5) அல்குர்ஆன்
முஸ்லிம்கள் எந்த அடிப்படைக்கு மக்களை அழைக்கின்றார்களோ அந்த அடிப்படை, உண்மைதான் என்பதை குர்ஆன் வசனங்கள் தக்க சான்றுகளாலும், தெளிவான எடுத்துக் காட்டுகளாலும் மெய்ப்பித்துக் காட்டின. மேலும், மிக உயர்ந்த மனித சமூகமான இஸ்லாமிய சமூகம் அமைய வேண்டிய அடிப்படைகளை மேன்மைமிகு குர்ஆன் சுட்டிக்காட்டியது. இதில் நேரிடும் இன்னல்களைச் சகித்துக்கொள்ள வேண்டும். எதிர்ப்புகள் தலைதூக்கும் போது துணிவுடன் இருக்க வேண்டும்; என்பதை முன் சென்ற சமுதாயங்களை எடுத்துக்காட்டாக தந்து அவர்களை பற்றிய செய்திகளில் நல்ல படிப்பினைகளையும் ஞானங்களையும் வழங்கியது.
(நம்பிக்கையாளர்களே!) உங்களுக்கு முன் சென்றவர்களுக்கு ஏற்பட்டது போன்ற (கஷ்டமான) நிலைமை உங்களுக்கு வராமலே நீங்கள் சுவர்க்கத்தில் நுழைந்துவிடலாம் என்று நினைத்துக் கொண்டீர்களோ? (உங்களைப் போல) நம்பிக்கை கொண்ட அவர்களையும் அவர்களுடைய தூதரையும், வாட்டும் வறுமையிலும், நோயிலும் பீடித்து (அவர்கள் வருந்தித் தங்களுடைய கஷ்டங்களை நீக்கி வைக்க) “அல்லாஹ்வுடைய உதவி எப்பொழுது (வரும்? எப்பொழுது வரும்?)” என்று கேட்டதற்கு “அல்லாஹ்வுடைய உதவி நிச்சயமாக (இதோ) சமீபத்திலிருக்கிறது” என்று (நாம் ஆறுதல்) கூறும் வரையில் அவர்கள் ஆட்டி வைக்கப்பட்டார்கள். (அல்குர்ஆன் 2:214)
அலிஃப்; லாம்; மீம். மனிதர்கள் “நாங்கள் நம்பிக்கை கொண்டோம்” என்று கூறினால் (மட்டும் போதுமானது, அதனைப் பற்றி) அவர்கள் சோதிக்கப் படாமல் விட்டு விடப்படுவார்கள் என்று எண்ணிக் கொண்டிருக்கின்றனரா?
இவர்களுக்கு முன்னிருந்தவர்களை எல்லாம் நிச்சயமாக நாம் சோதித்தே இருக்கின்றோம். ஆகவே, (நம்பிக்கை கொண்டோம் என்று கூறும்) இவர்களில் உண்மை சொல்பவர்கள் எவர்கள் என்பதை நிச்சயமாக அல்லாஹ் (சோதித்து) அறிந்து கொள்வான். (அவ்வாறே இதில்) பொய் சொல்பவர்கள் எவர்கள் என்பதையும் நிச்சயமாக அவன் (சோதித்து) அறிந்து கொள்வான். (அல்குர்ஆன் 29:1,2,3)
மேலும், குர்ஆன் வசனங்கள் அல்லாஹ்வை மறுத்தவர்களின் கேள்விகளுக்கும் சந்தேகத்திற்கும் முற்றிலும் தெளிவான பதில்களைத் தந்ததுடன், இதே வழிகேட்டில் அவர்கள் நிலைத்திருந்தால் அவர்களுக்கு ஏற்படும் கெட்ட முடிவைப் பற்றியும் எச்சரித்தன. இதற்கு ஆதாரமாக அல்லாஹ் தனது நேசர்கள் மற்றும் எதிரிகள் ஆகியோருடன் நடந்துகொண்ட வரலாற்று சம்பவங்களைத் தெளிவாகக் குர்ஆன் வசனங்கள் எடுத்துக் கூறின. சில நேரங்களில் மிகவும் மிருதுவாக அவர்கள் இருந்த வழிகேட்டை உணர்த்தி விளக்கமளிக்க வேண்டிய கடமையையும் குர்ஆன் வசனங்கள் செய்தன.
