FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Forum on January 30, 2021, 11:20:09 PM

Title: காதலர் தின சிறப்பு கவிதை நிகழ்ச்சி (2021)
Post by: Forum on January 30, 2021, 11:20:09 PM
காதலர் தின சிறப்பு கவிதை நிகழ்ச்சி - என்றென்றும் காதல்


எதிர்வரும் காதலர் தினத்தை முன்னிட்டு நண்பர்கள் இணையதளம் சிறப்பு கவிதை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருக்கிறது .

உங்களின் உள்ளம் கவர்ந்தவர்களுக்கு  மனதில் உள்ள காதலை கவிதைகளாய் வெளிப்படுத்தலாம். உங்களின் காதலர் தின வாழ்த்துக்களை கவிதைகளாய் வெளிபடுத்த  உங்கள் கவிதைகளை இப்பகுதியில் பதிவிடலாம்.  உங்கள் கவிதைகள் கண்டிப்பாக காதலை பற்றியதாக இருக்க வேண்டும். எதிர் வரும் 09.02.2021  வரை உங்கள் கவிதைகளை இங்கே  பதிவு செய்யலாம் ....

என்றென்றும் காதல் நிகழ்ச்சி ஊடாக உங்கள் கவிதைகள் பிப்ரவரி 14 ஆம் தேதி அன்று  உங்கள் இதயங்களை வந்தடையும் ....
Title: Re: காதலர் தின சிறப்பு கவிதை நிகழ்ச்சி (2021)
Post by: JsB on January 31, 2021, 09:41:02 AM
காதலே என் காதலே ....
காதல் வாசலில்...
உன் வருகையை எதிர் பார்த்து...
உனக்காக....உன்...பாதம் பட போட்டேன்
ஓர் அழியாக் காதல் கோலம்...
என்னுயிர் காதலனே...
என் காதல் இளவரசனே...
என் காதலுக்கு சொந்தமான
காதல் பேரழகனே...

என் முதல் காதல் கடிதம்...
என் இதயத்திலிருந்து உனக்காய் தீட்டுகிறேன்...
என்  உயிரில் கலந்திருக்கும் காதலோசை...
உன் பெயரை என் இதயத்தில்...
இசை அமைத்துச் செல்கிறதே...
அதுவே என் சுவாசக்காற்றாய் மாறியதே...

என் உயிரில் கலந்தவனே...
நான் விரும்பும் இதயமோ...
உன் அன்பை  மட்டுமே  எதிர் பார்க்குதே...
சுகங்களைப் பகிர்ந்துக் கொள்ளும் அன்பை விட...
என்  சோகங்களை மட்டும் உன்னிடம்
பகிர்ந்துக் கொண்டுள்ள அன்பு...
என்றுமே உண்மையானது என்னவனே...

என் அன்புக்கு இணை இவ்வுலகில்
எதுவும் இல்லை...
எனக்காய்  விடாமல் துடிக்கும்
உன் இதயத்தைத் தவிர...

நான் அதிகம் நேசிப்பவனே...
நான் தினமும் விழிப்பதற்கு உன் முகம் வேண்டுமே...
என் முகத்தை தினமும் பார்க்க
உன் அழகிய காந்த விழிகள் வேண்டுமே...
நான்  கை பிடித்து நடந்து செல்ல...
உன் துணை ஒன்றே வேண்டுமே...
நான் தலை சாய்க்க...
உன் மடி ஒன்றே வேண்டுமே...
உன்னுடன் சீக்கிரம் சேரவே என்னுயிர்
 இவ்வுலகத்தைச் சுற்றி வரவேண்டுமே...

உன்னைக் காதல் செய்ததால் வந்த கவிதை...
இன்று காற்றில் கலந்து...
உலகமெங்கிலும் காதலர் தினமாகி...
என்னையே வேடிக்கை பார்க்கிறது...
ஜீவனுள்ள வரை நம் காதல் என்றும் வாழும்...
நாம் பிறந்த இக்காதலுலகில்!

ஐ லவ் யூ டா...மை செல்லக் குட்டி!

