தமிழ்ப் பூங்கா > வாழ்வியல் கருவூலங்கள் ( நூல் )

~ புறநானூறு ~

<< < (2/64) > >>

MysteRy:
புறநானூறு, 6. (தண்ணிலவும் வெங்கதிரும்)
பாடியவர்: காரிகிழார்.
பாடப்பட்டோன்: பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி.
திணை: பாடாண்.
துறை: செவியறிவுறூஉ: வாழ்த்தியலும் ஆகும்.
=======================================

வாடாஅது பனிபடு நெடுவரை வடக்கும்
தெனாஅது உருகெழு குமரியின் தெற்கும்
குணாஅது கரைபொரு தொடுகடல் குணக்கும்
குடாஅது தொன்றுமுதிர் பொளவத்தின் குடக்கும்
கீழது முப்புணர் அடுக்கிய முறைமுதற் கட்டின்

நீர்நிலை நிவப்பின் கீழும் மேலது
ஆனிலை உலகத் தானும், ஆனாது
உருவும் புகழும் ஆகி விரிசீர்த்
தெரிகோல் ஞமன்ன் போல, ஒரு திறம்
பற்றல் இலியரோ நின்திறம் சிறக்க

செய்வினைக்கு எதிர்ந்த தெவ்வர் தேஎத்துக்
கடற்படை குளிப்ப மண்டி, அடர்ப் புகர்ச்
சிறுகண் யானை செவ்விதின் ஏவிப்
பாசவற் படப்பை ஆர்எயில் பலதந்து
அவ்வெயில் கொண்ட செய்வுறு நன்கலம்

பரிசில் மாக்கட்கு வரிசையின் நல்கிப்
பணியியர் அத்தை நின் குடையே, முனிவர்
முக்கண் செல்வர் நகர்வலஞ் செயற்கே;
இறைஞ்சுக, பெருமநின் சென்னி, சிறந்த
நான்மறை முனிவர் ஏந்துகை எதிரே;

வாடுக, இறைவ நின் கண்ணி, ஒன்னார்
நாடுசுடு கமழ்புகை எறித்த லானே;
செலீஇயர் அத்தை, நின் வெகுளி, வால்இழை
மங்கையர் துனித்த வாள்முகத்து எதிரே;

ஆங்க, வென்றி எல்லாம் வென்றுஅகத்து அடக்கிய
தண்டா ஈகைத் தகைமாண் குடுமி!
தண்கதிர் மதியம் போலவும் தெறுசுடர்
ஒண்கதிர் ஞாயிறு போலவும்
மன்னிய, பெரும! நீ நிலமிசை யானே

அருஞ்சொற் பொருள்:-

வடாஅது = வடக்கின் கண்ணது
தெனாஅது = தெற்கின் கண்ணது
உரு = அச்சம்
கெழு = பொருந்திய
குணாஅது = கிழக்கின் கண்ணது
குடாஅது = மேற்கின் கண்ணது
தொன்று = பழமை
முதிர் = முதிர்ச்சி
பெளவம் = கடல்
குடக்கு = மேற்கு
புணர் = சேர்க்கை
முறை = ஒழுங்கு
கட்டு = வகுப்பு
நிவத்தல் = உயர்தல்
ஆனிலை உலகம் = பசுக்களின் உலகம் (சொர்கம்)
ஆனாது = அமையாது.
கோல் = துலாக்கோல்
ஞமன் = துலாக்கோலின் முள்முனை
திறம் = பக்கம், கூறுபாடு, வலிமை, குலம்
உறுதல் = நன்மையாதல், பயன்படல்
பணியியர் = தாழ்க
சென்னி = தலை
கண்ணி = தலையில் அணியும் மாலை
ஒன்னார் = பகைவர்
கமழ் = மணக்கும்
செலீஇயர் = செல்வதாக (தணிவதாக)
துனித்த = ஊடிய
வாள் = ஒளி
தண்டா = தணியாத (நீங்காத)
தகை = தகுதி
மாண் = மாட்சிமை பெற்ற
தண் = குளிர்ந்த
தெறு = சுடுகை
மன்னுதல் = நிலைபெறுதல்
மிசை = மேல்பக்கம்