குர்ஆன் முஸ்லிம்களை வேறொரு உலகத்திற்கு அழைத்துச் சென்றது. இப்பிரபஞ்சத்தில் உள்ள அல்லாஹ்வின் அற்புத படைப்புகளையும் அவன் அவற்றை அழகிய முறையில் நிர்வகிப்பதையும் அதன் மூலம் அவனே வணங்குவதற்குத் தகுதியானவன் என்பதையும் அவனை வணங்கும்போது அவன் பொழியும் அன்பு, அருள், பொருத்தம் எவ்வளவு மகத்துவமிக்கது, எவ்வளவு பாக்கியம் பெற்றது என்பதையும் குர்ஆன் முஸ்லிம்களுக்கு விளங்கவைத்தது. இதன் மூலம் முஸ்லிம்கள் அடைந்த மன திருப்திக்கும், மன அமைதிக்கும் எதுவும் சமமாக முடியாது.
இவ்வகையான வசனங்களில் முஸ்லிம்களிடம் நேரடியாக அழைத்துப் பேசிய வசனங்களும் உள்ளன. அவற்றில் இதுவும் ஒன்றாகும்:
அவர்களது இறைவன் தன்னுடைய அன்பையும், பொருத்தத்தையும் அளித்து சொர்க்கங்களையும் தருவதாக அவர்களுக்கு நற்செய்தி கூறுகின்றான். அவர்களுக்கு அவற்றில் என்றென்றும் நிலையான இன்பம் உண்டு. (அல்குர்ஆன் 9:21)
தங்களுக்கு அநீதமிழைத்து, தங்கள் மீது வரம்பு மீறி கொடுமை புரிந்த இறைமறுப்பாளர்களான தங்களின் எதிரிகளின் நிலை, நாளை மறுமையில் எவ்வாறு இருக்கும் என்று முஸ்லிம்கள் அறிந்துகொள்ளும் பொருட்டு அவர்களுக்கு அதையும் குர்ஆன் தெளிவுபடுத்தியது.
இவர்கள் நரகத்திற்கு முகங்குப்புற இழுத்துச் செல்லும் நாளில் இவர்களை நோக்கி “(உங்களை) நரக நெருப்பு பொசுக்குவதைச் சுவைத்துப் பாருங்கள்” என்று கூறப்படும். (அல்குர்ஆன் 54:48)
அந்த நிராகரிப்பவர்கள் நாளை மறுமையில் அல்லாஹ்விடம் விசாரணை செய்யப்பட்டு கைதிகளாக விலங்கிடப்பட்ட நிலையில் முகம் குப்புற நரகில் வீசி எறியப்படுவார்கள். இதோ (ஸகர்) நரகத்தின் வேதனையை சுவைத்துக் கொள்ளுங்கள் என்று அவர்களுக்கு கூறப்படும்.
6) வெற்றியின் நற்செய்திகள்
கொடுமைகளையும் துன்பங்களையும் சந்தித்த அன்றும் அதற்கு முன்பும் இஸ்லாமை ஏற்றுக் கொள்வதென்பது சோதனைகளையும், மரணங்களையும் சந்திப்பது மட்டுமல்ல என்பதை முஸ்லிம்கள் அறிந்து வைத்திருந்தனர். மாறாக, இஸ்லாமிய அழைப்பின் நோக்கம் முற்றிலும் அறியாமையால் நிரம்பிய கொள்கைகளையும் அதன் அநியாயமான சடங்குகளையும் அடியோடு ஒழித்துவிடுவதே ஆகும். இதன்மூலம் பூமி அனைத்திலும் தனது ஆதிக்கத்தை நிலைநாட்டி உலகிலுள்ள அனைத்து அரசியல் அமைப்புகளையும் வெற்றிகண்டு முழு மனித சமுதாயத்திற்கும் அல்லாஹ்வின் பொருத்தத்தின்பால் வழிகாட்டுகிறது. மேலும், படைப்பினங்களை மனிதர்கள் வணங்குவதிலிருந்து வெளியேற்றி படைத்த அல்லாஹ்வை வணங்கும் வழிக்கு இஸ்லாம் அழைத்துச் செல்கிறது என்று அவர்கள் அறிந்து வைத்திருந்தனர்.
