FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதை நிகழ்ச்சி - ஓவியம் உயிராகிறது => Topic started by: Forum on November 18, 2022, 10:37:30 PM

Title: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 300
Post by: Forum on November 18, 2022, 10:37:30 PM
ஓவியம் உயிராகிறது ( படம் பார்த்து கவிதை கிறுக்கு ..)

நண்பர்கள் கவனத்திற்கு ....

சொந்த ஆக்கமும் ஊக்கமும் கொண்ட உங்களுக்காக உங்கள் சிந்தனை திறனை வளர்ப்பதற்கும் உங்கள் கற்பனைகளை மெருகூட்டுவதர்க்கும் ஏதுவாக உங்களுக்காக இந்த களம் அமைக்கப்பட்டு இருக்கிறது...

இங்கு ஒரு ஓவியம் அல்லது நிழல் படம் கொடுக்கப்படும் ... அந்த ஓவியத்துக்கு உங்கள் கற்பனைகளில் தோன்ற கூடிய உங்களால்
உயிர் கொடுக்க கூடிய சிந்தனைகளை கவிதை கிறுக்கல்களாக பதிவு செய்யலாம் ....


**இங்கே நீங்கள்  சுயேட்சையாக புதிய பதிவுகளை மேற்கொள்ள முடியாது.இப்பகுதியில் கவிதை பதிவதற்கு முன்பதிவு செய்வது கூடாது. ( உங்கள் பதிவுகள் அழகுற அமைவதற்காக  )..

***தயவு செய்து  இங்கே பதியப்படும் பதிவுகளுக்கு யாரும் கமெண்ட்ஸ் போட வேண்டம்... அந்த நபருக்கு நீங்கள் பிரத்தியேகமாக pvt  தகவலாக உங்கள் வாழ்த்து , தகவல்களை தெரிவித்து கொள்ளலாம் .

**முதலில் சொந்தமாக பதியப்படும் 8 கவிதைகள் மட்டுமே பிரதி சனிக்கிழமை அன்று நண்பர்கள் இணையதள வானொலியில் கவிதை நிகழ்ச்சியாக தொகுத்து வழங்கப்படும்.

.


நிழல் படம் எண் : 300

இந்த களத்தின்இந்த  நிழல் படம்  FTC Team சார்பாக         வழங்கப்பட்டுள்ளது   ... ..... இந்த படத்திற்கு உங்கள் கவிதைகளால் உயிர் கொடுங்கள்...

.

உங்கள் கவிதைகளை  எதிர்வரும் புதன்கிழமை GMT நேரம் 5:00 PM இக்கு முன்னதாக பதிவு செய்யவும்

Updated on 26 Oct 2020:

நிகழ்ச்சி சிறப்புற தொகுத்து வழங்குவதற்கு ஏதுவாக,  உங்கள் கவிதைகள் 16 வரிகளுக்கு குறையாமலும் ,  60 வரிகளுக்கு மிகாமலும்   அமையும்படி எழுத வேண்டுமாய் அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.

(http://friendstamilchat.org/Forummedia/forumimages/OU/300.jpg)
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 300
Post by: Dear COMRADE on November 19, 2022, 08:12:04 PM
இணைய வழி
இணைப்பகமே - நண்பர்
அரட்டை அரங்கமே...
நண்பர்களால் நண்பர்களுக்காக
நம்மோடு நடை பயின்றவனே...
வெற்றிக் கேடயம் ஏந்தி
வீராப்போடு தலை நிமிர்ந்தவனே....

பொதுமன்ற மடலினிலே -நீ
புதைத்த விதைகளிலே
"ஓவியம் உயிராகிறது "எனும்
ஒப்பற்ற மா விருட்சம் தந்த
தேன்மதுர கனிகள் முன்னூறை
இன்சுவை காணும் நாளிது....

