுத்தவர் அறிவு மற்றும் அனுபவத்தையும் முழுமையாகப் பயன்படுத்தினார். ஒரு பொருள் பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபடும் முன் அப்பொருள் பற்றி அதுவரை வெளியான எல்லா நூல்களையும் ஒன்று கூட பாக்கி விடாமல் படித்து விடுவார். மற்றவர்கள் கண்டுபிடித்து நின்ற இடத்திலிருந்து தன் ஆராய்ச்சியைத் தொடங்கினார். எனவே அவர்கள் செய்திருந்த தவறுகளைச் செய்யாமல் தன்னைக் காத்துக் கொள்ள முடிந்தது. அவர்களது பல வருட அனுபவங்களின் பயனை அவர் எடுத்துக் கொண்டதால் தான் இத்தனை மகத்தான சாதனைகளை தன் வாழ்நாளிலேயே அவரால் செய்ய முடிந்தது.

இப்படி அடுத்தவர் அனுபங்களைப் பயன்படுத்துவது விஞ்ஞான ஆராய்ச்சிக்கு மட்டுமல்ல, எல்லாவற்றிற்கும் பொருந்தும். அடுத்தவர் அனுபவங்களைப் பயன்படுத்திக் கொண்டால் ஒழிய நாம் அந்த அறிவைப் பெற நம் வாழ்நாள் முழுவதும் செலவழிக்க வேண்டி வரும். அப்படிச் செய்தால் கற்ற அறிவைப் பயன்படுத்த மீதி நாட்கள் நமக்குப் போதாமல் போய் விடும்.

ஒரு வேலையைச் சிறப்பாக செய்து கொண்டிருப்பவன் அந்தத் திறமையைப் பெற்றதெப்படி அதைப் பயன்படுத்துவது எப்படி என்று அற்புதமாக உங்களுக்குத் தெரிவிக்கக்கூடும், உங்களுக்கு கற்றுக் கொள்ளும் ஆர்வமிருந்தால். ஒரு மாபெரும் வெற்றி நிலையை எட்டியவனைக் கூர்ந்து கவனித்தால், வெற்றியடைய வைத்த அம்சங்களை ஆர்வத்துடன் ஆராய முடிந்தால் வெற்றிக்கான வழிகளை நீங்கள் சுலபமாக நீங்கள் கற்க முடியும். அந்த அம்சங்களை உங்களிடத்தில் கொண்டு வர முடிந்தால் வெற்றி நிச்சயமே. அதோடு நின்று விடாதீர்கள். அதைத் தொடக்கமாக வைத்துக் கொண்டு மேலும் அதிக வெற்றிகளைக் குவிக்கப் புது வழிகள் உள்ளனவா என்று யோசித்து செயல்பட்டு மேலும் அதிகமாய் சாதிக்கப் பாருங்கள்.

வெற்றி அடைந்தவர்களிடமிருந்து மட்டுமல்ல தோல்வி அடைந்தவர்களிடமிருந்து கூட எத்தனையோ கற்க முடியும். தோல்வியடைய வைத்த குணாதிசயங்களை ஆராய்ந்து உணர்ந்தால் அதுவும் கூட எத்தனையோ உங்களுக்கு சொல்லித்தரும். நீங்கள் அந்த குணாதிசயங்களை உங்கள் வாழ்க்கையில் இருந்து நீக்கினால் தோல்வியையும் உங்கள் வாழ்க்கையில் இருந்து நீக்க முடியும்.

இப்படி நாம் கூர்ந்து நம்மைச் சுற்றிலும் கவனித்தால் எப்படியெல்லாம் இருக்க வேண்டும், எப்படியெல்லாம் இருக்கக்கூடாது என்று தங்கள் வாழ்க்கையையே உங்களுக்கு உதாரணமாகக் காட்டும் பல மனிதர்களைப் பார்க்கலாம். உண்மையான புத்திசாலிகள் அதிலிருந்தே நிறைய கற்றுக் கொள்கிறார்கள். எத்தனையோ தவறுகளையும், முட்டாள்தனங்களையும் செய்யாமல் தங்களைப் பாதுகாத்துக் கொள்கிறார்கள்.

