நண்-நண்ணுதல்-அஃதாவது நெருங்கி நட்புக்கொள்ளுதல், தம்மை விரும்பாதவரையும் நயந்து நிற்கும் என்பதனை, கைக்கிளை ஒழுக்கத்தான் உணர்க. அஃதாவது:-
காமஞ் சாலா விளமை யோள்வயி
னேமஞ் சாலா விடும்பை யெய்தி
நன்மையுந் தீமையு மென்றிரு திறத்தாற்
றன்னொடு மவளொடுந் தருக்கிய புணர்த்துச்
சொல்லெதிர் பெறாஅன் சொல்லி யின்புறல்
புல்லித் தோன்றுங் கைக்கிளைக் குறிப்பே
எனவரும் தொல்காப்பியத்தானுணர்க (அகத்-சூ-50)
இராமாயணம் முதலிய காப்பியங்களில் இராவணன் முதலிய காமுகர் செயல்களாலும்,
உண்ணின்றுருக்கும் என்பதனை,
இணரார் நறுங்கோதை எல்வளையாள் கூட்டம்
புணராமற் பூசல் தரவும்-உணராது
தண்டா விழுப்படர் நலியவும்
உண்டால் என்னுயிர் ஓம்புதற் கரிதே
புறப்-வெண்-292
எனவரும் ஆண்பாற் கைக்கிளையானும்;
பிறைபுரை வாணுதல் பீரரும்ப மென்றோள்
இறைபுனை யெல்வளை யேக-நிறைபுணையா
யாம நெடுங்கடல் நீந்துவேன்
காம வெள்ளெரி கனன்றகஞ் சுடமே
எனவரும் பெண்பாற் கைக்கிளையானும்,
கூலத்தா ருலக மெல்லாங் குளிர்ப்பொடு வெதுப்பு நீங்க
நீலத்தா ரரக்கன் மேனி நெய்யின்றி யெரிந்த தன்றே
காலத்தால் வருவதொன்றோ காமத்தாற் கனலும் வெந்தீச்
சீலத்தா லவிவ தன்றிச் செய்யத்தா னாவ துண்டோ
எனவரும் கம்பர் கூற்று முதலிய காவியச் செய்யுள்களாலு முணர்க.
காமத்திற்குக் கண்ணில்லை என்பது ஒரு மூதுரை.
காமுறுவாரை நரகத்தில் வீழ்க்கும் எனினுமாம். (26)
இதுவுமது
27. சான்றோர் உவர்ப்பத் தனிநின்று பழிப்ப காணார்;
ஆன்றுஆங்கு அமைந்த குரவர்மொழி கோடல் ஈயார்;
வான்தாங்கி நின்ற புகழ்மாசு படுப்பர்; காமன்
தான்தாங்கி விட்ட கணைமெய்ப்படும் ஆயி னக்கால்.
(இதன் பொருள்) காமன் தான் தாங்கிவிட்ட கணை மெய்ப்படும் ஆயின் அக்கால்-காமவேள் தன் கையிலேந்திக் கருப்பவில்லிற் றொடுத்து எய்து விட்ட மலர்க்கணை காமுகர் மார்பிற் பட்டபொழுது; சான்றோர் உவர்ப்ப-பெரியோர்கள் தம்மை வெறுத்தொதுங்காநிற்பவும்; தனி நின்று-மக்குப் பற்றுக்கோடாவாரையும் இழந்து தனித்து நின்று; பழிப்ப காணார்-இவ்வுலகம் தம்மைப் பழிதூற்றலும் அறியாராய்; ஆன்று ஆங்கு அமைந்த குரவர் மொழி கோடலீயார் கல்வி கேள்விகளா னிரம்பி அவற்றிற்கியைய அடங்கிய தம்மாசிரியருடைய மொழிகளையும் ஏற்றுக்கொள்ளாராய்; வான் தாங்கி நின்ற புகழ் மாசுபடுப்பர்-தான் பிறந்த குடியினுடையவும் தம்முடையவுமாகிய பெருமைமிக்க புகழையும் கெடுத்தொழிவர். அத்துணைத் தீயதாம் காமம் என்பதாம்.
(விளக்கம்) இது காமத்தால் வரும் கேட்டினை அறிவுறுத்தியதாம் காமத் தீவினையுடையோரை அவர்க்குப் பற்றுக்கோடாகிய சான்றோர் முதலியவர் வெறுத்தொதுக்கலின் தனித்து நிற்றல் வேண்டிற்று.
ஆன்று-கல்வி கேள்விகளாலே நிரம்பி என்க. குரவர்-நல்லாசிரியர் முதலியவர். கோடலீயார்: ஒரு சொல். (வினைத் திரிசொல்) கொள்ளார் என்னும் பொருட்டு.
தான்றோன்றிய உயர்குடி பெரும்புகழ் என்பது தோன்ற வான்றாங்கி புகழ் என்றார் (27)
இதுவுமது
28. மாஎன்று உரைத்து மடல்ஏறுப மன்று தோறும்;
பூஎன்று எருக்கின் இணர்சுடுப; புன்மை கொண்டே
பேய்என்று எழுந்து பிறர்ஆர்ப்பவும் நிற்பர்; காம
நோய்நன்கு எழுந்து நனிகாழ்க் கொள்வதாயி னக்கால்.
(இதன் பொருள்) காமநோய் நன்கு எழுந்து நனிகாழ் கொள்வது ஆயின் அக்கால்-மாந்தருக்குக் காமப்பிணி நன்றாகத் தோன்றி மிகவும் முதிர்வதானால் அப்பொழுது; மா என்று உரைத்து மடல் ஏறுப-குதிரை என்று கூறிக்கொண்டு பனைமடலாலே குதிரையுருவஞ் செய்து நாணம் விட்டுப் பலருங் காண அதன்மேல் ஏறா நிற்பர்; பூ என்று எருக்கின் இணர் சூடுப-மணமாலை என்று கூறிக்கொண்டு எருக்கமலர் கொத்தினையும் சூடிக்கொள்வர்; புன்மை கொண்டு-இவ்வாறு இழிதகவுடையன செய்துகொண்டு; பிறர் பேய் என்று எழுந்து ஆர்ப்ப- தம்மை கண்ட பிறரெல்லாம் இஃதொரு பேயென்று கூறி எழுந்து ஆரவாரிக்கும்படி; மன்றுதொறும் நிற்ப-அம்மடன்மாவை ஊர்ச்சிறாராலிழுப்பித்து மன்ற மிருக்குமிடந்தோறும் அதனை யூர்ந்து சென்று ஊரவர் அறிய நிற்பர்; இத்துணையும் செய்விக்கும் காமங் கண்டீர்! என்பதாம்.
(விளக்கம்) ஒரு தலைவன் தான் காமுற்ற தலைவியை மணத்தற்கு அவளுடைய சுற்றத்தார் முதலியோரால் இடையூறு நேர்ந்தவிடத்து இவ்வாறு மடலேறுதல் பண்டைக்காலத்து நந்தமிழகத்து நிகழ்ந்த நிகழ்ச்சியாம். இந்நிகழ்ச்சி இழிதகவுடையதாகலின் காமத்தினிழிதகைமைக்கு இதனை இவ்வாசிரியர் குறிக்கின்றார். காமங் காழ்கொண்டவர் இங்ஙனம் மடன்மாவூரும் வழக்கமுண்மையை,
ஏறிய மடற்றிறம் இளமை தீர்திறம்
தேறுதல் ஒழித்த காமத்து மிகுதிறம்
மிக்க காமத்து மிடலொடு தொகைஇச்
செப்பிய நான்கும் பெருந்திணைக் குறிப்பே
தொல்-அகத்-51
எனவும்
மடன்மா கூறும் இடனுமா ருண்டே þ களவி-11
எனவும் வருந் தொல்காப்பியத்தானும்,
சான்றவிர் வாழியோ சான்றவி ரென்றும்
பிறர்நோயுந் தந்நோய்போற் போற்றி யறனறிதல்
சான்றவர்க் கெல்லாங் கடனானா லிவ்விருந்த
சான்றீர் நுமக்கொன் றறிவுறுப்பென் மன்ற
துளியிடை மின்னுப்போற் றோன்றி யொருத்தி
யொளியோ டுருவென்னைக் காட்டி யளியளென்
னெஞ்சாறு கொண்டா ளதற்கொண்டு துஞ்சே
னணியலங் காவிரைப் பூவோ டெருக்கின்
பிணையலங் காவிரைப் பூவோ டெருக்கின்
பிணையலங் கண்ணி மிலைந்து மணியார்ப்ப
வோங்கிரும் பெண்ணை மடலூர்ந்தென் னெவ்வநோய்
தாங்குத றோற்றா விடும்பைக் குயிர்ப்பாக
வீங்கிழை மாதர் திறந்தொன்று நீங்காது
பாடுவென் பாய்மா நிறுத்து;
யாமத்து மெல்லையு மெவ்வத் திரையலைப்ப
மாமேலே னென்று மடல்புணையா நீத்துவேன்
றேமொழி மாத ருறாஅ துறீஇய
காமக் கடலகப் பட்டு;
உய்யா வருநோய்க் குயலாகு மைய
லுறீஇயா ளீத்தவிம் மா;
காணுந ரெள்ளக் கலங்கித் தலைவிந்தெ
னாணெழின் முற்றி யுடைத்துள் ளழித்தரு
மாணிழை மாதரா ளேஎரெனக் காமன
தாணையால் வந்த படை;
காமக் கடும்பகையிற் றோன்றினேற் கேம்
மெழினுத லீத்தவிம் மா;
அகையெரி யானாதென் னாருயி ரெஞ்சும்
வகையினா லுள்ளஞ் சுடுதரு மன்னோ
முகையா ரிலங்கெயிற் றின்னகை மாதர்
தகையாற் றலைக்கொண்ட நெஞ்சு;
அழன்மன்ற காம வருநோய் நிகன்மன்ற
நேரிழை யீத்தவிம் மா;
ஆங்கதை,
அறிந்தனி ராயிற் சான்றவிர் தான்றவ
மொரீஇ துறக்கத்தின் வழி யான்றோ
ருள்ளிடப்பட்ட வரசனைப் பெயர்த்தவ
ருயர்நிலை யுலக முறீஇ யாங்கென்
றுயர்நிலை தீர்த்த னுந்தலைக் கடனே
எனவரும் கலித்தொகையானும்(139) நன்குணர்க.
இனி இச் செய்யுளோடு,
மாவென மடலும் ஊர்ப் பூவெனக்
குவிமுகி ழெருக்கங் கண்ணியுஞ் சூடுப
மறுகின் ஆர்க்கவும் படுப
பிறிதும் ஆகுப காமங்காழ்க் கொளினே.
எனவரும் குறுந்தொகைச் செய்யுள்(17) ஒப்பு நோக்கற்பாலது. (28)
இதுவுமது
29. நக்கே விலாசிறுவர்; நாணுவர்; நாணும் வேண்டார்;
புக்கே கிடப்பர்; கனவும்நினை கையும் ஏற்பர்;
துற்றூண் மறப்பர்; அழுவர்; நனி துஞ்சல் இல்லார்;
நற்றோள் மிகைபெ ரிதுநாடுஅறி துன்பம் ஆக்கும்.
(இதன் பொருள்) நக்கே விலா இறுவர்-காமுகரின் இழிசெயலைக் கண்டு கயமாக்கள் நகைத்து நகைத்துத் தம் விலாவென்பொடிந்து போவர்; நாணுவர்-மற்றுச் சான்றோர் தாமும் அவர்பொருட்டு நாணாநிற்பர்; நாணும் வேண்டார்-மற்று அக் காமுகரோ நாணத்தை ஒரு பொருளாகக் கருதமாட்டார்; (கைவிட்டொழிவர்) புக்கே கிடப்பர்-நாளெல்லாம் கற்பில்லா அம்மகளிர் இல்லத்தே புகுந்து அவ்விடத்தேயே சோம்பித் துயின்று கிடப்பர்; கனவும் நினைகையும் ஏற்பர்-அத்துயிலினூடும் மனவமைதியின்றிக்கனாக் காண்டலையும் துயில் கலைந்துழி அம் மகளிரை நினைதலையுமே தொழிலாகக் கொள்பவராவர்; துற்று ஊண் மறப்பர்-உண்ணும் உணவினையும் மறந்தொழிவர்; அழுவர்-அவரால் கைவிடப்படின் அழாநிற்பர்; நனிதுஞ்சல் இல்லார்-நன்கு துயிலுதல்தானுமிலராவார்; நற்றோள் மிகை பெரிது நாடு அறி துன்பம் ஆக்கும்-இவ்வாறு அம்மகளிருடைய அழகிய தோள்கள் காமுகருக்கு உலகத்தாரெல்லாம் கண்கூடாகக் காணத்தகுந்த மாபெருந் துன்பத்தையுண்டாக்கும்; ஆதலால் அம்மகளிர் கேண்மை கைவிடற்பாலது, என்பதாம்.
(விளக்கம்) காமுகக் கயவருடைய இழிசெயலைக் கண்டுழித் தம்பழி நோக்காக் கயமாக்கள் விலாவிறும்படி விழுந்து விழுந்து சிரிப்பர்; பிறர் பழியும் தம்பழிபோற் கருதும் சான்றோரோ நாணமெய்துவர். இங்ஙனமாகவும் காமுகரோ நாணுதலிலர் என்பார் நக்கே விலாவிறுவர் நாணுவர் நாணும் வேண்டார் என்றார். இவற்றிற்குத் தம்பழி நோக்காக் கயமாக்கள் என்றும் சான்றோர் என்றும், காமுகர் என்றும் ஏற்றபெற்றி எழுவாய்கள் வருவித் தோதுக.
பிறரை எள்ளி விலாவிறச் சிரிப்பர் என்பதனால், கயமாக்கள் என்பதும் நாணுவர் என்றதனால், சான்றோர் என்பதும், நாணும் வேண்டார் என்பதனால் காமுகர் என்பதும் பெற்றாம். கயமாக்கள் தாம் பழியுடையராய் வைத்தும் பிறர்பழி கேட்டுழி நகைத்து நாடறியச் செய்யு மியல் புடைய ரென்பதனை,
அறைபறை யன்னர் கயவர்தாங் கேட்ட
மறைபிறர்க் குய்த்துரைக்க லான் குறள்,1076
என்பதனானும், சான்றோர் பிறர் பழியைத் தம் பழிபோற் கருதி நாணுவர் என்பதனை,
பிறர்பழியுந் தம்பழியும் நாணுவர் நாணுக்
குறைபதி பென்னு முலகு குறள்,1015
என்பதனானும் உணர்க.
இனி, காமுகர் நாணும் வேண்டார் என்பதனை,
ஒண்டொடீ நாணிலன் மன்ற விவன்,
ஆயின் ஏஎ!