புகைப்படம் நீ பிரசுரிக்க
திகட்டாத தெள்ளமுதாய்
தித்திக்கும் முத்தமிழ் சுரக்க கண்டேன்...
வானவில் வண்ணங்களாய்
வாரம் தோறும் நீ எந்தி வர
வரப்புடைக்கும் நீராய் - என்னுள்
பெருக்கெடுக்கும் கவி ஊற்றை கொண்டேன்..

காதல் உணர்வும் தந்தாய்
கர்ஜிக்கும் சீற்ற உணர்வும் தந்தாய்
உறவுகள் பிணைப்பும் தந்தாய்
உடனிருக்கும் துரோக உணர்வும் தந்தாய்
தோல்வி உணர்வும் தந்தாய்
துவண்டு வீழா துச்ச உணர்வும் தந்தாய்...
வாழ்வு தந்த  வடுக்களின் நிழலை
கவி வடித்தேன் கண்ணீர் மல்க
வற்றாப் பெருக்கான கற்பனையும்
கவி வடித்தேன் நிஜமாய் நிற்க....

திக்கெட்டும் வாழும் - தீம்தமிழ்
கற்பனைகள் கரை புரளும்
சொற்பன்னர்கள் தீட்டிய
கவிமடலின் இசையினிலிலே
கலந்திடாத மானுட மனம் உண்டோ
இவ் வையகத்திலே.....

காட்சி ஒன்றாயினும்
காணும் விழிகள் வேறன்றோ...
நுணுக்கமாய் உற்று நோக்கும்
நோக்கப்பார்வை மாறுபடும்
சொல்லிசை கவிபாடும் - எனைப்போல்
கான மயில்களின் - அழகிய
தோகை விரித்த அங்கங்கள்
முன்னூறை தொட்டல்லோ
இது முடிவிலி அற்றல்லோ....

நட்சத்திர பூக்கள் தூவி
சிரம் தாழ்த்துகின்றேன் -நின்
சேவை தொடர வேண்டி
நிகரில்லா சிகரம் தொடும்
நெஞ்சங்களில் ஊஞ்சல் ஆடும்
ஓவியம் உயிராகிறதே!!!
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 300
Post by: thamilan on November 22, 2022, 11:43:58 AM

நண்பர்கள் அரட்டை அரங்கம்
அரங்கேற்றும்  நிகழ்ச்சி
ஓவியம் உயிர் ஆகிறது
உன் கவிதை பயணத்தில்
300 வது காலடிச்சிச்சுவடு இன்று

உன் தொடக்கம் முதல்
இன்றுவரை உன்னுடன் பயணிக்கும்
பயணி நான் எனும்
பெருமை எனக்குண்டு

உன் கவிதை மழையில்
கரைந்திட்ட ரசிகன் நான்
நீ வரைத்திடும் ஓவியங்களுக்கு
கவிதைகள் எழுதி
களித்திட்ட கலைஞன் நான் 

ஒரு வரி ஒழுங்காக
எழுதத் தெரியாத என்னை
எழுத வைத்ததும் நீ தான்
என் கற்பனைகளுக்கு
வடிவம் கொடுத்து
கவிஞன் ஆக்கியதும் நீ தான்

காதல் பெருக்கெடுக்கையில்
என்னை கவிஞன் ஆக்கிய
தூங்கிக்கிடந்த என் சிந்தனைகளை
தூசுதட்டி சிந்தனையாளனாக்கியவனும்
நீ தான்
உன் ஓவியங்களுக்கு உயிர் கொடுப்பதால்
நானும் ஒரு பிரம்மனே

உன் பாதையில்
கற்பனைகளே எனது கால்கள்
நிகழ்ச்சிகள் நிகழ்வுகள்
செய்கைகள் செய்திகள்
எனது கண்கள்

நீ இருக்கும் வரை உன்னுடன்
நானும் இருப்பேன்
உன்னை கவிபாடி
காலமெல்லாம் பூஜிப்பேன்
 
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 300
Post by: Sun FloweR on November 22, 2022, 08:17:51 PM
இது எங்கள் வெற்றி அல்ல..
உனது வெற்றி..
உனது பிடிவாதத்தின் வெற்றி..
உனது தன்னம்பிக்கையின் வெற்றி..
உனது ஆளுமையின் வெற்றி..