ஆனால் அவனை என்ன கேட்பது, இவனை என்ன கவனிப்பது என்று அலட்சியமாய் இருப்பவர்கள் எத்தனையோ படிப்பினைகளை இழக்கிறார்கள். அவர்கள் தலையெழுத்து, தானாகப் பட்டுத் தான் எல்லாவற்றையும் தெரிந்து கொள்ள வேண்டியதாகி விடுகிறது. அந்தத் தலையெழுத்தை நீங்கள் தவிர்க்கலாமே.
Title: Re: வெற்றி-தன்னம்பிக்கை.
Post by: Global Angel on August 19, 2012, 03:20:53 AM
வைக்கோல்போராய் இருக்காதீர்கள்!  



வைக்கோல்போர் பற்றி எரிவதைப் பார்த்திருக்கிறீர்களா? கொழுந்து விட்டு எரியும் அந்தப் பெரும்தீ அந்த நேரத்தில் மிகவும் பிரகாசமாய் தெரியும். தகதவென்று பிரம்மாண்டமாய் எரியும் அந்த செந்தழல் சிறிது நேரம் கழித்துப் பார்த்தால் அணைந்து போயிருக்கும். பின் ஒளியும் இல்லை. வெப்பமும் இல்லை.

பலருடைய ஆர்வமும் அந்த வைக்கோல்போரைப் போல் தான். திடீரென்று தோன்றி ஜொலித்து பிரம்மாண்டமாய் தெரிந்து அவர்களை சாகசம் புரிய வைக்கும். அந்த சமயத்தில் அவர்களைப் பார்ப்பவர்களுக்கு இவர்கள் இந்தத் துறையில் மிகப் பெரிய ஆளாக, வெற்றியாளராக வருவார் என்று தோன்றுமளவு அவர்களது உற்சாகமும் திறமையும் இருப்பதுண்டு. நானும் அப்படிச் சிலரைப் பார்த்திருக்கிறேன். அப்படிப் பெரிதாக அவர்களிடம் எதிர்பார்திருக்கிறேன். ஆனால் சில காலம் கழித்து அவர்களைச் சந்தித்த போது அந்த சுவட்டைக் கூட என்னால் பார்க்க முடிந்ததில்லை.

அவர்களிடம் அதை நினைவுபடுத்திக் கேட்டால் "அதெல்லாம் ஒரு காலம்" என்பது போன்ற பதில் கிடைக்கும். சில சமயங்களில் வேறொரு துறையில் இதே ஆர்வத்துடன் அவர்கள் எதையோ செய்து கொண்டிருப்பார்கள். இன்னொரு வைக்கோல்போர்.... எல்லாம் சொற்பகாலப் பிரகாசமே.

அது போன்ற நபர்கள் எல்லாம் சராசரிக்கும் மேற்பட்ட அறிவு கூர்மையுடையவர்களே. சில சமயங்களில் அசாதாரண திறமைசாலிகளே. அவர்களிடம் உள்ள மிகப்பெரிய குறை திடீரென்று சலித்துப் போவதே. கைதட்டல்களும், பாராட்டும் குறைய ஆரம்பிக்கும் போது அவர்கள் ஈடுபாடும், முயற்சியும் கூடக் குறைந்து போகிறது. அவர்களுக்கு அதில் சலிப்பேற்பட்டு விடுகிறது. ஒரு த்ரில் இருப்பதில்லை. ஆரம்பித்தில் இருந்த 'inspiration' பிறகு இருப்பதில்லை. மனம் இயல்பாகவே வேறொன்றை நாட ஆரம்பிக்கிறது. ஆனால் அவர்களுக்கு அதற்கான காரணம் சொல்லத் தெரிவதில்லை.

