FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதை நிகழ்ச்சி - ஓவியம் உயிராகிறது => Topic started by: Forum on August 22, 2022, 02:17:34 PM

Title: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 296
Post by: Forum on August 22, 2022, 02:17:34 PM
ஓவியம் உயிராகிறது ( படம் பார்த்து கவிதை கிறுக்கு ..)

நண்பர்கள் கவனத்திற்கு ....

சொந்த ஆக்கமும் ஊக்கமும் கொண்ட உங்களுக்காக உங்கள் சிந்தனை திறனை வளர்ப்பதற்கும் உங்கள் கற்பனைகளை மெருகூட்டுவதர்க்கும் ஏதுவாக உங்களுக்காக இந்த களம் அமைக்கப்பட்டு இருக்கிறது...

இங்கு ஒரு ஓவியம் அல்லது நிழல் படம் கொடுக்கப்படும் ... அந்த ஓவியத்துக்கு உங்கள் கற்பனைகளில் தோன்ற கூடிய உங்களால்
உயிர் கொடுக்க கூடிய சிந்தனைகளை கவிதை கிறுக்கல்களாக பதிவு செய்யலாம் ....


**இங்கே நீங்கள்  சுயேட்சையாக புதிய பதிவுகளை மேற்கொள்ள முடியாது.இப்பகுதியில் கவிதை பதிவதற்கு முன்பதிவு செய்வது கூடாது. ( உங்கள் பதிவுகள் அழகுற அமைவதற்காக  )..

***தயவு செய்து  இங்கே பதியப்படும் பதிவுகளுக்கு யாரும் கமெண்ட்ஸ் போட வேண்டம்... அந்த நபருக்கு நீங்கள் பிரத்தியேகமாக pvt  தகவலாக உங்கள் வாழ்த்து , தகவல்களை தெரிவித்து கொள்ளலாம் .

**முதலில் சொந்தமாக பதியப்படும் 8 கவிதைகள் மட்டுமே பிரதி சனிக்கிழமை அன்று நண்பர்கள் இணையதள வானொலியில் கவிதை நிகழ்ச்சியாக தொகுத்து வழங்கப்படும்.

.


நிழல் படம் எண் : 296

இந்த களத்தின்இந்த  நிழல் படம்  FTC Team சார்பாக         வழங்கப்பட்டுள்ளது   ... ..... இந்த படத்திற்கு உங்கள் கவிதைகளால் உயிர் கொடுங்கள்...

.

உங்கள் கவிதைகளை  எதிர்வரும் புதன்கிழமை GMT நேரம் 5:00 PM இக்கு முன்னதாக பதிவு செய்யவும்

Updated on 26 Oct 2020:

நிகழ்ச்சி சிறப்புற தொகுத்து வழங்குவதற்கு ஏதுவாக,  உங்கள் கவிதைகள் 16 வரிகளுக்கு குறையாமலும் ,  60 வரிகளுக்கு மிகாமலும்   அமையும்படி எழுத வேண்டுமாய் அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.

(http://friendstamilchat.org/Forummedia/forumimages/OU/296.jpg)
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 296
Post by: VenMaThI on August 22, 2022, 09:21:52 PM


மழையின் சாரல் உன் தீண்டல் என்றெண்ணினேன்...
மின்னல் என தெரியாமல் உன் கண்ணின் ஒளி என்றெண்ணினேன்..
இடி முழக்கம் என அறியாமல் உன் தேடலின் ஒலி என்றெண்ணினேன்..
காணும் இடமெங்கும் நீயென்பது கனவில்லை என்று அறிந்தேன்...

ஆக
சுற்றி நடக்கும் இயற்கை மாற்றம் அனைத்தும் மாற்றியாதென்னவோ
என் மன போராட்டத்தை தான்...