தன்னம்பிக்கை மிக்க
தனியொருவன்
நட்பெனும் ஆயுதம்
கொண்டு பெற்ற வெற்றி இது..
நட்பை விரும்பும்
ஒவ்வொருவரும்,
நட்பில் இணைந்த
ஒவ்வொருவருமே இந்த
வெற்றிக்கான வித்துகள்...

மக்கள் மனநிலை அறிந்த
மன்னன் தோற்றதாய் சரித்திரமில்லை...
பயனர்களின் உள்ளம் தெரிந்த
உனது கணிப்பும்
வீண் போனதில்லை..

குடிமக்களை தன் மக்களாய்
நேசிக்கும் அரசனே எங்கும்
வெற்றி வாகை சூடுகிறான்...
பயனர்களை தனது உறவாய்,
தனது நட்பாய் பாவிக்கும்
உனது நேசமே இந்த
வெற்றிக் கோப்பை
உன் கைகளில் தவழ காரணம் ..

இணையவெளியில் 1000
இணைப்புகள் இருந்தாலும்
அவை யாவும் எட்டா உயரம்
சென்றாலும், 
தனக்கென தனி நாடு, தனி மக்கள்,
தனி கொள்கை கொண்ட
பாரி வேந்தனாய் பாரினில் மிளிர்கின்றாய் ..ஒளிர்கிறாய்...

நண்பர்கள் தமிழ் அரட்டை அரங்கம்
என்ற பெயரில்
அரட்டை உலகின்
அரசனாய் வலம் வருகிறாய்...
எடுத்து வைக்கும்
ஒவ்வொரு அடியிலும் வெற்றி மேல் வெற்றியாய் குவிக்கிறாய்...
மலைமகள் அருள் கொண்டு
வெற்றி மட்டுமே உனது வாழ்வை அலங்கரிக்க,
வீறு நடை போடுகிறாய்
தனித்துவமாய்....
தன்னம்பிக்கை நாயகனாய்...
தனியொருவனாய்...💯🔥

இதோ எட்டிவிட்டாள்
நீ சீராட்டி வளர்த்த இந்த அழகி
ஓவியம் உயிராகிறது
நிகழ்ச்சியாக 300வது வயதை...
300 வயது ஆனால் என்ன?
வாலிப உள்ளங்களை வசியம் செய்யும் வாழைக்குமரி தான்
என்றும் இவள்...

காதலிலே ஒரு வாரம்...
கண்ணீரிலே மறுவாரம்..
காமத்திலே வேறோர் வாரம்..
அன்னையின் அன்பில்
மற்றுமோர் வாரம் என
ஒவ்வொரு வாரமும்
ஒவ்வொரு பதார்த்தம்..
சுவைத்திட ஓர் கூட்டம் உண்டு
என்பதே இங்கு யதார்த்தம்...

குயிலின் குரலைத் தோற்கடிக்கும்
தொகுப்பாளினியின் குரல்..
மது உண்ட வண்டின் நிலைக்குத்
தள்ளும் வட்டு தொகுப்பாளரின்
பின்னணி இசை..
உடம்பிற்கு கட்சிதமாய்
பொருந்தும் ஆடை போல கவிதைக்கு பொருந்தும்
பாடலின் தேர்வு...
கவிதை கேட்க வந்தவனையும்
கவிதை எழுத தூண்டும்
ஓவியங்களின் தேர்வு
இவையாவுமே இவ்வழகியின்
செழித்த வெற்றிக்கு
கிடைத்த  தனித்த காரணங்கள்...
இவளை 300 மட்டுமல்ல 3000 வயதிலும் காதலித்துக் கொண்டே இருப்போம் நாங்கள் ...
30000 வயதிலும் கொண்டாடிக் கொண்டே இருப்போம் நாங்கள்...
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 300
Post by: SweeTie on November 23, 2022, 07:46:57 AM
ஓட்டப்  பந்தயத்தில்  300 மைல்களை   ஓடிய
சாதனை வீரன்  இவன் 
சோதனைகளையும்  வேதனைகளையும் கண்டு
துவண்டுவிடவில்லை  இவன் 
சாதனை  தான்   அவன் இலக்கு

