மழை காலத்தில் நம் ஊரில் மனிதர்கள் நடமாட்டம் என்பதே ரொம்ப ரிஸ்க்கானது. இதில் வாகனத்துடன் மழையில் என்றால் ஆபத்திற்கும், விபத்திற்கும் கேட்கவே வேண்டியதில்லை. அதிலும் மாநகரப் போக்குவரத்து நெரிசலில் மேடும், பள்ளமுமான சாலையில் வாகனம் ஓட்டுபவர் நிலை - அந்தோ பரிதாபம்.
மழை நேரத்தில் வாகனம் ஓட்டும்போது கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள்...
மழை பெய்யத் தொடங்கும் முதல் சில மணி நேரங்கள், வாகன ஓட்டிகளுக்கு மிகவும் ஆபத்தானது. சாதாரண நாட்களில், என்ஜின் ஆயில், கிரீஸ் ஆகியவை சாலையில சிந்தி படிந்திருக்கும். அதனுடன் மழை நீரும் சேரும்போது சாலை மிகவும் வழுக்கலாக ஆகிவிடும். தொடர்ந்து மழை பெய்யும்போது, வழுக்கும் படலம் நீக்கப்பட்டுவிடும் என்றாலும், ஆரம்பத்தில் கவனமாக இருப்பது நல்லது.
ஈரமான, வழுக்கும் சாலையில் சறுக்குவதற்கான வாய்ப்பு அதிகம் என்பதால், மிதமான சீரான வேகத்தில் செல்ல வேண்டும். மழை நேரத்தின்போது சாதாரண வேளையை போல் "பிரேக்' சிறப்பாக செயல்படுவதில்லை என்பதை ஞாபகத்தில் வையுங்கள்.
சற்று முன்பாகவே "பிரேக்'கை அழுத்துவதும், வழக்கமான அழுத்தத்தை விட மெதுவாகவும் பிரேக்கை அழுத்துவது நல்லது. அது உங்களுக்கும், உங்களுக்கு முன்னால் உள்ள வாகனத்துக்கும் நிறுத்தும் தூரத்தை அதிகரிப்பதோடு, உங்களுக்கு பின்னால் வரும் வாகன ஓட்டிக்கு நீங்கள் நிறுத்த போகிறீர்கள் என்ற எச்சரிக்கையும் தரும்.
முன்னால் செல்லும் வாகனத்துக்கும், உங்கள் வாகனத்துக்கு 20 - 30 மீட்டர் இடைவெளி இருக்கட்டும். நெருக்கமாக சென்றால், அடுத்த வாகனத்தில் இருந்து அடிக்கும் தண்ணீர் உங்கள் பார்வையை மறைக்கக்கூடும்.
தண்ணீர் தேங்கிய சாலையில் போக்குவரத்து சிக்கலில் மாட்டி கொண்டால் வாகனத்தை அணைக்காதீர்கள். என்ஜின் ஓடிக் கொண்டே இருக்கட்டும். தேங்கியிருக்கும் தண்ணீரின் அளவு தெரியாத நிலையில் சீராக, மெதுவாக வாகனத்தை ஓட்டுங்கள். இடையில் நிறுத்தாதீர்கள். நிறுத்தினால் எக்சாஸ்ட் குழாய்க்குள் தண்ணீர் புகுந்துவிடும்.
ஓடும் தண்ணீரை குறுக்கே கடக்க முயற்சிக்காதீர்கள். உங்கள் வாகனத்தின் எடையை விட தண்ணீரின் வேகம் அதிகமாக இருந்தால் ஆபத்து. வளைவில் திரும்பும்போதும், சாலையில் ஒருபுறமாக ஒதுங்கும்போதும் "இன்டிகேட்டர்களை' அவசியம் ஒளிரவிடுங்கள். மழை நேரத்தின்போது வழக்கமான வேகத்தை விட மெதுவாக திரும்புங்கள். திறந்திருக்கும் பாதாள சாக்கடை மூடியில் சிக்கி கொள்வதை தவிர்க்க, சாலையின் மத்தியில் செல்லுங்கள். உங்களுக்கு முன்னால் செல்லும் வாகனத்தை கவனித்து, அதை பின்பற்றி செல்லுங்கள். கடைசியாக, பாதசாரிகள் மீது தண்ணீரை சிதறிடித்து செல்லாதீர்கள். இரக்கத்தோடு நடந்துக் கொள்ளுங்கள்.