அவர்களை விடக் குறைந்த திறமை உள்ளவர்கள் சோபிக்கும் போது மட்டும் அவர்களுக்குக் கோபம் வருகிறது. 'இவனெல்லாம் இன்னைக்கு இதில பெரிய ஆள். எல்லாம் நேரம் தான்' என்று புலம்புவதை நம்மால் கேட்க முடியும். ஆனால் இவர்கள் ஒரு மிகப் பெரிய உண்மையை மறந்து விடுகிறார்கள். 'ஒரு வேலையைப் பாதியிலேயே விட்டு விட்டுப் போனவர்களை உலகம் நினைவில் வைத்திருப்பதில்லை'. இவர்களை விடத் தகுதி குறைவாக இருந்தாலும் பாதியில் விடைபெற்று விடாமல் தாக்குப் பிடித்திருக்கிறான் என்பதே அந்த சோபித்தவனுக்கு சாதகமாக இருந்திருக்கிறது என்பதை உணரத் தவறி விடுகிறார்கள்.

கொலம்பஸ் தன்னுடைய உலகப் பயணத்தைப் பாதியிலேயே நிறுத்தி திரும்பிச் சென்றிருந்தால் அவர் பெயர் சரித்திரத்தில் நின்றிருக்குமா? இத்தனைக்கும் வழியில் அவர் பட்ட கஷ்டங்கள் கொஞ்ச நஞ்சமல்ல. வழியில் பல பிரச்சினைகள். கப்பலில் அவருடன் வந்த மாலுமிகளும் பாதியில் முணுமுணுக்க ஆரம்பித்தார்கள். ஆனால் ஆரம்பித்த பயணத்தை ஒரு உறுதியுடன் அவர் முடித்ததால் தான் அவரை உலகம் நினைவில் வைத்துள்ளது.

Inspiration' தோன்றும் போது மட்டும் ஈடுபடுகிற போது நீங்கள் வைக்கோல்போர் போல் எரிகிறீர்கள் என்பதை நினைவில் வைத்திருங்கள். "Inspiration" என்பது ஒரு துவக்கம் மட்டுமே. அது ஒரு ஆரம்ப அக்னியே. ஆனால் அந்த அக்னியைத் தூண்டி விட்டுக் கொண்டே இருக்கிற வேலையை உலகம் செய்யும் என்று எதிர்பார்ப்பது முட்டாள்தனம். ஒருநாள் உலகம் உங்களைப் பாராட்டலாம். அன்று உண்மையில் உள்ளே உள்ள அக்னி பிரகாசமாய் ஜொலிக்கலாம். ஆனால் மறுநாள் உலகம் தன் கவனத்தை வேறு பக்கம் திருப்பக் கூடும். இல்லையில் உங்களை அது விமரிசிக்கக் கூடச் செய்யலாம்.

அப்போதும் உள்ளே உள்ள அக்னியை அணையாமல் காத்துக் கொள்ளும் திறமையை நீங்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும். நீங்கள் உள்ள துறையில் தாக்குப் பிடிக்க வேண்டும். மற்றவர்களது கருத்துக்களை விடவும் அதிகமாய் உங்கள் நம்பிக்கையும், உறுதியும் இருக்க வேண்டும். அப்படிச் செய்ய முடிகிற போது தான் நீங்கள் ஒரு வெற்றியாளனாக உருவெடுக்க முடியும்.

அதற்கு ஒரே ஒரு ராஜ மார்க்கம் தான் உள்ளது. உங்களுக்குத் திறமை உள்ளது என்று நம்பும் துறையில் சதா உங்கள் சிந்தனை இருக்கட்டும். அதில் அடுத்தவர்கள் கவனிக்கா விட்டாலும் ஏதாவது முயற்சிகள் மேற்கொண்டே இருங்கள். அதில் சாதித்தவர்களைப் பார்த்து பாடங்கள் கற்றுக் கொள்ளுங்கள். மனம், சொல், செயல் என்று தினமும் நம்பிக்கையுடன் ஈடுபடுகிற போது தான் உள்ளே உள்ள அக்னி அணையாமல் காக்கப் படுகிறது. உங்கள் வெற்றி உறுதி செய்யப்படுகிறது.