மழையில் நனையும்  குழந்தைகள் 
குளிரில் நடுங்கும்   முதியவர் 
பசியில்  வாடும்  ஏழைச் சிறுவர்கள் 
ஒரு குடையின் கீழ்  ஒதுங்கும்  காதலர்
காதலை தொலைத்த   காதலன் 
 ஊனம்,  தாய்மை, தாயுமானவன் என
ரகம்  ரகமான  மனிதர்கள்  கண்டான் 
ஒவொரு மைல் கல்லிலும் 

கு யில்கள்  பாடும்   காதலிசை கேட்டான்   
பாசத்தை தேடும்   கன்றுகளின் கதறல் கேட்டான்
நேசத்தோடு அணைக்கும்   அரவணைப்புகள் கண்டான்
வீராவேசமும்   கோபமும் கூடவே கண்டான்
காடுகள் மரங்கள்   மலைகள் கடந்தான்
கடல்கள்  நதிகள்  சுனைகள்  கடந்தான்
எத்தனை காட்சிகள்  எத்தனை ரசனைகள்
‘அத்தனையும்   அவன்  உணர்ந்த உணர்வுகள்

ஒவொரு மைல்கல்லும்  இவனுக்கு கற்பித்தன
வாழ்க்கையின்  தத்துவம்
“ஓய்ந்து உட்கந்துவிடாதே   வெற்றி நிட்சயம்”
தடுக்கி விழுந்த  குழந்தை  எழுந்து நடப்பதுபோல்
விழுந்து கிடைக்கவில்லை:  எழுந்தான், ஓடினான்.,
அறிந்தான்  வெற்றியின் முதல்படி தடை என
இன்று இவன் வெற்றியாளன் 

வாழ்க்கை ஒரு நெடும் பயணம் 
தடைக் கற்களும்   படிக்கற்களும்   நிறைந்தது
படிக்கற்களை  தாண்டி முன்னேறு   
தடைக்கற்களை   தகர்த்தெறி   
உன் இலக்கு என்றும்  மாறாது

அறிவுக்கு வித்திட்டான்  தமிழன்;    படைத்திட்டான்
ஆயிரம்  அருஞ்சாதனைகள்   
அறிவியல்  தொழில் நுட்பம் அறிந்திராக்  காலம்
சேர சோழ  பாண்டியர் வாழ்ந்த n பொற் காலம் ‘
அக்காலம்உருவான  கல் அணைகள்   கற்கோயில்கள்
 தமிழனின் சாதனைகள் அன்றோ

சாதனையாளர்கள்  தூங்குவதில்லை
விழித்துக்கொண்டே   கனவு காண்கிறார்கள்
;கனவைத் தேடி  ஓடிக்கொண்டிருப்பவர்கள் 
கடைசியில்  வெற்றியாளர்களாகிறார்கள்
இவனும்   அதே சாதனையாளன். 

