புறநானூறு, 17.(யானையும் வேந்தனும்!)
பாடியவர் : குறுங்கோழியூர்கிழார்.
பாடப்பட்டோன் : சேரமான் யானைக்கட்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை.
திணை : வாகை. வாகைப் பூவைத் தலையில் சூடிப் பகைவரை வென்று ஆரவாரித்தலைப் பற்றிய பாடல்கள் வாகைத் திணையில் அடங்கும்.
துறை: அரசவாகை. அரசனது இயல்பை எடுத்துரைப்பது அரச வாகையாகும்.
=========================================
தென் குமரி, வட பெருங்கல்,
குண குட கடலா வெல்லை,
குன்று, மலை, காடு, நாடு
ஒன்று பட்டு வழி மொழியக்
கொடிது கடிந்து, கோல் திருத்திப்
படுவது உண்டு, பகல் ஆற்றி,
இனிது உருண்ட சுடர் நேமி
முழுது ஆண்டோர் வழி காவல!
குலை இறைஞ்சிய கோள் தாழை
அகல் வயல், மலை வேலி
நிலவு மணல் வியன் கானல்
தெண் கழிமிசைச் சுடர்ப் பூவின்
தண் தொண்டியோர் அடு பொருந!
மாப் பயம்பின் பொறை போற்றாது
நீடு குழி அகப் பட்ட
பீடு உடைய எறுழ் முன்பின்
கோடு முற்றிய கொல் களிறு
நிலை கலங்கக் குழி கொன்று
கிளை புகலத் தலைக் கூடியாங்கு
நீ பட்ட அரு முன்பின்
பெருந் தளர்ச்சி பலர் உவப்பப்
பிறிது சென்று மலர் தாயத்துப்
பலர் நாப்பண் மீக் கூறலின்
உண் டாகிய உயர் மண்ணும்
சென்று பட்ட விழுக் கலனும்
பெறல் கூடும் இவன்நெஞ்சு உறப்பெறின் எனவும்,
ஏந்து கொடி இறைப் புரிசை
வீங்கு சிறை வியல் அருப்பம்
இழந்து வைகுதும் இனிநாம் இவன்
உடன்று நோக்கினன் பெரிது எனவும்
வேற்று அரசு பணி தொடங்குநின்
ஆற்ற லொடு புகழ் ஏத்திக்
காண்கு வந்திசின் பெரும! ஈண்டிய
மழையென மருளும் பல்தோல் மலையெனத்
தேன் இறை கொள்ளும் இரும்பல் யானை
உடலுநர் உட்க வீங்கிக் கடலென
வான்நீர்க்கு ஊக்கும் தானை ஆனாது
கடுஒடுங்கு எயிற்ற அரவுத்தலை பனிப்ப
இடியென முழங்கு முரசின்
வரையா ஈகைக் குடவர் கோவே!
அருஞ்சொற்பொருள்:-
குணக்கு = கிழக்கு
குடக்கு = மேற்கு
கோல் = அரசாட்சி
படுவது = உரியது, அனுபவிப்பது
பகல் = நடுநிலை
நேமி = சக்கரம்
கோள் = கொள்ளத்தக்க
தாழை = தென்னை
கானல் = கடற்கரை, காடு
தெண் = தெளிந்த
கழி = கடலையடுத்த உப்பங்கழி
தொண்டி = தொண்டி என்னும் ஊர்
அடுதல் = வெல்லுதல்
பொருநன் = அரசன்
பயம்பு = பள்ளம்
பொறை= பூமி
எறுழ் = வலிமை
முன்பு = வலிமை
கோடு = கொம்பு
கிளை = உறவு
புகலுதல் = விரும்புதல்
தலைக்கூடுதல் = நிறைவேற்றுதல் (சேர்தல்)
அரு = காணமுடியாத (பொறுத்தற்கரிய)
தாயம் = சுற்றம்
நாப்பண் = நடுவே
உண்டு = தன்னிடத்தே இருந்த
உயர்மண் = உயர்ந்த நிலம்
உறல் = அணைதல், சார்தல், புணர்தல்
ஏந்தல் = உயர்ச்சி
இறை = உயர்ச்சி, தங்குதல்
புரிசை = மதில்
வீங்கு = மிக்க
சிறை = காவல்
வியல் = அகலம்
அருப்பம் = அரண், மதில்
வைகுதல் = இருத்தல்
உடன்று = வெகுண்டு
ஈண்டுதல் = திரளுதல்
தோல் = கேடயம்
தேன் = வண்டு
இரு = பெரிய
உடலுநர் = பகைவர்
உட்குதல் = அஞ்சுதல்
ஊக்கும் = முயலும்
ஆனாது = அமையாது
கடு = நஞ்சு
ஒடுங்குதல் = பதுங்கல், தங்குதல்
எயிறு = பல்
அரவு = பாம்பு
பனி = நடுக்கம்
வரையா = அளவில்லாத (குறையாத)
குடவர் = குட நாட்டவர்
இதன் பொருள்:-
தென் குமரி=====> நீடு குழி அகப் பட்ட
தெற்கே குமரியும், வடக்கே இமயமும், கிழக்கிலும் மேற்கிலும் கடலை எல்லையாகக்கொண்டு குன்று, மலை, காடு, நாடு ஆகியவற்றில் வாழ்வோர் ஒருங்கே வழிபாடு செய்ய, கொடுமைகளை நீக்கி, செங்கோல் செலுத்தி, உரிய வரியைத் திரட்டி நடுவு நிலைமையோடு உலகம் (தமிழ் நாடு) முழுவதையும் இனிமையாக நல்லாட்சி புரிந்தவர்களின் வழித்தோன்றலே!
