Author Topic: கதையில் ஒரு விதை 3  (Read 683 times)

Offline thamilan

கதையில் ஒரு விதை 3
« on: March 12, 2016, 07:01:43 PM »

                             தேடி வரும் தெய்வ உதவி


முக்காலமும் உணர்ந்த துறவி அவர். கடவுளைத் தொடர்ந்து தியானித்ததால்.கடவுளே நேரில் வந்து நிற்கும் அளவுக்கு சக்தி படைத்தவர். ஆற்றங்கரையோரம் ஆசிரமம் அமைத்து தங்கி இருந்தார்.
அவர் மேல் சுற்றுப்புற கிராம மக்கள் மிகுந்த பாசத்துடன் இருந்தனர். சாமியின் வரவால் கிராமமே செழிப்பாக இருக்கிறது என்பது அவர்கள் நம்பிக்கை.
      ஒரு நாள் அவர் நித்திரையில் இருந்தபோது, ஆசிரமக் கதவு தடதடவென தட்டப்பட்டது. நித்திரை கலைந்த கோபத்துடன் கதவைத் திறந்தார். அங்கே ஒரு மாடு மேய்ப்பவன் நின்று கொண்டிருப்பதை கண்டு, 'என்ன சங்கதி'? என்று கேட்டார் .
      "சாமி ஆத்துல வெள்ளம் வருதுங்க. அது தான் தகவல் சொல்ல வந்தேன்" என்றான்.
         கோபமாக இருந்த சாமி, "அதையேன் என்னிடம் சொல்கிறாய்? உனக்குப் பயமாக இருந்தால் ஓடி ஒளிந்து கொள்." என்று சொல்லி விட்டு மறுபடி நித்திரையில் ஆழ்ந்தார். சிறிது நேரத்தில் படுக்கை ஈரமானது. கண்ணைத் திறந்த துறவி, ஆசிரமத்துக்குள் தண்ணீர் புகுந்திருப்பதைக் கண்டு எழுந்து நின்றார். நீரின் வேகம் அதிகரித்தது. நீரின் வேகத்தில் ஆசிரமத்து சுவர்கள் ஆட்டம் கண்டு விழ ஆரம்பித்தன. துறவின் மார்பளவுக்கு நீர் சூழ்ந்தது. இறைவனை எண்ணி  தவம் செய்யலானார்.
அப்போது பதற்றமான குரலில் அவரை அழைத்தபடி வந்தான் ஒரு படகோட்டி. "சாமீ, சீக்கிரம் படகில் ஏறுங்க. அணைக்கட்டு உடஞ்சிட்டுதாம். ஊருல ஒருத்தரும் தப்ப முடியாத நிலை. நீங்க எங்களுக்கு முக்கியம். ஏறிக்குங்க சாமீ தப்பிச்சிக்கலாம்." என்றான்.

           அற்ப பதராக அவனைப் பார்த்த சாமி, "நீ யாரடா என்னை தப்பிக்க வைப்பதற்கு! கடவுள் அருள் பெற்றவன் நான். என்னை காக்க ஆண்டவன் இருக்கிறான்!" என்றபடி தியானத்தை தொடர்ந்தார். கழுத்தை தாண்டிய தண்ணீர் மூச்சை முடக்கத் தொடங்கியது. அருகில் இருந்த மரத்தின் மேல் ஏறிக்கொண்டு கண்களை மூடி தியானத்தில் ஆழ்ந்தார்.

         காதருகே ராட்சத வண்டின் ரீங்காரம் கேட்டு கண்களைத் திறந்தார். அருகே கயிறு ஒன்று தொங்கிக்கொண்டிருந்தது. கயிற்றின் மறுமுனையைப் பார்த்தார். மேலே ஒரு ஹெலிகாப்டர். அதில் இருந்த ராணுவ உதவியாளர்கள்  "கமான்! கயிற்றை பிடித்து மேலே வாங்க" என்று கூறினார்கள்.
        அலட்சியமாக கயிற்றை தள்ளிவிட்டு விட்டு மறுபடியும் தியானத்தில் ஆழ்ந்தார். வெள்ளம் மேலும் அதிகரித்தது. துறவி தண்ணீருக்குள் முழ்கி இறந்தார்.