பல்லார் நக்கெள்ளப் படுமடன் மாவேறி
மல்லலூ ராங்கட் படுமே கலி,61
எனவரும் மடலேறுவார் செயலினும்,
ஏஎ இஃதொத்தன் நாணிலன் தன்னொடு
மேவே மென்பாரையும் மேவினன் கைப்பற்றும்
எனவரும் மிக்க காமத்து மிடலுடையார் ஒழுக்கத்தினும்( கலி 62) காண்க.
இனி, புக்கே கிடப்பர் என்றது, நல்லாடவர்க்குரிய அறக்கடமைகளைக் கைவிட்டுக் அப்புன்மகளிர் இல்லில் நுழைந்து சோம்பித் துயின்று கிடப்பர் என்பதுபடநின்றது. இங்ஙனம் கொள்வதெல்லாம் சொல்லாற்றலாற் போந்த பொருள் என்றுணர்க.
துற்றூண்: வினைத்தொகை. துற்றுதல்-உண்ணல். அழுவர் என்றமையால் அம்மகளிராற் புறக்கணிக்கப்பட்டபொழுது என்பது பெற்றாம்.
நற்றோள் என்றது குறிப்பு மொழி;
இடக்கரடக்கல்;
நாடறி துன்பம் என்றது, அழுதலும் துஞ்சலிலாமையு முதலியன. நாடு:ஆகுபெயர். ஆதலால் அம்மகளிர் கேண்மை பொழிக! என்பது குறிப்பெச்சம். அழிவர் என்பதும் பாடம். (29)
இதுவுமது
30 அரசொடு நட்டவர் ஆள்ப விருத்தி
அரவொடு நட்டவர் ஆட்டியும் உண்பர்
புரிவளை முன்கைப் புனைஇழை நல்லார்
விரகிலர் என்று விடுத்தனர் முன்னே.
(இதன் பொருள்) அரசொடு நட்டவர்-கேண்மை கோடற்கியலாத வேந்தரோடு கேண்மை கொள்வோர், விருத்தி ஆள்ப-அவ்வேந்தர் உவந்து வழங்கும் வாழ்வூதியத்தைப் பெற்றின்புறுதல் கூடும்; அரவொடு நட்டவர்-அஞ்சுதகு பாம்போடு பழகுவோர் தாமும்; ஆட்டியும் உண்பர்- அப்பாம்பினை ஆட்டுந் தொழிலால் வருவாய் பெற்று உண்டு மகிழ்தல் கூடும்; புரிவளை முன்கைப் புனைஇழை நல்லார்-முறுக்குடைய சங்கவளையலணிந்த முன்கையினையும் அணிகின்ற அணிகலன்களையுமுடைய புல்லிய ஒழுக்கமுடைய மகளிரோ; விரகு இலர்-நல்வாழ்க்கைக்குச் சிறிதும் ஊதியமாதலிலர்; என்று முன்னே விடுத்தனர்-என்றுணர்ந்து சான்றோர் பண்தொட்டே அவர் கேண்மையைக் கைவிட்டொழிந்தனர் என்பதாம்.
(விளக்கம்) அரசர்பாலும் பாம்பினிடத்தும் கற்பிலா மகளிர்பாலும் கேண்மை கோடல் தீங்கு பயப்பதாம். ஒரோவழி அரசரோடு கேண்மை கொள்பவர் அகலாது அணுகாது தீக்காய்வார் போல விழிப்புடன் ஒழுகின் அவ்வரசனால் ஊதியம்பெற்று இன்புறுவர். பாம்போடு விழிப்புடன் பழகுவோரும் அதனை ஆட்டி வருவாய் பெற்று வாழ்தல் கூடும். கற்பிலாக் கயமகளிரோடு கேண்மை கொள்வார்க்குக் கேடு விளைவது ஒருதலை. ஒரு சிறிதும் அம்மகளிர் ஆக்கஞ் செய்வாரலர் என்பதாம். இக்கருத்தினை,
பொருட்பெண்டிர் பொய்மை முயக்க மிருட்டறையி
லேதில் பிணந்தழீஇ யற்று குறள், 193
எனவும்,
தந்நலம் பாரிப்பார் தோயார் தகைசெருக்கிப்
புன்னலம் பாரிப்பார் தோள் குறள், 916
எனவும்,
நிறைநெஞ்ச மில்லவர் தோய்வர் பிறநெஞ்சிற்
பேணிப் புணர்பவர் தோள் குறள், 917
எனவும் வருந் திருக்குறளான் உணர்க.
அக நலமாகிய அன்புடைமையும் கற்புடைமையு மின்மை தோன்ற புரிவளை முன்கைப் புனையிழையார் எனப் புறநலத்தையே விதந்தெடுத் தோதினர் (30)
கள்ளாமை
31. பீடில் செய்திக ளாற்கள விற்பிறர்
வீடில் பல்பொருள் கெண்ட பயனெனக்
கூடிக் காலொடு கைகளைப் பற்றிவைத்
தோட லின்றி யுலையக் குறைக்குமே.
(இதன் பொருள்) களவில்-மறைவாக; பிறர் வீடு இல் பல்பொருள்- பிறமாந்தர் கைவிடுதலில்லாத பல்வேறு பொருள்களையும்; பீடு இல் செய்தியில்-பொருமையில்லாத கன்னமிடுதல் முதலிய தொழில்களாலே; கொண்ட பயன் என- நீ களவுகொண்டதன் பயன் இஃதேயாம் என்று சொல்லி; பற்றி-செங்கோன் மன்னவன் கள்வரைத் தன் மறவர்களால் பிடிப்பித்து, ஓடல் இன்றி காலொடு கைகளைக் கூடி- தப்பி ஓடிவிடாதபடி அவர்தம் கால்களையும் கைகளையும் கூட்டித் தளையிட்டு; உலையக் குறைக்கும்-அவர் நெஞ்சம் பதறும்படி துணிப்பன், என்பதாம்.
அன்றைப் பகற்கழிந் தாள் இன்று இராப்பகற்கு
அன்றில் குரலும் கறவை மணிகறங்கக்
கொன்றைப் பழக்குழல் கோவலர் ஆம்பலும்
ஒன்றல் சுரும்பு நரம்பென ஆர்ப்பவும்.
(விளக்கம்) களவுசெய்யுங் குற்றத்திற்குக் கைகால்களைக் குறைத்துக் கொல்லுதல் பழையகாலத்து மன்னர் வழக்கம். இதனைச் சிலப்பதிகாரத்தாலும் உணர்க. இனி, வள்ளுவனார்,
கள்வார்க்குத் தள்ளு முயிர்நிலை கள்ளார்க்குத்
தள்ளாது புத்தே ளுலகு குறள், 260
என்றோதுந் திருக்குறளாலும் பண்டு கள்வரைக் கொல்லுதலே தக்க வொறுப்பென அரசர் கருதிய துணரலாம். மேலும் இக்குறளானும் களவினால் வரும் கேடுணர்க. கள்வனைக் கோறல் கடுங்கோலன்று; வெள்வேற் கொற்றம் என்பது பாண்டியன் நெடுஞ்செழியன் கூற்று. (சிலப்-வழக்குறை-64-5)
இன்னும்,
களவின்கட் கன்றிய காதல் விளைவின்கண்
வீயா விழுமந் தரும் குறள், 284
என்பதனானும் களவினால் வருந் தீமையை யுணர்க. (31)
பொய்யாமை
32. பொய்யி னீங்குமின் பொய்யின்மை பூண்டுகொண்
டைய மின்றி யறநெறி யாற்றுமின்
வைகல் வேதனை வந்துற லொன்றின்றிக்
கௌவை யில்லுல கெய்துதல் கண்டதே.
(இதன் பொருள்) பொய்யில் நீங்குமின்- பொய் கூறுவதினின்றும் அகலுங்கள்; பொய்யின்மை பூண்டு கொண்டு- பொய்யாமை என்னும் அணிகலனை எப்பொழுதும் அணிந்துகொண்டு; வைகல் நெறி அறம் ஆற்றுமின்- நாடோறும் நன்னெறியிலே நின்று நல்லறங்களை ஒல்லுந் துணையும் செய்யக் கடவீர்; வேதனை ஒன்று வந்து உறல் இன்றி- இவ்வாறு அறஞ்செய்து வாழுபவர் தம் வாழ்நாளிற் றமக் கொரு துன்பமேனும் வருதலின்றி இம்மையினும் இனிது வாழ்ந்து மறுமையினும்; கௌவைஇல் உலகு எய்துதல்- துன்பமில்லாத துறக்க நாட்டினை அடைதல் ஒருதலை என்னும் உண்மை; கண்டது- திறவோர்தம் மெய்க் காட்சியாம்; என்பதாம்.
(விளக்கம்) பொய்யின் நீங்குமின் என்றொழியாது அவ்வொழுக்கத்தைக் கடைபிடித் தொழுகுமின் என்பார் மீண்டும் பொய்யின்மை பூண்டு கொண்டென்றார். பொய்யின்மை பூண்டு கொண்டென்றமையான் அதனை அணிகலனாக உருவகித்தமை பெற்றாம். பொய்யின்மை எனினும் வாய்மை எனினும் ஒக்கும். பொய்யாமை அறங்களுட் சிறந்ததென்பதனை,
யாமெய்யாக் கண்டவற்று ளில்லை யெனைத்தொன்றும்
வாய்மையி னல்ல பிற குறள், 300
எல்லா விளக்கும் விளக்கல்ல சான்றோர்க்குப்
பொய்யா விளக்கே விளக்கு குறள், 299
எனவும்,
பொய்யாமை பொய்யாமை யாற்றி னறம்பிற
செய்யாமை செய்யாமை நன்று குறள், 297
எனவும்,
பொய்யாமை யன்ன புகழில்லை யெய்யாமை
யெல்லா வறமுந் தரும் குறள், 296
எனவும் வரும் அருமைத் திருக்குறள்களானுமுணர்க.
இனி, பொய்யாமையும் ஓர் அறமாகவும் அஃதின்றி எவ்வறஞ் செய்யினும் பயன்படாமை கருதி அதனைத் தனித்தெடுத்து முற்படவோதி ஏனையவற்றைத் தொகுத்துக் கூறினார். என்னை?
மனத்துக்கண் மாசில னாத லனைத்தற
னாகுல நீர பிற குறள், 34
எனவரும் பொய்யாமொழியும் காண்க.
வைகல் அறநெறி ஆற்றுமின் என மாறுக. என்னை?
வீழ்நாள் படாஅமை நன்றாற்றி னஃதொருவன்
வாழ்நாள் வழியடைக்குங் கல் குறள், 38
என்பதூஉம் காண்க.
அறம் ஆற்றுமின் என்புழி அறம்- விருந்தோம்பன் முதலியன
மனத்தின்கண் மாசிலராய் அறஞ் செய்து வாழ்வோர் இம்மையினும் இனிது வாழ்வர்; மறுமையினுந் துறக்கம் புகுவர்என்பார், வேதனை வந்துறலின்றிக் கௌவையிலுலகு எய்துதல் கண்டதே என்றார். இதனை,
சிறப்பீனுஞ் செல்வமு மீனு மறத்தினூஉங்
காக்க மெவனோ வுயிர்க்கு குறள், 31
எனவருந் திருக்குறளானுமுணர்க.
கண்டது என்றது திறவோராற் காணப்பட்ட உண்மை என்பதுபட நின்றது. (32)
இதுவுமது
33.
கல்வி இன்மையும் கைப்பொருள் போகலும்
நல்லில் செல்லல்க ளால்நலிவு உண்மையும்
பொய்யில் பொய்யோடு கூடுதற்கு ஆகுதல்
ஐயம் இல்லை அதுகடிந்து ஓம்புமின்.
(இதன் பொருள்) பொய்யொடு கூடுதற்கு- பொய்கூறி உயிர்வாழும் வாழ்க்கையின்கண்; கல்வி இன்மையும்- கல்வியாலுண்டாகும் அறிவுப் பொருளில்லாமையும்; கைப்பொருள் போகலும்-கையிலுள்ள செல்வப் பொருள் அழிவும்; நல்இல் செல்லல்களால் நலிவு உண்மையும்- நன்மையில்லாத துன்பங்களாலே வருந்துதலும்; ஆகுதல்-உண்டாதல்; பொய்இல்-முக்காலும் வாய்மையேயாம்; ஐயம் இல்லை-ஐயஞ் சிறிதும் இல்லை; அது கடிந்து ஓம்புமின்- ஆதலால்- அப் பொய் கூறுதலை ஒழித்து நும்மைப் பாதுகாத்துக் கொள்வீராக! என்பதாம்.
(விளக்கம்) பொய் கூறுமியல்புடையார்க்குக் கல்விநலம் கைகூடாது; கைப்பொருளுக்குங் கேடுவரும்; எப்பொழுதும் துன்பங்கள் வந்தவண்ண மிருக்கும் ஆதலால் பொய்கூறாதொழிமின் என்றவாறு
போக்கறு கல்வி புலமிக்கார் பாலன்றி
மீக்கொ ணகையினார் வாய்ச்சேரா-தாக்கணங்கும்
ஆணவாம் பெண்மை யுடைத்தெனினும் பெண்ணலம்
பேடு கொளப்படுவ தில் நீதிநெறி விளக்கம், 24
என்பதனானும் கல்வி நலம் புலங்கெட்ட புல்லறிவுடைய பொய்யர்பாற் சேராமையுணர்க.
வாய்மை அறங்களுட் சிறந்ததாதல் போன்று பொய்ம்மை தீவினைகளுட் சிறந்ததாதலின், பொய்யராகிய தீவினையாளர்க்கு இடையறாது துன்பங்கள் வந்தவண்ணமிருக்கும் என்பார், நல்லில் செல்லல்களால் நலிவுண்டாம் என்றார். என்னை?
தீயவை தீய பயத்தலாற் றீயவை
தீயினு மஞ்சப் படும் குறள், 202
எனவரும் பொன்மொழியும் காண்க. (33)
கொல்லாமை
34. உலகுஉடன் விளங்கஉயர் சீர்த்திநிலை கொள்ளின்
நிலையில்கதி நான்கின் இடை நின்றுதடு மாறும்
அலகில்துயர் அஞ்சின்உயிர் அஞ்சவரும் வஞ்சக்
கொலைஒழிமின் என்றுநனி கூறினர் அறிந்தார்.