என்றும் அன்புடன்  உன்
Valentine காதலி
JSB
Title: Re: காதலர் தின சிறப்பு கவிதை நிகழ்ச்சி (2021)
Post by: இளஞ்செழியன் on January 31, 2021, 09:55:10 AM
பிப்ரவரி மாதத்தில்
ஒரு அசாதாரண பரபரப்பு
தொற்றிக் கொள்கிறது அவளை

தான் காதலிக்கப்படுகிறோமா??
எனத் தோன்றிடும் சந்தேகங்களை
இந்த மாதத்தில் தான்
தெளிவுபடுத்திக் கொள்கிறாள்அவள்

‘மூட்ஸ்விங்ஸ்’ என்றும்
முன்னெப்போதோ சொன்னவற்றின்
எதிர்வினையென்றும்
முன்முடிவுகளோடு அவளாய் உருவகித்த
ஏதோ ஒன்றென்றும் ஏதேதோ பெயர்ச் சொல்லி
சண்டையிட்டுக் கொள்கிறாள்

அவளுக்கான வேலண்டைன் பரிசு
குறித்த விவாதங்களில்
பரிசாய் யாதொன்றும் வேண்டாமென்றும்
அவளுக்கென கிடைக்கும்
இந்த அன்பு மட்டும் போதுமென்றும்
பொருட்களின் தேவைகளில்லாத
அவளது நிதர்சனங்களை விவரித்து நிற்கிறாள்

பிப்ரவரி முதல்வார இறுதிகளில்
மனக்கதவுகளை இறுக அடைத்துக் கொள்கிறாள்

என்ன ஆனதென்று அறிய முற்படும்
முயற்சிகள் பெரும்பாலும்
வெற்றியோடு திரும்புவதேயில்லை

சென்ற வருடமும்
அதற்கு முந்தைய வருடமும் என
இதற்கு முன்னான காலங்களிலும்
இது போன்றே கதவடைத்திருந்தாள்
என சாட்சியம் சொல்கிறது
முகநூல் நினைவலைகள்

இரண்டாம் வார இறுதியில்
காதல் நிரம்பிவழிய மீண்டு வருவாள்
அப்போது அவளுக்கான பரிசுகளை
நிறைகாதலோடு பெற்றுக் கொள்கிறாள்

அவள் தேடப்படுகிறாளா?
என்பதை தெரிந்து கொள்வதாக இருக்கலாம்
அவளின் இந்த முகம் திருப்பல்களின் முகாந்திரம்

இப்போதும் முகம் திருப்ப துவங்கியிருக்கிறாள்..
அவளுக்கான பிப்ரவரி பரிசுகளின்
பட்டியல் ஒன்றை
தினம் தினம் மாற்றங்களோடு
முழுமைப்படுத்திக் கொண்டிருக்கிறேன்...

சில தினங்களுக்குப் பின்
அவள் புன்சிரித்துத் திரும்புகையில்
அவளை பெருமிதத்தோடு பூரிக்க வைத்து
காதலுணர்த்திடும் பரிசுகளாய்
வாங்கவேண்டிய வேலையிருக்கிறது எனக்கு...

“பிப்ரவரிகள் அவளுக்கானவை"
Title: Re: காதலர் தின சிறப்பு கவிதை நிகழ்ச்சி (2021)
Post by: SweeTie on February 01, 2021, 11:41:31 PM
அத்தை மகன்  என்னை 
அன்போடு  அணைக்கையிலே
சித்தம் கலங்கி நிற்பேன்
காதல்  பித்தம்  தலைக்கேறி 

எண்ணக்  குவியல்களின் 
எல்லைக்கோ  அளவில்லை 
காதலின்   சொர்க்கமே
 கற்பனையின்  உச்சம்தானே !