இதுபோன்ற நற்செய்திகளை சில நேரங்களில் மிகத் தெளிவாகவும் சில நேரங்களில் சூசகமாகவும் முஸ்லிம்களுக்கு குர்ஆன் விளக்கிக் கொண்டே இருந்தது. அக்காலக்கட்டத்தில் முஸ்லிம்கள் மிகுந்த நெருக்கடிக்கு ஆளாகி இருந்தார்கள். அவர்களது வாழ்க்கையே முற்றிலும் அழிந்துவிடும்படியான சோதனைகளும் நிகழ்ந்தன. அப்போது முன்சென்ற வசனங்கள் இறங்கின. அந்த வசனங்களின் கருத்துக்கள் முற்றிலும் மக்கா முஸ்லிம்களின் நிலைமைகளுக்கும் நிராகரிப்பவர்களின் நிலைமைகளுக்கும் மிகப் பொருத்தமாக இருந்தன. மேலும், அந்த வசனங்களில், நிராகரிப்பவர்கள் மற்றும் அநியாயக்காரர்களின் முடிவு அழிவுதான் என்றும் நல்லோர்கள்தான் இப்பூமியில் நிலைப்பார்கள் என்றும் அறிவுறுத்தப்பட்டது. ஆக, குர்ஆனில் கூறப்பட்ட சத்திரங்களில் “வெகு விரைவில் மக்காவாசிகள் தோல்வியுறுவார்கள். இஸ்லாமும் முஸ்லிம்களும் வெற்றி பெறுவார்கள்” என்று தெளிவான முன் அறிவிப்புகள் இருந்தன.
இறைநம்பிக்கையாளர்கள்தான் வெற்றி பெறுவார்கள் என்ற நற்செய்தி கூறும் பல வசனங்களும் இக்கால கட்டத்தில்தான் இறங்கின. அல்லாஹ் கூறுகிறான்:
“நம்முடைய தூதர்களாகிய நம் அடியார்களைப் பற்றி ஏற்கனவே நம்முடைய வாக்கு நிச்சயமாக முந்தி விட்டது. ஆதலால், நிச்சயமாக அவர்கள் உதவி செய்யப்படுவார்கள்.
நிச்சயமாக நம்முடைய படையினர்(களாகிய நம்பிக்கையாளர்கள்)தாம் வெற்றி பெறுவார்கள். ஆதலால், (நபியே!) சிறிது காலம் வரையில் (அல்லாஹ்வை நிராகரிக்கும்) இவர்களிலிருந்து நீங்கள் விலகி இருங்கள். (இவர்கள் எவ்வாறு தண்டனைக்கு உள்ளாகிறார்கள் என்பதை அறிய) அவர்களைப் பார்த்துக் கொண்டிருங்கள்.
அதிசீக்கிரத்தில் அவர்களும் அதனைக் கண்டு கொள்வார்கள். (என்னே!) நம்முடைய வேதனைக்காகவா இவர்கள் அவசரப்படுகின்றனர்? (நம்முடைய வேதனை) அவர்கள் மத்தியில் இறங்கும்போது, அச்சமூட்டி எச்சரிக்கப்பட்ட அவர்களின் விடியற்காலை மகா கெட்டதாகிவிடும்.” (அல்குர்ஆன் 37:171-177)
“வெகு விரைவில் இவர்களுடைய கூட்டம் சிதறடிக்கப்பட்டு, (இவர்கள்) புறங்காட்டிச் செல்வார்கள்.” (அல்குர்ஆன் 54:45)
“இவர்களுடைய கூட்டத்தினர் (எம்மாத்திரம்?) மற்ற கூட்டத்தினர்களைப் போலவே இவர்களும் முறியடிக்கப்படுவார்கள்.” (அல்குர்ஆன் 38:11)
ஹபஷாவிற்குச் சென்று குடியேறிய முஸ்லிம்களைப் பற்றி இந்த வசனம் இறங்கியது:
(நம்பிக்கையாளர்களே! உங்களில்) எவர்கள் (எதிரிகளால்) துன்புறுத்தப்பட்டு பின்னர் அல்லாஹ்வுக்காக(த் தங்கள் ஊரைவிட்டு)ப் புறப்பட்டார்களோ, அவர்களுக்கு நிச்சயமாக நாம் இவ்வுலகிலும் நல்ல இருப்பிடத்தையே தருவோம்; மறுமையின் கூலியோ (இதைவிட) மிகப் பெரிது. (இதனை) அவர்கள் அறிந்துகொள்ள வேண்டுமே? (அல்குர்ஆன் 16:41)
நபி யூசுஃப் (அலை) அவர்களின் வரலாற்றை விசாரித்த அந்த மக்களுக்கு பதில் கூறும்போது அதில்,
(நபியே!) நிச்சயமாக யூஸுஃப் மற்றும் அவரது சகோதரர்களுடைய சத்திரத்தைப் பற்றி வினவுகின்ற(இ)வர்களுக்கு இதில் பல படிப்பினைகள் இருக்கின்றன. (அல்குர்ஆன் 12:7)
என்றும் அல்லாஹ் கூறினான்.
