கிருஷ்ணன் வந்தாலும் சரி
முருகனே வந்தாலும் சரி
சம்மதமே எனக்கு
திரும்பிய திசை எங்கும்
கம்சனும் அசுரனுமே
வதம் செய்ய வா ...!
விடியலில் துவங்கி
அஸ்தமனம் ஆனதையும்
குடும்பத்தையும் மறந்து
செயலற்ற ஆறறிவோடு
புரளும் மிருகத்தை
வதம் செய்ய வா ..!
கண்ணில் காண்பதெல்லாம்
கை வர பேராசையில்
கன்னக்கோல் வைக்கும்
கயவர்களை
வதம் செய்ய வா ....!
பொது நலம் கருதா
அரசு ஊழியத்தில் ஊழலும்
செய்யும் நாட்டின்
சாபக்கேடு(களை)எடுக்க
வதம் செய்ய வா ...!
ருசி கூட்டும் உப்பிற்கே
வரிக்கட்ட மறுத்த பாட்டன்
தேசத்தில் பசியாற்றும்
அன்னத்திற்கு வரிக்கட்ட
வைத்த அசுரனை
வதம் செய்ய வா ...!
காய்ந்த வயரோடு படியேற
எட்டாதே செவிக்கு கல்வி
உணவோடு எழுத்தறிவித்தவன்
தெய்வமானான் செல்வம்
இருந்தாலே சிறப்பான கல்வியென
கொக்கரிக்கும் கோமாளியை
வதம் செய்ய வா ...!
இயற்கையை அழித்து
மணலை விற்று
நீர் வரத்தை குறைத்து
புதிதாய் நோய் தொற்று
வஞ்சகம் செய்பவரை
வதம் செய்ய வா ...!
புலம்பி புலம்பியே
சகித்து வாழ பழகிவிட்டோம்
திரும்பிய பக்கமெல்லாம்
அசுரர்கள் தீர்வு காண
வதம் செய்ய வா -பின்பு
கொண்டாடுவோம்
தித்திக்கும் தீபாவளி ....!