மண்ணின் மணம்
மண்ணின் மைந்தர்கள் மனதில் தான்
ஈரமில்லை என்றிருந்தேன்
மண்ணில் ஈரம் காண
விழியோரம் கசியும் நீருடன்
காத்திருக்கும் விவசாயியும்,நிலங்களும்
பொய்த்துப்போன மழையும்
காய்த்துப்போன கையும்
வறண்ட நிலங்களும்
வறண்டுவிட்ட மனிதமும்
இலைகளற்ற கிளைகளும்
பசுமையும்,வளமையும்
வழமையான எம்மண்ணில்
வறட்சியே துணையாயிற்று
எப்படியும் வாழலாம்
எண்ணியவனின் செயலால்
வாழ தகுதியற்று போயிற்று
நீரின்றி அமையாது உலகு
இன்று
நீரே இல்லாது போயிற்று
தசம அடிகளில் ஊறிய நீர்
இன்று
நான்கு நூறு அடிகளை எட்டியும்
கிட்டியபாடில்லை
பொருள் தேடுவதன் பொருளே
ஒரு சாண் வயிறு நிறையத்தான்
என்று அவன் ஆசைகள் வெள்ளமிட்டதோ
அன்றே பிடித்தது கேடு
திரைகடலோடி திரவியம் தேடியவன் வாழ்வில்
நீரின்றி வசந்தம்தான் வீசுமா?
இலக்கின்றி வாழத்தொடங்கி
இலக்காகிப் போகிறோம் வறட்சிக்கு
ஊருக்கு ஊறு செய்தவன்
ஊருணியைச் செப்பனிட்டு
நீர் ஆதாரத்தைப் பெருக்கலாம்
மரங்கள் நட்டு
மழையைப் பெறலாம்
இப்படியும் வாழலாம்
உயிர்ப்புடன்
இயற்கையோடு இயைந்து ....