Title: Re: வெற்றி-தன்னம்பிக்கை.
Post by: Global Angel on August 19, 2012, 03:21:37 AM
எதற்கும் தயாராக இருங்கள்  



'Positive Thinking' மற்றும் 'Positive Approach' பற்றி எல்லோரும் ஏராளமாக எழுதியும் சொல்லியும் ஆகி விட்டது. நல்லதையே எண்ணுங்கள், நல்லதையே எதிர்பாருங்கள், உங்கள் வாழ்வில் நல்லதே பெருகக் காண்பீர்கள் என்று ஆராய்ச்சியாளர்களும் கூறுகிறார்கள். அது உண்மை தான் என்றாலும் அதிலும் சிக்கல்கள் இல்லாமல் இல்லை. நல்லதையே எதிர்பார்த்திருந்து விட்டு நல்லது நடக்காமல் போகையில் ஏமாற்றத்தின் அளவும் அதிகமாகவே ஆகி விடுகிறது. எதிர்பார்த்தது நடக்காமல் போகும் போது மனக்கசப்பு தான் அதிகம் மிஞ்சுகிறது. அப்படியானால் பாசிடிவ் அப்ரோச் என்கிற வழியே தவறா?

இல்லை. 'Positive Thinking/Approach' என்பது உண்மையில் நல்லதே நடக்கும் என்று எதிர்பார்க்கச் சொல்வதைக் காட்டிலும் அதிகமாக நடப்பதை எல்லாம் நமக்குப் பயனுள்ளதாக ஆக்கிக் கொள்ள வேண்டும் என்கிற அணுகுமுறையே. எது நடந்தாலும் தளர்ந்து விடாமல் சந்திக்கத் தயாராக இருப்பதே அதன் குறிக்கோள்.

எத்தனை தான் படித்தும், கேட்டும், சிலாகித்தாலும் தினசரி வாழ்க்கையினை சந்திக்கும் போது பல சமயங்களில் பெரும்பாலானோரது Positive Thinking/Approach எல்லாம் தகர்ந்து போய் விடுகிறது என்பதே யதார்த்தமான உண்மை. அதற்கு என்ன செய்வது?

தத்துவஞானியும், ரோமானியச் சக்கரவர்த்தியுமான மார்க்கஸ் அரேலியஸ் தன்னுடைய டைரியில் தான் இன்று நன்றி கெட்டவர்களையும், நயவஞ்சகர்களையும் சந்திக்கக்கூடும் மன அமைதியை இழக்க வைக்கக்கூடிய சம்பவங்களில் சிக்கக்கூடும் என்பது போன்ற பிரச்சினையான சாத்தியக்கூறுகளை எழுதி வைத்து விட்டு, தினமும் காலை அதைப் படித்து விட்டுத் தான் தன் நாளைத் தொடங்குவாராம். ராஜ்ஜியம் பரிபாலனம் செய்யும் சக்கரவர்த்தி இயல்பாக சந்திக்கக் கூடிய அது போன்ற சாத்தியக்கூறுகளை ஆரம்பத்திலிருந்தே எதிர்பார்த்திருந்து, அவற்றை கையாள வேண்டிய வழிமுறைகளையும் யோசித்தும் வைத்திருந்த அவரது தயார் நிலை அவர் மன அமைதியை இழக்காமல் காத்தது என்று உறுதியாகச் சொல்லலாம்.

பிரச்சினைகளும் சவால்களும் தான் பலரை நிலைகுலைய வைக்கின்றன என்றில்லை. பழகிப் போன ஒரு வாழ்க்கை முறை மாறத் துவங்கும் போதும் அந்த மாற்றத்தை பலர் சங்கடமாகவே நினைக்கின்றனர். உலகில் மாற்றம் ஒன்றே நிச்சயம் என்பது மாபெரும் உண்மை. அப்படி இருக்கையில் மாற்றம் நிகழும் போது தயார்நிலையில் இல்லாமல் இருப்பதும், மாற்றமே கூடாது என ஆசைப்படுவதும் அறிவீனம் அல்லவா?

எனவே எதுவும் எப்போது வேண்டுமானாலும் மாறலாம் என்பதை உணர்ந்திருங்கள். மாறுதல் நிகழும் போது அதை உற்சாகமாக எதிர்கொண்டு அதை உங்கள் முன்னேற்றத்திற்கு உபயோகித்துக் கொள்ளுங்கள்.