அதிகாலை  துயிலெழுந்து
நீராடி  மையிட்டு  பூச்சூடி
வழி முழுதும்  விழியாக
காத்திருந்தேன்  அவன் வரவை

காதலர் திருநாளில் 
என் காதலை சொல்லிவிட 
பேதை  என் நெஞ்சம்   படபடக்க
நாணத்தோடு  நின்றிருந்தேன்

காத்திருக்க காத்திருக்க 
என் காதலில்   மெருகேறி 
நிமிடங்கள் வருடங்களாய் 
நீண்டதை  நானறிந்தேன்

எப்போ வருவானோ   
எப்படி  எனை அழைப்பானோ
கண்ணோடு கண்  பேசுவானோ
எண்ணி எண்ணி   களித்திருந்தேன் 

கொலுசொலிகள்  கிணுகிணுக்க
கால்விரல்கள் கோலமிட 
அத்தானின்  வரவுக்காய்
ஆவலுடன்   காத்திருந்தேன் 

மருதாணி  போட்ட  கைகள் 
செக்க சிவந்திருக்க 
வண்ண வண்ண  கைவளையல்
ஒலியெழுப்ப  நின்றிருந்தேன்

காதலன்  அவன் வரவை 
கால் கடுக்க   காத்திருந்தேன் 
பின்னாடி  ஒரு  உருவம்
அசைந்ததை  யான் அறியேன்

திடீரென கண்களை  இரு கைகள்
இறுக்கமாய்   பொத்திடவே 
பயம்  என்னை  தீண்டியதால் 
ஆ..  என்று  அலறிவிட்டேன்

ஏனடி   அலறுகிறாய்   என்று
ஓரடி  முன் வந்தான் 
ஈரடி  பின் சென்றேன்  நான்
பாரடி பெண்ணே  என்னை  என்றான்   

என் தலை நிமிரவில்லை   
வெட்கத்தில்  விக்கித்தேன் 
காதலை   சொல்லத்  துடித்தேன்
சொல்லாமலே  கண்விழித்தேன்

ஓ.... சொற்பனமா   இது  ?


அனைத்து   நண்பர்களுக்கும்   எனது  காதலர் தின வாழ்த்துக்கள்.


 
Title: Re: காதலர் தின சிறப்பு கவிதை நிகழ்ச்சி (2021)
Post by: thamilan on February 03, 2021, 05:02:04 PM
நீ என் கவிதைக்கு
நீராக மட்டுமல்ல
வேராகவும் இருக்கிறாய்
அதனால் தான்
எனக்குள்ளே பூக்கின்றன
கவிதைப் பூக்கள்

என் ஒவ்வொரு கவிதைப் பூக்களிலும்
மகரந்தப் பொடியாக
உன் நினைவுகள்
கவிதையின் வேர் காதலா
காதலின் வேர் கவிதையா

என் ஒவ்வொரு கவிதையிலும்
உயிர் இருக்கிறது - ஆனால்
உன்னைபற்றி எழுதும் கவிதையில்
என் உயிரே இருக்கிறது

தனித்துவமாய் இருந்த என் இதயம்
கவித்துவமாய். ஆனதடி. உன்னாலே
இன்னும் சொல்லப்போனால்
என் இதயமே
இலக்கியமாகிப் போனது

என் கவிதைகள்
உன் இதயக்கதவை தட்டுகின்றன
அது ஏனோ
திறக்க மறுக்கிறது

காதலிகள்
காவியங்களை மட்டுமல்ல
காயங்களையும் படைக்கிறார்கள்
காதலர் தினத்தன்று - நீ
எதை படைக்கப் போகிறாய் ??

Title: Re: காதலர் தின சிறப்பு கவிதை நிகழ்ச்சி (2021)
Post by: MoGiNi on February 05, 2021, 04:29:15 AM
உன் நினைவு மலர்களுக்குள்
கருக்கொண்ட
காதல் மகரந்தம்
அதன்
இனப்பெருக்கத்தை
இருதயத்தில் நிகழ்த்துகிறது ..

உன் இதழ்கள்
தொடும்போதெல்லாம்
தூரம் கடக்கிறது
 எண்ணப் பறவை ..
ஓர் ஆழ்கடலின்
மௌனமும்
ஆர்ப்பரிக்கும்
சமுத்திரத்தின் சலனமும்
சட்டேன நேர்கிறது ..