உன்னை கண்ட நொடி...
நீ என் வாழ்வின் ஹைக்கூ ஆக அல்ல
தொடர்கதையாய் ஆனாய் என்றுணர்ந்தேன்

என் வானில் பல்லாயிர நட்சத்திரமாக அல்ல
ஒளி வீசும் நிலவாய் உன்னை கண்டேன்

யோசித்து பேசும் உறவாய் அல்ல
என் யோசனையே நீயென்று உணர்ந்தேன்

என் மனதின் கனவல்ல
மனக்கதவு நீ  என்று அறிந்தேன்

நீ எட்டாக்கனி அல்ல
என் இதயத்துடிப்பு என்று உணர்ந்தேன்

என் வார்த்தைகளை மட்டுமல்ல
மௌனத்தையும் புரிந்தாய்  என்று அறிந்தேன்...
தன் இமை கூட தன்னிடம் இல்லை
என எண்ணும்  தனிமை களைந்து ..நீ
பிரியமாய் கொடுக்கும் அனைத்தையும் ஏற்றுக்கொள்வேன்
உன் பிரிவை தவிர

ஆடலும் பாடலும் தேவையில்லை ஆசை வார்த்தை மட்டுமே போதும்...
அறுசுவை உணவும் தேவையில்லை அருகே நீ இருந்தால் போதும்.....
கூடலும் ஊடலும் தேவையில்லை கூட நீ இருந்தால் போதும்....
உறக்கமும் கனவும் தேவையில்லை உன் நினைவு ஒன்றே போதும்.....
நான் என்ற சுயம் தேவையில்லை நாம் என்று இருத்தல் போதும்...

காதல் வானில் சிறகடிக்கும்
ஜோடி புறாக்கள் ஆக ஆசை

கருப்பு வெள்ளையான நம் வாழ்க்கைக்கு
பல வண்ணம் தீட்ட ஆசை

கைகோர்த்து வருவாயா என் அன்பே
காலமெல்லாம் ஒன்றாய் வாழ?...




 ❤️❤️❤️❤️❤️


Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 296
Post by: Sun FloweR on August 23, 2022, 01:19:05 AM
ஒவ்வொரு மழைநாளும்
எதை நினைவுபடுத்துகிறதோ
இல்லையோ,
நமக்கான அன்பையும்
நமக்கான நேசத்தையும்
நினைவுபடுத்தத் தவறியதில்லை...

ஊரெல்லாம் மண் செழிக்க
மழை வேண்டி நின்றார்கள்,
நாம் மட்டும் நம் காதல்
செழிக்க மழை வேண்டி நின்றோம்...

ஊரெல்லாம் மழைத்துளியால்
நனைந்து கிடக்க நாம் மட்டும்
காதல் மழையில் நனைந்து, இணைந்து
கிடந்தோம் குடைக்குள்...

மழையில் நனையாமல் இருக்கவே
குடை பிடிப்பார்கள் மனிதர்கள் ஆனால்
காதல் மழையில் நனையவே
காதல் மழையில் இணையவே
நாம் கைபிடித்தோம் குடையை...

ஒவ்வொரு மழைநாளும்
எதை நினைவுபடுத்துகிறதோ
இல்லையோ,
நமக்கான பிரிவையும்
நமக்கான விலகலையும்
நினைவுபடுத்தத் தவறியதில்லை...

நீயும் மழையும் ஒன்று தான்
ஒன்று பெய்யாமல் சாகடிப்பது
இல்லையெனில் பெய்தே சாகடிப்பது
இப்போது பெய்யாமல்
சாகடித்துக் கொண்டிருக்கிறாய்...

இப்போதெல்லாம் மழை வரம்
வேண்டி நிற்பதில்லை நான்..
வெறும் மழையையும் குடையையும்
மட்டும் வைத்துக்கொண்டு
நான் என்ன செய்ய நீ இல்லாமல்....?

நானும் இப்போதெல்லாம்
நனையாமல் இருக்கவே
குடைபிடிக்கிறேன்... அல்லது
மழைத்துளியால் மட்டும்
நனைந்து கிடக்கிறேன்...
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 296
Post by: Tee_Jy on August 23, 2022, 09:28:58 AM
மாலை மங்கும் நேரத்தில்...
மேகத்தின் கருவிழிகள் பூமியை நோக்கி வட்டமிட...!
இடி மின்னலுடன் விண்ணை பிளந்து மண்ணை வந்து அடைகிறது மழைத்துளிகள்.....


இருந்துளி தூரல்களால் இரு கைகளும் மினுமினுக்க...குளிர்ந்த காற்று என் மேனியில் பட்டு படபடக்க மழையில் நனைய ஆயத்தம் ஆவதையும் மறந்தேன்..... ஒரே குடைக்குள் இருவரும் இருப்பதானாலே

துன்பங்கள் எல்லாம் மழைத்துளியாய் குடையில் பட்டு சிதறி போக,சந்தோசமாய் ஓடும் மழை நீரிலே மெய்மறந்து நின்றோம்...!!