இதன் பொருள்:-

வாடாஅது=====> சிறக்க

வடக்கே பனி நிலைபெற்றிருக்கும் நெடிய மலைக்கு (இமய மலைக்கு) வடக்கிலும், தெற்கே அச்சம் பொருந்திய குமரி ஆற்றுக்குத் தெற்கிலும், கிழக்கே கரையை முட்டும் ஆழமான (தோண்டப்பட்ட) கடலுக்கு கிழக்கிலும், மேற்கே மிகப் பழமையான கடலுக்கு மேற்கிலும், நிலம், ஆகாயம், சுவர்க்கம் என்று சேர்ந்துள்ள மூன்றில், நிலத்திற்குக் கீழும், சுவர்க்கத்திற்கு மேலேயும் அடங்காது உன்னைப்பற்றிய அச்சமும் உன் புகழும் பெருகி, பெரிய பொருள்களைச் சமமாக ஆராயும் துலாக்கோல் (தராசு) போல் ஒரு பக்கம் சாயாது இருப்பாயாக. உன் படை, குடி முதலியன சிறப்பதாக.

செய்வினைக்கு=====> வாள்முகத்து எதிரே

உன் செயலை எதிர்த்த உன் பகைவர் நாட்டில் கடல் புகுந்தது போல் பெருமளவில் உன் படையையும், சிறிய கண்களையுடைய யானைகளையும் செலுத்தி, அடர்ந்த பசுமையான விளைநிலம் மற்றும் ஊர்ப்புறங்களையும், பாதுகாக்கும் கடத்தற்கரிய அரண்களையும் அழித்து, அவற்றுள் அடங்கிய அழகுடன் செய்யப்பட்ட அணிகலன்களைப் பரிசிலர்க்கு அவர்கள் தகுதிக்கேற்ப அளிப்பாயாக. சடைமுடி தரித்த, மூன்று கண்களையுடைய சிவபெருமான் கோயிலை வலம்வரும் பொழுது மட்டும் உன் கொற்றக்குடை தாழட்டும். சிறந்த நான்கு வேதங்களைக் கற்ற அந்தணர்கள் தங்கள் கைகளை உயர்த்தி உன்னை வாழ்த்தும் பொழுது மட்டும் உன் தலை வணங்கட்டும். பகைவர்களின் நாட்டில் (உன்னால் போரில்) மூட்டப்பட்ட தீயினால் மட்டும் உன் தலையில் உள்ள மாலை வாடட்டும். தூய வேலைப்பாடுகள் நிறைந்த அணிகலன்கள் அணிந்த மகளிர் உன்னோடு ஊடும் பொழுது மட்டும் அவர்கள் எதிரில் உன் கோபம் தணியட்டும்.

ஆங்க, வென்றி=====> நிலமிசை யானே

அடையவேண்டிய வெற்றிகளை எல்லாம் அடைந்தும் மனத்தில் அடக்கத்தோடும் குறையாத ஈகைக் குணத்தோடும் உள்ள மாட்சிமை பொருந்திய குடுமி!தலைவா!, நீ குளிர்ந்த சுடருடைய திங்களைப் போலவும், வெப்பமான சுடருடைய கதிரவனைப் போலவும் இந்நிலத்தில் நிலைபெற்று வாழ்வாயாக

MysteRy:
புறநானூறு, 7.
பாடியவர் : கருங்குழல் ஆதனார்.
பாடப்பட்டோன் : சோழன் கரிகாற் பெருவளத்தான்.
திணை : வஞ்சி.
துறை: கொற்ற
வள்ளை: மழபுல வஞ்சியும் ஆம்.
=======================================

களிறு கடைஇய தாள்,
கழல் உரீஇய திருந்துஅடிக்,
கணை பொருது கவிவண் கையால்,
கண் ஒளிர்வரூஉம் கவின் சாபத்து

மா மறுத்த மலர் மார்பின்,
தோல் பெயரிய எறுழ் முன்பின்,
எல்லையும் இரவும் எண்ணாய், பகைவர்
ஊர்சுடு விளக்கத்து அழுவிளிக் கம்பலைக்

கொள்ளை மேவலை; ஆகலின், நல்ல
இல்ல ஆகுபவால் இயல்தேர் வளவ!
தண்புனல் பரந்த பூசல் மண் மறுத்து
மீனின் செறுக்கும் யாணர்ப்
பயன்திகழ் வைப்பின், பிறர் அகன்றலை நாடே.