           அவரது ஆன்மா மேலுலகம் சென்றபோது. அவர் கடும் கொந்தளிப்புடன் காணப்பட்டார். "எங்கேயா அந்தக் கடவுள்? அவனை எத்தனை வருடம் தியானித்திருப்பேன்? நன்றி கெட்ட கடவுள். கடைசி நிமிடம் வரை தியானித்தும் காட்சி தந்தது காப்பாற்றாத அவனெல்லாம் உண்மையில் கடவுள் தானா? நாக்கை பிடுங்கி கொள்வது போல நாலு வார்த்தை கேட்கணும். எங்கேயா அந்த ஆளு?" என்று ஏக  வசனத்தில் கொந்தளித்தார்.
     எதிர்பட்டார் கடவுள். வழக்கமாக கும்பிடு போடும் துறவி, இம்முறை வணங்கவில்லை. மாறாக, “உன்னை கும்பிட்டதுக்கு என்னை ஏமாத்தி கழுத்தறுத்து விட்டாயே”. என்றார் கோபமாக.

             “பக்தா நான் உனக்கு உதவியதை மறந்து நீ இப்படி பேசலாகாது" என்றார் கடவுள்.

           “நீ உதவியிருந்தா நான் எதுக்கு இங்கே வந்து நிற்கப் போறேன்?" என்றார் துறவி.
         "என்ன பக்தா இப்படிக் கூறிவிட்டாய்..... மாடு மேய்ப்பவன் உன்னை எச்சரித்தானே. அவன் நான் அனுப்பியவனே. படகே இல்லாத ஊரில் படகோட்டி எங்கிருந்து வந்தான்? அவனும் எனது தூதனே . அதை யெல்லாம் விடு. மரத்தில் பறவை போல ஒண்டி யிருந்த உன்னை சரியாகக் கண்டு கயிறு வீசியதே ஹெலிகாப்டர், அது உனக்காக மட்டுமே நான் அனுப்பின கடைசி உதவி. கடவுள் மானிடர்களுக்காக எப்போது மேலோக காஸ்ட்யுமில் வர மாட்டார். சக மனிதர்கள் மூலமே வருவார். வாய்ப்பு தருவார். இதை புரிந்து கொள்ளாத நீ எப்படி முக்காலமும் உணர்ந்த துறவி என்று பெயரேடுத்தாயோ?" என்றார் கடவுள்.

            நொந்து நூலான துறவி, கடவுளின் காலைப் பிடித்து கதறி அழுதார்.

       சரி கதையை விட்டு வெளியில் வருவோம்.வாய்ப்புகளும் கடவுள் போலத் தான். பொற்காசுகள் கூரையை பிய்த்துக் கொண்டு கொட்டாது. வாயில் கதவை புதிய வாய்ப்புகள் தரும் மனிதர்கள் மூலம் தான் தட்டும். அவற்றை சரியாக புரிந்து கொண்டு பயன்படுத்திக் கொள்வதே புத்திசாலித்தனம். உங்களை நோக்கி வரும் ஒவ்வொரு புதிய வாய்ப்புகளையும் நிராகரிக்காமல் ஆழ்ந்து சிந்தித்து, பிறகு ஏற்றுக் கொள்வது பற்றி தீர்மானியுங்கள் .ஒரு செல்வந்தரை பொருத்தமட்டில், கதவை தட்டும் ஒவ்வொருவரின் முகமும் ஒரு பிளாங் செக் போலவே இருக்கும். அதில் எவ்வளவு தொகை எழுதலாம் என்பதே அவரது நோக்கமாக இருக்கும். அதனால் தான் அவரிடம் செல்வம் சேர்கிறது என்று உணருங்கள்.