நம் அனைவரின்  வெற்றி இது
நம்  வெற்றியை கொண்டாடுவோம் 
படைப்பாளிகளின்   வெற்றி    நம்
பணியாளர்களின்  வெற்றி    ரசனையுடன்
மதிக்கு,ம் நம் ரசிகர்களின்  வெற்றி
இவனின் வெற்றி நம் அனைவரின் வெற்றி 
இவன் மேலும்  பல படிகளைத்தாண்டி ‘
வெற்றி  காண  வாழ்த்துவோம்




 
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 300
Post by: Abinesh on November 24, 2022, 04:33:22 PM
ஒரு ஓவியத்தை பார்த்து நமது உணர்வுகள், நினைவுகள், வலிகள்,காதல்,எல்லாம் கற்பனையாக உருமாறி ஓவியம் உயிர் பெற்று கவிதையாக வெளிப்படுகிறது.
299 பகுதியை கடந்து 300- வது பகுதியில் அடியெடுத்து வைக்கும் ஓவியம் உயிறாகிறது நிகழ்ச்சி,பல பேரின் உள்ளில் ஒளிந்திருக்கும் திறமைகளை வெளிக்கொண்டு வந்திருக்கிறது.

இந்த 300 நாட்களில் எத்தனை கவிதைகள், எத்தனை கவிஞர்கள் இது முடிவு அல்ல இது ஆரம்பம்
இது ஒரு புது சகாப்தம் ,பல பேரின் அழியாத நினைவுகள்,ஓவ்வொரு வாரமும் பல கவிஞர்கள் உருவாகுகிறார்கள்,அந்த கவிஞர்களை ஊக்கப்படுத்தி மேலும் உற்சாகம் கொடுக்கும் வகையில் ஒரு இனிமையான குரல் ஒலித்துக்கொண்டிருக்கும். அது வெறும் குரல் அல்ல கவிஞர்களுக்கு கொடுக்கப்படும் உற்சாகம் என்னும் உரம்.

கவிதையே உன்னைக் காதலித்தேன், உன் ஓவியத்தை பார்த்து கவிஞன் ஆனேன்,என் காதலை FTC மூலமாக தூது விட்டேன்,காதல் அழிவதில்லை போல, கவிஞனும் அவன் கற்பனையும் என்றும் அழியாது.300 ஓவியம் வந்தாலும் 3000 ஓவியம் வந்தாலும் உன் மீது கொண்ட காதல் என்றும் மாறாது.

உறங்கி கொண்டிருக்கும் மானிடா!!!
APJ அப்துல் கலாம் பிறந்த மண்ணில் வாழும் உனக்கு சோதனைகளை சாதனைகளாக்கி,வெற்றி பெற முடியவில்லையா, உன் இரத்தம் கொதிக்கவில்லையா, எரிமலை வெடித்து அக்னி பிழம்புகள் வெளிவருவது போன்று உன் திறமைகளை வெளிக்கொண்டு வருவது எப்போது?.....

தோற்று கடந்த நொடிகள்
விதைத்து விட்டுப்போகும்
வெற்றியின் வெளிச்சத்தை பார்க்க கற்றுக்கொள்..!

உன்னை கொல்லும் ஆயுதமும்,
வெல்லும் ஆயுதமும் உன்னிடமே உள்ளது.கொல்லும் ஆயுதத்தை
கொலை செய்துவிட்டு _
வெல்லும் ஆயுதத்தை
விளைச்சல் செய்து விடு.!


குறிப்பு: ஓவியம் உயிராகிறது 300 அல்ல 400,500,1000 என்று மேலும் மேலும் முடிவில்லாமல் பயணிக்க போகிறது.நமது கற்பனைகள் கவிதைகள் ஆகிறது. நமது திறமைகள் வெளிவருகிறது,ஓவியம் உயிராகிறது
இன்னும் பல படைப்புக்களுக்காக உங்களை போன்று காத்திருக்கும் நான் உங்கள் தோழன் அபினேஷ்....


Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 300
Post by: VenMaThI on November 24, 2022, 11:34:06 PM


நல்லதோரு அரங்கம்
நண்பர்களால் நண்பர்களுக்காக நம்
நண்பர்கள் அரட்டை அரங்கம்

சிசுவிற்கு தாயின் கருவறை போல்
நமக்கு நமது FTC...
பல கலைகள் பிறக்கும் இடம்..