உங்களுக்கு விருப்பமுள்ள மாற்றங்களும் நிகழ்வுகளும் மட்டுமே ஏற்பட வேண்டும் என்று எதிர்பார்க்காதீர்கள். உலகம் உங்கள் விருப்பப்படி இயங்குவதில்லை. எல்லாமே ஒரு காரணத்தோடு தான் நடக்கின்றன. அவை நடக்கையில் சிணுங்குவதும் குமுறுவதும் வாழ்க்கை ஓட்டத்தை எளிதாக்குவதற்கு பதிலாக மேலும் மோசமாக்குகின்றன.

எனவே நல்லதே எண்ணுங்கள். நல்லதையே வாழ்க்கையில் பிரதானப்படுத்துங்கள். ஆனால் விதி உங்களை முன்னேற்றவும், பதப்படுத்தவும் எதிர்பாராத சிக்கல்களை உங்கள் வழியில் அனுப்பி வைக்கக்கூடும். அதற்கு எப்போதும் தயார்நிலையில் இருங்கள். வருத்தத்துடனும், ஏமாற்றத்துடனும் வருவதை சந்தித்து மனதைப் பாழாக்கி, மூளையை மழுங்கடிப்பதற்குப் பதிலாக தெளிந்த மனத்துடன் மூளையைக் கூராக்கி இதை எப்படிக் கையாள வேண்டும் என்று சிந்திக்கக் கற்றுக் கொண்டால் எதனாலும், யாராலும் உங்கள் முன்னேற்றம் தடைப்படுவதில்லை.
Title: Re: வெற்றி-தன்னம்பிக்கை.
Post by: Global Angel on August 19, 2012, 03:22:28 AM
முடியாதது முயலாதது மட்டுமே  



ஒரு மைல் தூரத்தை ஓடிக் கடக்க குறைந்த பட்சம் நான்கு நிமிடங்கள் வேண்டும் என்று பல காலமாக எல்லாரும் நம்பி இருந்தார்கள். 1954 ஆம் ஆண்டு வரை வெளியான எல்லா அறிவியல் ஆராய்ச்சிக் கட்டுரைகளும் மனித உடலால் அதற்கு மேல் வேகமாக ஓட முடியாது என்று ஒருமித்த கருத்தை அறிவித்தன. ஆனால் 1954 ஆம் ஆண்டு மே மாதம் ஆறாம் தேதி ரோஜர் பேனிஷ்டர் என்பவர் ஒரு மைல் தூரத்தை நான்கு நிமிடங்களுக்கு முன்னதாக ஓடிக் கடந்து அது வரை நிலவிய அறிவியல் நம்பிக்கையைப் பொய் ஆக்கினார்.

அவர் பயிற்சியின் போது தன் இலக்கான மைலை நான்காகப் பிரித்துக் கொண்டார். ஒவ்வொரு கால் மைலையும் 58 வினாடிகளுக்கு முன் கடக்க வேகத்தை மேற்கொண்டார். மிகவும் கஷ்டமான அந்த வேக இலக்கை எட்டி சிறிது ஓய்வு எடுத்துக் கொள்வார். பின் அடுத்த கால் மைலைக் கடப்பார். பல முறை பயிற்சி எடுத்து சிறிது சிறிதாக வேகத்தைக் கூட்டி, ஓய்வைக் குறைத்துக் கொண்டு வந்தார். கடைசியில் அவர் பந்தயத்தில் 3 நிமிடம் 59.6 வினாடிகளில் அந்த மைல் இலக்கைக் கடந்தார். அடுத்த நான்கு வருடங்களில் அவரைப் போல் 46 பேர் அந்த "ஓரு மைல்-நான்கு நிமிடம்" என்ற உடற்கூறு ஆராய்ச்சியளர்களின் கருத்தை முறியடித்தார்கள்.