உன் கண்களை பார்க்கும் போது மின்னல் ஒளி எங்கிருந்து தோன்றுகிறது என்பதை அறிந்தேன்....!!!
அக்கணம் இடியோசையையும் மிஞ்சுகிறது என் இதயதுடிப்பு...!
குளிர்ந்த காற்றையும் சூரையாடுகிறது நாம் இருவரின் மூச்சு காற்று...!


ஒரு கணம் உன்னோடு வாழ வழி செய்த மழைக்கும் குடைக்கும் நன்றி....


எங்கிருந்தோ வந்து உன் பாச பிணைப்பில் என்னை நினைக்க திகைக்க வைத்தாய்...!
இன்னும் காத்துகொண்டு இருக்கிறேன் நீ விட்டு சென்ற இடத்திலேயே.... ஈரம் காய்வதற்குள் வந்து விடு.....!!!!

 அம்மழையையும் எதிர்பார்க்கிறேன். உன்னோட சேர்ந்து குடைசாய்வதற்கு அல்ல...
உன்னோட இருந்த அந்த நொடிகளை எண்ணும்போது வரும் கண்ணீர் துழிகளை அந்த மழைத்துளிகள் மறைப்பதற்கு......

நம்மை நனைத்த மழைத்துழிகள் எங்கோ சென்றுவிட்டன...!நாம் இருவரும் ஒன்றாக இருந்த நினைவுகள் மட்டும் தெப்பம்போல் தேங்கி கிடக்கின்றன....!!!மீண்டும் வா மீன்களை போல் தெப்பதில் துள்ளி குதித்து ஒன்றாக வாழலாம்.....!!!!!
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 296
Post by: KS Saravanan on August 23, 2022, 09:46:25 PM
அன்பின் அட்சய பாத்திரமே!
உனதன்பில் நான் நனைவதை கண்டு பொறாமையின்
உச்சத்தில் கருமேகங்களை கொண்டு மழையாக
தன் கண்ணீரை வெளிப்படுத்துகிறது இயற்கை..!

என் இதயத்தை வெற்றி கொண்ட உன்னை
தோற்கடிக்க இடியோசைகளை இன்னல்களாக
இறங்கினாலும் இனிமையான உனது குரலோசையின் முன்
மீண்டும் தோற்கின்றது அந்த இயற்கை..!

கூர்மையான பிரகாசமான உனது பார்வையினை
காண முடியாமல் எப்பொழுதும் முந்திக்கொள்ளும்
அந்த மின்னல் கூட்டங்களும் வெளிப்பட மறுக்கின்றன
உன்னிடம் மீண்டும் தோற்கின்றது அந்த இயற்கை..!

அடி பணியாத ஆடி மாத காற்றை போல
ஆருடம் செய்தாலும் அழகியே உன்னை கண்டு
வெட்கத்தினால் தென்றலாய் மாறிய மாயம் என்னவோ...!
உன்னிடம் மீண்டும் தோற்கின்றது அந்த இயற்கை..!

அன்பே இவைகளின் முன்பு நான் மட்டும் விதிவிலக்கா..!

ஆம்..நானும் கைதாகிறேன் உன்னிடம்..!

ஓரு குழந்தையை போல் உணர்கிறேன்
உனது அரவணைப்பில்..!

ஆழ் மனதில் ஆனந்தம் கொள்கிறேன் அன்பே
நீ என்னருகில் இருக்கும் போது..!

நனைந்த என்னுடல் சூடாகிறது
உனது மூச்சு காற்றின்  பரிசத்தினால்..!

அன்பே..நன்றி சொல்வேன்
நம்மை சேர்த்த இந்த இயற்க்கைக்கு..!