(இதன் பொருள்) அறிந்தார்- மெய்யுணர்வுடைய சான்றோர் உலகினரை நோக்கி நமரங்காள்! நீயிர்; உலகு உயர்சீர்த்தி உடன் விளங்க நிலை கொள்ளின்-இவ்வுலகுள்ள துணையும் அதனோடிணைந்து நிற்கும் உயரிய புகழோடு நின்று நிலவுதல் வேண்டுவீராயினும்; நிலை இல் கதி நான்கின் இடை நின்று- அல்லது நிலையுதலில்லாத நால்வகைப் பிறப்பின்கட்பட்டுத் தடுமாறும்; அலகில் துயர் அஞ்சினும்-துன்புற்று நெஞ்சு தடுமாறுதற்குக் காரணமான எண்ணிறந்த துயரங்களை அஞ்சி வீடுபெற விழைதிராயினும்; உயிர் அஞ்ச வரும் வஞ்சக் கொலை ஒழிமின்-உயிரினங்கள் பெரிதும் அஞ்சும்படி நிகழுகின்ற கொலைத்தொழிலை ஒழித்துவிடுவீராக!; என்று நனி கூறினர்-என்று மிகவும் விதந்தெடுத்துக் கூறிப்போந்தனர்; ஆதலால் கொலைவினையை ஒழிப்பீராக! என்பதாம்.
(விளக்கம்) இம்மைப் பயனையும் வீடு பேற்றினையும் ஒரு சேர அளிக்கவல்லது கொல்லாமை என்னும் நல்லறம் ஒன்றேயாகும்; ஆதலால் எல்லீரும் அவ்வறத்தினைக் கடைப்பிடித் தொழுகுமின்! என்றவாறு.
இனி, கொல்லாமை என்னும் அறமே அறங்களிலெல்லாம் தலைசிறந்த தென்பதனையும் அவ்வறமே இம்மைப் பயனையும் மறுமைப் பயனையும் வீடு பேற்றினையும் ஒரு சேரத் தரவல்லதென்பதனையும், திருக்குறளின் கொல்லாமை என்னும் அதிகாரத்திற்கு ஆசிரியர் பரிமேலழகர்,
இது (கொல்லாமை) மேற்கூறிய அறங்கள் எல்லாவற்றினுஞ் சிறப்புடையத்தாய்க் கூறாத வறங்களையும் அகப்படுத்து நிற்றலின் இறுதிக் கண் வைக்கப்பட்டது என்று கூறும் முன்னுரையாம் பொன்னுரை யானும்; தெய்வப்புலமைத் திருவள்ளுவனார்.
அறவினை யாதெனிற் கொல்லாமை கோறல்
பிறவினை எல்லாந் தரும் குறள்,
321
எனவும்,
ஒன்றாக நல்லது கொல்லாமை மற்றதன்
பின்சாரப் பொய்யாமை நன்று குறள், 323
எனவும்,
நல்லா றெனப்படுவ தியாதெனின் யாதொன்றுங்
கொல்லாமை சூழு நெறி குறள், 324
எனவும், ஓதுந் திருக்குறள்களானுமுணர்க.
இனி, கொல்லாமை என்னுமிவ்வறம் வீடுபேறும் நல்கும் என்பதனை, அப் பொய்யில் புலவர்,
கொல்லாமை மேற்கொண் டொழுகுவான் வாழ்நாண்மேற்
செல்லா துயிருண்ணுங் கூற்று குறள், 324
என வோதுந் திருக்குறளானும், அதற்கு ஆசிரியர் பரிமேலழகர்
மிகப் பெரிய அறஞ்செய்தாரும் மிகப் பெரிய பாவஞ் செய்தாரும் முறையானன்றி இம்மை தன்னுள்ளே அவற்றின் பயன் அனுபவிப்பரென்னும் அறநூற் றுணிபு பற்றி, இப் பேரறஞ் செய்தான்றானும், கொல்லப்படான்; படானாகவே, அடியிற் கட்டிய வாழ்நாள் இடையூறின்றி எய்துமென்பார். வாழ்நாள்மேற் கூற்றுச் செல்லா தென்றார்; செல்லாதாகவே கால நீட்டிக்கும்; நீட்டித்தால் ஞானம் பிறந்து உயிர்வீடுபெறுமென்பது. இதனான் அவர்க்கு வருநன்மை கூறப்பட்டது என வகுக்கும் நல்லுரையானும் நன்கு தெளிக.
கதி- பிறப்பு. துயர் அஞ்சின் என்றது துயர் அஞ்சி வீடுபேறு எய்தி நிலைகொள்ளநினையின் என்பதுபட நின்றது. இம்மைப் பயன் கூறினமையின் மறுமையிற் றுறக்கம் புகுதலும் கொள்க. (34)
செல்வ நிலையாமை
வெள்ள மறவி விறல்வேந்தர் தீத்தாயம்
கள்வர்என்று இவ்வாறிற் கைகரப்பத் தீர்ந்தகலும்
உள்ளில் ஒருபொருளை ஒட்டாது ஒழிந்தவர்
எள்ளும் பெருந்துயர்நோய் எவ்வம் இகப்பவோ.
(இதன் பொருள்) வெள்ளம் மறவி விறல்வேந்தர் தீ தாயம் கள்வர் என்று- செல்வமானது வெள்ளமும் மறதியும் வெற்றியுடைய வேந்தரும் நெருப்பும் தாயத்தாரும் கள்வரும் என்று கூறப்படுகின்ற; இ ஆறில் கைகரப்பத் தீர்ந்து அகலும்- இந்த ஆறு வழிகளானும் உடையவனது கையினின்றும் மறைவாக ஒழிந்துபோகும் இயல்புடையதாம்; உள் இல்பொருளை ஒட்டாது. ஆதலால் உள்ளீடற்ற பொய்யாகிய பொருளைப் பற்றாமல்; ஒழிந்தவர்- துறந்த சான்றோர்; எள்ளும் பெருந்துயர் நோய் எவ்வம்-பிறர் இகழ்தற்குக் காரணமான பெரிய துயரங்களைச் செய்யும் பிறவிப் பிணியாகிய துன்பத்தை; இகப்ப- நீங்கி உய்வர் என்பதாம்.
(விளக்கம்) பொருள் முயன்றீட்டிய விடத்தும் நம்மை விட்டகலுதற்குப் பலவேறு வழிகளையும் உடைத்தாம் ஆகவே அதனை ஈட்டல் பயனின்றாம் . பொய்யாகிய அப்பொருளின்பாற் பற்று விட்டவர்களே பேரின்பம் எய்துபவர் ஆவர் என்பதாம்.
இனிச் சொல் நிலையாத்தன்மை யுடைத்தென்பதனை
அற்கா வியல்பிற்றுச் செல்வ மதுபெற்றா
லற்குப வாங்கே செயல்
எனவரும் திருக்குறளானும்
முல்லை முகைசொரிந்தாற் போன்றினிய
பாலடிசின் மகளி ரேந்த
நல்ல கருனையா னாள்வாயும்
பொற்கலத்து நயந்துண் டார்கள்
அல்ல லடைய வடகிடுமி
னோட்டகத்தென் றயில்வார்க் கண்டும்
செல்வ நமரங்கா ணினையன்மின்
செய்தவமே நினைமின் கண்டீர்!
எனவும்
அம்பொற் கலந்து ளடுபா
லமர்ந்துண்ணா வரிவை யந்தோ
வெம்பிப் பசிநலிய வெவ்வினையின்
வேறாயோ ரகல்கை யேந்திக்
கொம்பிற் கொளவொசிந்து பிச்சை
யெனக் கூறிநிற்பாட் கண்டு
நம்பன்மின் செல்வ நமரங்காள்
நல்லறமே நினைமின் கண்டீர்!
எனவும்,
வண்ணத் துகிலுடுப்பின் வாய்விட்
டழுவதுபோல் வருந்து மல்குல்
நண்ணாச் சிறுகூறை யாகமோர்
கைபாக முடுத்து நாளும்
அண்ணாந் தடகுரீஇ யந்தோ
வினையேயென் றழுவாட் கண்டும்
நண்ணன்மின் செல்வ நமரங்காள்
நல்லறமே நினைமின் கண்டீர்!
(சீவக-2632-4-5)
எனவரும் விசயை கூற்றானும் உணர்க. பொருளல்லனவாகிய பொய்ப் பொருள் என்பார் உள் இல் பொருள் என்றார்.
இதுவுமது
36. ஒழிந்த பிறஅறன் உண்டென்பார் உட்க
அழிந்து பிறர் அவாம் வம்பப் பொருளை
இழந்து சிறிதானும் எய்தாது ஒழிந்தார்
அழிந்து பெருந்துயர்நோய்க்கு அல்லாப் பவரே.
(இதன் பொருள்) ஒழிந்த பிற அறன் உண்டு என்பார்-பொருளை யீட்டுதலிலேயே முயன்று இனி இப்பொருளால் யாம் செய்யக் கடவனவாய் எஞ்சிய பிற அறச் செயல்களும் உண்டு அவற்றை இனியேனும் செய்குவம் என்று கருதுகின்றவர்; உட்க பெரிதும் அஞ்சும்படி; அழிந்து-அவரிடத்தினின்றும் அழிந்துபோய்; பிறர ஆம்-பிறருடைய கைப்பொருளாய் விடுகின்ற; வம்பப் பொருளை- புதுமையையுடைய செல்வத்தை; இழந்து-போகூழானே இழப்பெய்தி; சிறிதானும் எய்தாது ஒழிந்தார்-அச்செல்வத்தின் பயனைச் சிறிதேனும் எய்தப் பெறாத மாந்தர்; அழிந்து- நெஞ்சழிந்து; பெருந்துயர் நோய்க்கு-அவ்விழப்பாலுண்டான பெரிய துன்பமாகிய வறுமை நோயால்; அல்லாப்பவர்-வாழ்நாள் முழுதும் மனஞ்சுழன்று கிடப்பவரே, ஆவர் என்பதாம்.
(விளக்கம்) பொருளீட்டுந் துணையும் நல்லோரும் அறஞ்செய்யார், யாம் இப்பொருளால் செய்ய வேண்டிய அறங்களும் உள. இனி அவற்றைச் செய்வாம் என்று எண்ணியிருக்கும் போதே அவர் அஞ்சும்படி அப்பொருள் அழிந்து பிறர் பொருளாய்விடும்; இத்தகைய நிலையாமையுடைய பொருளை ஈட்டி அறஞ் சிறிதேனுஞ் செய்யாது அழிந்தொழிந்தவர் பின்னர் வாணாள் முடியும் துணையும் மனம் வருந்திச் சுழன்று கிடப்பர். இத்தகையர் அளியர் என்றிரங்கியபடியாம்.
ஆசிரியர் திருவள்ளுவனாரும்,
நில்லாத வற்றை நிலையின வென்றுணரும்
புல்லறி வாண்மை கடை குறள், 331
எனவும்,
கூத்தாட் டவைக்குழாத் தற்றே பெருஞ்செல்வம்
போக்கு மதுவிளிந் தற்று குறள், 332
எனவும் அறிவுறுத்தலுணர்க. (36)
இதுவுமது
37. இன்மை இளிவாம் உடைமை உயிர்க்கு அச்சம்
மன்னல் சிறிதாய் மயக்கம் பெரிதாகிப்
புன்மை உறுக்கும் புரைஇல் அரும்பொருளைத்
துன்னாது ஒழிந்தார் துறவோ விழுமிதே.
(இதன் பொருள்) இன்மை இளிவாம்-ஒருவனுக்குப் பொருளின்மையாகிய நல்குரவு தானும் பெரிதும் இழிவைத் தருவதாம்; உடைமை-மற்றும் அப்பொருட்பேறுதானும்; உயிர்க்கு அச்சம்-அவனுயிர்க்கே பெரிதும் அச்சத்தைத் தருவதாகும்; மன்னல் சிறிது ஆய்-மேலும் அப்பொருள் ஒருவன்பால் நிலைபெற்றிருக்கும் பொழுதுதானும் மிகவுஞ் சிறியதாகி; மயக்கம் பெரிதாகி-அஃதில்லையாயினும் உண்டாயினும் இரண்டு பொழுதினும் மயக்கம் மிகவுஞ் செய்வதாகி; புன்மையுறுக்கும்-மாந்தர்க்குக் கீழ்மையையே யுண்டாக்கு மியல்புடைய; புரைஇல் பொருளை-மேன்மையில்லாத பொருள்களை; துன்னாது-பற்றிதலின்றி; ஒழிந்தார்- அம்மயக்கொழிந்த சான்றோரது; துறவு விழுமிது-துறவொழுக்கமானது மிகவும் சிறப்புடையதாம், என்பதாம்.
(விளக்கம்) பொருளில்லாவிட்டாலும் இழிவுதரும். அதனைப் பெற்ற பொழுதே உயிர்க்கே அச்சந்தருவதாம். பெற்றுழியும் அது நிலைத்திருத்தலுமில்லை. அதனைப் பெற்றபொழுதும் மாந்தருக்கு மயக்கமே மிகும். இழந்தபொழுதும் மயக்கம் செய்யும். இங்ஙனம் எவ்வாற்றானும் மாந்தர்க்குக் கீழ்மையே தருகின்ற பொய்ப்பொருளைப் பற்றாமல் மயக்கொழிந்த சான்றோருடைய துறவொழுக்கமே உலகின்கண் மிகவும் சிறப்புடைய செயலாம் என்றவாறு.
இன்மை-நல்குரவு. இளிவரவு-இழிவு. உடைமை- பொருட்பேறு. கள்வர் அரசர் முதலியோரால் கொலையுண்ணவும் நலிவுறவும் செய்யுமாகலின், உடைமையுயிர்க்கச்சம் என்றார். மன்னல்- நிலைபெறுதல்- பொருள் சகடக்கால் போன்று மாறி வருதலால் நிலைபேறு சிறிதாய் என்றார். புன்மை- காமவெகுளி மயக்கங்கட்கு கீழ்மை. புரை- உயர்வு.
இனி, இன்மை இளிவாம் என்பதனை,
இற்பிறந்தார் கண்ணேயு மின்மை யிளிவந்த
சொற்பிறக்குஞ் சோர்வு தரும் குறள், 1044
எனவும்
இல்லாரை யெல்லாரு மெள்ளுவர் செல்வரை
யெல்லாருஞ் செய்வர் சிறப்பு குறள், 752
எனவும் வருந் திருக்குறள்களானும், மன்னல் சிறிதாகி என்பதனை,
அற்கா வியல்பிற்றுச் செல்வ மதுபெற்றா
லற்குப வாங்கே செயல் குறள், 333
எனவரும் திருக்குறளானும் உணர்க, துறவோவிழுமிது என்பதனை
ஒழுக்கத்து நீத்தார் பெருமை விழுப்பத்து
வேண்டும் பனுவற் றுணிவு குறள், 21
எனவும்,
துறந்தார் பெருமை துணைக்கூறின் வையத்
திறந்தாரை யெண்ணிக்கொண் டற்று குறள், 22
எனவும்,
இருமை வகைதெரிந் தீண்டறம் பூண்டார்
பெருமை பிறங்கிற் றுலகு குறள், 23
எனவும் வருந் திருக்குறள்களானு முணர்க (37)
இதுவுமது
38. ஈண்டல் அரிதாய்க் கெடுதல் எளிதாகி
நாண்டல் சிறிதாய் நடுக்கம் பலதரூஉம்
மாண்பில் இயற்கை மருவில் அரும்பொருளை
வேண்டாது ஒழிந்தார் விறலோ விழுமிதே.
