குருப் பெயர்ச்சி ராசி பலன் : தனுசு!
வீரத்துடன் விவேகமாகவும் செயல்படும் நீங்கள், செய்நன்றி மறவாதவர்கள். கலகலப்பாகப் பேசுவதுடன் கறாராகவும் இருப்பீர்கள். ஏறக்குறைய கடந்த ஓராண்டு காலமாக சகடை வீட்டில் அமர்ந்து ஆறாக்கி, வேறாக்கி உங்களை கூறு போட்டு பார்த்த குருபகவான் 28.05.2013 முதல் 12.06.2014 வரை உங்கள் ராசிக்கு 7-ம் வீட்டில் அமர்ந்து உங்களை ஆள இருக்கிறார். முதலில் உங்கள் செல்போனின் ரிங்க் டோனை மாற்றுங்கள். குளியலறைப் பாடகராக இருந்த நீங்கள், கடந்த ஓராண்டு காலமாக முணகிக் கொண்டும், முகம் வாடியும் இருந்தீர்களே! இனி பாட ஆரம்பிப்பீர்கள்.
எதிலும் ஆர்வமில்லாமல் எதையோ இழந்ததைப் போல் சோர்ந்து, வதங்கியிருந்தீர்களே! இனி உற்சாகம் பிறக்கும். பெற்ற பிள்ளையிடம் கூட பேசுவதற்கு பயந்து நடுங்கினீர்களே! உறவினர், நண்பர்களெல்லாம் வெற்றிலை, பாக்கிற்கு பதிலாக உங்கள் வீட்டு விஷயங்களை தானே மென்றார்கள். பலரால் பகடைக்காயாக உருட்டப்பட்டீர்களே! எல்லாம் இருந்தும் எதுவும் இல்லாததைப் போல ஒரு வெறுமையை உணர்ந்தீர்களே! கொடுத்தப் பணத்தை கேட்கப் போய் பொல்லாப்பானதே! அடிக்கடி விபத்துகளையும் சந்தித்தீர்களே! வழக்குகளால் அலைக்கழிக்கப்பட்டீர்களே! இனி இந்த அவல நிலையெல்லாம் மாறும். வீட்டிற்கு ஏன் வருகிறோம் என்ற நிலை மாறி வீட்டிற்கு சீக்கிரம் செல்லலாம் என்ற நிலை இனி வரும்.
ஈகோவாலும், உப்புக்கு பிரயோஜனம் இல்லாத பிரச்னையாலும் கணவன்-மனைவி பிரிந்து இருந்தீர்களே! இனி சச்சரவு முடிந்து ஒன்று சேர்வீர்கள். மனம் விட்டுப் பேசுவீர்கள். தாம்பத்யம் இனிக்கும். முடங்கிக் கிடந்த வாகனம் ஓடும். இரண்டு, மூன்று முறை முயன்றும் முடியாமல் போன விஷயங்கலெல்லாம் இனி சாதகமாக உடனே முடியும். எதிரியைப் போல் பார்த்த பிள்ளைகள் இனி பாசமாக இருப்பார்கள். சந்தர்ப்ப, சூழ்நிலையால் பிரிந்துச் சென்று எதிர் முகாமில் இணைந்த உறவினர், நண்பர்கள் தன் தவறை உணர்ந்து வலிய வந்துப் பேசுவார்கள்.
குழந்தை பாக்கியம் கிடைக்கும். திருமணம் தள்ளிப் போனவர்களுக்கு கூடி வரும். வெற்றி பெற்ற மனிதர்களின் நட்பு கிடைக்கும். நகர எல்லையைத் தாண்டி வீட்டு மனை வாங்குவீர்கள். குடும்பத்தினருடன் சென்று குலதெய்வப் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். சங்கம், டிரஸ்டில் கௌரவப் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். அயல்நாட்டு தொடர்புடைய நிறுவனத்தில் வேலைக் கிடைக்கும். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் நண்பர்களாவார்கள்.
குரு உங்கள் ராசியைப் பார்ப்பதால் மருந்து, மாத்திரை இனி குறையும். எளிய உடற்பயிற்சி, இயற்கை உணவு மூலமாகவே ஆரோக்யம் கூடும். மற்றவர்களைக் குறைக் கூறும் போக்கை மாற்றிக் கொள்வீர்கள். எதிர்மறை எண்ணங்கள் நீங்கும்.
