''குழந்தை நை நைனு அழுதுக்கிட்டே இருக்கு. டாக்டர்கிட்ட போயும் கேக்கல. எதாவது நாட்டு வைத்தியம் சொல்லுங்களேன்..'' என்று இன்றுவரை கிராமத்துப் பாட்டிகளிடம் வைத்தியம் கேட்டுக் கொண்டுதான் இருக்கிறோம். சாம்பார் சாதம் மாதிரி.. பருத்திப் புடவை மாதிரி.. இந்த நாட்டு வைத்தியமும் நம் ஊரில் எவர் கிரீன்தான்.
நமக்கு இங்கே நாட்டு வைத்தியம் தந்திருக்கிற அன்னமேரி பாட்டிக்கு இந்தத் துறையில் 60 வருடங்களுக்கும் மேற்பட்ட அனுபவம் இருக்கிறது. கடலூர், சாமிப்பிள்ளை நகரைச் சேர்ந்த பாட்டியின் வீட்டைச் சுற்றிலும் காடு போல வளர்ந்து கிடக்கின்றன மூலிகைச் செடிகள். என்ன வியாதி என்றாலும் தீர்வு தேடி பாட்டியைத் தேடி ஓடி வருகிறார்கள் சுற்றுப்புற கிராமத்து ஜனங்கள். வைத்தியம் முழுக்க முழுக்க இலவசம்!
''காசா முக்கியம்? ஜனங்க நோய், நொடி இல்லாம சொகமா இருக்கணும். அதுதேன் முக்கியம்'' என்று மனசுக்குள்ளிருந்து பேசுகிற அன்னமேரி பாட்டிக்கு வயது 85!
இதோ.. உங்கள் குடும்பத்துக்கும் ஆரோக்கியத்தைக் கொண்டு வருகிறார் அன்னமேரி பாட்டி!
மழை ஓஞ்சி இப்போ பனி அடிக்குதே.. இந்த சீஸனுக்கேத்த மருந்து சொல்றேன்..
குழந்தைகளின் சளிக்கு..
ஆடாதொடை இரண்டு இலை, தும்பைப்பூ 10 எண்ணிக்கை, தாளிசபத்திரி (நாட்டு மருந்துக் கடையில் கிடைக்கும்) கால் ஸ்பூன், இஞ்சி ஒரு துண்டு.. இதெல்லாத்தையும் நசுக்கி, சாறெடுக்கணும். இதுல 8 சொட்டு சாறு எடுத்து, ஒரு ஸ்பூன் தேன் கலந்து, 3 மணி நேரத்துக்கு ஒருமுறை குழந்தையோட நாக்குல தடவி வந்தா, சளி கட்டுக்குள்ள வரும். பிறந்த குழந்தைகள் முதல் 2 வயசுக் குழந்தைகள் வரை இந்த மருந்தைத் தரலாம்.
பெரியவர்களுக்கு ஏற்படும் நெஞ்சுச் சளிக்கு,,
இதுக்கு பூண்டுப் பால் நல்ல மருந்து. பெரிய சைஸ் முழு வெள்ளைப் பூண்டை தோல் உரிச்சுக்கணும். 100 மில்லி பசும்பால்ல தண்ணி கலந்து, இதுல பூண்டை நல்லா வேக வைக்கணும். அடுப்புலருந்து இறக்குறதுக்கு முன்னால ஒரு சிட்டிகை மஞ்சள் தூள், கால் ஸ்பூன் மிளகுப் பொடி போட்டு இறக்கிடணும். இதை நல்லாக் கடைஞ்சு, தேவையான அளவு பனங்கற்கண்டு சேர்த்து, ராத்திரி தூங்கப் போறதுக்கு முன்னாடி சாப்பிட்டா, நல்ல பலன் கிடைக்கும்.
இருமல் விலக..
அதிமதுரம் 100 கிராம் எடுத்து நசுக்கி, 200 மில்லி தண்ணியில வெறுமனே ஊற வச்சு, காலையில எடுத்து வடிகட்டி, சூடாக்கி (கொதிக்க வைக்க தேவையில்லை) பனங்கற்கண்டு சேர்த்துக் குடிச்சு வந்தா இருமல் ஓடியே போயிரும்
நாட்டு வைத்தியம்!