(இதன் பொருள்) ஈண்டல் அரிது ஆய்-வந்து சேருவது மிகவும் அரியதாகி; கெடுதல் எளிதாகி-அழிந்துபோவது மிகவும் எளியது ஆகி; நாண்டல் அரிதாய்-நிலைப்பித்துக் கோடலும் அரிதாகி; ஈடுக்கம் பல தரூஉம் பலவேறு துன்பங்களையும் தருகின்ற; மாண்பு இல் இயல்பு-மாட்சிமையில்லாமையையே இயல்பாக உடைய; மருவு இல்-பொருத்தமற்ற; அரும்பொருளை- பெறுதற்கரிய இவ்வுலகப் பொருள்களை; வேண்டாது ஒழித்தார்-விரும்பாது துறந்த சான்றோருடைய; விறல்-வெற்றியே; விழுமிது-உலகின் கண் பெறக்கிடந்த வெற்றிகளுள் வைத்துத் தலைசிறந்த வெற்றி என்பதாம்.
(விளக்கம்) ஈண்டல்-ஓரிடத்தே குவிதல். நாட்டல் எனற்பாலது எதுகை நோக்கி நாண்டல் என மெலிந்து நின்றது. நாட்டல்-நிலைநிறுத்துதல். நடுக்கம் ஆகுபெயர், மருவு-பொருந்துதல். விறல்-வெற்றி. பொறிகளை- வெல்லுதலே வெற்றிகளிற் றலைசிறந்த வெற்றியாதலின். பொருள்களின்பாற் பற்றெழிந்து துறந்தார் விறலோ விழுமிது என்றார். (38)
இதுவுமது
39 இல்லெனின் வாழ்க்கையும் இல்லைஉண் டாய்விடின்
கொல்வர் கயவர் கொளப்பட்டும் வீடுவர்
இல்லைஉண் டாய்விடின் இம்மை மறுமைக்கும்
புல்லென்று காட்டும் புணர்வதும் அன்றே.
(இதன் பொருள்) இல் எனின் வாழ்க்கையும் இல்லை-இவ்வுலகின்கண் ஒருவனுக்குப் பொருள் இல்லையானால் அவனுக்கு நல்வாழ்க்கையும் இல்லையாய்விடும்; உண்டு ஆய்விடின்-மற்றுப் பொருள் உண்டாகுமானாலும்; கயவர் கொல்வர்-கள்வர் முதலிய கொடியவர்கள் அதனைக் கைப்பற்றும் பொருட்டு அப் பொருளுடையானைக் கொன்று விடுவர்; கொளப்பட்டும் வீடுவர்-கொல்லாமல் பொருளை மட்டும் கவர்ந்துகொண்ட விடத்தும் பொருளுடையோர் ஏக்கத்தாற் றாமே உயிர் நீப்பர்; இல்லை உண்டாய்விடில்-அல்லதூஉம் ஒருவனுக்குப் பொருள் இல்லாமையாகிய வறுமையுண்டாய் விட்டாலோ; இம்மை மறுமைக்கும் புல் என்று காட்டும்- இம்மையினும் மறுமையினும் அவ்வறியவனுடைய வாழ்க்கை பயனற்றதாய்ப் பொலிவிழந்து காணப்படும்; புணர்வதும் அன்றே-அப்பொருள்தானும் ஒருவன் விரும்பியபொழுது அவன்பால் வந்து சேர்வதுமில்லை; ஆகவே இத்தகைய பொருளின்பாற் பற்றுவையாது துறந்துபோதலே சிறப்பாம் என்பதாம்.
(விளக்கம்) பொருளில்லாமையானும் துன்பம். உண்டாயவிடத்தும் சாதல் முதலிய பெருந்துன்பமே யுண்டாம். அப்பொருளில்லாத வழி இம்மை மறுமை வாழ்க்கைகள் புற்கென்றாகிவிடும். ஆதலால் அதன்கட் பற்றுவையாது துறந்து போதலே நன்று. துறப்போர்க்கு வீட்டின்படி உண்டாதல் ஒருதலை என்பதாம்.
பொருளில்லையாயின் வாழ்க்கையுமில்லை என்பதனை,
அருளில்லார்க் கவ்வுலக மில்லை பொருளில்லார்க்
கிவ்வுலக மில்லாகி யாங்கு குறள், 247
எனவரும் திருக்குறளானுமுணர்க.
பொருளுடையார் கள்வர் முதலியோராற் கொலையுண்ணலும் பொருளையிழந்துழித் தாமே ஏங்கி உயிர் விடுதலும் உலகியலிற் காண்க.
வறுமையுடையோர் உணவின்மை முதலியவற்றாற் றுன்புறுதலும், அறமுதலியன செய்யமாட்டாமையின் துறக்கம் புகமாட்டாமையும் பிறவும்,
இன்மையி னின்னாத தியாதெனி னின்மையி
னின்மையே யின்னா தது குறள், 1042
எனவும்,
இன்மை பெனவொரு பாவி மறுமையு
மிம்மையு மின்றி வரும் குறள், 1042
எனவும் வரும் திருக்குறள்களானும் உணர்க.
ஈதல் முதலிய நல்லறம் பல செய்தார்க்கன்றித் துறக்கவுலக வாழ்வு கிடையாதாகலின் இன்மை மறுமை வாழ்க்கையையும் கெடுக்கும் என்பது கருத்து (39)
இளமை நிலையாமை
40. வல்கண் மடவார் விழைவுஒழிய யாம்விழையக்
கோல்கண் நெறிகாட்டக் கொல்கூற்று உழையதாம்
நாற்பது இகந்தாம் நரைத்தூதும் வந்தது இனி
நீத்தல் துணிவாம் நிலையாது இளமையே
(இதன் பொருள்) வேல்கண் மடவார் விழைவு ஒழிய- நெஞ்சமே! வேல்போலும் கண்களையும் மடப்பத்தையும் உடைய மகளிர் நம்மை விரும்பாது புறக்கணிப்பவும்; யாம் விழைய- யாம்மட்டும் அம்மகளிரை விரும்பவும்; கோல்கண் நெறிகாட்ட-கோலாகிய கண்ணே இனி நமக்கு வழிகாட்டும் கருவியாகவும்; கொல் கூற்று உழையது ஆம்- கொல்கின்ற கூற்றுவனிடத்திற்கு அணுகியதாகிய; நாற்பது இகந்தாம்-நாற்பதியாட்டை யகவையினையும் கடந்தொழிந்தோம்; நரைத்தூதும் வந்தது-சாக்காட்டினை யறிவிக்கின்ற மறலியின் தூதாகிய நரையும் வந்துற்றது; இளமை நிலையாது-இளமை நிலைத்திராதென்று முணர்ந்து கொண்டோமன்றே? இனி நீத்தல் துணிவாம்-இனியேனும் துறந்துபோதலைத் துணிவோமாக! என்பதாம்.
(விளக்கம்) இது மெய்யுணர்வுடையோனொருவன் தன்னெஞ்சிற்குக் கூறியது. வேற்கண் மடவார் நம்மை விழையாராகவும் யாம்மட்டும் அவரை விழைதல் நாணுதல் தகவுடைத் தென்பான், மடவார் விழைவு ஒழிய யாம் விழைய நாற்பது இகந்தாம் என்றான். கட்பொறி ஒளியிழந்து போயின வென்பான் கோற்கண் நெறிகாட்ட என்றான். நாற்பது-நாற்பதியாட்டை யகவை. நரைசாவினை முற்பட வுணர்த்துமொரு அறிகுறியாகலின், அதனை மறலியின் தூதுவனாக உருவகித்தான். யாம் சாவினை மிகவும் நெருங்கிவந்துவிட்டோம் என்றிரங்குவான், கொல்கூற்றுழையதாம். நாற்பது என்றான். நீத்தல்- துறந்துபோதல். இனி இதனோடு.
மைதிரண்ட வார்குழன்மேல் வண்டார்ப்ப
மல்லிகைமேன் மாலை சூடிக்
கைதிரண்ட வேலேந்திக் காமன்போற்
காரிகையார் மருளச் சென்றார்
ஐதிரண்டு கண்டங் குரைப்பவோர்
தண்டூன்றி அறிவிற் றள்ளி
நெய்திரண் டாற்போலுமிழ்ந்து நிற்கு
மிளைமையோ நிலையாதே காண்!
எனவரும் சீவகசிந்தாமணியும்(2626)
நீரிற் குமிழி யிளமை நிறைசெல்வம்
நீரிற் சுருட்டு நெடுந்திரைகள்-நீரில்
எழுத்தாகும் யாக்கை நமரங்கா ளெவ்னே
வழுத்தாத தெம்பிரான் மன்று நீதிநெறி விளக்கம், 1
எனவரும் குமரகுருபரவடிகளார் மணிமொழியும் நினைவு கூரற்பாலன.
இது நெஞ்சிற்குக் கூறும் வாய்பாட்டால். இவ்வாறு அற முதலியவற்றை அறிதலின்றிப் பயன்படாமல் மூப்பதற்கு முன்பே இளமைப் பருவத்தே தவமும் தானமும் நிகழ்த்தி உய்வீராக! வென்று செவியறிவுறுத்தபடியாம்.
இதுவுமது
41. இளமையும் நிலையாவால்; இன்பமும் நின்றஅல்ல;
வளமையும் அஃதேபோல் வைகலும் துன்பவெள்ளம்
உளவென நினையாதே செல்கதிக்கு என்றும்என்றும்
விளைநிலம் உழுவார்போல் வித்துநீர் செய்துகொண்மின்.
(இதன் பொருள்) இளமையும் நிலையா-இன்பநுகர்தற்குரிய இளமைப்பருவமும் நிலைத்திராது(நீரிற் குமிழிபோல அழிந்துபோம்); இன்பமும் நின்ற அல்ல-நுகரும் இன்பங்கள் தாமும் நிலைத்து நிற்கு மியல்புடையனவல்ல; வளமையும் அஃதேபோல்-அவ்வின்பத்திற்குக் காரணமான செல்வங்களும் நிற்பனவல்ல; வைகலுந் துன்ப வெள்ளம்-அவ்வின்பம் நிலையா ததோடு வாழ்க்கையின்கண் நடோறும் துன்பமே மிகுதியாகவும் உள்ளன; உள என நினையாதே-ஆதலால் இளமையும் இன்பமும் வளமையும் நம்பாலுளவென்று செம்மாந்திராமல்; விளைநிலம் உழுவார் போல்-விளைகின்ற நன்செயை உழுகின்ற வேளாண்மாக்கள் எதிரியாண்டிற்கு அவ்விளைவினின்றும் விதை கொள்ளுமாறு போலே; நீர்-நீவிரும்; செல்கதிக்கு என்றும் என்றும்-நாடோறும் இனிச் சென்று பிறக்கின்ற பிறப்பிற்கு ஆக்கமாக வித்து-அறமாகிய வித்தினை; வீழ்நாள் படாமல்; செய்து கொண்மின்- செய்துகொள்ளக் கடவீர்! என்பதாம்.
(விளக்கம்) நீயிரிளமை முதலியவற்றால் மகிழ்ந்து வாளா விருந்து விடாமல் இப்பொழுதே அறமுதலியன செய்து செல்லுந் தேயத்துக்கு ஆக்கஞ் செய்து கொண்மின். அவ்விளமை முதலியன அழிந்துவிடும் என்றவாறு.
இதனோடு,
இளமையுஞ் செல்வமும் யாக்கையு நிலையா
உளநாள் வரையாது ஒல்லுவ தொழியாது
செல்லுந் தேஎத்துக் குறுதுணை தேடுமின் சிலப், 30-200
எனவரும் இளங்கோவடிகளார் செவியறிவுறூஉவும் நினைக.
இன்னும்,
வேற்றுவர் இல்லா நுமரூர்க்கே
செல்லினும் வெகுண்டீர் போல
ஆற்றுணுக் கொள்ளா தடிபுறத்து
வைப்பிரே யல்லிர் போலும்
கூற்றங் கொண்டோடத் தமியே
கொடுநெறிக்கட் செல்லும் போழ்தின்
ஆற்றுணுக் கொள்ளீர் அழகலா
லறிவொன்று மிலிரே போலும் சீவக, 1550
எனவருந் திருத்தக்க முனிவர் செய்யுளும் குறிக்கொள்க. (41)
துறவு
42. மற்றும் தொடர்ப்பாடு எவன்கொல் பிறப்புஅறுக்கல்
உற்றார்க்கு உடம்பு மிகைஅவை உள்வழிப்
பற்றா வினையாய்ப் பலபல யோனிகள்
அற்றாய் உழலும் அறுத்தற்கு அரிதே.
(இதன் பொருள்) பிறப்பு அறுக்கல் உற்றார்க்கு-பிறப்பறுத்தலை மேற்கொண்டார்க்கு; உடம்பும் மிகை-அதற்குக் கருவியாகிய உடம்புதானும் மிகையாம்; மற்றும் தொடர்ப்பாடு எவன்-அங்ஙனமானபின் மேலே இயைபில்லனவும் சில தொடர்ப்பாடு உளவாதல் என்னும்; அவை உள்வழி-அவையிற்றின் தொடர்ப்பாடுளவாயவிடத்து; பற்றா வினையாய்-மேலும் மேலும் அவற்றின்பாற் பற்றுண்டாகி அப்பற்றுக் காரணமாக வினைகளுமுண்டாகி; பலப்பல யோனிகள்-உயிர்தானும் அவ்வினைகள் காரணமாக எண்ணிறந்த பிறவிகளிடத்தும்; அற்று ஆய்-முன்போலவே பிறந்து; உழலும்-இன்ப துன்பங்களிற் கிடந்துழலா நிற்கும்; அறுத்தற்கு அரிது- இவ்வாறு வளர்ந்துவிட்ட பற்றினை மீண்டும் அறுத்தற்கு மியலாது கண்டீர்! என்பதாம்.
(விளக்கம்) இச்செய்யுளில் மற்றுந் தொடர்ப்பா டெவன்கொல் பிறப்பறுக்க லுற்றார்க் குடம்பு மிகை (குறள், 345) என்னும் திருக்குறள் முழுதும் அமைந்திருத்தலுணர்க.
