மேலை நாட்டு கலையுலகில் மைக்கேல் ஆஞ்சலோ ஒரு பிரகாசமான நட்சத்திரம்.
அவர் உன்னதமான ஓவியர். சிகரப் புகழ் பெற்ற ஒரு சிற்பி.
அவர் தூரிகையும், உளியும் ஞானியினுடைய நாவைப் போன்றவை.
அதனால் கிறிஸ்தவர்கள் அவரை "புனித மைக்கேல் ஆஞ்சலோ" என்று அழைத்தனர்.
இத்தாலி சிஸ்டைன் ஆலயத்தின் கூரையில் அவர் வரைந்த பைபிள் கதைக் காட்சிகள் உலகப் புகழ் வாய்ந்தவை.
அவர் இயேசு பெருமானின் ஓவியத்தை வரைந்து கொண்டிருந்தார்.
ஓவியம் முடியும் நிலையில் இருந்தது.
இயேசுவின் முகம் மட்டும் சரியாக வரவில்லை.
அவர் முகத்தில் இருக்க வேண்டிய மென்மை, பெண்மை, தெய்வீகம் வர்ணங்களில் வரவில்லை.
அவர் பல நாள் முயன்றார். அவர் முயற்சி தோல்வியிலேயே முடிந்தது.
அவர் துயரத்தில் ஆழ்ந்தார்.
எனக்கு என்ன ஆயிற்று? அந்தி வானத்து சூரியன் போல வர்ணஜாலம் செய்யும் தூரிகைக்கு என்ன ஆயிற்று?
அவர் சிந்தித்தார். சட்டென்று அவருக்கு நினைவு வந்தது.அவர் ஒரு நண்பரிடம் சண்டை போட்டிருந்தார்.அவர் மேல் ஏற்பட்ட கோபத்தில் உள்ளம் கொந்தளித்துக் கொண்டிருந்தது.
இப்போது அவருக்கு புரிந்து விட்டது. எரிமலையில் எப்படி பூக்கள் பூக்கும்?
கோபம் எப்படி கருணையை வரைய முடியும்?
இயேசுவின் உபதேசம் ஒன்று அவர் நினைவுக்கு வந்தது.
' நீ பலிபீடத்தினிடத்தில் உன் காணிக்கையைச் செலுத்த வந்து, உன் பேரில் உன் சகோதரனுக்கு குறை உண்டென அங்கே நினைவு கூருவாயாகில், அங்கேதானே பலிபீடத்தின் முன் உன் காணிக்கையை வைத்துவிட்டுப் போய், முன்பு உன் சகோதரனோடு ஒப்புரவாகி, பின்பு வந்து உன் காணிக்கையை செலுத்து'
அவர் ஆலயத்தை விட்டு வெளியே ஓடினார். நண்பரிடம் சென்று தம்மை மன்னிக்கும்படி வேண்டினார்.
நண்பரும் மன்னித்தார்.
இடியும் மின்னலுமாயிருந்த அவர் மனம் இப்போது சாந்தமாக இரு ந்தது.
ஆலயம் வந்தார். துரிகையை எடுத்தார்.இயேசுவின் முகம் ஓரிரு கணங்களில் முடிந்து விட்டது.
அந்த முகத்தில் இருக்க வேண்டிய மென்மை, பெண்மை, தெய்வீகம் எல்லாம் அற்புதமாக வந்துவிட்டன.
பரிசுத்தமான ஒருவருடைய ஓவியத்தை வரைவதற்கே பரிசுத்தமான மனம் தேவையென்றால், பரிசுத்தமான இறைவனை வழிபட எவ்வளவு பரிசுத்தம் வேண்டும்?
ஆனால் என்ன நடக்கிறது?
சோப்பையே அழுக்காகுவது போலப் பலர் வழிபாட்டையே அழுக்காக்கிக் கொண்டிருக்கின்றனர்.
பரிசுத்தமான இறைவனை வழிபட எத்தனை பேர் பரிசுத்தமாக செல்லுகிறார்கள்.
அசிங்கத்தை மிதித்த காலோடு நாம் வீட்டுக்குள் கூட செல்வதில்லை. ஆனால் கோபம், குரோதம், பொய்மை, பொறாமை, காமம், களவு வஞ்சகம், வக்கிரமம் என்று எத்தனை அசிங்கங்களை இதயத்த்ல் ஏந்திக் கொண்டு ஆலயங்களுக்குப் போகிறோம்?
இறைவனை வழிபடச் செல்லும் போது சுத்தமாக செல்ல வேண்டும் என்பதற்காகத்தான் ஆற்றக்கரைகளில் கோயில்களைக் கட்டினார்கள். ஆறு இல்லாத இடங்களில் குளங்களை கட்டினார்கள்.
பள்ளிவாசல்களில் நீர்நிலையங்களை கட்டினார்கள்.
ஆனால் இன்ன நடக்கிறது?
உடல் தூய்மை வெறும் சடங்காகிவிட்டது.
அங்கசுத்தி செய்வது தொழுகைக்கு முன் ஒவ்வொரு முஸ்லீம்களுக்கும் கடமையாக இருக்கிறது.
அங்கசுத்தியில் ஒருவர் எந்த அங்கத்தை கழுவுகிறாரோ அந்த அங்கம் செய்த பாவம் அழுவப்படும் என இறைதூதர் கூறியிருக்கிறார்.
நீரால் புறஅழுக்கு போகும், அகஅழுக்கு எப்படி போகும்?
யார் ஒருவர் அங்கத்தை கழுவும் போது 'இறவா! இ ந்த அங்கத்தால் தெரிந்தோ தெரியாமலோ நான் செய்த பாவங்களை மன்னித்துவிடு' என மனமுறுகி வேண்டுகிறாரோ அவரது பாவங்கள் கழுவப்படும்.
இதைத்தான் அங்கசுத்தி நல்ல முறையில் செய்வது என் இறைதூதர் கூறுகிறார்.
அதவது தண்ணீரால் அல்ல கண்ணீரால் செய்வது தான் உண்மையான அங்கசுத்தி.
ஆனால் என்ன நடக்கிறது?
அவசர அவசரமாக அங்கங்களை நீரால் நனைத்துகொண்டு ஓடுகிறார்கள்.அங்கசுத்தி வெறும் சடங்காகி விட்டது.
கிறிஸ்துவத்தில் ஞானஸ்நானம் செய்வார்கள். அதற்காக தலையை தண்ணீரால் கழுவுவார்கள்.இதும் வெறும் சடங்காகிற்று.
அதனால் தான் இயேசு பெருமான் ' நான் உன்னை நீரால் அல்ல, நெருப்பால் ஞானஸ்நானம் செய்கிறேன்' என்று சொன்னார்.
இறைவனை அகசுத்தியோடு தொழுங்கள். பிறர் பார்த்து மதிக்க வேண்டும் என தொழாதீர்கள்.
இறைவனின் ஆலயத்தில் பாவம் செய்பவர்கள் எத்தனை பேர்!
பாவம் செய்வதற்காகவே ஆலயம் செல்வோர் எத்தனை பேர்!
இதயம் இறைவனின் ஆலயம். அது பாவ அழுக்குகளால் நிரம்பி வழிந்தால் அதி இறைவன் பிரவேசிக்க மாட்டான்.
ஒருவன் பாவங்களை செய்து கொண்டு இறைவனை வழிபடுகிறான் என்றால் அது வழிபாடு அல்ல.
இறைவன் பரிசுத்தன். பரிசுத்தமே அவன் வழிபாடு!
பரிசுத்தத்தால் வழிபாடு. பரிசுத்தத்துக்காகவே வழிபாடு!