விலகும் பொழுதுகளில்
அலையும் மனதின்
கரங்களுக்குள்
நீ
சில ஏகாந்தங்களை
ஸ்ருஷ்ட்டித்து நகர்கிறாய் .
எழுதாத
சில காதல் கவிதைகளை
உன் விழிகளில் காண்கிறேன் ..
எனக்காக
இமைக்கின்ற உன் நொடிகளில்
என் விம்பம் சாய்கிறேன் ..

உன் தோள்  வளைவில்
தினம்
தொலைக்கின்ற போதெல்லாம்
ஆத்ம  சுகத்தில்
ஆலிங்கனம் கொள்கிறது
அதுகாறும் 
அலைந்த மனப்பறவை ..

இருதயச்  சுவர்களில்
ஒட்டிக்கொண்டு
உலர மறுக்கிறது
உன் அன்பின் ஈரம்

விடி விளக்கின்
மெல்லிய ஒளியில்
நிறைந்திருக்கிறாய் ..
மெலிதான உன்
சுவாசத்தை
வாசம் செய்கிறது தென்றல் ..

எனக்கான உன் தேடல்
என் உயிர்
உள்ளவரை
உன்னை சுவாசித்தே  வாழ்ந்திருக்கும் ..

இந்த நாளின்
இரவு
உன்னை
எனக்குள் யாசித்திருக்கிறது -என்பதை
நீ அறிவாயா  அன்பே ..
Title: Re: காதலர் தின சிறப்பு கவிதை நிகழ்ச்சி (2021)
Post by: SaMYuKTha on February 06, 2021, 04:50:24 PM
 𝕯𝖊𝖆𝖗 𝕷𝖔𝖛𝖊 : 🍂🦋

எவரிடமும் உடையாத
என் பலகீனங்கள்
உன்னிடம் உடைந்த நாளொன்றில்!
என் காதல் அசலாய்
உன்னோடு ஒட்டிக் கிடந்தது.
அதற்கீடான பரிபூரணமாய்,
காலம் உன்னை எனக்களித்தது.

எனக்கு ஏற்புடையதாய் இல்லையென
நான் நினைத்தவற்றை,
துணை நின்று அணுகச் செய்தாய்!
அக்கணத்தில்...!
நான் முதல் ரசித்த பட்டாம்பூச்சியின் மேனியில் இருந்த வர்ணங்களை எல்லாம்,
உன்னில் கண்ட மிதப்பெனக்கு.

என் அகங்காரம் தளர்த்தி,
அபயம் தேடி,
கைப் பிடித்து,
மடி சாய்ந்து கொள்ள
நான் நாடும் போதெல்லாம்,
வாரி அணைத்துக் கொண்டுள்ளாய்!
அளவற்ற காருண்யம் காட்டுவதில் உனக்கீடாக எவரையும்,
முன்னிருத்தி பார்க்கத் தெரியவில்லை.

தோளில் ஊன்றினாலும்
வலி தெரியாத,
புறாக்களின் பாதம் போல
அத்துனை ஸ்பரிசம் ஏற்படுத்தும் மென்மையான காதல் பட்சி நீ!
எப்போதும் மிகச் செளகரியமாய்
உன்னிடம் மட்டுமே,
சரணாகதி ஆகலாம் என்றாகிவிட்டது..

என் மனம் உனக்காக
இயங்க ஆரம்பித்து
வெகுநாட்களாகின்றன.
மெல்ல மெல்ல நான் என்னை
இழந்து கொண்டிருக்கிறேன்.
ஆனால்...!
நான் நானாகத்தான் இருக்கிறேன் என்று கர்வம் கொண்டு திரிகிறேன்.
பரவாயில்லை!
நான் உன்னிடம் மட்டும்
அறுதியாகித் தொலைய வேண்டும்.

ரசிக்கும்படியான
மழைக்கால,
மின்சாரமில்லா பிந்தைய சில இரவுகளில் திடுக்கிட்டு எழும் போது கூட,
உன் மீதான காதலை
உணர்ந்திருக்கிறேன்.
நடுநிசிகளில் விழித்தெழச் செய்யும்
கனவு சிலதில்,
நீ வந்துவிட்டுச் செல்வது
அத்துனை ஒன்றும்
இயல்பானதாயில்லை.
அதன்பிறகான இரவுதனில்
நித்திரை தொலைக்கிறேன்.