இனி, இத் திருக்குறட்கு, விளக்கம்போல எஞ்சிய அடிகளும் அமைந்திருத்தலுமுணர்க. இனி, இத் திருக்குறட்கு ஆசிரியர் பரிமேலழகர் கூறுகின்ற விளக்கவுரையும் ஈண்டுக் கருதற்பாற்று. அது வருமாறு
உடம்பென்ற பொதுமையான் உருவுடம்பும் அருவுடம்பும் கொள்ளப்படும் அவற்றுள் அருவுடம்பாவது: பத்துவகை யிந்திரிய வுணர்வோடும் ஐவகை வாயுக்களோடும் காம வினைவிளைவுகளோடும் கூடிய மனம். இது நுண்ணுடம் பெனவும்படும். இதன்கட் பற்று நிலையாமை யுணர்ந்த துணையான் விடாமையின் விடுதற்குபாயம் முன்னர்க் கூறுப, இவ்வுடம்புகளால் துன்பம் இடையறாது வருதலை யுணர்ந்து இவற்றானாய கட்டினை இறைப் பொழுதும் பெறாது வீட்டின்கண் விரைதலின் உடம்புமிகை யென்றார். இன்பத் துன்பங்களான் உயிரோடு ஒற்றுமை யெய்துதலின், இவ்வுடம்புகளும் யானெனப்படும். இதனால் அகப்பற்று விடுதல் கூறப்பட்டது எனவரும் (42)
இதுவுமது
43 உற்ற உதிரம் ஒழிப்பான் கலிங்கத்தை
மற்றது தோய்த்துக் கழுவுதல் என்ஒக்கும்
பற்றினால் ஆகிய பாவத்தை மீட்டும்
பற்றொடு நின்று பறைக்குஉறும் ஆறே.
(இதன் பொருள்) பற்றினான் ஆகிய பாவத்தை மீட்டும் பற்றொடு நின்று பறைக்குறும் ஆறு-ஒருவன் தனது பற்றுடைமை காரணமாக எய்திய தீவினையை மீண்டும் அப்பற்றுடையனாகவே நின்று தேய்த்தொழிக்கும் முயற்சி; என் ஒக்கும்- எதனை ஒக்கும் என்று வினவின்; உற்ற உதிரம் ஒழிப்பான்-ஒருவன் தன்னாடையிலுற்ற குருதிக் கறையினைப் போக்குவதற்கு; கலிங்கத்தை-அந்த ஆடையினை மீண்டும்; அது தோய்த்துக் கழுவுதல் ஒக்கும்-அந்தக் குருதியிலேயே போகட்டுக் கழுவுவதனையே ஒப்பதாம் என்பதாம்.
(விளக்கம்) பற்றுடைமையாலுற்ற துன்பம் போக்க முயல்பவர் மீண்டும் வேறு பொருள்களைப் பற்றுமாற்றாற் போக்கமுற்படுதல் ஆடையிற்பட்ட குருதிக் கறையைப் போக்குபவர் மீண்டும் அவ்வாடையைக் குருதியிலேயே தோய்ப்பது போன்று பேதைமையுடைத்து ஆதலால், பற்றறுப்போர் விடல் வேண்டும் வேண்டியதெல்லாம் ஒருங்கு என்றவாறு.
இதனை
இயல்பாகு நோன்பிற்கொன் றின்மை யுடைமை
மயலாகு மற்றும் பெயர்த்து குறள், 344
என்பதனானும் உணர்க. மேலும், பற்றினைப் பற்றுவார்க்குத் துன்பங்கள் இடையறாதுவரும் என்பதனை,
பற்றி விடாஅ விடும்பைகள் பற்றினைப்
பற்றி விடாஅ தவர்க்கு குறள், 347
என்பானானும் உணர்க (44)
44. தானம் செய்திலம் தவமும் அன்னதே
கானம் தோய்நில விற்கு அழிவு எய்தின
நானம் தோய்குழல் நமக்குஉய்தல் உண்டோ
மானம்தீர்ந்தவர் மாற்றம்பொய் அல்லவால்.
(இதன் பொருள்) நானந் தோய்குழல்-புழுகளைந்த கூந்தலையுடைய நங்காய்!; தானம் செய்திலம்-யாமோ கழிந்த நம் வாழ்நாளிலே ஈதல் முதலிய நல்லறங்களைச் செய்திலேம்; தவமம் அன்னது முதுமைப் பருவமெய்தியும் தவவொழுக்கமும் மேற்கொண்டிலேம்; மானம் தீர்ந்தவர்-மாண்பிறந்த மானமுதலிய குற்றங்களினின்றும் விலகிய சான்றோர்; மாற்றம் பொய்யல்ல- கூறிய அந்நல்லறங்கள் பொய்மையுடையன அல்லவே; கானம் தோய் நிலவில் கழிவெய்தினம்-அந்தோ அரிது பெறுமிம் மக்கட் பிறப்பில் நமக்குற்ற வாழ்நாள் எல்லாம் காட்டில் எறிந்த நிலாப்போல வறிதே கழியப்பெற்றேம்; நமக்கு உய்தல் உண்டோ-இனி நமக்கு உய்தியுண்டாகுமோ என்செய்கேம்! என்பதாம்.
(விளக்கம்) இது வாழ்நாளிற் பெரும்பகுதியைக் காமநுகர்ச்சியிலே கழித்துக் காமஞ் சான்ற கடைக்கோட்காலைத் தன் வாழ்க்கைத் துணை வியை நோக்கி ஒரு காமுகன் இருங்கிக் கூறியதென்க.
இல்லிருந்து வாழ்ந்தோம் ஆயினும் அறஞ் செய்திலேம். முதுமையும் வந்து பெரும்பகுதி கழிந்தது. தவமும் செய்திலேம். இப்பொழுதோ இன்ப நுகரும் ஆற்றலும் இழந்தேம். சான்றோர் கூறிய நல்லறம் பொய்யல்ல. அங்ஙனமாகவும் அவற்றையும் மதித்தொழுகினோமல்லேம். சாவு அணுகிவிட்டது இனி; யாம் என் செய்தும். நமக்கு எய்திய வாழ்நாள் காட்டில் பொழிந்தநிலா வொளிபோலப் பயனற்றதாய் முடிந்தது என்று இரங்கிய படியாம்.
இவனுடைய இவ்விரங்கன் மொழிகளோடு.
நட்புநா ரற்றன நல்லாரு மஃகினார்
அற்புத் தளையு மவிழ்ந்தன-உட்காணாய்
வாழ்தலி னூதிய மென்னுண்டாம் வந்ததே
ஆழ்கலத் தன்ன வொலி (நாலடி)
எனவரும் வெண்பாவையும் நினைக
நிலவிற்கு: உருபுமயக்கம். மானந்தீர் கொள்கையார் என்றும் பாடம்
இனி நல்லோர் கூறிய நல்லறங் கொள்ளாது வாழ்நாள் எல்லாம் வீணாளாக்கி மடிந்து நரகிற் கிடந்துழல்வோர் கூற்றாக வருகின்ற,
பெண்டீர் மக்கள் கிளைஞ ரிவர் பின்னுக் குதவி யென்றெண்ணிக்
கண்டீரறத்தை விட்டவராற் கடன்பட் டிறுத்தோ மென்பர் சிலர்
உண்டீ ருடுத்தீர் சுற்றத்தீ ருற்ற வேளைக் கொருவரும் வந்
தண்டீ ரந்தோ வும்மை நம்பி யான திதுவோ வென்பர் சிலர்
எனவும்,
தேடிப் பொருளைச் சிறுதொழிற்கே
செலுத்தி யுணர்ச்சி தெரியாமற்
பாடிப்பதருக் கிறைத்ததெல்லாம்
பலித்த தெமக்கீங் கென்பர்சிலர்
கேடிப் படிவந் தெமைச்சூழக்
கெடுத்த பாவி யுலகிலின்ன
நாடிப் பிறக்க விடினுமங்ங
னாடோ மென்று சிலர்சொல்வார்
எனவும்,
என்று மிறவோ மென்றிருந்தோ
மிறந்து படுவ தீதறிந்தா
லன்றுபடைத்த பொருளையன்றே
யருள்வோ மறையோர்க் கென்பர்சிலர்
சென்றுவரவாங் கெம்மை யின்னஞ்
செலுத்திற் புதைத்த திரவியத்தை
யொன்று மொழியா தறம்புரிந்திங்
கோடி வருவோ மென்பர்சிலர்
எனவும்,
பிறந்த வுடனேதுறந்து சுத்தப்
பிரம முணர்ந்து பிறப்பதனை
மறந்திந் நரகத் தெய்தாமை
வருமோ நமக்கு மென்பர்சிலர்
இறந்து நிரையத் தழுந்தியிட
ரிவ்வா றுழப்ப தறியாமற்
சிறந்த விவேகர் பெருமான்றன்
செயலைத் தவிர்ந்தோ மென்பர்சிலர்
எனவும் வருகின்ற கையறுநிலைச் செய்யுள்களும் நினைவிற் கொள்ளற் பாலனவாம்(மெய்ஞ்ஞான விளக்கம்-30-3-4-5)
மெய்யுணர்தல்
45. பருவந்து சாலப் பலர்கொல்என்று எண்ணி
ஒருவந்தம் உள்ளத்து உவத்தல் ஒழிமின்
வெருவந்த துன்பம் விடுக்கும் திறலோன்
ஒருவன் உலகிற்கு உளன்என்னும் ஆறே.
(இதன் பொருள்) வெருவந்த துன்பம்-அச்சம் வருதற்குக் காரணமான துன்பத்தினின்றும்; விடுக்கும் திறலோன் ஒருவன் உளன் என்னும் ஆறு- விடுவிக்கும் பேராற்றலுடைய இறைவன் ஒருவனே உளன் என்னும் மெய்யுணர்வு பெறுமின்: பலர் என்று எண்ணி-உலகிற்கு இறைவராவார் பலர் என்று எண்ணியும்; பருவந்து-துன்பம் வந்துற்ற காலத்தே இவை பிறரால் வந்ததென்று கருதி வருந்தி; உள்ளத்து உவத்தல்-இன்பம் வந்த காலத்து இவை யாம் தேட வந்தனவென்று கருதி உள்ளத்தே மகிழ்ந்தும் வாழ்வதனை; ஒருவந்தம் ஒழிமின்-ஒருதலையாக விட்டொழிவீராக என்பதாம்.
(விளக்கம்) உலகிலுயிர்களைத் துன்பத்தினின்றும் விடுதலை செய்யும் கடவுள் ஒருவனே என்றுணர்மின்! பலர் உளர் என்று கருதி வருந்தா தொழிமின். இன்பம் வந்தகாலத்தே களிப்புறா தொழிமின். எல்லாம் ஊழின் செயலென மெய்யுணர்வோடு வாழக்கடவீர்! என்பதாம்.
இன்பதுன்பங்கள் ஊழால் வருவன ஆதலின் அவை வருங்காலத்து மகிழ்தலும் வருந்துதலும் பேதமை என்பது கருத்து. இறைவன் ஒருவனே உளன்; அவனடி பற்றினவரே இன்ப மெய்துவர்; இறைவர் பலருளர் என்று கருதி. அவ்வழியிலுழல்வோர் துன்பமேயுறுவர் என்பார். சாலப் பலரென்றெண்ணி பருவந்து என்றார். பருவந்தும் உழத்தலும் எனல் வேண்டிய உம்மைகள் தொக்கன. ஒருவந்தம்-ஒருதலையாக.
இனி இச் செய்யுளோடு,
யாது மூரே யாவருங் கேளிர்
தீது நன்றும் பிறர்தர வாரா
நோதலுந் தணிதலு மவற்றோ ரன்ன
சாதலும் புதுவ தன்றே வாழ்தல்
இனிதென மகிழ்ந்தன்று மிலமே முனிவின்
இன்னா தென்றலு மிலமே மின்னொடு
வானந் தண்டுளி தலைஇ யானாது
கல்பொரு திரங்கு மல்லற் பேர்யாற்று
நீர்வழிப் படுஉ மென்பது திறவோர்
காட்சியிற் றெளிந்தன மாகலின் மாட்சியிற்
பெரியோரை வியத்தலு மிலமே
சிறியோரை யிகழ்த லதினினு மிலமே
எனவரும் கணியன் பூங்குன்றனார் செய்யுளும் கருத்துட் பதித்தற்பாலது
(45)
பழவினை
46. உய்த்து ஒன்றி ஏர்தந்துஉழஉழுது ஆற்றவும்
வித்தின்றிப் பைங்கூழ் விளைக்குறல் என்ஒக்கும்
மெய்த்தவம் இல்லான் பொருளோடு போகங்கட்கு
எய்த்து உழந்தேதான் இடர்ப்படு மாறே.
(இதன் பொருள்) மெய்த்தவம் இல்லான்-முற்பிறப்பிலே செய்த வாய்மையான தவத்தினை இல்லாதவன்; பொருளொடு போகங்கட்கு-செல்வம் பெறுதற்கும் அவற்றானின்பம் நுகருதற்கும்; உழந்து எய்த்து-பெரிதும் முயன்று இளைத்து; இடர்ப்படும் ஆறு-துன்புறும்வகை; என் ஒக்கும்(என்னின்)-எதனை ஒக்கும் என்னின்; வித்து இன்றி-முற்படச் சேர்த்துக் கொள்ளற்கியன்ற விதை சிறிதுமில்லாமலே; ஏர்தந்து-உழவெருது கலப்பை முதலிய கருவிகளைக் கொணர்ந்து; உழவு ஒன்றி-உழவுத் தொழிலிலே பொருத்தி; உய்த்து-எருதுகளைச் செலுத்தி; ஆற்றவும் உழுது-மிகவும் ஆழமாக உழுது; பைங்கூழ் விளைக்குறல்- பசிய பயிரை விளைக்க முயல்வதனையே ஒக்கும் என்பதாம்.