குடைக்குள் நாம்..!
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 296
Post by: thamilan on August 24, 2022, 09:54:24 AM
ஒரு மாலை நேரம்
வானம் மேகமூட்டமாய் இருந்தது
வீதி ஓரமாய் தலை குனிந்து
நடந்து கொண்டிருந்தேன்
திடிரென மழைவருமுன்னே
மண்வாசனை வருமே - அது போல
அவள் வருமுன்னே
அவள் வாசனை வந்தது

தலை நிமிர்ந்து பார்த்தேன்
அஜந்தா ஓவியம்
அசைந்து வந்து கொண்டிருந்தது
மழை வருமுன்னமே
என் உடல் குளிரத்தொடங்கியது
தலை நிமிர்ந்து பார்க்கவும் முடியாமல்
தலை குனிந்து நடக்கவும் முடியாமல்
தத்தளித்தேன் நான்

அவளை கண்டதும்
என்னைப்போல அந்த மேகமும்
குசியானதோ என்னவோ
மேகக்கூட்டங்கள் கூட ஆனந்தத்தால்
ஒன்றுடன் ஒன்று உரசிக் கொண்டன
வெயில் அவள் மேல் பட்டுவிடக் கூடாது என்று
மேக்கப் கூட்டங்கள் கூட ஒன்று திரண்டன

அவளை அணைத்திட மேகங்களும்
ஆசை கொண்டன
சோவென மழை பொழியத் தொடங்கியது
கையில் கொண்டுவந்திருந்த 
குடையை விரித்தாள்

என்ன மனதை புரிந்து கொண்ட காற்று
பறித்துக்கொண்டது   அவள் குடையை
மழையில் அவள் நனைய
குளிரில் நடுங்கியது என் உடம்பு
ஆனந்தமாய் அவள் உடம்பை தழுவும்
மழையைக்கண்டு 
வெப்பமானது என் உடம்பு

மழையில் நனைந்த
அவள் அழகைக் கண்டு
சாலையோர மரங்கள் கூட
உடல் சிலிர்த்தன
அவள் பாதங்களை
ஆசையுடன் தழுவிச் சென்றன 
மழை நீர்

உடை நனைந்து
நீர் சொட்ட சொட்ட நின்ற அவள்
பிரம்மன் தன்னிடம் இருந்த அழகை எல்லாம்
தூரிகையால் வரைந்திட்ட ஓவியம் போல
அழகாய் தெரிந்தாள் அவள்

தலை குனிந்து ஓரக்கண்ணால்
என்னை பார்த்தபடி
நாணமும் ஒட்டிய உடையுமாய்
தடுமாறி நடந்தாள் அவள்
என்னை தாண்டி அவள் நடந்தபோது
என்மனமும் பின்னோக்கி
அவள் பின்னே நடந்தது
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 296
Post by: Abinesh on August 25, 2022, 01:13:21 AM
அன்பே,உன்னை பார்க்கும் நேரம் எல்லாம்,என் மனதுக்குள் ஒரு மழை, அந்த மழை துளிகளை சேகரித்து அன்பு என்ற ஒரு அணை கட்டினேன் உனக்காக, ஆனால் என்னவோ அந்த அணையின் ஆழம், கொள்ளளவு எனக்கு தெரியவில்லை, கடலின் ஆழத்தை அளவிட ஆழமானி பயன்படுத்தப்படுகிறது,அது போல மனதின் ஆழத்தை அளந்தவர் எவரேனும் உண்டோ?


என் மழையே,என் சூரியனே,என் கடலே
என் நதியே,என் விண்மீனே,என் பூமியே,  என் கவிதையே,உன்னை கடந்து போனால், உடைந்து விழும் என்னை,சேகரிக்க வேறு யாராலும் முடியாததால்,உன்னிடமே தங்கிவிட்டேன் உயிரே...

உலக பூக்களின் வாசனைகளை
குத்தகைக்கு எடுத்த குமரி நீ,
கடலை உறிஞ்சு மழையாக பெய்யும் மேகங்கள் நீ, நந்தவனப் பூக்களை உறிஞ்சு
மழையாகப் பெய்த பூமாரி நீ..

இதுவரை பூமியில் பெய்த,பனித்துளிகளின் குளிர்ச்சி நீ,இதுவரை பூமியில் பெய்த
மழைத் துளிகளின் மகிழ்ச்சி நீ...