ஓவியம் வரைந்தவன் ஒருவன்
அதற்கு உயிர் கொடுக்க நம்முள் ஒருவன்
ஆக
ஓவியம் கவிதையாக
கவிதையோ உயிர் ஊட்ட... 
நமது ஓவியம் உயிராகிறது...





மேகக்கூட்டம் காணும் கண்கள் ஏராளம்
அதை பார்ப்பவர் மனதில் எழும் எண்ணங்களோ தாராளம்..
மலராய் மானாய் மயிலாய் மந்தியாய்
காண்பவர் எண்ணம் போல் காட்சி அமையும்
அதுபோல்
ஓவியம் சொல்வதோ ஒரு கருத்து
இங்கு நாம் காண்பது
பல எண்ணங்களால் எழும் பல கருத்துக்கள்..
பல வண்ணங்களால் அழகாகும் வானவில் போல்
பல எண்ணங்களால் அழகாகும்
Namadhu OU

ஒவ்வொரு நாளும் புதிதாய் மலரும் மலர்
அதில் வரும் புத்துணர்ச்சியூட்டும் நறுமணம் போல்

ஒவ்வொரு வாரமும் புதிதாய் ஒரு ஓவியம்
அதில் பல உணர்ச்சிகள் ததும்பும் கவிதைகள்

காதலும் கண்டேன் அதன் பிரிவு தரும் துக்கமும் கண்டேன்
குழந்தையின் அழுகையும் கண்டேன்
அதை தேற்றும் தாயின் பாசமும் கண்டேன்
நட்பின் நேசமும் கண்டேன்
நெடுநாள் ஆசையும் கனவும் கண்டேன்...

நேரில் கூற முடியாத
மனதின் எண்ணங்கள் பல
எதுகை மோனை இல்லாமல் கூட
கவிதை வடிவில் சுவை கொட்ட கண்டேன்


எனக்கும் கவிதை எழுத வரும்
என்று பலருக்கு உணர்த்தி..
கேட்பவரையும் படிப்பவரையும் தூண்டி
அனைவரையும் எழுத தூண்டி  கவிஞனாக்கி...

நமது OU ஏறிய படிகளோ 300...

இந்த 300 என்பது முடிவல்ல
இன்னும் பல வாரங்கள் வளர்ந்து
விருட்சம் போல் வளர வாழ்த்துக்கள்....

பல மனதின் ரணம் போக்கும் இடமாம்
ஆசை பாசம் அன்பு காதல்
அனைத்தும் அடங்கும் நம்
நண்பர்கள் அரட்டை அரங்கம்..

நன்றும் தீதும் இருப்பினும்
நல்வழி மட்டுமே காண்பித்து
பலவழிகளில் பாதுகாப்பாய் உணரவைத்து
வழிநடத்திச் செல்லும்
அரங்கத்தின் அரசனே....

ஒவ்வொரு நிகழ்ச்சியின் வெற்றியும்
நின் வெற்றியே
தொடரட்டும் நின் வெற்றி பயணம் ....

இது நம் நண்பர்களுக்காக
என் எண்ணத்தின் எழுத்து வடிவம்....














Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 300
Post by: TiNu on November 28, 2022, 02:32:07 PM
நீ பிறந்த தினமும்.. நான் இல்லை..
நீ தவழ்ந்த போதும்.. நான் இல்லை...
நீ நடை பழகிய நாளிலும்..  நான் இல்லை..
நீ பேசிய மழலை மொழியும்.. நான் கேட்டதில்லை..

உனை பெற்றவர் யார்... என்றும் நான் அறியேன்..
உனை வளர்த்தவர் யார்.. என்றும் நான் அறியேன்..
உனை ஜொலிக்க செய்தவர் யார்.. என்றும் நான் அறியேன்..
உனை  நோக்கி பிரமித்தவர்கள் யார்.. என்றும் நான் அறியேன்..

