தூர தேசத்தில் ஓர் அந்தகார வேளையில்
நிலவின் பிடியிலிருக்கும்
மலைமுகட்டில் அமர்ந்திருக்கிறேன்.
சுழன்றோடும் காலத்தின் பிடியில் சிக்கி
தனியனாய் நின்றிருப்பவனுக்கு
அம்மா என்பவளின் நினைவுகள் மட்டும்
இறுக கைகோர்த்து அமர்ந்திருக்கிறது
எத்தனை துன்பங்களை புதைத்திருந்தாலும்
எப்பொழுதும் புன்னகையை ஏந்தி இருந்திருக்கின்றது உன் முகம்.
உன் விரல் கோர்த்து நடையிடுவதை விடவும்
கீழே விழுந்து நான் எழுந்திருக்கும் நொடிக்காக அமைதியாக காத்திருக்கும்
வித்தியாசமானவளாய் இருந்தாய்
இன்று உன்
தளர்ந்த நடைகளும்,
மூச்சிறைக்கும் வார்த்தைகளும்
என்னை நிலைகுலைய செய்கின்றன
யாருமே அறிந்திட முடியாத தற்கொலையை பரீட்சித்து பார்த்த
நாட்களில்
தன்னையறியாமல்
என் தலைகோதி அமர்ந்திருந்திருக்கிறாய்.
மொத்தக் குடும்பத்தையும் பிணைக்கும்
ஒற்றைக்கண்ணியாய் இருந்த நீ
நூலறுந்த பட்டம் போல
அங்கும் இங்குமாய் அல்லாடுவதை
காண சகிப்பதில்லை எனக்கு.
எவ்வளவு பக்கத்தில் நான் இருந்தாலும்
உனக்கு அது தொலைவு தான்.
பக்கத்து ஊரிலிருந்தாலும்,
பக்கத்து அறையில் இருந்தாலும்,
அது உனக்குத் தொலைவுதான்.
மற்றவரின் பிரிவுகளை வெறும் 'பிரிவு' மட்டுமே,
உன்னுடனான பிரிவு
என்னை அத்தனையிலும் இருந்து
பிரித்து வைக்கிறது.
பண்டிகை நாட்களிலிருந்து என்னை விடுவித்துக் கொண்ட காலங்களிலும்
தவறாமல் ஒலிக்கும்
உன் அலைப்பேசி அழைப்புகளை
நான் நிராகரித்து திரிந்திருக்கிறேன்.
எப்பொழுதாவது யாரோ கொடுக்கும் பண்டிகையின் பட்சணங்களில்
ஒளிந்திருக்கும் யாரோ ஒருவரின் 'அம்மாவின்'
புன்னகையின் பின்னால் உன்னை தேடிக்கொண்டே இருக்கிறேன்.
இந்த இடைவெளிகளை எதனைக் கொண்டாவது நிரப்பிட வேண்டும்.
அறுத்துக் கொள்ள விரும்பாத அந்த
கண்ணிகளை மீட்டெக்க வேண்டும்.
என்னை விடவும்,
என் பைத்தியக்காரத்தனங்களை தாங்கி நின்ற உன்னிடம் தஞ்சமடைய வேண்டும்.
என் பிரிய தேவதையின் அணைப்பில்
நான் பார்த்து ரசித்த
அதே மலைமுகட்டின் உச்சியில்
தனியனாய்
அம்மா என்பவளின் நினைவுகளோடு மட்டும் அமர்ந்திருக்காமல்
நிலவொளியில் உன் மடிமீது மீண்டும்
தலை சாய்த்திட வேண்டும்.