குருபகவான் லாப வீட்டை பார்ப்பதால் உங்களின் ஆளுமைத் திறன், நிர்வாகத் திறன் அதிகரிக்கும். விலை உயர்ந்த ஆடை, ஆபரணம் வாங்குவீர்கள். ஷேர் மூலம் பணம் வரும். மூத்த சகோதரங்களால் ஆதாயம் உண்டு. வேற்றுமதத்தவர்களால் நன்மை உண்டு.
உங்கள் ராசிக்கு 3-ம் வீட்டை குரு பார்ப்பதால் எங்குச் சென்றாலும் மதிக்கப்படுவீர்கள். தன்னிச்சையாக சில முடிவுகள் எடுப்பீர்கள். கோவில் கும்பாபிஷேகத்தை முன்னின்று நடத்துவீர்கள். நேர்மறை எண்ணங்கள் பிறக்கும். வெளிநாடு செல்ல விசா கிடைக்கும். வசதிக் கூடும்.
குருபகவானின் சஞ்சாரம்:
28.5.2013 முதல் 25.6.2013 வரை உங்கள் பூர்வ புண்யாதிபதியும்-விரையாதிபதியுமான செவ்வாயின் மிருகசீர்ஷம் நட்சத்திரத்தில் செல்வதால் குழந்தை பாக்யம் உண்டாகும்.
வீடு மாறுவீர்கள். தூரத்து சொந்தம் தேடி வரும். புதிதாக வீடு, மனை வாங்குவீர்கள். பழைய கடன் பிரச்னை தீரும். பிள்ளைகளால் சமூக அந்தஸ்து உயரும். மகளின் திருமணத்தை ஊரே மெச்சும்படி சிறப்பாக நடத்துவீர்கள். சகோதரங்களின் அரவணைப்பு அதிகரிக்கும். புது வாகனம் வாங்குவீர்கள். சொத்துப் பிரச்னை சுமூகமாகும்.
26.6.2013 முதல் 28.8.2013 வரை மற்றும் 27.1.2014 முதல் 12.4.2014 வரை ராகு பகவானின் திருவாதிரை நட்சத்திரத்தில் குருபகவான் செல்வதால் ஷேர் மூலம் பணம் வரும். பிதுர்வழி சொத்துப் பிரச்னை முடிவுக்கு வரும். வழக்கில் வெற்றி பெறுவீர்கள். அரசால் அனுகூலம் உண்டு. வேற்றுமதத்தவர்கள், வெளிநாட்டிலிருப்பவர்களால் உதவிக் கிடைக்கும். நவீன ரக கேமரா செல்போன் வாங்குவீர்கள். புதிய நண்பர்களால் ஆதாயமடைவீர்கள்.
29.8.2013 முதல் 12.11.2013 வரை உங்களின் ராசிநாதனும்-சுகாதிபதியுமான குருபகவான் தன் நட்சத்திரமான புனர்பூசம் நட்சத்திரத்தில் செல்வதால் வீடு கட்ட அப்ரூவல் கிடைக்கும். தினந்தோறும் எதிர்பார்த்து ஏமாந்த தொகை கைக்கு வரும். தள்ளிப் போன காரியங்கள் உடனே முடியும். திருமணம், சீமந்தம், கிரகப்பிரவேசம் போன்ற சுப நிகழ்ச்சிகளால் வீடு களைக்கட்டும். தாயாருக்கு இருந்த முதுகு வலி, மூட்டு வலி நீங்கும். புது வேலைக் கிடைக்கும்.
13.11.2013 முதல் 26.1.2014 வரை குருபகவான் புனர்பூசம் நட்சத்திரத்திலும் 27.1.2014 முதல் 11.03.2014 வரை திருவாதிரை நட்சத்திரத்திலும் வக்ர கதியில் செல்வதால் இக்காலக்கட்டத்தில் நினைத்தது நிறைவேறும். கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். பூர்வீக சொத்து கைக்கு வரும். பிரபலங்களுக்கு நெருக்கமாவீர்கள். சிலர் நல்ல காற்றோட்டம், குடி நீர் வசதியுள்ள வீட்டிற்கு மாறுவீர்கள். உங்களைச் சுற்றியிருப்பவர்களில் நல்லவர்கள் யார் என்பதை கண்டறிவீர்கள். நவீன ரக மின்னணு, மின்சார சாதனங்கள் வாங்குவீர்கள்.