அருஞ்சொற்பொருள்:-

கடைஇ = செலுத்தி
கடைஇய = செலுத்திய
தாள் = கால்
உரீஇ = உருவி
திருந்துதல் = ஒழுங்குபடுதல், அழகுபடுதல்
பொருதல் = பொருந்தல்
பொருது = போர்செய்து
கவிதல் = வளைதல்
வண்மை = வள்ளல் தன்மை
கவின் = அழகிய
சாபம் = வில்.
மா = திருமகள், பெரிய, பரந்த
மறுத்த = நீக்கிய
தோல் = யானை
பெயர்த்தல் = நிலை மாறச் செய்தல்
எறுழ் = வலிமை
முன்பு = வலிமை
எல்லை = பகற்பொழுது
விளக்கம் = ஒளி
விளி = கூப்பிடு
கம்பலை = ஒலி
மேவல் = ஆசை
இயல் = இலக்கணம்
பூசல் = பெரிதொலித்தல், பலரறிய வெளிப்படுதல்
செறுத்தல் = அடக்குதல்
யாணர் = புது வருவாய்
வைப்பு = ஊர்
அகலல் = விரிதல்
தலை = இடம்.

இதன் பொருள்:-

களிறு=====> சாபத்து

யானையைச் செலுத்திய கால்களும் வீரக்கழல்கள் உராய்ந்த அடிகளும், அம்பு தொடுத்துக் குவிந்த கையும், கண்ணைக் கவரும் ஒளியுடன் கூடிய வில்லும்

மா மறுத்த=====> கம்பலைக்

திருமகள் விரும்பும் அகன்ற மார்பும், யானையை வெல்லும் வலிமையும் உடையவனே! இரவு பகல் என்று கருதாமல் பகவரின் ஊரைச் சுடும் தீயின் ஒளியில், அங்குள்ளவர்கள் கதறி அழுது ஒலி யெழுப்பமாறு

கொள்ளை=====> நாடே

அவர்கள் நாட்டைக் கொள்ளை அடிப்பதில் நீ விருப்பமுடையவன். ஆகவே, குளிர்ந்த நீர் பெருகியோடும் உடைப்புகளை மண்ணால் அடைக்காமல் மீனால் அடைக்கும் புதிய வருவாயினையுடைய பயனுள்ள ஊர்களையுடைய அகன்ற இடங்களுடன் கூடிய உன் பகவர்களின் நாட்டில் நல்ல பொருள்கள் இல்லாமல் போயின. நன்கு செய்யப்பட்ட தேர்களையுடைய வளவனே!

MysteRy:


புறநானூறு, 8.(கதிர்நிகர் ஆகாக் காவலன்)
பாடியவர் : கபிலர்.
பாடப்பட்டோன் : சேரமான் கடுங்கோ வாழியாதன்
திணை : பாடாண்.
துறை: இயன் மொழி; பூவை நிலையும் ஆகும்.
======================================

வையம் காவலர் வழிமொழிந்து ஒழுகப்
போகம் வேண்டிப் பொதுச்சொல் பொறாஅது
இடம் சிறிது என்னும் ஊக்கம் துரப்ப
ஒடுங்கா உள்ளத்து ஓம்பா ஈகைக்
கடந்து அடு தானைச் சேரலாதனை
யாங்கனம் ஒத்தியோ, வீங்குசெலல் மண்டிலம்!
பொழுதுஎன வரைதி; புறக்கொடுத்து இறத்தி;
மாறி வருதி; மலைமறைந்து ஒளித்தி;
அகல்இரு விசும்பி னானும்
பகல்விளங் குதியால் பல்கதிர் விரித்தே.

அருஞ்சொற்பொருள்:-

காவலர் = அரசர்
வழிமொழிதல் = வழிபாடு கூறுதல்
போகம் = இன்பம்
துரப்புதல் = துரத்துதல், முடுக்குதல்
ஒடுங்கா = சுருங்காத
ஓம்புதல் = பாதுகாத்தல்
கடத்தல் = போர் செய்தல்
அடுதல் = கொல்லுதல்
வீங்கு = மிக்க
செலவு = பயணம்
மண்டிலம் = வட்டம்
வரைதல் = நிர்ணயித்தல்
இறத்தல் = நீங்குதல், கடத்தல்
அகல் = அகன்ற

