புகழ்ச்சிக்கும் இகழ்ச்சிக்கும் காரணம் என்ன? குட்டிக்கதை
ஒரு ஊரில் பணக்காரன் ஒருவன் இருந்தான். அவனுக்குக் குழந்தைகள் இல்லை. இருப்பினும், அவன் கருமியாகவே இருந்தான்.
ஊர் மக்கள் அனைவரும் அவனைக் குறை கூறி வந்தார்கள்.
ஒருநாள், அந்தக் கருமி ஒரு துறவியைச் சென்று சந்தித்தான்.
அவன் துறவியிடம், “சுவாமி! நான் இறந்த பிறகு, என்னுடைய சொத்துக்கள் அனைத்தையும் தரும காரியங்களுக்குப் பயன்படுத்திக் கொள்ள எழுதி வைத்து விட்டேன். இருந்தாலும், என்னை இந்த ஊர் மக்கள் என்னைப் பாவி என்று திட்டுகிறார்கள். ஏன் என்று தெரியவில்லை?” என்றான்.
அதற்குத் துறவி, “இங்கு உனக்கு பசுமாடு, பன்றிக் கதையைச் சொல்கிறேன். அதன் பிறகு ஏன் உன்னைத் திட்டுகிறார்கள் என்று தெரிந்து கொள்” என்றார்.
கருமியும், “சுவாமி சொல்லுங்கள்” என்றான்.
துறவியும் கதை சொல்லத் தொடங்கினார்.
“ஒரு சமயம் பன்றி ஒன்று பசு மாட்டைச் சந்தித்து வருத்தத்துடன், ‘பசுவே, உன்னைப் பற்றியும், இன் இயல்பைப் பற்றியும் மக்கள் எல்லோரும் புகழ்ந்து பேசுகிறார்கள். அது உண்மைதான். நீ, மக்களுக்குத் தேவையான பாலை வழங்குகிறாய்... ஆனால் நானோ உன்னை விட அதிகமாகத் தருகிறேன். என் இறைச்சியை மக்கள் உண்ணப் போகிறார்கள். என் தொடைக்கறியை ஆசையாய்த் தின்பார்கள். என் பாதங்களைக் கூட மென்று தின்பார்கள். என் உடலின் எந்தப் பகுதியையும் அவர்கள் விடப் போவதில்லை. என் உடலையே முழுமையாகத் தரப் போகிறேன். இருந்தாலும் என்னைப் புகழாமல் என்னை இழிவாகப் பேசுகிறார்கள். இதன் காரணம் என்னவென்று சொல்ல முடியுமா?’ என்று கேட்டது.
இதைக் கேட்ட அந்தப் பசுமாடு சிறிது நேரம் சிந்தித்தது.
பிறகு அது பன்றியைப் பார்த்து, ‘நான் உயிருடன் இருக்கும் போதே மக்களுக்குப் பயன்படுகிறேன். அதனால் என்னை எல்லோரும் புகழ்கிறார்கள். நீயோ இறந்த பின்புதான் பயன்படுத்தப்படுகிறாய். அதனால்தான் உன்னை இகழ்கிறார்கள்’ என்றது.
துறவி சொன்ன கதையைக் கேட்ட அந்தக் கருமிக்கு தன்னுடைய தவறு தெரிந்தது.