பருவத்தின் முதல் மழை நாளொன்றில்
உன் கை பற்றி மழை ரசித்து அமர்ந்திருக்கிறேன்.
குடையில்லா தினங்களின் மழையை விடவும் அழகாய் இருக்கிறது
மழை நனைத்த உன் பிஞ்சு விரல்கள்.
குளிருக்கு அடங்கும் சிறு பறவையாய்
என் முந்தானை போர்வையில்
முகம் மறைத்து சிரிக்கிறாய்,
மழையின் ரீங்காரத்தை விடவும்
பேரழகாய் இருக்கிறது
உன் தெற்றுப்பல் சிரிப்பு
விழிகளிடையே வழியும் சிறு துளி மழை நீர்
உன் நாவை வந்தடைய வித்தை காட்டுகிறாய்,
உன்னில் என்னை காணும் இந்த காலம் தான் இப்படியே உறைந்துவிடாதா?
சின்னஞ் சிறிய உன் கூந்தல் முடிப்பில் காற்றின் அசைவில் எங்கிருந்தோ
வந்து விழுகிறது ஓர் இறகு
மகுடம் ஏறியிருக்கும் இறகை உதிர்த்த பறவை
இப்பொழுது மகிழ்ந்திருக்கும் தானே?
சாரலில் நனையாதிருக்க உன் தலை மறைத்திட்ட இலை அறிந்திருக்குமா
இந்த குட்டி இளவரசிக்கு குடையாய் வாய்த்த பேறை?
உன் மென்பஞ்சு கைகளால்
நீயும் எனக்கு குடை விரிக்கிறாய்,
பெய்யென பெய்யும் பெருமழையும்
அடங்கிப் போகிறது
குடை விரிக்கும் உன் சிறுவிரல்களின் முன்.
மழைக்கு அழகு மண் வாசனை என முகம் சுருக்கி வாசனை நுகரும்
நீ மழையதிகாரம் எழுதுகிறாய்
மின்னல் வெட்டி சிரிக்கும்
உன் பேரன்பின் மழையில்
நான் மீண்டுமொரு முறை நனைந்து
மகளதிகாரம் எழுதுகிறேன்...