(விளக்கம்) பொருளும் போகமும் முற்செய் தவமுடையார்க்கே ஆகும். அத்தவமில்லாதார் அவற்றைப் பெற முயல்வது வீணாம் என்றவாறு. எனவே, வீடு பெறுதற்கன்றி இம்மை வாழ்விற்கும் தவமே காரணம் ஆகும். ஆகவே எல்லோரும் தவவொழுக்கம் மேற்கொள்ளல் வேண்டும் என்றாராயிற்று
இதனை,
ஒன்னார்த் தெறலும் உவந்தாரை யாக்கலும்
எண்ணிற் றவத்தான் வரும் குறள், 264
எனவும்,
வேண்டிய வேண்டியாங் கெய்தலாற் செய்தவ
மீண்டு முயலப் படும் குறள், 265
எனவும்
இலர்பல ராகிய காரண நோற்பார்
சிலர்பலர் நோலா தவர் குறள்,270
எனவும், வருந்திருக்குறள்களானும்,
மேலைத் தவத்தளவே யாகுந் தான் பெற்ற செல்வம்
என்பதனானுமுணர்க (46)
பொருள் மாண்பு
47 குலந்தரும் கல்வி கொணர்ந்து முடிக்கும்
அலந்த கிளைகள் அழிபசி தீர்க்கும்
நிலம்பக வெம்பிய நீள்சுரம் போகிப்
புலம்பில் பொருள்தரப் புன்கண்மை உண்டோ
(இதன் பொருள்) குலந்தரும்-பொருளானது மக்கட்கு உயர்ந்த குடிப்பெருமையை யுண்டாக்கும்; கல்விகொணர்ந்து முடிக்கும்- கல்விச் செல்வத்தைப் பிற விடங்களினின்று கொடுவந்து நிறைவுறச் செய்யும்; அலந்த கிளைகள் அழிபசி தீர்க்கும்-வறுமையானலிந்த தம் சுற்றத்தாருடைய மிக்க பசியைத் தீர்த்துய்யக் கொள்ளும்; ஆதலாலே, நிலம்பக வெம்பிய நீள்சுரம்போகி-நிலம் பிளந்து போகும் படி வெப்பமுற்ற நெடிய பாலை நிலத்தினைக் கடந்து சென்றேனும்; புலம்பு இல்பொருள் தர-துயிரின்மைக்குக் காரணமான பொருளை மாந்தர் ஈட்டிக் கொணரின்; புன்கண்மை உண்டோ- பின்னர் அவர் பால் துன்பம் உண்டாகுமோ? ஆகாது. ஆதலின் மாந்தர் அப்பொருளின் இத்தகைய சிறப்புக்களை யுணர்ந்து அதனை நிரம்ப ஈட்டிக் கோடல் வேண்டும் என்பதாம்.
(விளக்கம்) பொருள் மாந்தர்க்கு உயர்குடி பெருமையைத் தரும்; அறிவுச் செல்வத்தையும் வரவழைத்துக் கொடுக்கும்; உற்றார் உறவினர் பசிப்பிணியைப் போக்கி அவரை யுய்விக்கும், ஆதலால் மாந்தர் பாலைநிலங் கடந்தும் திரைகடலோடியும் அப்பொருளை நிரம்ப ஈட்டுதல் வேண்டும் என்றவாறு.
பிறநாடுகளிற் சென்றும் பொருளீட்டல் வேண்டும் என்பார் நிலம்பக வெம்பிய நீள் சுரம் போகிப் புலம்பில் பொருள்தரப் புன்கண்மை யுண்டோ என்றார். போகியும் எனல் வேண்டிய சிறப்பும்மை தொக்கது.நீள்சுரம் போகி என்றமையால் திரைகடலோடியும் என்றும் கூறிக் கொள்க. இப்பொருள் மாண்பிற்கு,
இம்மியன நுண்பொருள்க ளீட்டிநிதி யாக்கிக்
கம்மியரு மூர்வர்களி றோடை நுதல் சூட்டி
அம்மிமிதந் தாழ்ந்து சுமை வீழ்ந்ததறஞ் சால்கென்
றும்மைவினை நொந்துபுலந் தூடலுணர் வன்றே
எனவும்,
உள்ளமுடை யான்முயற்சி செய்யவொரு நாளே
வெள்ளநிதி வீழும்விளை யாததனி னில்லை
தொள்ளையுணர் வின்னவர்கள் சொல்லிமடி கிற்பின்
எள்ளுநர்க் கேக்கழுத்தம் போலவினி தன்றே
எனவும்,
செய்கபொருள் யாருஞ் செறுவாரைச் செறுகிற்கும்
எஃகுபிறி தில்லையிருந் தேயுயிரு முண்ணும்
ஐயமில்லை யின்பமற னோடவையு மாக்கும்
பொய்யில்பொரு ளேபொருண்மற் றல்லபிற பொருளே
எனவும்,
தூங்குசிறை வாவலுறை தொன்மரங்க ளென்ன
ஓங்குதல் நையவத னுட்பிறந்த வீரர்
தாங்கல்கட னாகுந்தலை சாய்க்கவரு தீச்சொல்
நீங்கன்மட் வார்கள்கட னென்றெழுந்து போந்தான்
எனவரும் சீதத்தன் நல்லுரைகளையும் இதற்கு ஆசிரியர் நச்சினார்கினியர்
சீதத்தன் தான் போய்ப் பொருள்தரக் கருதினான்; அங்ஙனம் கருதிக் கம்மியருங் களிறேறுவர்; ஆதலால் முயற்சியே நன்றென்று கருதாது வாழாதார் வாழ்க காண்டலின் முயற்சி வேண்டா அறமேயமையுமென்று கருதி முற்பிறப்பில் நல்வினை செய்யப் பெற்றிலே மென்று நொந்து அம் முயற்சியை வெறுத்துக் கலாய்த்திருத்தல் அறிவன்று; அதுவேயுமின்றி உள்ளமுடையான் முயற்சியைச் செய்ய ஒருநாளே நிதிதிரளும்; அந்நிதியாலே எல்லாத் துப்புரவுகளுமுளவாம்; அங்ஙனம் எல்லாமாகின்ற முயற்சியைவிட்டுப் புரைபட்ட உணர்வினவர்கள், வருவது இடைத்தங்கா தென்னுஞ் சொல்லான் மடிந்திருப்பின், அவ்விருப்புப் பகைவர்க்கு ஒரு தலை எடுப்புப் பெற்றாற் போல இனியதாயிருக்கும். அங்ஙனம் அவர் தலையெடாதபடி எல்லாரும் பொருளைத் தேடுக; தேடினாற் பகைவரைக் கொல்லும் படை அதனை யொழிய இல்லை. தான் அவரிடத்திருந்தேயும் பகைவரைக் கொல்லும்; அதுவன்றித் தானுளவாக இன்பத்திற்கு ஐயமில்லை ஆதலின், அறத்தோடே முற்கூறியவற்றையும் உண்டாகும் மெய்யாகிய பொருளே நன்கு மதிக்கும் பொருள். ஒழிந்த பொருள் நன்கு மதிக்கும் பொருளல்ல; ஆதலின், இப்பொருளைக் கொண்டு தம் குலம் நைகிறவளவிலே ஆலமரத்தின் வீழ்போலத் தீச்சொற் பிறவாமற் றங்குலத்தைத் தாங்கல் அதனுட் பிறந்தவருடைய கடனாகும். தங்குலத்தைத் தாங்காது போதல் பேதையரது கடனாகும். ஆதலால் யானும் முயன்று பொருள் தேடி என் குலத்தைத் தாங்குவேனென்று கூறி எழுந்திருந்து பண்டசாலையேறப் போந்தானென்க, என வகுத்துள்ள நல்லுரையையும் நனி நோக்குக.
இனி, செல்வார்க்கழகு செழுங்கிளை தாங்குதல் என்பதுபற்றிச் செல்வம் அலந்த அழிபசி தீர்க்கும் என்றார். புலம்பில் பொருள் தரப் புன் கண் உண்டோ எனபதனை,
ஒண்பொருள் காழ்ப்ப வியற்றியார்க் கெண்பொரு
ளேனை யிரண்டு மொருங்கு குறள், 760
எனவருந் திருக்குறளானும்
அரிதாய அறனெய்தி அருவியோர்க் களித்தலும்
பெரிதாய பகைவென்று பேணுரைத் தெறுதலும்
புரிவமர் காதலிற் புணர்ச்சியும் தருமெனப்
பிரிவெண்ணிப் பொருள்வயிற் சென்ற நங்காதலர் (கலி-11)
எனவருங் கலியானுமுணர்க
இனி இன்பத்தினும் அறமே பெரிதென நந்தமிழகத்து இளைஞர் பண்டைக்காலத்து உயிரன்ன தங் காதலிமாரையும் பிரிந்துபோய் நிலம்பக வெம்பிய நீள்சுரம் போகிப் புலம்பல் பொள்தரும் வழக்கமுடையராயிருந்தனர் என்பதனை,
இடுமுள் நெடுவேலி போலக் கொலைவர்
கொடுமரந் தேய்த்தார் பதுக்கை நிரைத்த
கடுநவை யாராற் றறுசுனை முற்றி
யுடங்குநீர் வேட்ட வுடம்புயங் கியானை
கடுந்தாம் பதிபாங்குக் கைதெறப் பட்டு
வெறிநிரை வேறாகச் சாரச் சாரலோடி
நெறிமயக் குற்ற நிரம்பாநீ டத்தஞ்
சிறுநனி நீதுஞ்சி யேற்பினு மஞ்சு
நறுநுத னீத்துப் பொருள்வயிற் செல்வோ
யுரனுடை யுள்ளத்தை செய்பொருண் முற்றிய
வளமையா னாகும் பொருளிது வென்பாய்
எனவரும் கலியானுமுணர்க;(12) (47)
நட்பு
48. கெட்டேம் இதுஎம் நிலைஎன்று சார்தற்கண்
நட்டவர் அல்லார் நனிமிகு பவர்சுற்றம்
பெட்டது சொல்லிப் பெரிதுஇகழ்ந்து ஆற்றவும்
எட்டவந்து ஓர்இடத்து ஏகிநிற்பவே.
(இதன் பொருள்) கெட்டேம் இது எம் நிலை என்று சார்தற்கண்- ஒருவர் தம் கைப் பொருளிழந்துழி வறுமையுற்று யாம் பெரிதும் கெட்டொழிந்தேம் இப்பொழுது எம்முடைய நிலைமை பெரிதும் இத்தகைய இன்னாமையுடைய வறுமை நிலை கண்டீர் என்று சொல்லி ஏனையோர்பாற் செல்லுமிடத்தே; நட்டவர் அல்லார்-வாய்மையாக நட்புச் செய்துள்ளவரையன்றி ஏனையராகிய; நனி மிகு சுற்றம்- மிக மிக நெருங்கிய சுற்றத்தார் தாமும்; பெட்டது சொல்லி -தாம் விரும்பிய குறிப்பு மொழி கூறி; ஆற்றவும் எட்ட வந்து-மிகவுந் தொலைவிலே சென்று; ஓரிடத்தே ஏகி- ஓரிடத்தே தம்முட் கூடி; பெரிது இகழ்ந்து நிற்ப- மிகவும் இகழ்ந்திருப்பார் என்பதாம்.
(விளக்கம்) நட்டவரும் அல்லாரும் சுற்றமும் என எண்ணும்மை கொடுத்து நட்டவரும் ஏதிலரும் சுற்றத்தாரும் என ஓதினும் ஆம். நட்டவர் அல்லார் என ஓதி இச்செய்யுள் நட்பின் சிறப்பினைக் கூறுவதாகக் கொள்க.
இனி, இதனை,
இல்லாரை யெல்லாரு மெள்ளுவர் செல்வரை
எல்லாருஞ் செய்வர் சிறப்பு குறள், 752
என்னுந் திருக்குறளானும்,
உண்டாய் போழ்தின் உடைந்துழிக் காகம்போற்
றொண்டா யிரவர் சூழ்பவே- வண்டாய்த்
திரிதருங் காலத்துத் தீதிலி ரோவென்
றுரைதருவா ரிவ்வுலகத் தில் நாலடி
எனவரும் நாலடியானும்,
இன்சொல்லன் றாழ்நடைய னாயினுமொன் றில்லானேல்
வன்சொல்லி னல்லது வாய்திறவா-என்சொலினுங்
கைத்துடையான் காற்கீ ழொதுங்குங் கடன்ஞாலம்
பித்துடைய வல்ல பிற நீதிநெறிவிளக்கம், 14
எனவரும் குமரகுருபரவடிகளார் மெய்ம்மொழியானும்,
கல்லானே யானுலுங் கைப்பொருளொன் றுண்டாயி
னெல்லாருஞ் சென்றங் கெதிர்கொள்வார்-இல்லானை
இல்லாளும் வேண்டாள்மற் றீன்றெடுத்த தாய்வேண்டாள்
செல்லா தவன்வாயிற் சொல்
எனவரும் நல்வழியானும் உணர்க (48)
பேதைமை
49. தெண்ணீர் பரந்து திசைதொறும் போய்க்கெட்ட
எண்ணெய்கொண்டு ஈட்டற்கு இவறுதல் என்ஒக்கும்
பெண்மனம் பேதித்து ஒருப்படுப்பென் என்னும்
எண்ணில் ஒருவன் இயல்புஎண்ணும் ஆறே.
(இதன் பொருள்) பெண்மனம் பேதித்து-பெண்ணினது மனத்தியல்பினை மாற்றி; ஒருப்படுப்பென் என்னும்-ஒருமுகப்படுத்துவேன் என்று கூறுகின்ற; எண் இல் ஒருவன்- ஆராய்ச்சியில்லாத மடவோனுடைய; இயல்பு எண்ணும் ஆறு- தன்மையை நினையுங் கால்; என்னொக்கும்- அம்முயற்சி எதனை ஒக்குமெனின்; தெண்ணீர் பரந்து திசைதொறும் போய்க் கெட்ட- தெளிந்த நீரிலே பெய்யப்பட்டு நான்கு திசைகளினும் பரவிச் சென்று அழிந்து போன; எண்ணெய் கொண்டு ஈட்டற்கு இவறுதல்-எண்ணெயை மீண்டும் ஒருசேரக் கொண்டுவந்து சேர்த்தற்கு அவாவுதலையே ஒக்கும் என்பதாம்.
(விளக்கம்) பெண்ணின் மனம் இயல்பாகவே பன்முகப்பட்டுச் செல்வதாம், அதனை ஒருமுகப்படுத்த முயலுதல் நீரிற் பெய்யப்பட்டுத் திசையெல்லாம் சிதறிப்போன எண்ணெயை மீண்டும் ஒருசேரக் கூட்டிக் கைக்கோடற்கு விரும்புவது போன்றதொரு பேதைமைத்து என்றவாறு.
