அக்கறை
நாம் வாழும் சமுதாயத்திற்கு நம் மீது தான் எத்தனை அக்கறை தெரியுமா, ஒரு பெண் பூப்பெய்தி விட்டாளா, ' ஆமாம்' என்றால், அடுத்தது அவளது சகவாசங்கள் எப்படி இருக்கிறது என்பதில் ஆரம்பித்து, 'எப்போ கல்யாணம்', கல்யாணமும் ஆகிவிட்டால், குழந்தை ஏன் இன்னும் பிறக்கலை, இப்படி ஒவ்வொன்றிலும் தான் எத்தனை அக்கறை !!!!!!
பூப்பெய்திய பெண் எந்த ஆணுடனும் பேசக்கூடாது, இந்த காலத்திலும் இதே கட்டுபாடுதான், அவள் வேலைக்கு சென்று வேலை பார்த்தாலும் அங்கேயும் இதே நிலைதான், நம் சமுதாயத்தில் உள்ளவர்கள் தானே அங்கேயும் உடன் வேலை பார்க்கும் சகோதரர்கள் !!!!!!!
கல்யாணம் ஆகிவிட்ட பெண்ணோ கல்யாணம் ஆகாத பெண்ணோ யாராக இருந்தாலும் எந்த வயதாக இருந்தாலும் அவர் மீது வீசப்படும் கேள்விகள், கட்டு பாடுகள், பழிகள் ( அவ்வளவு அக்கறை...இவர்களுக்கு ) எந்த காலத்தினாலும் மாற்ற முடியாத விதியாகத்தான் உள்ளது.
ஒரு பெண்ணுக்கு ஏதேனும் ஆபத்து என்றாலோ அவசரம் என்றாலோ அதே சுற்று புறத்தாரும் உடன் வேலை பார்ப்பவர்களோ யாராக இருந்தாலும் உதவி செய்ய ஒருவரும் முன் வர மாட்டார்கள்.
கண்ணில் விளக்கெண்ணையை விட்டுக்கொண்டு என்ன குறை கண்டு பிடிக்கலாம் எந்த விதமான குற்றம் சுமத்தலாம் என்று காத்திருக்கும் இவர்கள் உதவி என்றால் மட்டும் மறைந்து கொள்கிறார்கள்?
அப்படியே உதவிக்கு வந்தால் அதற்க்கு கைமாறாக 'அவளையே' எதிர்பார்க்கும் வெட்க்கம் கெட்ட சமுதாயம். இல்லையென்றால் பணம் காய்க்கும் மரமாக இருந்தால் உதவிக்கு வருபவரின் வரிசையில் வரிந்து கட்டிக்கொண்டு நிற்கும் சமுதாயம்.
பெண்ணின் பெயரால் நதிகளையும் நாட்டையும் புகழும் சமுதாயம், 'தாய் நாடு', 'தாய் வீடு' (தகப்பன் வீடு என்று யாரும் சொல்லுவதில்லை ), 'தாய் மொழி' என்று பெருமையாய் பேசும் சமுதாயம் பெண்ணை ஒரு போகப்பொருளாகவும் எவ்வளவுதான் படித்தாலும் நீ ஒரு பெண் தானே என்று குறைவாய் ( under-estimate ) தான் பார்க்கிறது.
தனது வீட்டிலும் பெண்கள் இருப்பினும், அடுத்த வீட்டு பெண் என்றால் இளக்காரம், தன் வீட்டில் உள்ளவர்கள் மட்டும் உசத்தி அடுத்த வீட்டு பெண் தாழ்ந்தவள் என்ற நினைப்பு.
கொடுமை கொடுமைன்னு ( நான் கோவிலுக்கு போகல ) இன்டர்நெட்க்கு வந்தாலும் அங்கேயும் கொடுமை வந்து கூத்தாடிக்கிட்டு நிக்குதே !!!!!!