வியாபாரத்தில் கடன் பிரச்னையாலும், பணப்பற்றாக்குறையாலும் புது முதலீடுகள் செய்ய முடியாமல் தவித்தீர்களே! இனி பண உதவி கிடைத்து தொழிலை விரிவுப்படுத்துவீர்கள். ஆர்வம் பிறக்கும். அதிரடி லாபம் உண்டு. பெரிய வாய்ப்புகளும் வரும். பாக்கிகளும் வசூலாகும். கடையை விரிவுபடுத்தி நல்ல வேலையாட்களை பணியில் அமர்த்துவீர்கள். புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். பணியாட்களிடம் கறாராக இருங்கள். தள்ளிப் போன ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். சந்தையில் உங்கள் நிறுவனத்தின் மதிப்புக் கூடும். வர்த்தக சங்கத்தில் பதவி கிடைக்கும். புதிய கிளைகள் தொடங்குவீர்கள். கூட்டுத்தொழிலில் பங்குதாரர்களுடன் இருந்த பிரச்னைகள் ஓயும். விலகிச் சென்ற பங்குதாரர் மீண்டும் வந்து இணைவார். பெட்ரோல், மருந்து, ஷேர், ஸ்பெகுலேஷன், கல்வி, பண்ணை வகைகளால் ஆதாயம் உண்டு.
உத்தியோகத்தில் உயரதிகாரிகளாலும், சக ஊழியர்களாலும் ஓரங்கட்டப்பட்டீர்களே! இனி மரியாதைக் கிடைக்கும். வேலைச்சுமை குறையும். உங்களை குறை சொன்னவர்களெல்லாம் இனி புகழ்வார்கள். உங்களின் மாறுபட்ட அணுகுமுறையால் மேலதிகாரியை வியக்க வைப்பீர்கள். உங்களின் உழைப்பிற்கு அங்கீகாரமும் கிடைக்கும். சக ஊழியர்களுடன் இருந்து வந்த பனிப்போர், ஈகோ பிரச்னைகள் நீங்கும். நீண்ட நாளாக கேட்டுக் கொண்டிருந்த இடம் மாற்றம் கேட்ட இடத்திற்கே கிடைக்கும். எதிர்பார்த்த சம்பள உயர்வு, பதவி உயர்வு தடையின்றி வரும்.
கன்னிப் பெண்களே! உடன்பிறந்தவர்களுடன் இருந்த கருத்து மோதல் நீங்கும். விரக்தி, சோம்பலில் இருந்து மீள்வீர்கள். காதல் கனியும். திருமணமும் வெகு விமர்சையாக முடியும். வேலையில்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். வெளிநாடு செல்வீர்கள்.
மாணவ-மாணவிகளே! வகுப்பறையில் முதல் வரிசையில் அமருங்கள். நினைவாற்றல் கூடும். நல்ல நண்பர்கள் அறிமுகமாவார்கள். கூடுதல் மதிப்பெண் பெறுவீர்கள். சக மாணவர்களின் சந்தேகத்தை தீர்க்குமளவிற்கு முன்னேறுவீர்கள். இசை, இலக்கியம், ஓவியப் போட்டிகளில் பரிசு பெறுவீர்கள்.
கலைத்துறையினரே! இழந்த வாய்ப்பை மீண்டும் பெறுவீர்கள். வேற்றுமொழிகளில் பிரபலமாவீர்கள். உங்களின் கலை மற்றும் படைப்புத் திறன் வளரும். மூத்த கலைஞர்களை மதிப்பீர்கள். எதிர்பார்த்த சலுகைகளும் கிடைக்கும்.
அரசியல்வாதிகளே! வேறு அணிக்கு மாற வேண்டி வரும். தொகுதி மக்கள் மத்தியில் புகழடைவீர்கள். கட்சித் தலைமை உங்களை நம்பி சில ரகசியப் பொறுப்புகளை ஒப்படைக்கும். சகாக்கள் மத்தியில் உங்கள் கருத்திற்கு ஆதரவுப் பெருகும்.
விவசாயிகளே! சூரிய காந்தி, எள், ஆமணக்கு போன்ற எண்ணெய் வித்துகளால் ஆதாயம் உண்டு. பழைய கடன் தீரும்.
இந்த குரு பெயர்ச்சி பதுங்கியிருந்த உங்களை பளீச்சென முன்னேற வைப்பதுடன் காசு, பணம் சொத்து சுகத்தையும் தரும்.
பரிகாரம்:
பெருமாள்.