தாய்மை
சூல் கொண்ட நாள் முதலாய்
கண்ணின் மணிபோல் காத்திட்டாய்
எட்டி உதைத்திட்ட பிஞ்சுக்கால்களை
முத்தமிட்டு கொண்டாடினாய்
எனக்கு ஒவ்வாமல் போகுமென
உதறினாய் பிடித்த உணவுகளை
முதன்முதலில் நான் கேட்ட தாலாட்டு எது தெரியுமா அம்மா ?
சீரான உன் இதயத்துடிப்பே
சீராட்டிற்று என்னை
நான் ஆணா, பெண்ணா
அறியாமலே என்மீதுதான்
எவ்வளவு அக்கறை?
காத்திருந்த பத்து மாதங்களும்
அயர்ச்சி கூட்டினும்
தளராது கையில் ஏந்திய நாளிலிருந்து
இன்றுவரை நெஞ்சில்தான் சுமக்கிறாய்
ஆனால் அம்மா உன் கட்டுப்பாடு
எனை எட்டி வைப்பதை நீ அறிவாயா?
தாய்மை மகத்தானது
ஏடுகளில் கண்டு படித்தபின்
உணர்கிறேன் உன்னை
உன் தியாகமும்,அன்பும் புரியும்
எனக்கு
நான் தாயாகி சேயை ஈன்றெடுக்கையில் ...