திருமணவாழ்க்கை
பெண்ணுக்கு அறிவு ஆற்றல் அழகு எல்லாம் பெருமை சேர்க்கும் ஆனால் குழந்தை பிறப்பில் பெண்ணிற்கு அதிக பெருமை சேருகிறது. அப்படி குழந்தை பேற்றில் பெருமை சேர்த்த பின்னர் அந்த குழந்தையை எல்லாவிதத்திலும் சீராட்டி மேன்மக்களாய் வளர்க்கும் போது பெண்ணின் பெருமைக்கு எல்லையற்று விடுகிறது. ஒரு ஆண் ஒரு பெண்ணை அழகு அறிவு திறமை என்று எந்த காரணத்திற்கு நேசித்திருந்தாலும் அவளை மனைவியாக்கிக் கொண்ட பின்னர் அவள் பெற்று கொடுக்கும் குழந்தையினால் அந்த பெண்ணை மேலும் நேசிக்கிறார், அதை விட அதிகமாய் அந்த குழந்தையை அந்த பெண் கண்ணும் கருத்துமாய் வளர்த்து ஆளாக்கும் போது அந்த பெண்ணின் மீது எல்லையற்ற மதிப்பும் அன்பும் வழங்குகிறார். இது இயற்கை.
இதை நன்கு உணரத் தவறுகின்ற பெண்டிரை ஆண் அறவே வெறுக்கிறார், அந்த வெறுப்பிற்கு ஆளாகும் பெண்ணின் மீது ஏற்ப்படும் வெறுப்புக்கு அளவே இல்லாமல் போகும் நிலை ஏற்ப்படுகிறது. திருமணத்திற்கு முன்னர் ஆண் பெண்ணின் மீது பொழிகின்ற அன்பிற்கும் திருமண வாழ்க்கையில் ஈடுபட ஆரம்பித்த பின்னர் மாறும் அன்பிற்கும் வித்தியாசம் உண்டு, கணவனது மனநிலையறிந்து வருவாயை அறிந்து உறவினர்களை உபசரித்து குடும்பத்தை அனுசரித்து நடத்தும் குணநலன்களால் அப்பெண்ணின் மீது கணவனின் அன்பு ஆழமானதாக மாற்றப்படுகிறது. ஒருவர் மீது ஒருவருக்கு இருக்கும் அன்பின் அர்த்தங்கள் மாறும் நிலை ஏற்ப்ப்படும்போது மாற்றங்களை இருவரும் புரிந்து கொள்வது அவசியமாகிறது. அப்படி ஒருவரையொருவர் புரிந்து அனுசரிக்காவிடில் குடும்பத்தில் அன்பும் சமாதானமும் நிலைத்திருக்கும் வாய்புகள் இல்லாமல் போகிறது.
திருமணவாழ்க்கை என்பதை மிகவும் சுவாரசியமானதாக்கிக் கொள்வதில் இவருடைய பங்கும் சரி சமமானதுதான், இரட்டை மாட்டு வண்டி போல இரண்டு பேரும் ஒரே விதமாக ஒரே நோக்கில் மனமொத்து வாழாவிடில் [உடலின்பம் அதி விரைவில் வெறுத்து போகும் தன்மையுடையது என்பதால்] சம்சாரத்தில் வெறுப்பு ஏற்ப்படும் சூழல் உருவாகிறது உடலின்பத்தை மட்டுமே அடிப்படையாக கொண்டது திருமண வாழ்க்கையல்லவென்பது இருவருக்கும் பந்தத்தில் ஈடுபடும் முன்னதாகவே தெரிந்திருக்க வேண்டியது கட்டாயம். திருமண வாழ்க்கையில் ஒவ்வொரு காலகட்டத்திலும் வெவேறான சூழல் உருவாகிறது அவற்றிற்கேற்ப இன்ப துன்பங்களும் மாறுபடுகிறது. உண்மையான அல்லது சரியான திருமண வாழ்க்கை என்பது நுனி கரும்பிலிருந்து அடிக்கரும்பை தின்பதை போன்றது துவக்க காலத்தில் லேசாக இருந்த அன்பும் மரியாதையும் காலம் செல்ல செல்ல அதிகரிக்கும் இயல்புடையது.
விட்டு கொடுப்பதை பற்றி பலரும் சொல்ல நாம் கேட்டிருக்கிறோம் ஆனால் எதை எதற்க்காக விட்டு கொடுப்பது என்பதை முடிவு செய்வது அவரவர் கையில் உள்ளது. விட்டு கொடுக்காவிட்டால் இருவர் ஒன்று சேர்ந்து வாழ்வது என்பது அரிது. அதைவிட பெரியது ஒருவர் மீது மற்றொருவர் வைத்திருக்கும் நம்பிக்கை, அதைவிட மிகவும் பெரிது ஒருவருக்கொருவர் நம்பிக்கை துரோகம் செய்யாமல் வாழ்வது. ஆக திருமண பந்தத்தில் பொறுப்புகள் என்பது ஆண் பெண் இருவருக்கும் சரிசமமானது, கடமைகள் சரிசமமானது, கண்ணியம் என்கின்ற நேர்மை சரிசமமானது, எந்த காரணத்திற்காகவும் ஒருவரை ஒருவர் மிஞ்ச வேண்டியது கிடையாது. திருமண வாழ்க்கை என்பது முகம் பார்க்கும் கண்ணாடி போன்றது சரியாக பிடித்து நம்மை நாமே பார்க்கும் வரையில் பொய்யான தோற்றத்தை நமக்கு காண்பிக்காது தவறினால் சுக்கு நூறாகிவிடும் என்பதும் நமக்கு நினைவில் இருக்க வேண்டியது அவசியமாகிறது.