இதன் பொருள்:-

பெரிய வட்டவடிவமான பாதையில் செல்லும் கதிரவனே! உலகைக் காக்கும் மன்னர்கள் பலரும் வழிபட்டு நடக்க, இன்பத்தை விரும்பி, இவ்வுலகு அனைவருக்கும் பொது என்ற சொல் பொறுக்காமல், தன் நாடு சிறியது என்ற எண்ணத்தால் துரத்தப்பட்டு, ஊக்கமுடைய உள்ளத்தையும், குறையாத ஈகையையும் பகைவரை வெல்லும் படையையும் உடையவன் சேரமான் செல்வக் கடுங்கோ வாழியாதன். உனக்குப் பகல் இரவு என்ற எல்லை உண்டு; பகல் முடிந்ததும் புறமுதுகிட்டு ஓடுவாய்; மாறி மாறி வருவாய்; மலைகளில் மறைந்து விடுவாய்; அகன்ற, பெரிய ஆகாயத்தில் பகலில் மட்டும் பல கதிர்களை விரித்து விளங்கும் நீ, எவ்வாறு சேரமான் செல்வக் கடுங்கோ வாழியாதனுக்கு நிகராவாய்?

பாடலின் பின்னணி

கதிரவனோடு சேரமான் செல்வக் கடுங்கோ வாழியாதனை ஒப்பிட்டு, கதிரவன் சேரமானுக்கு இணையானவன் இல்லை என்று இப்பாடலில் கபிலர் கூறுகிறார்.

MysteRy:
புறநானூறு, 9.
பாடியவர் : நெட்டிமையார்.
பாடப்பட்டோன் : பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி.
திணை : பாடாண்.
துறை: இயன் மொழி. இயல்பைக் கூறுதல் இயன் மொழி எனப்படும்.
=========================================

ஆவும் ஆனியற் பார்ப்பன மாக்களும்
பெண்டிரும் பிணியுடை யீரும் பேணித்
தென்புலம் வாழ்நர்க்கு அருங்கடன் இறுக்கும்
பொன்போற் புதல்வர்ப் பெறாஅ தீரும்

எம்அம்பு கடிவிடுதும் நும்அரண் சேர்மின்என
அறத்துஆறு நுவலும் பூட்கை மறத்தின்
கொல்களிற்று மீமிசைக் கொடிவிசும்பு நிழற்றும்
எங்கோ வாழிய குடுமி; தங்கோச்
செந்நீர்ப் பசும்பொன் வயிரியர்க்கு ஈத்த
முந்நீர் விழவின் நெடியோன்
நன்னீர்ப் பஃறுளி மணலினும் பலவே.

அருஞ்சொற்பொருள்:-

ஆன் = பசு
இயல் = தன்மை
ஆனியல் (ஆன்+இயல்) = பசு போன்ற தன்மை.
பேணுதல் = பாதுகாத்தல்.
இறுத்தல் = செலுத்தல்.
கடி = விரைவு
அரண் = காவல்.
நுவல் = சொல்
பூட்கை = கொள்கை, மேற்கோள்.
மீ = மேலிடம், உயர்ச்சி
மீமிசை = மேலே.
செந்நீர் = சிவந்த தன்மையுடைய (சிவந்த)
பசும்பொன் = உயர்ந்த பொன்
வயிரியர் = கூத்தர்.
முந்நீர் = கடல்
விழவு = விழா
நெடியோன் = உயர்ந்தவன் (பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதியின் முன்னோர்களில் ஒருவன்)
பஃறுளி = பழந்தமிழ் நாட்டிலிருந்த ஓர் ஆற்றின் பெயர்

இதன் பொருள்:-

ஆவும்=====> தீரும்

பசுக்களும், பசுபோன்ற இயல்புடைய பார்ப்பன மக்களும், பெண்டிரும், பிணியுடையோரும், இறந்தவர்களுக்கு இறுதிக் கடன் செய்வதற்கு நல்ல புதல்வர்கள் இல்லாத ஆண்களும்.