ஆகவே இளைஞர்களே, எதையும் இது வரை சாதித்தவர்களை வைத்தோ, வல்லுனர்களின் கருத்தை வைத்தோ தீர்மானிக்காதீர்கள். முடியாதது என்பது முயலாதது மட்டுமே. மனித சக்தி எல்லை இல்லாதது. அதன் எல்லைகளைக் கண்டவர்கள் இன்று வரை இல்லை. முடியாதது என்பது கிடையாது. எல்லா சாதனையாளர்களும் "முடியாது" என்ற கருத்தை ஏற்றுக் கொள்ளாமல் தொடர்ந்து முயன்றவர்கள் தான். சுற்றிலும் "முடியாது, ஆகாது" என்று பலரும் சொல்லும் போதும், ஆரம்பத் தோல்விகள் அடைந்த போதும், தொடர்ந்து முயன்றவர்களுக்குள் சாதித்துக் காட்ட வேண்டும் என்ற ஒரு அக்னி இருந்திருக்கிறது.

ஒவ்வொருவரும் அப்படியொரு அக்னியை உங்களுக்குள் வளர்த்துக் கொள்ளுங்கள். அந்த அக்னி உங்களைச் சோம்பி இருக்க விடாது. சலிப்படைய விடாது. அரை குறை முயற்சிகளோடு திருப்தியடைய விடாது. விதியையோ, அடுத்தவர்களையோ தடையாக நினைக்க விடாது. அப்படி ஒரு அக்னி உங்களுக்குள்ளும் இருக்குமானால் வானம் கூட உங்களுக்கு எல்லையல்ல.

இளைஞர்களே, உங்கள் இலக்குகள் பெரிதாக இருக்கட்டும். ஆனால் அந்தப் பெரிய இலக்கை ரோஜர் பேனிஷ்டர் செய்து கொண்டது போல சிறு சிறு இலக்குகளாய் பிரித்துக் கொள்ளுங்கள். ஒவ்வொன்றையும் உற்சாகமாக அணுகுங்கள். முழு மனதுடன் முயலுங்கள். இலக்கு பெரியதாக இருக்கும் பட்சத்தில் கண்டிப்பாக தோல்விகள் வரலாம். எங்கு தவறு செய்தோம் என்று ஆராய்ந்து அடுத்த முயற்சியின் போது திருத்திக் கொள்ளுங்கள். ஒவ்வொரு முயற்சியிலும் முந்தியதை விட சற்று அதிக முன்னேற்றம் இருக்கும் படி பார்த்துக் கொள்ளுங்கள். இதை மட்டும் உங்களால் செய்ய முயன்றால் உங்களால் முடியாதது என்று எதுவும் இல்லை. முடியாது என்று நீங்களாக பின் வாங்கினால் ஒழிய நீங்கள் என்றுமே தோல்வி காணப் போவதில்லை.
 
Title: Re: வெற்றி-தன்னம்பிக்கை.
Post by: Global Angel on August 19, 2012, 03:23:14 AM
அலட்சியத்தின் விலை அதிகம்  



அலட்சியம் என்றும் எதையும் சாதித்ததில்லை.

அது மாபெரும் நூல்களை எழுதியதில்லை. மனதை மயக்கும் இசையை இசைத்ததில்லை. உயர்ந்த ஓவியங்களை வரைந்ததில்லை. புதிய அறிவியல் கண்டுபிடிப்புகளைக் கண்டுபிடித்ததில்லை. நாலு பேருக்கு நன்மை பயக்கும் செயல்களைச் செய்ததில்லை. வீரதீர பராக்கிரமங்களை நிகழ்த்தியதில்லை. மேன்மைக்குரிய இந்த செயல்கள் எல்லாம் உற்சாகத்தினாலும், ஊக்கத்தாலும் இதயபூர்வமாக செய்யப்பட்டவை. லட்சியத்தின் வெளிப்பாடுகள்.

அலட்சியம் எதையும் முக்கியம் என்று நினைப்பதில்லை. புதியதாக முயற்சிகள் எடுப்பதில்லை. எதிலும் சீரிய கவனம் வைப்பதில்லை. எண்ணங்களையும், செயல்களையும் ஒழுங்குபடுத்திக் கொள்வதில்லை. திட்டமிடுவதிலை. கஷ்டப்பட்டு உழைக்கத் தயாராவதில்லை. குறிக்கோள் வைத்துக் கொள்வதில்லை. உற்சாகம் கொள்வதில்லை. ஆனால் சாதனைகளும் சரித்திரங்களும் இதற்கு எதிர்மறையான குணங்களினாலாயே சாத்தியமாகின்றன.