அதாவது, நபி யூசுஃப் (அலை) அவர்களின் வரலாற்றை விசாரித்த மக்காவாசிகளே அவர்களின் சகோதரர்களுக்கு ஏற்பட்ட தோல்வியைப் போன்றே நீங்களும் தோல்வியை சந்திக்க இருக்கிறீர்கள். அவர்கள் அடிபணிந்தது போன்றே நீங்களும் வெகு விரைவில் அடிபணிவீர்கள் என்று அறிவுறுத்தப்பட்டது.
இறைத்தூதர்களை நினைவுகூர்ந்து அல்லாஹ் கூறுகிறான்:
“தங்களிடம் வந்த (நம்முடைய) தூதர்களை நிராகரித்தவர்கள் அவர்களை நோக்கி, “நிச்சயமாக நீங்கள் நம்முடைய மார்க்கத்தில் திரும்பிவிட வேண்டும். இல்லையேல், நாங்கள் உங்களை எங்களுடைய ஊரிலிருந்து வெளியேற்றி விடுவோம்” என்று கூறினார்கள். அதற்கு அவர்களுடைய இறைவன் (அந்த தூதர்களை நோக்கி) “நிச்சயமாக நாம் இந்த அநியாயக்காரர்களை அழித்து விடுவோம்” என்றும், “உங்களை அவர்களுக்குப் பின்னர் (அவர்களுடைய) பூமியில் நிச்சயமாக நாம் குடியேறச் செய்வோம்” என்றும் வஹி மூலம் அறிவித்து “இது எவர் என் முன்னால் (விசாரணைக்காக) நிற்பதைப் பயந்தும், என் அச்சமூட்டலைப் பயந்தும் நடக்கின்றாரோ அவருக்கு ஒரு சன்மானமாகும்” என்றும் அவர்களுடைய இறைவன் அறிவித்தான்.” (அல்குர்ஆன் 14:13,14)
பாரசீகர்களுக்கும் ரோமர்களுக்கும் மிகக் கடுமையான போர் கொழுந்துவிட்டு எந்து கொண்டிருந்த நேரத்தில் மக்காவாசிகள் இணைவைப்பவர்களாகிய பாரசீகர்களே வெற்றிபெற வேண்டும் என்று விரும்பினர். ஆனால், முஸ்லிம்கள் அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்புகின்ற ரோமர்களே வெற்றிபெற வேண்டும் என்று விரும்பினர். அப்போது அப்போல் பாரசீகர்கள்தான் வலுப்பெற்று முன்னேறியும் வந்த நேரத்தில் இன்னும் சில ஆண்டுகளில் ரோமர்கள் பாரசீகர்களை வீழ்த்தி விடுவார்கள் என்ற நற்செய்தியை அல்லாஹ் இறக்கி வைத்தான். அத்துடன் நிறுத்திக் கொள்ளாமல் மற்றொரு நற்செய்தியையும் கூறினான். அதுதான், முஸ்லிம்களுக்கு அல்லாஹ்வின் உதவி வெகு விரைவில் உண்டு என்பது!