அன்னமேரி பாட்டி
'பனி காலம் வந்தாப் போதும்.. இருமலும் சளியும் சிறுசுகளை சட்டுனு பிடிச்சுக்கிட்டு இம்சைப்படுத்தும். அந்த இம்சைகள வெரட்டுற மூலிகைகளப் பார்ப்போம் வாங்க..
குழந்தைகளின் இருமலுக்கு..
சின்ன துண்டு (ஒரு கணு) சித்தரத்தையும் ஒரு ஸ்பூன் பனங்கல்கண்டையும் ஒரு டம்ளர் தண்ணிய விட்டு அரை டம்ளரா காய்ச்சணும். ஒரு வேளைக்கு ஒரு பாலாடை (சங்கு) அளவு, இதை ஒருநாளைக்கு 3 இல்ல.. 4 வேளை கொடுத்துட்டு வந்தா வறட்டு இருமல் விலகும். மூணு மாச பச்சைக் குழந்தையிலருந்து ரெண்டு வயசுக் குழந்தைங்க வரைக்கும் இதக் கொடுக்கலாம்.
பல்லு மொளச்ச பிள்ளைகளுக்கு, நெய்யில 10 தூதுவளை இலைகள வதக்கி, (பெரியவங்கன்னா.. ஒரு கைப்பிடி இலை) அப்படியே மென்னு தின்ன வச்சா இருமல் அண்டாது!
10 உத்தாமணி இலைகள எடுத்து சாறு பிழிஞ்சிக்கணும். ஒரு பட்டாணி அளவு சுண்ணாம்புல இதைக் கலந்து தொண்டைக் குழியில தடவி வந்தா இருமல் 'சட்'டுனு நிக்கும்.
இருமலும் சளியும் வந்து மூச்சு விட முடியாம சில குழந்தைங்க திணறிப் போயிரும். இந்தக் கோளாறை 'தெக்கத்திக்கணை'னு சொல்லுவாக. இதுக்கு.. தூதுவளை இலைய கசக்கி, அதுல மூணு சொட்டு சாறு எடுத்து, ஒரு ஸ்பூன் தேன் கலந்து குழந்தைக நாக்குல தடவுங்க. நல்ல குணம் தெரியும்.
இலைகளை எடுத்த தூதுவளை குச்சிய (தண்டு) நல்லா காய வச்சு இடிச்சுப் பொடியாக்கி சலிச்சுக்கணும். இத காத்துப் புகாத டப்பாவுல போட்டு வெச்சிக்கிடுங்க. மிளகு அளவு இந்தப் பொடிய எடுத்து, தேனுல குழப்பி நாக்குல தடவுங்க. இப்படி 4 வேளை கொடுத்திட்டு வந்தா தெக்கத்திக்கணை சரியாப் போயிரும்.
நாட்டுக்கோழி முட்டையோட மஞ்சக் கருவை கரண்டில ஊத்தி, லேசான சூட்டுல காய்ச்சினா எண்ணெய் வரும். இதுல மிளகு அளவு கோரோசனை (நாட்டு மருந்து கடையில் கிடைக்கும்) கலந்து இழைச்சு, உள்ளுக்குக் கொடுத்துட்டு வந்தா இருமல், கணை இழுப்பு குணமாகும்.
மூணு அங்குல இண்டந்தண்டை குச்சியை (இண்டு) ராத்திரியே ஒரு டம்ளர் தண்ணில ஊற வச்சு, காலையில தண்டை மட்டும் எடுத்து தண்ணி இல்லாம நல்லா துடைச்சிக்கணும். இது குழல் மாதிரி இருக்குறதால ஒரு பக்க துவாரம் வழியா ஊதினா அரை (அ) ஒரு ஸ்பூன் அளவுக்குத் தண்ணி வரும். இந்தத் தண்ணி கூட மிளகு அளவு கோரோசனை கலந்து காலையில வெறும் வயித்துல 3 நாள் தொடர்ந்து கொடுத்து வந்தா கணை இழுப்பு, சளி, இருமல்.. எல்லாம் ஓடியே போயிரும்.