ஒரு வயல்வெளியைப் பாருங்கள். உழுது, பயிரிட்டு, கதிர்கள் அரும்பி நிற்கும் அந்த அழகுக் காட்சி ஒரு லட்சியத்தின் விளைவு. அதில் ஒரு திட்டமுண்டு. காலம் பார்த்து முறைப்படி செய்த உழைப்புண்டு. அதில் ஒரு பயனுண்டு. அந்த வயல்நிலம் இலட்சியத்தின் விளைவு.

முள்களும், பார்த்தீனியமும், சகட்டுமேனிக்கு வளர்ந்து ப்ளாஸ்டிக் காகிதங்கள் சிக்கிக் கொண்டு இருக்கும் ஒரு கண்காணிக்கப்படாத நிலத்தைப் பாருங்கள். அதில் குறிக்கோளும் இல்லை. எந்த மனித முயற்சியும் இல்லை. எல்லாம் தானாக வளர்ந்தது. தானாக வந்து சிக்கியது. அதனால் எந்தப் பயனும் இல்லை. அந்தப் பாழ்நிலம் அலட்சியத்தின் விளைவு.

எது எக்கேடோ கெட்டுப் போனால் எனக்கென்ன என்பது அலட்சியம். தானாக எது நடந்தாலும் சரி என்று இருப்பது அலட்சியம். முக்கியமான முடிவுகளைத் தானாக எடுக்காமல் இருப்பது அலட்சியம். போகின்ற வழி எது என்று அறியாதிருப்பது அலட்சியம். தன் வாழ்க்கைக்குத் தானே பொறுப்பு எடுக்காமல் இருப்பது அலட்சியம்.

எதையும் லட்சியம் செய்யாமல் வாழ்பவர்கள் யாரும் லட்சியம் செய்யாத நிலைக்குத் தள்ளப்படுவார்கள். வாழ்க்கையின் உண்மையான சந்தோஷத்தை அறியாமலேயே, வாழ்ந்த சுவடு தெரியாமலேயே மறைந்து போவார்கள். வாழ்க்கையில் முக்கியமான அம்சங்களில் காட்டும் அலட்சியத்திற்கு மனிதர்கள் தரும் விலை மிக அதிகம்.

'அன்னியன்' திரைப்படத்தில் சமூக அலட்சியம் பற்றி மிக அழகாக சொல்லியிருக்கிறார்கள். அந்தப் படத்தின் கதாநாயகன் அலட்சியக்காரர்கள் ஒவ்வொருவரையும் கருட புராணத்தில் சொல்லியிருக்கும் சித்திரவதைக்கு உள்ளாக்குவான். அது கற்பனை. அது போல மனிதன் தன் தனிப்பட்ட வாழ்க்கையில் அலட்சியமாக இருந்து விட்டால் வேறு ஒரு நபர் வந்து தண்டிப்பதில்லை. மோசமான விளைவுகளை சந்தித்து தன்னைத் தானே தண்டித்துக் கொள்கிறான். எனவே வாழ்க்கையில் அலட்சியமாக இருந்து விடாதீர்கள்.
Title: Re: வெற்றி-தன்னம்பிக்கை.
Post by: Global Angel on August 19, 2012, 03:24:03 AM
விதியா? மதியா?  



ஒருவன் ஒரு ஞானியிடம் சென்று கேட்டான். "மனித வாழ்க்கையில் எல்லாவற்றையும் தீர்மானிப்பது அவன் விதியா, இல்லை அவன் மதியா?".

ஞானி சொன்னார். "ஒரு காலை உயர்த்தி மறு காலால் நில்"

கேள்வி கேட்டவனுக்கு ஒன்றும் விளங்கவில்லை. ஆனாலும் இடது காலை உயர்த்தி வலது காலால் நின்றான்.