இப்போதும் கூட...!
என் அமைதியில்,
என் வலிகளில்,
என் ஆழ்ந்த அழுகையில்,
அயர்ச்சி நிறைந்த என் கண்களில்,
இப்பிரபஞ்சம் பிரசவித்த
மொத்தக் காதலிலுமாய்,
நீதான் இருக்கிறாய்.......
Title: Re: காதலர் தின சிறப்பு கவிதை நிகழ்ச்சி (2021)
Post by: JKJ on February 06, 2021, 06:51:43 PM
hi
Title: Re: காதலர் தின சிறப்பு கவிதை நிகழ்ச்சி (2021)
Post by: AgNi on February 07, 2021, 10:09:59 PM

கருவில் தோன்றிய முதல் காதல்
கர்ப்பப்பை  மூலம் அம்மாவுடன் !
பூமியில் கால் பதித்த நாள் முதல்
பாசம் பந்தங்களுடன் காதல்!

பல் முளைக்க தொடங்கிய நாள் முதல்
பல்வேறு உணவுளுடன் காதல் !
பள்ளி சென்ற நாட்கள் முதல்
பாட புத்தகங்களுடன் காதல் !

கல்லூரி சென்ற நாள் முதல்
கவிதைகள் மீது காதல் !
புது புது தோழிகள் உருவான  முதல்
புது வண்ண உடைகளுடன் காதல் !

புதிய மனிதர்கள் அறிமுகம் முதல்
அனைவரையும் அறியும் ஆவல் காதல் .
கண்களில் படும் அழகியல் முதல்
கனவு  சினிமா நாயகர்கள்  மேல் காதல்  !

அவர்கள் வெற்றுபின்பம் என்றறிந்த முதல்
நிஜ நாயகன் யார் என்று தேடிய காதல் !
மணவாளன் இவன் என்று காட்டிய நாள்முதல்
கணவனே கண் கண்ட தெய்வ காதல் !

மாயைகள் மறைந்து மழலை வந்த நாள் முதல்
மானசீக ஆசைகள் மறந்த தியாக காதல் !
குழந்தைகளின் எதிர்காலம் முதல்
வளமான வாழ்க்கை வரை  தன்னை பலியிட்ட காதல்  !

கடவுளை தேடும் நாள் முதல்
அடையும்  வரை தொடரும் மரண காதல்!
பெண்களே !  இந்திய பெண்களே !
உங்களின் பிறப்பின் ரகசியம் தான் என்ன?

அன்பின் பாதையில் மலர்ந்த ஆன்மாக்களே! 
என்றாவது   நீங்கள் தேடியது உண்டா ?!
சமயலறைகளில் சமைத்து  சமைத்து ….
பொசுங்கி போன  உயிர் காதல்  எங்கே என்று ?

தேடுங்கள் ! கண்டு அடைவீர்கள் !
வாழ்க காதலர் தினங்கள் !

Title: Re: காதலர் தின சிறப்பு கவிதை நிகழ்ச்சி (2021)
Post by: Raju on February 08, 2021, 06:37:09 PM
காதல்
சிலருக்கு வரம்
சிலருக்கு சாபம்
சிலருக்கு எட்டாக்கனி
சிலருக்கு விளையாட்டு
சிலருக்கு பொழுதுபோக்கு

காதல் அழிவதில்லை
கருத்தொற்றுமை இருந்தால் !
காதலுக்கும் மரியாதை
கட்டுப்பாடோடு அது வளர்ந்தால் !!

கரைபுரண்டோடும் வெள்ளமாய்
கட்டுப்பாடற்று
காதல் வளர்ந்தால் !
தடம்புரண்டோடும் ஓடமாய்
நட்டாற்றில் நிறுத்திவிடும் !!

காதலெனும் ஓவியத்தை
காட்சிப்பொருள் ஆக்காதே !
கடற்கரையிலும் முட்புதரிலும்
அதன் புனிதத்தை
தொலைக்காதே!!

என் பார்வையில்
இந்த காதலர் தின கொண்டாட்டம்
ஓர் கலாசார சீரழிவே !!!