(நமக்குச்) சமீபமான பூமியிலுள்ள “ரூம்“வாசிகள் தோல்வியடைந்தனர். அவர்கள் (இன்று) தோல்வி அடைந்துவிட்டபோதிலும் அதிசீக்கிரத்தில் வெற்றி அடைவார்கள். (அதுவும்) சில ஆண்டுகளுக்குள்ளாகவே (வெற்றி அடைவார்கள். வெற்றி தோல்வி என்ற) விஷயம் இதற்கு முன்னரும், இதற்குப் பின்னரும் அல்லாஹ்வுக்கே சொந்தமானது. (அவர்கள் வெற்றியடையும்) அந்நாளில் நம்பிக்கையாளர்கள் அல்லாஹ்வின் உதவியைக் கண்டு மகிழ்ச்சி அடைவார்கள். அல்லாஹ், தான் விரும்பியவர்களுக்கு உதவி புரிகிறான். அவன் (அனைவரையும்) மிகைத்தவனும் கிருபையுடையவனாகவும் இருக்கின்றான். (அல்குர்ஆன் 30:2-5)
நபி (ஸல்) அவர்களும் அவ்வப்போது இதுபோன்று நற்செய்திகளை மக்களுக்குக் கூறி வந்தார்கள். ஹஜ்ஜுடைய காலங்களில் உக்காள், மஜன்னா, தில் மஜாஸ் என்ற இடங்களில் தூதுத்துவத்தை எடுத்து கூறுவதற்காக மக்களை சந்திக்கும்போது சொர்க்கத்தின் நற்செய்தி மட்டுமல்லாது இவ்வுலக வாழ்க்கையின் வெற்றியைக் கொண்டும் நற்செய்தி கூறி வந்தார்கள். “மக்களே! “லாஇலாஹஇல்லல்லாஹ்’ (வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் இல்லை) என்று கூறுங்கள் வெற்றி அடைவீர்கள்! அதன் மூலம் அரபியர்களை நீங்கள் ஆட்சி செய்யலாம். அரபியல்லாதவர்களும் உங்களுக்கு பணிந்து நடப்பார்கள். நீங்கள் இறந்துவிட்டாலும் சொர்க்கத்தில் மன்னர்களாகவே இருப்பீர்கள்.” (இப்னு ஸஅது)
உத்பா இப்னு ரபிஆ உலக ஆசாபாசங்களைக் காட்டி நபி (ஸல்) அவர்களிடம் பேரம் பேசி, அவர்களை பணிய வைக்க முயன்றபோது, நபி (ஸல்) அவர்கள் அவனுக்குக் கூறிய பதிலையும், அந்த பதிலில் இருந்து இஸ்லாம் நிச்சயம் மிகைத்தே தீரும் என்று உத்பா விளங்கிக் கொண்டதையும் இதற்கு முன் நாம் கூறியிருக்கிறோம்.
இவ்வாறே அபூதாலிபிடம் வந்த கடைசி குழுவினருக்குக் கூறிய பதிலையும் நாம் முன்பே பார்த்திருக்கின்றோம். அந்த பதிலில் “ஒரே ஒரு வார்த்தையைத்தான் நான் உங்களிடத்தில் எதிர்பார்க்கிறேன். அவ்வார்த்தையினால் அரபியர் உங்களுக்குப் பணிவார்கள்; அரபியர் அல்லாதவர்களையும் நீங்கள் ஆட்சி செய்யலாம்” என்று மிகத் தெளிவாக அம்மக்களுக்கு எடுத்துரைத்தார்கள்.
கப்பாப் இப்னு அரத் (ரழி) கூறுகிறார்கள்: நபி (ஸல்) கஅபாவின் நிழலில் தங்களது போர்வையைத் தலையணையாக வைத்து படுத்திருந்தபோது நான் அவர்களிடம் வந்தேன். அப்போது இணைவைப்பவர்கள் புறத்திலிருந்து பல சிரமங்களை நாங்கள் சந்தித்துக் கொண்டிருந்தோம். நான் நபி (ஸல்) அவர்களிடம் “அல்லாஹ்விடத்தில் அநியாயக்காரர்களுக்கு எதிராக பிரார்த்திக்க மாட்டீர்களா?” என்று கேட்டேன். நபி (ஸல்) அவர்களின் முகம் சிவந்துவிட்டது. படுத்திருந்தவர்கள் எழுந்து அமர்ந்து “உங்களுக்கு முன்னிருந்த மக்களில் ஒருவர் (இஸ்லாமை ஏற்றுக் கொண்டதற்காக) அவன் எலும்பு, சதை, நரம்புகளை ரம்பத்தால் அறுக்கப்பட்டன. ஆனால், அத்தகைய துன்பமும் கூட அவரை மார்க்கத்திலிருந்து திருப்பவில்லை. நிச்சயமாக அல்லாஹ் இம்மார்க்கத்தை முழுமையாக்கியேத் தீருவான். அப்போது (யமன் நாட்டில் உள்ள) ஸன்ஆ நகலிருந்து ஹளரமவுத் நகரம் வரை அல்லாஹ்வின் அச்சத்தைத் தவிர வேறு எந்த வித அச்சமுமின்றி பயணம் செய்பவர் பயணிக்கலாம். ஆனால், நீங்கள் (அல்லாஹ்வின் உதவி) விரைவாக கிடைக்க வேண்டும் என்று அவசரப்படுகிறீர்கள்” என்று கூறினார்கள். (ஸஹீஹுல் புகாரி)
இதுபோன்ற நற்செய்திகளை மறைமுகமாகவோ, அந்நியர்களுக்குத் தெரியாமல் இரகசியமாகவோ நபி (ஸல்) அவர்கள் கூறவில்லை. மாறாக, முஸ்லிம்கள் இந்த நற்செய்தியை தெரிந்து வைத்திருந்தது போலவே, நிராகரிப்பவர்களும் தெரிந்து வைத்திருந்தனர். அஸ்வத் இப்னு முத்தலிபும் அவனது கூட்டாளிகளும் நபித்தோழர்களை எப்போது பார்த்தாலும் இடித்துரைப்பதும் கிண்டல் செய்வதுமாகவே இருந்தனர். மேலும், இதோ பாருங்கள் “கிஸ்ரா கைஸன் நாடுகளுக்கு வாரிசுகளாக ஆகப்போகும் அரசர்கள் உங்களைக் கடந்து செல்கிறார்கள்” என்று நபித்தோழர்களைக் குத்திக் காண்பித்து, விசில் அடித்து கைதட்டி கேலி செய்வார்கள்.