குலைகள் தாழ்ந்து பறிப்பதற்கு ஏற்றதாக உள்ள தென்னை மரங்களையும், அகன்ற வயல்களையும், மலையையே வேலியாக உள்ள இடங்களையும், நிலவு போன்ற மணல் நிறைந்த கடற்கரையையும், தெள்ளிய கழியிடத்து நெருப்புப்போல் பூத்த சிவந்த ஒளிவிடும் பூக்களையும் உடைய குளிர்ந்த தொண்டி என்னும் ஊரில் வாழ்வோரின் வெற்றி வேந்தனே!
பெரிய குழியான இடம் இருப்பதை அறியாது, அந்த நெடிய குழியில் வீழ்ந்த
பீடு உடைய=====> இரும்பல் யானை
செருக்கும், மிகுந்த வலிமையும் உடைய, தந்தங்கள் முதிர்ந்த யானை அக்குழியைத் தூர்த்துத் தன்னை விரும்பும் சுற்றத்தோடு சென்று வாழ்ந்ததைப்போல் உன் அரிய வலிமையால் பகைவரிடம் நீ அடைந்த தளர்ச்சியினின்று நீங்கி, மீண்டும் அகன்ற உன் நாட்டிற்குச் சென்றது உன் சுற்றத்தார் நடுவே புகழ்ந்து பேசப்படுகிறது. நீ பாண்டியனால் தோற்கடிக்கப்பட்டு சிறையிலடைக்கப்படுவதற்கு முன்பு, உன்னால் தோற்கடிக்கப்பட்ட உன் பகைவர்கள், “இவன் மனமுவந்தால் நாம் இழந்த நம் நாட்டையும் இவனால் கொள்ளப்பட்ட அணிகலன்களையும் திரும்பப்பெறக்கூடும்” என்று எண்ணினார்கள். மற்றும், உன் வரவை எதிர்பாராத பகைவர்கள், தாங்கள் கவர்ந்து கொண்ட கொடி பறக்கும் உயர்ந்த மதில், மிகுந்த காடுகள், அகழி முதலியவைகளைக் காவலாக உடைய அரண்களை இழந்து வருந்த நேரிடும் என்று எண்ணினார்கள். இவ்வாறு எண்ணிய உன் பகைவர்கள் உனக்குப் பணிபுரிவதற்குக் காரணமாகிய உன் புகழை வாழ்த்தி உன்னைக் காண வந்தேன். உன் வீரர்கள் ஏந்தியிருக்கும் கேடயங்கள் திரண்ட மேகங்களைப்போல் காட்சி அளிக்கின்றன. உன் யானைகளைப் பெரிய மலை என்று எண்ணி தேனீக்களின் கூட்டம் அவைகளிடம் வந்து தங்குகின்றன.
உடலுநர்=====> குடவர் கோவே
பகைவர்கள் அஞ்சும் உன் படையைக் கடலென்று கருதி மேகங்கள் நீர் கொள்ள முயலுகின்றன. இத்துணை வலிமையும் பெருமையும் உடைய படைகள் மட்டுமல்லாமல், பல்லில் நஞ்சுடைய பாம்பு நடுங்குமாறு இடிபோல் முழங்கும் முரசும் உடையவனே! குறையாத கொடையுடைய குடநாட்டின் அரசே!
=========================================
பாடலின் பின்னணி
சேரமான் யானைக்கட்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனின் சிறையிலிருந்து தப்பிச் சென்றதை இப்பாடலில் குறுங்கோழியூர் கிழார் புகழ்ந்து பாடுகிறார். அவன் சிறையிலிருந்து தப்பிச் சென்றதை, குழியில் அகப்பட்ட யானை, தன் வலிமையால் குழியைத் தூர்த்து வெளியேறிச் சென்று தன் இனத்தோடு வாழ்ந்ததற்கு ஒப்பிடுகிறார்.