ஞானி சொன்னார். "சரி அந்த இன்னொரு காலையும் உயர்த்து"

அவனுக்குக் கோபம் வந்து விட்டது. நம் நடிகர் வடிவேலு மாதிரி "என்ன சின்ன பிள்ளைத்தனமாக இருக்கு" என்று சீறினான். "இரண்டு காலையும் உயர்த்தி எப்படி ஐயா நிற்பது?"

ஞானி அமைதியாகச் சொன்னார். "நான் காலைத் தூக்கச் சொன்ன போது எந்தக் காலைத் தூக்குவது என்று தீர்மானம் செய்தது உன் மதி. ஒரு முறை தீர்மானித்த பிறகு மறு காலையும் ஒருசேரத் தூக்கி நிற்க முடியாது என்பது விதி. பாதியை உன் மதி தீர்மானிக்கிறது. மீதியை உன் விதி தீர்மானிக்கிறது"

அந்த ஞானியின் வார்த்தைகளில் சூட்சுமமான இன்னொரு உண்மையும் இருக்கிறது. விதி என்பதே முன்பு நாம் மதி கொண்டு தீர்மானித்ததன் பின் விளைவாகவே பெரும்பாலான நேரங்களில் இருக்கின்றது.

விதியையும் மதியையும் விளக்க இன்னொரு உதாரணமும் மிகப் பொருத்தமாக இருக்கும் என நினைக்கிறேன்.

வாழ்க்கை ஒரு விதத்தில் சீட்டாட்டத்தைப் போல. குலுக்கிப் போடும் போது எந்தச் சீட்டுகள் வருகின்றன என்பது விதி. கையில் வந்த சீட்டுக்களை வைத்து எப்படி நீங்கள் ஆடுகின்றீர்கள் என்பது மதி. எந்தச் சீட்டு வர வேண்டும் என்பதை நம்மால் தீர்மானிக்க முடியாது. ஆனால் சீட்டுக்கள் கைக்கு வந்த பின் ஆடுவது நம் மதியிடம் உள்ளது. நல்ல சீட்டுக்கள் வந்தும் ஆட்டத்தைக் கோட்டை விடுபவர்கள் உண்டு. மோசமான சீட்டுக்கள் வந்தாலும் கவனமாகவும், புத்திசாலித்தனமாகவும் ஆடி வெற்றி பெறுபவர்களும் உண்டு.

சிந்திக்கையில் வாழ்க்கையை விதியும் மதியும் சேர்ந்தே தீர்மானிக்கிறது என்பதே உண்மையாகத் தோன்றுகிறது. ஆனால் மன உறுதியும், கடின உழைப்பும் மதியுடன் சேரும் போது அது விதியைத் தோற்கடித்து விடுகின்றது என்பதற்கு ஹெலன் கெல்லர் அருமையான உதாரணம்.

குருடு, செவிடு, ஊமை என்ற மிகப்பெரிய உடல் ஊனங்களை விதி ஹெலன் கெல்லருக்குக் கொடுத்தது. ஆனால் மன உறுதியாலும், கடின உழைப்பாலும் பேசும் சக்தியைப் பெற்றதோடு பிற்காலத்தில் சிறந்த பேச்சாளராகவும் புகழ் பெற்றார்.

விதி நமக்குத் தருவதை அப்படியே ஏற்றுக் கொண்டு முடங்கிக் கிடக்க வேண்டும் என்கிற அவசியம் இல்லை. அதையே மூலதனமாக எடுத்துக் கொண்டு மதியால் எத்தனையோ செய்ய முடியும். கால நேர சூழ்நிலைகளைக் கணக்கில் கொண்டு மதி கொண்டு உழைத்தால் அந்த விதியும் வளைந்து கொடுக்கும்.

எனவே விதி மிக சக்தி வாய்ந்ததாக இருக்கலாம். ஆனால் விதி மட்டுமே ஒருவனது வாழ்க்கையைத் தீர்மானித்து விடுவதில்லை என்பது மதி படைத்த மனிதர்களுக்கு நற்செய்தி.