'எனையீர்த்துக்கொள்ள
பெரிதாய் பிரயத்தனங்களொன்றும்
தேவையிராது உனக்கு,,
நீயென்ற தகுதியொன்றே
போதுமானதாயிருக்கும்' என்கிறேன்..
நீயோ என்னை ஈர்த்துக்கொள்ளும்
சாத்தியங்கள் எதையுமே விட்டுவைப்பதாயில்லை
எனை அணைத்துக்
கொள்வதற்கென்றே
கரங்கள் ஆயிரம்
வாங்கி வந்த
அன்பின் இராட்சசி நீ
அன்பின் நிறைவுகளால்
நிரம்பி வழியும்
குறைகளற்ற நிறை நீ
மீண்டும் மீண்டுமென
இடைவிடாது உன்னிடம்
அன்பு யாசிக்கையில் மட்டும்
"எத்தனை கொடுத்தாலும்,
'போதவில்லை' எனும் குறைச்சொல்லியே
எப்போதைக்கும் நேசிப்பாயா என்னை?."
என என் காதல் வேண்டுவாய்.
இல்லாமைகளின்
தவிப்படங்கா நொடிகளை
உன் இருத்தலின் அடர்வுகளால்
கொண்டாட்டமாக்கிப் போகிறாய்...
உன்னை சிறகுகள் முளைக்காத
சிறு தேவதையென்கிறேன்
நீ எனக்கே எனக்கென
ஆசிர்வதித்துக்கொண்டே இரு..💕💕