காதல்
காதல் செய்யப்படுவதல்ல. ஏற்படுவது. ஒரு பூவைப் போல தானே மலர்வது.
காதல் நம் வசம் இல்லை. நாம் தான் காதல் வசப்படுகிறோம்.
காதலுக்கு நாம் கட்டளையிட முடியாது. அது வா என்றால் வராது. போ என்றால் போகாது.
காதல் தான் நமக்கு கட்டளையிடுகிறது. நாம் எல்லோரும் அதற்கு கீழ்ப்படிகிறோம். ஏனெனில் காதல் கடவுளின் அரசாட்சி.
காதல் ஆட்டுவிக்கிறது. நாம் ஆடுகிறோம். நாம் வெறும் பொம்மைகள்.
காதல் ஒரு நெருப்பு. அதில் வெப்பமும் உண்டு. வெளிச்சமும் உண்டு.
இந்த நெருப்பு தான் மனித திரிகளில் சுடர் ஏற்றுகிறது,
இந்த நெருப்பு தான் பச்சையாய் இருக்கும் மனிதனை சமைக்கிறது.
இந்த நெருப்பு தான் அழுக்காய் இருக்கும் மனிதனை புடம் போட்டு அவனது மாற்றை உயர்த்துகிறது.
காதல் நெருப்பில் எரிவதில் சுகமும் இருக்கிறது. அதனால் தான் நெருப்பென்று தெரிந்தும் மனிதர்கள் விட்டிலாக அதில் விழுந்து மடிகிறார்கள்.
ஆனால் காதல் ஒரு வினோதமான நெருப்பு.
காதல் நெருப்பை பற்றவைத்தால் பற்றாது. அது தானே பற்றிக்கொண்டால் தான் உண்டு.
அது பற்றி எரிவதற்காக இரண்டு இதயங்களை தானே தேர்ந்தெடுக்கும் நெருப்பு அது.
காதல் நெருப்பு பற்றிக் கொண்டால் அணையாது.அணைக்கும் முயற்சிகளையே எண்ணையாக்கிக் கொண்டு எரியும் நெருப்பது.