எனை  பெற்றவள்.. உன்னிடம் கொடுக்க...
எனை அன்புடன்..  கையில் ஏந்தியவளே...
எனை அழகுடன்..  சுந்தரமாக அணைத்தவளே..
எனை தத்து எடுத்த தமிழ் குழந்தையே(ஓவியம் உயிராகிறது)..

நான் எழுதி பழகிய மொழிகளிலே..
நான் பேசி பழகிய சொல்லிலே..
நான் தொடுத்து பழகிய வார்த்தையிலே.
நான் படைத்தது பழகிய கவிதையிலே..

உன் உயிர் அன்றி.. வேறு ஏதுமில்லை..
உன் விரல் பிடித்தே எழுத்தேன்...
உன் காலடியில் நடை பயின்றேன்.
உன் நிழல்(ஓவியம்) கண்டே.. உயிர்த்தெழுந்தேன்.

உனக்கு இன்றோடு.. 300 என்கிறது.. எண்ணிக்கை..
எனக்கு இன்றோடு.. இரு இலக்கம் என்கிறது.. எண்ணிக்கை
நீயும் நானும் என்றுமே..  எண்களுக்குள் சிக்காத.. தேவதைகள்..
நீயோ ஓவிய தேவதை... நானோ.. உன் உயிர்  தேவதை..

எங்களை  இணைத்த .. இணையத்தளமே(FTC Forum)
நாங்கள் சந்தோசமாக.. உறவாடிய.. உயிர்தாளமே ..
நீங்கள் இன்றியும்... நாங்கள் இல்லை..
உங்களுக்கும்.. எங்களுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்...
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 300
Post by: Patrick on November 28, 2022, 08:13:41 PM
                                   வெற்றி

இருளில் வாழும் மனிதனுக்கு வெளிச்சம் வெற்றி,
அவன் வெளிச்சத்தில் புரியும் சின்ன களவும் வெற்றி.


தனிமையில் தவிப்பவருக்கு நட்பு வெற்றி,
நட்பில் அவர் நடத்தும் களியாட்டமும் வெற்றி.


அடிமையாக வாழ்பவருக்கு, விடுதலை வெற்றி,
சுதந்திரம் பெற்றபின் அவர் புரியும் ஊழலும் வெற்றி.


சோகத்தில் இருப்பவருக்கு துன்புருதல் வெற்றி,
சலனத்தில் வாழ்பவருக்கு ஞானம் தரும் தெளிவு, வெற்றி.


தொலைந்தவருக்கு பாதை வெற்றி,
பலருக்கு போதை கூட வெற்றி.


காமுகனுக்கு கலவு வெற்றி,
கூடா காதலருக்கு பிளவும் வெற்றி.


வணிகனுக்கு லாபம் வெற்றி,
கலைஞனுக்கோ பாராட்டு வெற்றி.


தலைவனை பிரிந்து வாடும் தலைவிக்கு, அவனிடம் இருந்து வரும், ஒற்றைச் செய்தியே வெற்றி.


உழைப்பாளிக்கு இலக்கு வெற்றி,
இலக்கில்லாமல் வாழ்வதும் பலருக்கு வெற்றியே.


கடிகாரமுள்ளாக ஓடுபவருக்குச் சற்று நேரம் தொலைந்து போனால் வெற்றி,
ஓடாமல் நிற்பவருக்கு, உந்துதல் வெற்றி.


இதுதான் வெற்றி, அதுதான் வெற்றி என்றல்ல,
சில சமயங்களில் இறப்பும் வெற்றியே.


இத்தனையும் எழுதிய பிறகு, எனக்கு எது வெற்றி என்ற சிந்தனையில் நான்,

சிறுசிறு உணர்தலிலும், வெற்றி உள்ளதோ..

[300ஆவது நாள் காணும் ஓவியம் உயிராகிறது நிகழ்ச்சியின் வெற்றிக்கு பயனர்கள் சார்பாக வாழ்த்துகள்...]


Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 300
Post by: KS Saravanan on November 28, 2022, 08:16:09 PM
நண்பர்கள் தமிழ் அரட்டை அரங்கமே..!

உனது பயணத்தில் பங்கு கொண்டுள்ள நாங்கள்
அனைவரும் மகிழ்ச்சியாக இருக்கிறோம்
என்றால் அது மிகையாகாது..!

உனது இந்த பயணத்தில் எங்களை போல
எண்ணிலடங்கா மனிதர்களிடம் உள்ள
தனித்திறமைகளை வெளிக்கொண்டு வருகிறாய்
என்றால் அதும் மிகையாகாது..!

பல ஆன்றோர்களும் சான்றோர்களும் உள்ளடக்கிய
நீ என்றும் ஓர் அட்சய பாத்திரம்
என்றால் அதும் மிகையாகாது..!

உலகின் அனைத்து விதமான சொந்தங்களையும்
தன்னகத்தே கொண்டுள்ள நீ இன்னும் பல
தலைமுறைகளை காண்பாய்
என்றால் அதும் மிகையாகாது..!

கம்பனை வைத்து உனை போற்றி ஆயிரம் வரிகள்
எழுதினாலும், அதும் மிகையாகாது..!

இங்கு வந்தவர் அனைவரையும் நன்றாய் உபசரித்து
உட்சாகப்படுத்தி தனது தனிப்பட்ட கவலைகளை
மறந்து இளைப்பார வைக்கும் உனது
சேவைக்கு நிகர் என்றும் நீயே
என்றால் அதும் மிகையாகாது..!

எல்லாம் விதமான சுமைகளையும் புன்முறுவலுடன்
இனிதென கடந்து வரும் உனது வெற்றி பயணத்தை
இந்த ஓவியம் உயியராகிறது 300 வது பதிப்பில்
வாழ்த்தி வணங்குவதில் பெருமைகொள்கிறேன்..!
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 300
Post by: VipurThi on November 29, 2022, 09:23:35 PM
காலங்கள் கடந்தோடிய போதிலும்
நேரங்கள் விரைந்தோடிய போதிலும்
கதையாய் கவிதையாய் அளவில்லா உரையாடல்களாய்
என் நினைவுகளை மீட்ட நிழலாகினாய் நீ

கவிதைகளின் தனித்துவமாம்
அதை செல்லப்பிள்ளையென கொண்டாய்
தொடர்ந்த உன் பயணத்தில் அன்று
என்னையும் இணைத்துக்கொண்டாய்

உருவமில்லா உணர்வுகளுக்கு
வார்த்தை எனும் வடிவம் அமைத்து
வரிகளெனும் ஆடை நெய்து
அழகுபடுத்தி அணிந்து கொண்டாய்

வண்ணங்கள் பூசும் உன் ஓவியங்களோ
என்னில் எண்ணங்கள் பூச
என் கிறுக்கல்களுக்கும் கவிதையென
பெயர் படைத்தாய் நீ

எழுத்துக்கள் ஒவ்வொன்றும் நாடி நரம்பாக 
ஒற்றைக்குரல் ஒலிக்கும் ஒப்பனையிலே
ஓவியமும் உயிராக -இன்று
முந்நூறை முழுமையாக கடக்கிறாய்

எட்டினுள் இடம் பிடிக்க கிறுக்கியவைகள்
எண்ணிலடங்காமல் போனாலும்
தன்னலம் இல்லா தாயின்
கருவறையாகி சுமக்கிறாய்

எத்தனையோ கற்பனைகளுக்கு
நீ சூட்டிய மகுடம் -இன்று
உன்னை அலங்கரிக்கும் மணிமகுடமாய்
என்றும் உன் புகழை பறை சாற்றும்

இன்னும் பல முந்நூறுகளை நீ கடந்து
என்றென்றும் வெற்றி பெற
வாழ்த்தும் நான்………

                         **விபு**


Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 300
Post by: எஸ்கே on November 29, 2022, 11:47:39 PM
 :(