பெண்ணின் மனம் ஒருமுகப்படாதது என்னுமிதனை,
ஏந்தெழின் மிக்கா னிளையா னிசைவல்லான்
காந்தையர் கண்கவர் நோக்கத்தான்- வாய்ந்த
நயனுடை யின்சொல்லான் கேளெனினு மாதர்க்
கயலார்மே லாகு மனம் நீதிநெறி விளக்கம், 82
எனபதனானும்,
அன்புநூ லாக வின்சொ லலர்தொடுத் தøத்த காத
லின்பஞ் செய்காமச் சாந்திற் கைபுனைந் தேற்ற மாலை
நன்பகற் சூட்டி விள்ளா தொழுகினு நங்கை மார்க்குப்
பின்செலும் பிறர்கணுள்ளம் பிணையனார்க் கடிய தன்றே
எனவும்
பெண்ணெனப் படுவகேண்மோ பீடில
பிறப்பு நோக்கா
உண்ணிறை யுடைய வல்ல வொராயிர
மனத்த வாகும்
எண்ணிப்பத் தங்கையிட்டா லிந்திரன்
மகளு மாங்கே
வெண்ணெய்க்குன் றெரியுற்றாற் போன்
மெலிந்துபின் னிற்குமன்றே
எனவும் வரும் சிந்தாமணியானும் (1596-7)
மாரியுந் திருவு மகளிர் மனமுந்
தக்குழி நில்லாது பட்டுழிப் படும்
பெருங்கதை, 1-35:156-7
எனவரும் பெருங்கதையானுமுணர்க. இன்னும்,
இனம்போன் றினமல்லார் கேண்மை மகளிர்
மனம்போல மாறு படும் குறள், 822
எனத் திருவள்ளுவனாரும் ஓதுதலும் இத்திருக்குறள் உரையின்கண் ஆசிரியர் பரிமேலழகரும், அவர் மனம் வேறுபடுதல் பெண்மனம் பேதின் றொருப்படுப்பெ னென்னும் எண்ணிலொருவன் என்பதனானும் உணர்க என இவ்வளையாபதிச் செய்யுளையே மேற்கோளாக எடுத்துக் காட்டுதலும் காண்க.
பொது மகளிரியல்பு
50. நீள்முகை கையால் கிழித்து மோக்குமாறு
மாண்வினைப் பாவை மறைநின்று கேட்குறின்
பேணலும் அன்பும் பிறந்துஉழிப் போதுசெய்து
ஆணைப்பெண் ஐய அணைக்குறு மாறே.
(இதன் பொருள்) நீள்முகை- தலைவனே! நீண்ட சிற்றரும்பினைக் கொய்து; கையால் கிழித்து-அஃது அலராமையாலே தன் கையாலதனைக் கிழித்து; அது மோக்குறும்-அதன்கண் மணமில்லா திருக்கவும் அதனை மணமுடைய மலர்போல மோக்கின்ற; மாண்வினைப் பாவை மறை- மாண்புடைய வினைத்திறமமைந்த பாவை போல்வாளாகிய இவள் செய்கையின் கருத்து யாதென; நின்று கேட்குறின் அவள் செயலைக் கண்டுநின்று நீ எம்மை வினவுதியாயின் கூறுதும்; பெண்-(அச்செயல்) பெண்ணானவள்; பேணலும்- தகுதியில்லாதாரை விரும்புதலும்; அன்பும்-அவர் விரும்பாத வழியும் அவரை அவாவுதலும்; பிறந்துழி-இவ்வாறு பேணலும் அவாவும் தம்பாற் றோன்றியவழி; ஆணை-அவ்வாடவனை; பேது செய்து- மனமாற்றஞ் செய்து; அணைக்குறும் ஆறு-அவனைத் தழுவிக்கொள்ளும் செயற்கு இஃதறிகுறியாம் என்பதாம்.
(விளக்கம்) இஃது அரும்பினைக் கொய்து மோக்குமொரு மகளைக் கண்ட தலைவன் அச் செயலின் குறிப்பு யாது எனப் பாங்கினை வினவியவழி வினவப்பட்டான் தற்குறிப்பேற்றமாக அச் செயலின் குறிப்புக் கூறியபடியாம். இனி வளையாபதி என்னுங் காப்பியத்தின்கண் இங்ஙனம் ஒரு நிகழ்ச்சி உளது போலும் என்றூகித்தலும் மிகையன்று.
சிற்றரும்பு, மணமில்லாததாகவும் நுகர்தற்குத் தகுதியில்லாததாகவும் இருக்க அம்மகள் அதனைக் கிள்ளிக் கிழித்து மோக்குமிது அம்மகளிர் தகுதியில்லாதவரையும் தம்மை விரும்பாதவரையும் காமுற்று அவரைத் தழுவுதற்கு ஏற்ற உபாயங்களைச் செய்து வலிந்து தழுவுவதனைக் குறிக்கின்றது எனத் தீய மகளிரின் இயல்பினைக் கூறியபடியாம்.
தீய மகளிர் இயல்பிங்ஙனமாதலைச் சூர்ப்பநகை முதலியோர்பால் காண்க. (50)
இதுவுமது
51.யாறொடு யாழ்ஞெலி கோல்நில வார்கொடிப்
பாறொடு பத்தினி மாபோல் ஒழுகென்று
கூறினள் கூத்தி முதிர்ந்தாள் மகட்குஇவை
வேறுஓர் இடத்து வெளிப்படல் நன்றாம்.
(இதன் பொருள்) முதிர்ந்தாள் கூத்தி-அகவை முதிர்ந்தவளாகிய கணிகை யொருத்தி; மகட்கு- தன் மகளாகிய இளங்கணிகைக்குச் செவியறிவுறுப்பவள்; ஏடி! யாறொடு யாழ் ஞெலிகோல் நிலவு ஆர்கொடி-யாறு போலவும் யாழ் போலவும் தீக்கடைகோல் போலவும் மலர் நிரம்பிய பூங்கொடி போலவும்; பாறொடு பத்தினிமா போல- மரக்கலம் போலவும் கற்புடை மகளிர் போலவும் விலங்குகள் போலவும்; ஒழுகு என்று- நின்பால் வருகின்ற காமுகரிடத்திலே நீ ஒழுகுவாயாக என்று ; கூறினள்- அறிவுறுத்தினள்; இவை- இவ்வுவமைகளின் பொதுத்தன்மை; நன்று வேறு ஓரிடத்து வெளிப்படல் ஆம்- நன்றாக வேறோரிடத்து (விரிவகை யாற் கூறுதும்) ஆங்கு விளக்கமாகும் என்பதாம்.
(விளக்கம்) ஒரு கிழக்கணிகை தன் மகட்கு அறிவுரை கூறுபவள் ஏடி! நீ நின்னை விரும்பி வருகின்ற காமுகரிடத்தே யாறுபோலவும் யாழ் போலவும் தீக்கடைகோல் போலவும் நிலவு போலவும் மரக்கலம் போலவும் கற்புடை மகளிர் போலவும் விலங்குகள் போலவும் நடந்து கொள்வாயாக என்று கூறினள்; அவ்வுவமைகளின் பொதுத்தன்மையை யாம் வேறிடத்திலே கூறுவோம்; அங்கு அவை நன்கு விளக்கமாகும் என்றவாறு. மேலே அவ்வுவமைகளை விரித்து விளம்புவர்.
நெலிகோல்-தீக்கடைகோல். பாறு-மரக்கலம். பாறு என்னும் சொல் மரக்கலம் என்னும் பொருளுமுடைத்தென்பது இவ்வாசிரியர் இதற்கு அப்பொருளே பிற் கூறுதலாற் பெற்றாம்.
பின்னும் இரண்டுவமைகள்
52. ஆய்குரங்கு அஞ்சிறை வண்டினம் போல்க என்று
பாயிரம் இன்றிப் பயிற்றி மொழிந்தனள்
மேவரும் வான்பொருள் தந்துநின் தோள்நம்பி
யாவர் அடைந்தவர்க்கு அவையும் புரைய.
(இதன் பொருள்) நின் தோள் நம்பி- என் மகளே! நின்னுடைய தோள்களைப் பெரிதும் விரும்பி; மேவு அரும் வான்பொருள் தந்து- பெறுதற்கரிய சிறந்த பொருள்களையும் வழங்கி; யாவர்- எந்தக் காமுகர்; அடைந்தவர்க்கு- நின்னை எய்தியவர் அவர்கட் கெல்லாம் நீ ஒழுகுவதற்கு; ஆய் குரங்கு- மரங்களிலேறி இரையை ஆராய்கின்ற குரங்கும்; அம் சிறை வண்டு இனம் அவையும் புரைப -அழகிய சிறகுகளையுடைய அளிக்கூட்டமுமாகிய இவைகளும் உவமையாவனவேயாம்; போல்க-ஆதலால் அவற்றைப் போலவும் ஒழுகக் கடவாய்; என்று பாயிரம் இன்றிப் பயிற்றி மொழிந்தனள்- என்று இவற்றைப் பற்றிய முன்னுரை யாதுங் கூறாமலே மிகவும் கூறுவாளாயினள் என்பதாம்.
(விளக்கம்) அத் தாயாகிய கூத்தி முற்கூறிய யாறு முதலியனவே யன்றிக் குரங்கும் வண்டினமும்கூட நின்னொழுக்கத்திற்கு ஒப்பன ஆதலின் அவற்றைப் போலவும் ஒழுகு என்றாள் என்றவாறு.
இவ்வாறு உவமை மாத்திரமே குறிப்பாகக் கூறினள் பிறிதொன்றுங் கூறிற்றிலள் என்பார் பாயிரமின்றிப் பயிற்றி மொழிந்தனள் என்றார் இவற்றிற்கு இனி யாம் விளக்கங் கூறுதும் கேண்மின்! என்பது கருத்து.
இனி, நின்னை நயப்பார் பலருளராயினும் நீயோ பொருள் மிகுதியாக நினக்கு வழங்குவோரை மட்டுமே ஏற்றுக்கொள்க என்று குறிப்பாற் கூறுவாள் மேவரும் வான்பொருள் தந்து நின் தோள் நம்பி யாவர் அடைந்தவர்க்கு என்று விதந்தோதினள்
நம்பி- விரும்பி. என்னை? நம்பு மேவும் நசையா கும்மே (தொல் உரி. 31) என்பதனானும் அதற்கு அப்பொருளுண்மையறிக. தோள்; இடக்கரடக்கு. (52)
கூத்தி கூறிய உவமைகட்கு விளக்கங் கூறல்
1. ஆறு
53. வாரி பெருகப் பெருகிய காதலை
வாரி சுருங்கச் சுருங்கி விடுதலின்
மாரி பெருகப் பெருகி அறஅறும்
வார்புனல் ஆற்றின் வகையும் புரைப.
(இதன் பொருள்) வாரி பெருகப் பெருகிய காதலை- இனி, கணிகையர் தம்மை விரும்பி வருகின்ற காமுகர் வழங்கும் பொருள் வரவு பெருகுந்துணையும் பெருகிய தம் காதலை; வாரி சுருங்கச் சுருக்கி விடுதலின் -அப்பொருள் வரவு குறையுமளவு குறைத்துப் பின் பொருள் வரவு நின்றவுடன் தங்கா தலையும் துவர நீத்துவிடுதலாலே; மாரி பெருகப் பெருகி- மழைநீர் வரவு பெருகுந்துணையும் பெருகி; அற அறும்-அம்மழை நீர்வரவு அறவே அற்று வறந்துவிடுகின்ற; வார்புனல் ஆற்றன் வகையும் புரைய- நெடிய நீர்ஒழுகும் யாற்றினது தன்மையையும் நிகர்ப்பர் என்பதாம்.
(விளக்கம்) அம்முது கூத்தி யாறுபோல ஒழுகுக என்றதன் கருத்து, யாறானது மழைநீர் வந்து புகுமளவும் பெருகி அது வறத்தலும் வறந்து போவதுபோல நீயும் நின்னை விரும்பும் காமுகர் நினைக்குப் பொருள் மிகுதியாக வழங்குந்துணையும் மிகவும் காதலுடையாள் போன்று ஒழுகுக; அவர் பொருள் வழக்கம் குறையின் நீ நின் காதலையும் குறைத்துக் கொள்ளக் கடவை. பொருள் கெடாவிடின் நீயும் காதலியாது முகமாறி யொழுகக்கடவை என்பதாம் என்றவாறு. (53)
2. யாழ்
54. எங்ஙனம் ஆகியது இப்பொருள் அப்பொருட்கு
அங்ஙனம் ஆகிய அன்பினர் ஆதலின்
எங்ஙனம் பட்டனன் பாண்மகன் பாண்மகற்கு
அங்ஙனம் ஆகிய யாழும் புரைப.
(இதன் பொருள்) இப்பொருள் எங்ஙனம் ஆகியது- கணிகை மகளிர் தாம் விரும்புகின்ற இந்தப் பொருள் யாரிடத்தின்ன்றும் தமக்கு வருகின்றதோ?; அப்பொருட்கு-அந்தப் பொருட் பொருட்டாக; அங்ஙனம் ஆகிய அன்பினர் ஆதலின்-அப்பொருள் தருவாரிடத்து அன்பு காட்டும் இயல்பினராதலாலே; பாண்மகன் எங்ஙனம் பட்டனன் அப்பொழுதே; பாண்மகற்கு அங்ஙனம் ஆகிய- மற்றொரு பாணனுக்கு அவ்வாறே கருவியாகி விடுகின்ற; யாழும் புரைப- யாழையும் ஒப்பாவர் என்பதாம்.
(விளக்கம்) யாழானது தன்னையுடையாள் இறந்து பட்டுழி அவனோடு அழிந்துபடாமல் பின்னும் தன்பால் இசை தருகின்ற பிறனொரு பாண்மகனிடத்தே சேருதல் போன்று, கணிகையாரும் தமக்குப் பொருள் வழங்கியவன் வறியவனாயவிடத்து அவன்பா லன்பு மாறி மற்றுமொரு பொருளுடையான்பாற் சேர்வர் என்றவாறு.
கணிகையாதலின் பாணனையும் யாழையும் உவமையாக எடுத்தனள் என்க. (54)
3. தீக்கடைகோல்
55. கரணம் பலசெய்து கையுற்று அவர்கட்கு
அரணம் எனும் இலர் ஆற்றிற் கலந்து
திரணி உபாயத்தில் திண்பொருள் கோடற்கு
அரணி ஞெலிகோல் அமைவர ஒப்ப.
(இதன் பொருள்) கை உற்றவர்கட்கு -கணிகையர் தம்பாலெய்திய காமுகர் திறத்திலே; பல காரணம் செய்து-அவர் இன்புறு மாற்றாலே பல்வேறு செயல்களையும் செய்து, ஆற்றிற் கலந்து-அவர் விரும்பிய வழியிலே இயங்கி; எனும் அரணம் இலர்-அக் காமுகர்க்குச் சிறிதும் பாதுகாவல் ஆகாதவராய்; திண் பொருள் கோடற்கு-அவரது திண்ணிய பொருள்களைக் கைக்கொள்ளுமாற்றால் அவரை அழித்துவிடுத லாலே; திரணி உபாயத்தில்- சிறிய துய்யாகிய பஞ்சினை மெல்லக் கடைந்து செய்யுமோருபாயத்தாலே அதன்கண்திணிந்த தீயினைக் கோடற்கு அப்பஞ்சினையே அழித்து விடுகின்ற; அரணிஞெலிகோல்- தீக்கடை கோலையே; அமைவர-நன்கு பொதுத்தன்மை பொருந்தி வரும்படி; ஒப்ப- ஒப்பாகுவர் எனபதாம்.