இவ்வுலகில் அதிவிரைவில் ஒளிமயமான சிறப்புமிக்க எதிர்காலம் உண்டு என்று கூறப்பட்ட நற்செய்திகளால் எல்லாப் புறத்திலிருந்தும் தங்களுக்கு இழைக்கப்பட்டு வந்த கொடுமைகளையும் அநியாயங்களையும் கோடை காலத்தில் வெகு விரைவில் களைந்துவிடும் மேகமூட்டமாகவே நபித்தோழர்கள் கருதினார்கள். மேலும், இந்த நற்செய்திகள் உலக வெற்றியை மட்டும் குறிப்பிடாமல் அழியாத மறுமையில் நிலையான சுவர்க்கம் முஸ்லிம்களுக்கு உண்டு என்று கூறியன. இது நபித்தோழர்களுக்கு மிகுந்த ஆறுதலையும் ஆதரவையும் கொடுத்தது.
இதுமட்டுமல்லாமல் முஸ்லிம்களின் ஆன்மாவிற்கு நபி (ஸல்) இறைநம்பிக்கை எனும் பயிற்சி மூலம் வலுவூட்டி வந்தார்கள். அவர்களைக் குர்ஆன் மற்றும் நல்லுபதேசங்களால் பரிசுத்தமாக்கினார்கள்; உலகப் பொருட்களுக்கும் அற்ப சுகங்களுக்கும் அடிமையாவதிலிருந்து விடுவித்து உளத்தூய்மை, நற்பண்பு, உயரிய குணங்கள் என மிக உயர்ந்த தரத்திற்கு தங்களது தோழர்களை மேம்படுத்தினார்கள். அகிலங்களைப் படைத்த அல்லாஹ்வின் பக்கம் அவர்களின் கவனங்களைத் திருப்பினார்கள். “வழிகேடு’ என்ற இருள் அகற்றி “இஸ்லாம்’ என்ற ஒளியில் அவர்களை நிறுத்தினார்கள். துன்பங்களையும் துயரங்களையும் பொறுத்து, சகித்து, துன்பம் இழைத்தவர்களைப் பழிவாங்காமல் உள்ளத்தை அடக்கி அழகிய முறையில் மன்னிக்கும் பண்பாட்டை நபி (ஸல்) தோழர்களுக்குக் கற்றுக் கொடுத்தார்கள். இதனால் நபித்தோழர்களிடம் மார்க்க உறுதி, ஆசாபாசங்களை விட்டு விலகி வாழ்வது, இறை திருப்திக்காக தன்னை அர்ப்பணித்துக் கொள்வது, சுவர்க்கத்தை விரும்புவது, மார்க்கக் கல்வியின் மீது பேராசை கொள்வது, மார்க்கத்தில் ஆழ்ந்த ஈடுபாடு கொள்வது ஆகிய அனைத்தும் காணப்பட்டன. மேலும், மன ஊசலாட்டங்களுக்கு கடிவாளமிட்டு, அற்ப உணர்ச்சிகளுக்கு ஆட்பட்டுவிடாமல் மனக் குழப்பங்களைக் கட்டுப்படுத்தி பொறுமை, நிதானம், கண்ணியம் ஒழுக்கம் ஆகியவற்றைக் கடைப்பிடித்து சிறந்த நன்மக்களாக விளங்கினார்கள்.