அரிசி மாவு - 2 கப்
ரவை - 2 மேசைக்கரண்டி
பழுப்பு சர்க்கரை (ப்ரவுன் சுகர்) - ஒரு கப்
மசித்த வாழைப்பழ கூழ் - ஒரு கப்
(சுமாராக 2 பெரிய வாழைப்பழம்)
கறுப்பு எள் - 2 தேக்கரண்டி (வறுத்தது)
ஏலக்காய் - 2
தேங்காய் துருவல் (அ)
சிறு துண்டுகளாக அரிந்த தேங்காய் - 2 (அ) 3 தேக்கரண்டி
பேக்கிங் சோடா - 1/8 தேக்கரண்டி
உப்பு - கால் தேக்கரண்டி (அ) சுவைக்கேற்ப
எண்ணெய் - தேவையான அளவு
நெய் - தேவையான அளவு
மேலே குறிப்பிட்டுள்ள தேவையானவை அனைத்தையும் தயாராக எடுத்துக் கொள்ளவும்.
முதலில் வாழைப்பழத்தை மசித்து அதனுடன் பழுப்பு சர்க்கரையை போட்டு நன்கு கலந்து வைக்கவும்.
வெறும் வாணலியில், ரவையை வாசனை வரும் வரை வறுக்கவும்.
வறுத்த ரவையை வாழைப்பழ கலவையில் சேர்க்கவும். பிறகு பேக்கிங் சோடா, அரிசிமாவு, உப்பு சேர்த்து தேவையான அளவு தண்ணீர் விட்டு இட்லி மாவு பதத்தைவிட கொஞ்சம் நீர்க்க கரைத்துக் கொள்ளவும். வறுத்த எள், மற்றும் தேங்காய் துருவலையும் சேர்த்து கலந்து விடவும். கடைசியாக ஏலக்காயை தட்டி இதனுடன் சேர்க்கவும். இப்போது மாவு தயார்.
அடுப்பில் குழிப்பணியாரக் கல்லை வைத்து, ஒவ்வொரு குழியிலும் எண்ணெய் விட்டு, கொஞ்சம் கல் சூடானதும், மாவை ஊற்றவும். (குறிப்பு: அப்பம் வேகும்போது அடுப்பை குறைந்த தீயில் வைப்பது அவசியம்)
3 ல் இருந்து 5 நிமிடங்கள் வரை வெந்ததும், பணியாரக் கல்லுக்கான கரண்டி கொண்டு ஒவ்வொன்றையும் திருப்பி விடவும். எல்லாவற்றின் மேலும், கொஞ்சம் எண்ணெய்/நெய்யை விடவும்.
ஒரு சில நிமிடங்களில், அடுத்த பக்கமும் வெந்ததும், ஒவ்வொன்றாக எடுத்து, டிஷ்யூ பேப்பர் விரித்த தட்டில் வைக்கவும்.
பின்னர் லேசான சூட்டில் இருக்கும் போதே தட்டில் வைத்து பரிமாறவும். சுவையான நெய்யப்பம் தயார்!
இதில் ப்ரவுன் சுகருக்கு பதிலாக வெல்லம் சேர்த்தும் செய்யலாம். வெல்லம் 3/4 கப் முதல் 1 கப் வரை அவரவர் சுவைக்கு ஏற்ப சேர்த்துக் கொள்ளவும். வெல்லம் சேர்த்து செய்வதாக இருந்தால், முதலில் வெல்லத்தை தண்ணீரில் கரைத்து மண்/தூசி ஆகியவற்றை வடிகட்டி எடுத்துவிட்டு சேர்க்கவும். குழந்தைகளுக்கு செய்யும்போது, எண்ணெய்க்கு பதில் முழுவதுமே நெய்யை உபயோகித்தும் செய்யலாம்.