(விளக்கம்) திரணி- நொய்ய பொருள். துரும்பு பஞ்சு முதலியன. திரணியுபாயம்- தீப்பிறப்பிப்போர் நொய்ய துரும்பு முதலியவற்றைக் குழிப்பாண்டத்திட்டுக் கடையுமொரு செயல். இவர் கடையுங்கால் அத்துரும்புக்கு நன்மை செய்வார்போற் கடைகுவர். இங்ஙனம் கடையுமாற்றால் துரும்பினுள் நுண்ணிதாக அடங்கியிருக்கும் தீயினை வெளிப்படுப்பர். தீ வெளிப்படவே அத்துரும்பு அழிந் தொழியுமென்க. எனவே, கணிகை மகளிர் தம்மை விரும்பும் காமுகர் வழிநின்று அவர்க்கிதஞ் செய்வார் போன்று செயல்கள் பலவற்றையுஞ் செய்து அவர் கொண்டுள்ள பொருளனைத்தும் கைக்கொண்டுவிடுவர்; பொருளிழப்பாலே அக்காமுகர் அழிந்துபடுவர்; ஆதலால் கணிகையர் தீக்கடைகோலையே நிகர்ப்பர் என்றவாறு.
அரணம் எனும் இலர் என்றது- பாதுகாவல் சிறிதும் ஆதல் இலராய் என்றவாறு. அரணம்- பாதுகாவல். எனும்- சிறிதும். திண்பொருள் கோடற்கு என்பதனைப் பின்னுங் கூட்டுக.
கணிகையர் காமுகர்க்குப் பெரிதும் அரணமாவார் போன்றொழுகினும் அங்ஙனம் அரணம் ஆதல் இலர். அவர் அழிவிற்கே காரணம் ஆவர் என்பதாம். தீக்கடைகோலும் கடையுங்கால் அதற்கு அரணமாவதுபோற்றோன்றி அழிவிற்கே காரணமாதலுணர்க. (55)
4. திங்கள்
56. நாடொறும் நாடொறும் நந்திய காதலை
நாடொறும் நாடொறும் நைய ஒழுகலின்
நாடொறும் நாடொறும் நந்தி உயர்வுஎய்தி
நாடொறும் தேயும் நகைமதி ஒப்ப.
(இதன் பொருள்) நாள் தொறும் நாள் தொறும் நந்திய காதலை-இனிக் கணிகை மகளிர்தாம் தம்மை விரும்பிய காமுகர் பொருளீயுந்துணையும் நாளுக்கு நாள் வளர்ந்து வருகின்ற காதலுடையார் போற் காட்டி; நாள்தொறும் நாள்தொறும் நய்ய ஒழுகலின்- பின்னர் அக்காமுகர் பொருளீதல் அருகி வருங்காலத்தே நாளுக்கு நாள் அருகிவருகின்ற காதலுடையராய் அக்காமுகர் வருந்தும்படி ஒழுகுதலாலே; நாள்தொறு நாள்தொறும் நந்தி உயர்வு எய்தி- முதற் பகுதியிலே நாளுக்கு நாள் வளர்ச்சிபெற் றுயர்வினை யடைந்தும்; நாள்தொறும் தேயும்-இறுதிப் பகுதியிலே நாளுக்கு நாள் ஒளிமழுங்கித் தேய்தலுடைய; நகைமதி ஒப்பர்- ஒளியுடைய திங்கள் மண்டிலத்தையும் ஒப்பர் என்பதாம்.
(விளக்கம்) கணிகையர் தம்மை விரும்பும் காமுகர் பொருளீயுந்து துணையும் நாளுக்கு நாள் காதல் மிகுவார் போன்று காட்டி, அவர் பொருளீதல் குறையுங் காலத்தே அன்பினையும் நாளுக்கு நாள் குறைத்துக் கோடலாலே ஒளிப்பக்கத்தே நாளுக்கு நாள் வளர்ந்து இருட்பக்கத்தே நாளுக்கு நாள் தேய்ந்தொழியும் திங்கள் மண்டிலத்தையும் ஒப்பர் என்றவாறு. (56)
5. பூங்கொடி
57. வனப்பிலர் ஆயினும் வளமையு ளோரை
நினைத்தவர் மேவர நிற்பமைக்கு அவர்தாம்
கனைத்துடன் வண்டொடு தேனினம் ஆர்ப்பப்
புனத்திடைப் பூத்த பூங்கொடி ஒப்ப.
(இதன் பொருள்) அவர்தாம்-இன்னும் அக்கணிகையர்தாம்; வனப்பு இலராயினும்-அழகில்லா தவராயினும்; வன்மையிலோரை நினைத்து- பொருளுடையவரும் அறிவுவன்மை யிலா தவருமாகிய காமுகக் கயவர்கள் தம்மை விரும்பி வரவேண்டும் என்று கருதி, அவர் மேவர நிற்பமைக்கு-அக்காமுகர் தம்மைப் பெரிதும் விரும்பித் தம்பால் வரும்படி தம்மை ஒப்பனைசெய்து கொண்டு அவர் காணும்படி நிற்றலாலே; புனித்திடை- காட்டினூடே; வண்டொடு தேன் இனம்- ஆண் வண்டும் பெடை வண்டுமாகிய அளிக்கூட்டம்; உடன் கனைத்து- ஒருசேர இசை முரன்று; ஆர்ப்ப- தம்பால் தாமே வந்து ஆராவாரித்து மெய்க்கும்படி; பூத்த- அழகாக மலர்ந்து நிற்கும்; பூங்கொடி ஒப்ப- மலர்க்கொடியையும் நிகர்ப்பர் என்பதாம்.
(விளக்கம்) வன்மையிலோர்- நெஞ்சின் திண்மையிலாத நொய்யர் அவர்-அக்காமுகர். நினைத்து என்றது- தம்மை விரும்பித் தம்பால் வருதல் வேண்டும் என்று கருதி என்றவாறு. நிற்பமைக்கு- நிற்றற்கு- கனைத்து- இசைமுரன்று. வண்டு- ஆண் வண்டு. தேன்-பெடைவண்டு என்க.
கணிகை மகளிர், பொருண்மிக்க காமுகக் கயவர் தம்மைக் கண்டு காமுற்றுத் தம்பால் வரும்படி தம்மை மிகவும் ஒப்பனை செய்துகொண்டு அவர் தம்மைக் காணும்படி உலாவி நிற்றலாலே, வண்டுகள் தம்மை விரும்பி வருதற்பொருட்டுக் காட்டின்கண் அழகாக மலர்ந்து அவ்வண்டுகள் காணும்படி அசைந்து நிற்கும் பூங்கொடிகளையும் ஒப்பாவர் என்றவாறு. (57)
6. மரக்கலம்
58. தம்கண் பிறந்த கழிஅன்பி னார்களை
வன்கண்மை செய்து வலிய விடுதலின்
இன்பொருள் ஏற்றி எழநின்ற வாணிகர்க்கு
அங்கண் பரப்பகத்து ஆழ்கலம் ஒப்ப.
(இதன் பொருள்) தம்கண் பிறந்த கழி அன்பினார்களை-இன்னும் கணிகை மகளிர் தம்மிடத்து முதிர்ந்த காமுடையராகிய ஆடவரை; வன்கண்மைசெய்து- அவர் தமக்கீயுமாற்றால் வறியராய பின்னர்ச் சிறிதும் கண்ணோட்டமில்லாத இகழ்ச்சிகளைச் செய்து; வலிய விடுதலின்- வலிந்து போக்கிவிடுதலாலே; இன்பொருள் ஏற்றி- இனிய பல்வேறு பண்டங்களையும் தம்முள் ஏற்றிக்கொண்டு; எழநின்ற வாணிகர்க்கு- தம்மையே புகலாகக் கருதிக் கடலிலே தம்மை செலுத்தி வருகின்ற வணிகமாக்கள்பால் சிறிதும் இரக்கமின்றி அவரிறந்தொழியும்படி; அங்கண் பரப்பகத்து-அழகிய இடத்தாற் பெரிதும் பரந்துகிடக்கும் அக்கடலின் நடுவே; ஆழ்கலம் ஒப்ப- அவர் பொருளையெல்லாம் தன்னோடு கொண்டு நீருள் மூழ்கி விடுகின்ற மரக்கலத்தையும் ஒப்பர் என்பதாம்.
(விளக்கம்) தம் என்றது- கணிகையாரை. கழியன்பு என்றது ஈண்டு மிக்க காமம் என்றவாறு. வண்கண்மை- கண்ணோட்ட மின்மை.
கணிகை மகளிர் தம்மை விரும்பிவரும் காமுகக் கயவரின் பொருளெல்லாம் தம்பாலகப்படுத்திக் கொண்டு பின்னர் அவரழிந்தொழியும்படி கண்ணோட்டமின்றித் தள்ளிவிடுதலாலே, வணிகரீட்டிய பொருளையெல்லாம் அகப்படுத்திக்கொண்டு அவரைக் கண்ணோட்டமின்றி அகற்றிவிட்டு அப் பொருளோடு கடலினூடு ஆழ்ந்துவிடுகின்ற மரக்கலத்தையும் ஒப்பர் என்றவாறு. (58)
7. கற்புடைமகளிர்
59. ஒத்த பொருளால் உறுதிசெய் வார்களை
எத்திறத் தானும் வழிபட்டு ஒழுகலின்
பைத்தரவு அல்குல்பொன் பாவையின் நல்லவர்
பத்தினிப் பெண்டிர் படியும் புரைப.
(இதன் பொருள்) பைத்துஅரவு அல்குல் பொன் பாவையின் நல்லவர்- நச்சுப் பையினையுடைய பாம்பினது படம்போன்ற அல்குலையுடைய பொன்னாலியன்ற பாவை போலும் அழகையுடைய கணிகை மகளிர்; ஒத்த பொருளால் உறுதி செய்வார்களை- தம்தகுதிக் கேற்ற பொருள் கொடுத்துத் தமது வாழ்க்கையினை நிலைபெறுத்துகின்ற ஆடவர்களை; எத்திறத்தானும்- எல்லா வழிகளானும்; வழிபட்டு ஒழுகலின்- வழிபட்டு நடத்தலாலே; பத்தினிப் பெண்டிர் படியும் புரைப- கற்புடை மகளிர் தன்மையையும் ஒப்பர் என்பதாம்.
(விளக்கம்) கணிகை மகளிர்- தாம் விரும்புகின்ற பொருளைத் தமது தகுதிக்கேற்ப வழங்குகின்ற ஆடவர்களை எவ்வாற்றானும் வழிபாடுசெய்து பேணி யொழுகுதலாலே அவர்கள் கற்புடை மகளிரையும் ஒப்பர் என்றவாறு (59)
8. விலங்கு
60. வீபொரு ளானை அகன்று பிறனும் ஓர்
மாபொரு ளான்பக்கம் மாண நயத்தலின்
மேய்புலம் புல்லற மற்றோர் புலம்புகு
மாவும் புரைப மலர் அன்ன கண்ணார்.
(இதன் பொருள்) மலர் அன்ன கண்ணார்- தாமரை மலர்போன்ற அழகிய கண்ணையுடைய கணிகை மகளிர்; வீ பொருளானை அகன்று- தம்மை நயந்து தமக்கு வழங்கி அழிந்துபோன பொருளையுடைய ஆடவனைக் கைவிட்டுப்போய்; ஓர் பிறன்மா பொருளான் பக்கம்- மற்றோர் ஏதிலனாகிய பெரிய செல்வன்பால் சென்று; மாண நயத்தலின்- மாட்சிமை யுண்டாக விரும்புதலாலே; மேய்புலம் புல் அற- தாம் தொன்று தொட்டு மேய்கின்ற நிலம் புல் அற்று வறிதாய விடத்தே; மற்று ஓர் புலம்புகு மாவும்- வேறோர் புன்னிரம்பிய நிலத்தைத் தேடிச் செல்லும் விலங்குகளையும்; புரைய ஒப்பர் என்பதாம்.
(விளக்கம்) வீ பொருளான்-அழிந்த பொருளையுடையோன்-வறுமையுற்றவன்.
கணிகை மகளிர் பொருள் அழிந்தவனைக் கைவிட்டுப் புதுவதாக வேறொரு பொருளுடையான்பாற் புகுதலாலே, தாம் மேய்கின்ற நிலம் புல்லற்று வறிதாயவுடன் மற்றுமொரு புல் நிரம்பிய நிலத்திற் புகுகின்ற விலங்குகளையும் ஒப்பரென்றவாறு. (60)
9. குரங்கு
61. நுண்பொரு ளானை நுகர்ந்திட்டு வான்பொருள்
நன்குடை யானை நயந்தனர் கோடலின்
வம்புஇள மென்முலை வாள்நெடுங் கண்ணவர்
கொம்பிடை வாழுங் குரங்கும் புரைப.
(இதன் பொருள்) வம்பு இளமெல்முலை வாள்நெடு கண்ணவர்- கச்சணிந்த இளமையும் மென்மையுமுடைய முலையினையும் வாள் போன்ற நெடிய கண்களையும் உடைய கணிகை மகளிர்; நுண் பொருளானை நுகர்ந்திட்டு- தேய்ந்தழிகின்ற பொருளையுடையவனை அவன் செல்வந் தேயுந்துணையும் அவனோடு கூடி இன்புற்றிருந்து அப் பொருள் அழிந்த பின்னர்; நன்கு வான் மற்றறொருவனை விரும்பிப் போதலாலே; கொம்பிடை வாழுங் குரங்கும் புரைப-மரக் கொம்புகளிலே வாழ்ந்து அவற்றுள் ஒன்றன்கண்ணுள்ள மலர் காய் கனி முதலியவற்றைத் தின்று தீர்த்தபின் மற்றொருகிளையிற் றாவிச் செல்லுகின்ற குரங்கையும் ஒப்பர் என்பதாம்.
(விளக்கம்) நுண்பொருள் தேய்ந்து நுண்ணியதாகிய பொருள் அஃதாவது அழிந்து குறைவுற்ற சிறுபொருள்.
கணிகையர் ஒருவன்பாலுள்ள பொருளைச் கவர்ந்த பின்னர் அவன் வறியனாக மற்றொரு பொருளுடையானைச் சேர்வதனால் ஒரு கொம்பிலுள்ள இரை தீர்ந்த பின்னர் மற்றொரு கிளைக்குத் தாவுகின்ற குரங்கையும் ஒப்பர் என்றவாறு. (61)