இளமை
ராம் மனோகர் லோகியா உத்தரபிரதேசத்தின் அம்பேத்கர் மாவட்டத்தில் உள்ள அக்பர்பூரில், 1910, மார்ச், 23 ல் மார்வாரிக் குடும்பத்தில் பிறந்தார். தந்தை ஹீராலால் காங்கிரஸ் தலைவர். தாய்சாந்தா ஓர் ஆசிரியர். சிறுவயதிலேயே தாயை இழந்த ராம், தந்தையால் வளர்க்கப்பட்டார். தந்தையின் தேசியப் பணிகளை இளம் வயது முதலே கண்ணுற்ற ராம், இயல்பாகவே தேசியவாதியாக வளர்ந்தார். மகாத்மா காந்தியின் தீவிர விசுவாசியாக இருந்த ஹீராலால், அவரை அடிக்கடி சந்திக்கச் சென்ற போதெல்லாம், தனது மகன் ராமுடன் செல்வார். அப்போதே காந்தியடிகள் மீது ராமுக்கு பிடிப்பு ஏற்பட்டது. காந்தியின் சுய கட்டுப்பாடு, ஆன்மிக வலிமை, தேசிய சிந்தனை ஆகியவை ராமுக்கு வழிகாட்டின. தனது பத்தாவது வயதிலேயே தந்தையுடன் சேர்ந்து சத்தியாகிரகத்தில் ஈடுபட்டார் ராம்மனோகர் லோகியா.
இவருக்கு 10 வயதாய் இருந்த போது 1920-ல் பால கங்காதர திலகர் மறைவை அடுத்து சிறு கடையடைப்பு நடத்தினார். இதுவே ராமின் முதல் விடுதலைப் போராட்டம் ஆகும். காந்தியை சந்திக்கும் வாய்ப்பு பெற்றிருந்த ராம், 1921 ல் ஜவஹர்லால் நேருவைச் சந்தித்தார். அவரது முற்போக்கு சிந்தனைகள் ராமை வசீகரித்தாலும், சில கருத்துக்களில் முரண்பட்டார். நேருவுடனான கொள்கை மாறுபாடுகளை வாழ்வின் இறுதிவரை ராம் மனோகர் லோஹியா வெளிப்படுத்தி இருக்கிறார். இருப்பினும் இருவரும் ஒத்த சிந்தனைகளுடன் இயங்கினர்.
அதற்கு நாடு முழுவதும் பலத்த எதிர்ப்பு கிளம்பியது. இந்தியாவுக்கு 'டொமினியன் அந்தஸ்து வழங்க அதாவது இங்கிலாந்தின் ஆளுகைக்கு உட்பட்ட நாடுகளில் இந்தியாவுக்கு சுயாட்சியுடன் பிரித்தானியாவின் மேலாதிக்கத்தை உறுதிப்படுத்த 1928 ல் சைமன் கமிஷன் இந்தியா வந்தபோது மாணவராக இருந்த ராம், 'சைமனே திரும்பிப் போ' போராட்டத்தைத் தனது பகுதியில் நடத்தினார்.
1929-ல் காசி ஹிந்து பல்கலைக்கழகத்தில் இன்டர்மீடியட் படிப்பை முடித்த ராம், தனது பி.ஏ. (ஹானர்ஸ்) படிப்பை கொல்கத்தா பல்கலைக்கழகத்தில் (வித்யாசாகர் கல்லூரி) முடித்தார். பிறகு, ஜெர்மனியிலுள்ள பெர்லின் பலகலைக்கழகத்தில் படிக்க விரும்பி, ஜெர்மன் மொழியைக் கற்றார். கல்வியில் சிறந்து விளங்கியதால், தனது மேற்படிப்புக்காகக் கல்வி உதவித்தொகையும் பெற்றார். 'உப்புச் சத்யாகிரகம்' என்ற தலைப்பில் காந்தியின் சமூக- பொருளாதாரக் கோட்பாடுகளை ஆய்வு செய்தார். அதற்காக முனைவர் பட்டம் பெற்றார். 1932-ல் இந்தியா திரும்பினார் ராம்.