மழை பெய்யாத அரபு நாடாக இருந்த என்னை,உனது அன்பினால் நனைத்து சிரபுஞ்சி- ஆக மாற்றி விட்டாய்,அப்பொழுதுதான் உணர்ந்தேன் அரபு நாட்டிலும் மழை பெய்யும் என்று...😉

அன்பே,உனது அன்பு என்ற மழையில் நாளும் குளிக்க வேண்டும்,குளித்து பாசம் என்ற வளம் பெருக வேண்டும்.நமது அன்பு செழிக்க, செழிக்க  நாளும் நமது காதல் என்னும் நாட்டில் மழை பொழிய வேண்டும்...


Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 296
Post by: Charlie on August 26, 2022, 12:29:58 AM
துளி துளியாய் நீயும் வர
சட்டென்று உடல் சிலிர்த்தேன்!
ஜில்லென்று மனம் குளிர
உன்னுடன் நனனைய நானும் நினைத்தேன்!

மழை மீது நான் கொண்ட காதலால்
அந்த வானமும் என்மீது பொறாமை கொண்டு
இடியும் மின்னலுமாய் மிரட்டுதே!

வெள்ளித் துளியாய்  கொட்டும் சாரல் மழையே
உன் பேரழகை  வர்ணிக்க
தமிழ் வார்த்தைகளும்  வெட்கபடுதே!

மாரி வரும் நேரம்
என் ஜன்னலொரம்
வெண்மதியும் அவள் முகம் காட்டுதடி!

எனைத் தீண்டும் தென்றலும்
அவள் நினைவை சொல்லுதடி !

மழையோ அவளை நனனைத்தது
அவள் அழகோ என் மனதை பறித்தது!
அவள் மழையில் நனனைந்தால்
நான் அவள் சிறு புன்னகையில் கறைந்தேன்!!

Save Water
Spread Love always
Love the Love and  Respect love
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 296
Post by: SweeTie on August 30, 2022, 10:08:11 AM
சாலை ஓரம்   நடந்து  சென்றன என்  கால்கள் 
மாலை வேளை  என்றதால்  கொஞ்சம் மழுங்கலான
வெளிச்சம்   அங்கே 
கண்ணெதிரே  ஒரு உருவம்  குறுக்கறுக்க
என் கால்கள் தடுமாறின  கொஞ்சம் 

என் கூந்தலோடு போட்டிபோடும்  கருமேகக் கூட்டங்கள்
தங்களுக்குள்ளே  எதோ  பேசிக்கொள்வதும் 
கல  கல  என சிரித்து மின்னலெனப்  பளிச்சிடும் 
பற்களைக் காட்டி   நையாண்டி  செய்வதோடல்லாமல்
துளித்துளியாய்  ஆனந்த கண்ணீரை சிந்த தொடங்கின

கண்ணெதிரே  தோன்றியவன்   காலனா  இல்லை சூனியக்காரனா
அவன் ஒர பார்வை  என்னை அளப்பது தெரிந்தது
மழை துளிகள்   என்னை நனைக்க    நானும்   கையிலிருந்த
குடையை  விரித்து  என்னை அவனிடமிருந்து மறைத்துக்கொண்டே
சாலையோரம் ஒதுங்கி நின்றேன்

மரங்களின்    இலைகளில்  விழுந்த மழைத்துளிகள் 
நிலத்தில்   விழும்போது  இசைத்தன  ஜலதரங்கம் 
அங்கே  தோன்றிய மண் வாசனையில்  என் வாசனை மறைந்து
இயற்கையோடு  ஒன்றிணைந்தேன்

அந்த வேளை

மழையோடு  சேர்ந்து  காற்றும்  பலமாக வீச
என் குடையும்   காற்றோடு  சேர்ந்து பறக்கலாயிற்று 
ஐயோ  என்  குடை     அய்யோ  என் குடை  என்று நான் கூச்சலிட
ஓரமாய்  நின்ற   அந்த சூனியக்காரன்   
எட்டி பிடித்தான்  என் குடையை
தூரத்தே நின்று  என்னை  அளந்தவன்   
குடைக்குள்  இடம்  பிடித்தான்  என்னிடம் கேளாமலே 

வெளியே  அடை மழை  பெய்துகொண்டிருக்கையில் 
குடைக்குள்  ஒரு மோதல்   மழை பெய்துகொண்டிருந்தது
மோதல் மழை  காதல் மழையாகுமா  இல்லை 
பூகம்பமே வெடிக்குமா?   
விடை தெரியாமல்   தவிக்கிறேன்   நான்.