கண்முன்னே காண்கின்றேன்
நான்கு நிலாக்கள்...
என்னவளே உன் முகமெனும் ஒரு நிலா..
ஒளிசிந்தும் விழிகளெனும் இரு நிலா
நம் அன்பின் சாட்சியாய்
வானில் வீற்றிருக்கும் முழுநிலா...
எத்தனை நாள் கனவு
எத்தனைநாள் ஏக்கம்
இப்படி ஒரு இடத்தில்
இப்படி ஒரு பொழுதில் உன்னுடன்
தனித்திருக்க வேண்டும் என்று..
கண்முன் கசிந்து கொண்டிருக்கும்
இரவின் அழகினை ரசித்திடவா?
எங்கும் சூழ்ந்திருக்கும்
மௌனத்தின் சப்தத்தை ரசித்திடவா?
பொங்கும் பாலாய் திசையெங்கும்
பரவி கிடக்கும்
நிலவின் ஒளியை ரசித்திடவா?
சமுத்திரத்தின் பேரிரைச்சலும்
பறவைக்கூட்டங்களின் பேரொலியும்
உலக பூக்களின் நறுமணமும் மொத்தமாய்
கிளர்ந்து எழுகிறதே என்னுள்...
இன்னதென்று சொல்லமுடியாத
உணர்வுப் பிரவாகம் மேனியெங்கும்
சடுகுடு ஆடுகின்றதே...
இரவின் சாட்சியாய் நிலவின் சாட்சியாய்
மலையின் சாட்சியாய் மௌனத்தின் சாட்சியாய் - அனைத்தின் சாட்சியுமாய்
சொல்கிறேன் பெண்ணே,
இது போதும் இந்த நொடி போதும்...
இனி ஏதுமில்லை என் வாழ்வின் பரிபூரணத்திற்கு.