அடடா இது என்ன விந்தை .....!!
விவாதம் என்பது மனிதனுள் தினம் நடக்கும் போராட்டங்கள், அவற்றில் எது எதை மேற்கொள்ளுகிறது என்பதில் முடிவு கிடைக்கிறது அதன்படி செயல்படுகிறோம். மனமும் அறிவும் அதிகமாக மனிதனுக்குள் போராட்டம் செய்பவை என்பதை பலரும் அறிவர், ஆனால் நம் இதயமும் - மூளையும், நரம்புகளும் - மூளையும், எலும்புகளுடன் சதையும், ரத்த நாளங்களுடன் ரத்தமும், ரத்தத்தில் உள்ள வெள்ளை மற்றும் சிகப்பணுக்களும், உணவுடன் குடல்களும், உணவின்றி தவிக்கும்போது என்சைமுடன் குடல்களும் குடலினுள் உள்ள சிறு உறிஞ்சிகளும் என்று ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதத்தில் தினம் தினம் நிமிடம்தோறும் போராடி வெற்றிக் கொள்கின்றன.
இவற்றில் ஏதேனும் ஒன்று வலுவிழந்து அதன் போராட்டம் குறையும் போது நோய்வாய்படுவதுடன், வலுவிழந்து செயலிழந்தும் விடுகின்றது. தூக்கம் சமயத்திற்கு வராமல் கண்களும் அதன் சம்பந்தப்பட்ட உறுப்புகளும் நாளடைவில் அதன் செயலில் குறைபட்டு அதனால் நோய்கள் அந்த உறுப்புகளுக்கு ஏற்படுகிறது, தினம் தினம் டென்ஷன் எனப்படும் வேலைப்பழு குடும்பத்தில் அல்லது மற்ற பிரச்சினைகளால் ஏற்படுகின்ற அழுத்தம் ரத்த அழுத்தத்தை அதிகரித்து இதயத்தின் செயல்பாட்டில் மிகவும் தீவிரமான குறைகளை ஏற்ப்படுத்தி செயலிழக்கச் செய்வதை நாம் அறிவோம், இதையே ரத்தக்கொதிப்பு மற்றும் சர்க்கரை நோய்க்கு அடிப்படை காரணம் என்று மருத்துவம் கூறுகிறது. மனிதன் பிறந்தது முதல் அவனது உறுப்புகள் செயல்பட துவங்கிய காலம் முதல் ஒவ்வொரு உறுப்பும் ஒவ்வொரு தேவைக்காக போராடத்தான் வேண்டியுள்ளது.
இதில் சிறுவர் பெரியவர் என்ற பாகுபாடுகள் இல்லையென்றாலும் சில பிரச்சினைகள் குழந்தைப்பருவத்திலேயே உடலில் தோன்றிவிடுவதும் மிகவும் வருத்தமான விளைவே. இத்தகைய குறைகள் பிறக்கும் குழந்தைகளுக்கு ஏற்படாமல் தடுக்கவே குழந்தை கர்பத்தில் இருக்கின்ற ஒவ்வொரு மாதமும் மருத்துவரிடம் சென்று தாயின் உடல் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகிறது. இந்த காலத்து இளம் பெண்கள் இவ்வித பொறுப்புகளை ஏற்க்க விருப்பமில்லாமல் திருமணம் செய்து கொள்வதை தவிர்த்து திருமண பந்தத்திற்குள் நுழைவதற்கு தயக்கம் காட்டுவதால், வேறு பிரச்சினைகளை தானே தேடிக்கொள்ளுகின்றனர்.
ஒரு பெண் பூப்பெய்திய பின்னர் அவளது உடல் குழந்தையை உற்பத்தி செய்வதற்கு தயாராக்கப்படுகிறது, ஒரு குழந்தையாவது குறிப்பிட்ட காலத்திற்குள் பெற்றுக்கொள்ளாமல் உடலை பேணி காக்கும் பெண்டிருக்கு மார்பக புற்று நோய், கர்பபை புற்று நோய், போன்ற நோய்கள் உருவாக காரணமாகிறது என்று மருத்துவ செய்திகள் தெரிவிக்கின்றது. ஆணிற்கு இதை போன்ற பிரச்சினைகள் ஏற்படுவது கிடையாது ஏனென்றால் குறிப்பிட்ட பருவம் வந்த பின்னர் உடலில் உண்டாக்கப்படும் விந்துக்கள் தானாகவே குறிப்பிட்ட காலத்திற்குள் வெளியேற்றிவிடுகின்ற உடலமைப்பை ஆடவர்க்கு இயற்க்கை வரபிரசாதமாக வழங்கியுள்ளதே இதற்க்கு காரணம் என்கிறது மருத்துவம். பெண்கள் குறிப்பிட்ட வயதில் திருமணம் செய்யாமல் இருப்பதால் மனநிலை பாதிப்புகள் ஏற்ப்படும் வாய்புகள் உண்டென்கிறது மருத்துவம்.
போராட்டம் என்பது எல்லா உறுப்புகளிலும் ஏற்பட்டாலும் அடிக்கடி நம்மை குழப்பி நமக்கு அதன் ஆதிக்கத்தை வெளிகாட்டுவது மூளையும் அதன் நரம்புகளும்தான். இங்கிருந்தே மனம் என்கின்ற பேரரசன் தனது செங்கோலை நீட்டி தனது ஆட்சியை நிலைநாட்டுகிறான். இதனால் பிரச்சினை மற்ற உறுப்புகளுக்கு ஏற்படுவதை விட, மனிதனின் சமூகத்தோற்றத்தை வெளிப்படையாக காட்டவும் முடிகிறது. தனக்குத்தானே எதிரியாக இருக்கின்ற இரு வேறு நிலைகள் மனித உடலில் மனமும் சிந்தனைகளும் அதன் தொடர்ச்சியான செய்கைகளும். மனம் ஒன்றும் அறிவு ஒன்றும் சொல்லுவது பின்னர் வேறு செயல்களை செய்வதும் இவற்றின் காரணமே. இந்த இரு உறுப்புகள் மனித உடலில் பெரும் போராட்டத்தை நடத்தி வருவது மிகவும் வியப்பான ஒன்று. "நான்" என்கின்ற ஒற்றை வார்த்தைக்கு இரு வேறு பிரதிபலிப்புகளை உள்ளடக்கியது இந்த [மூளையும்] மனமும் செயல்களும், இது இயற்கையின் அபூர்வ அமைப்பென்றே சொல்லலாம். தோற்ற அமைப்பிற்கும் அல்லது உருவத்திற்கும் செய்கைக்கும் எதிர் மாறான காரியங்களை நம்முடலில் நடத்துவதும் இவைதான். என்ன விந்தை.