எம்அம்பு=====> மணலினும் பலவே

பாதுகாவலான இடத்தைச் சென்றடையுங்கள். விரைவில் எங்கள் அம்புகளை ஏவப் போகிறோம்” என்று அறநெறி கூறும் கொள்கை உடையவனே! கொல்கின்ற வலிய யானையின் மேல் உள்ள உன் கொடி வானில் நிழல் பரவச் செய்கிறது. எங்கள் அரசே! குடுமி! நீ வாழ்க! செம்மையான உயர்ந்த பொன்னைக் கூத்தர்க்கு அளித்துக் கடல் விழா எடுத்த உன் முன்னோன் நெடியோனால் உண்டாக்கப்பட்ட பஃறுளி ஆற்று மணலினும் பல காலம் நீ வாழ்க!

MysteRy:


புறநானூறு, 10.(குற்றமும் தண்டனையும்)
பாடியவர் : ஊன்பொதி பசுங்குடையார்.
பாடப்பட்டோன் : சோழன் நெய்தலங்கானல் இளஞ்சேட் சென்னி.
திணை : பாடாண்.
துறை: இயன் மொழி. இயல்பைக் கூறுதல் இயன் மொழி எனப்படும்.
=========================================

வழிபடு வோரை வல்லறி தீயே;
பிறர்பழி கூறுவோர் மொழிதே றலையே;
நீமெய் கண்ட தீமை காணின்
ஒப்ப நாடி அத்தக ஒறுத்தி;
வந்து, அடி பொருந்தி முந்தை நிற்பின்
தண்டமும் தணிதிநீ பண்டையிற் பெரிதே;
அமிழ்துஅட்டு ஆனாக் கமழ்குய் அடிசில்
வருநர்க்கு வரையா வசையில் வாழ்க்கை
மகளிர் மலைத்தல் அல்லது மள்ளர்
மலைத்தல் போகிய சிலைத்தார் மார்ப;
செய்து இரங்காவினைச் சேண்விளங் கும்புகழ்
நெய்தலங் கானல் நெடியோய்!
எய்த வந்தனம்யாம் ஏத்துகம் பலவே.

அருஞ்சொற் பொருள்:-

வல் = விரைவு
தேறல் = தெளிதல்.
ஒறுத்தல் = தண்டித்தல்.
அடுதல் = சமைத்தல்
ஆனாமை = தணியாமை
கமழ்தல் = மணத்தல்
குய் = தாளிதம்
அடிசில் = சோறு, உணவு.
வரை = அளவு
வரையா = குறையாத, அளவில்லாத
வசை = பழி.
மலைத்தல் = போர்செய்தல்
விரோதித்தல்
மள்ளர் = வலிமையுடையவர்.
சிலை = வானவில்
தார் = மாலை.
இரங்கல் = உள்ளம் உருகுதல் (வருந்துதல்)
சேண் = தூரம்.
நெடியோன் = பெரியோன்.
எய்துதல் = அணுகுதல், அடைதல்
ஏத்துதல் = புகழ்தல்.

இதன் பொருள்:-

உன்னை வழிபடுவோரை நீ விரைவில் அறிவாய். பிறர்மீது குற்றம் கூறுவோர் சொல்லை நீ ஏற்றுக் கொள்ள மாட்டாய். உண்மையிலே ஒருவன் செய்தது தவறு (தீமை) என்று நீ கண்டால் நீதி நூலுக்கு ஏற்ப ஆராய்ந்து தகுந்த முறையில் அவனைத் தண்டிப்பாய். தவறு செய்தவர்கள், உன் முன்னர் வந்து அடிபணிந்து நின்றால் நீ முன்பு அளித்த தண்டனையைப் பெரிதும் குறைப்பாய். அமிழ்தத்தைச் சேர்த்துச் சமைத்தது போல் உண்ணத் தெவிட்டாத மணம் கமழும் தாளிதத்தோடு கூடிய உணவை வருவோர்க்கு குறைவின்றி வழங்கும் பழியற்ற இல்வாழ்க்கை நடத்தும் உன் மகளிர் ஊடல் செய்வதன்றி, பகை வேந்தர் உன்னோடு போர் செய்வதில்லை. வானவில் போன்ற மாலையை அணிந்த மார்பையுடையவனே! வருந்தத்தக்க செயலைச் செய்யாத தன்மையும், பரந்த புகழும் உடையவனே! நெய்தலங்கானம் என்னும் ஊரைச் சார்ந்த பெரியோனே! யாம் உன்னை அணுகி வந்தோம். உன்னைப் பலவாறாகப் புகழ்கிறோம்.

Navigation

[0] Message Index

[#] Next page

[*] Previous page

Go to full version