சில குடும்பத் தலைவர்கள் முகத்தில் எப்போதும் கடுகு பொரிகிற மாதிரி அப்படி ஒரு அனல் வீசிக்கொண்டிருக்கும். முகமோ சிரிப்பையே மறந்திருக்கும். சின்ன விஷயத்துக்கும் சட்டென்று கோபப்பட்டு விடுவதால் இவர்களின் மனைவி, பிள்ளைகள் எப்போதுமே இரண்டடி தள்ளி நின்றபடி தான் பேசுவார்கள். இவர்களுக்கு சாப்பாடு பரிமாறும் நேரத்தில் இவர்களின் மனைவிகள் ஏதோ ஒரு பிரார்த்தனை வாசகத்தை உதட்டுக்குள் முணுமுணுத்தபடி தான் இருப்பார்கள். சாம்பாரில் உப்பு இல்லையென்றால் தட்டு பறக்கும். அதனாலேயே அப்படியொரு நிகழ்வுக்கும் காலப்போக்கில் இவர்களின் இல்லத்தரசிகள் பழகி விடுகிறார்கள்.
அதேநேரம் மணக்க மணக்க சாம்பார் ஊற்றி திருப்தியாக சாப்பிட்டு முடித்தாலும் `நன்றாக இருந்தது’ என்று ஒரு வாய்வார்த்தை இவர்களிடம் இருந்து வெளிப்படாது.
இப்படியான மனநிலை கொண்டவர்களின் சிறுவயதுப் பிராயத்தை எடுத்துக் கொண்டால் பெரும்பாலும் இவர்கள் கவனிக்கப்படாமல் வளர்ந்திருப்பார்கள். பெற்றோரின் நாலு பிள்ளைகளில் ஒருவராக இருப்பார்கள். மற்ற பிள்ளைகள் யாருக்கும் கிடைக்காத திட்டு ஸ்பெஷலாக இவர்களுக்கு மட்டும் கிடைத்தபடி இருக்கும். வகுப்பறையிலும் இவர்கள் அமைதியே காப்பார்கள். வகுப்பில் பாடத்தை கவனித்துக் கொண்டிருந்தாலும் இவர்கள் பார்வை மட்டும் எங்கோ ஒரு கற்பனை உலகில் சஞ்சரித்துக் கொண்டிருப்பது போல் தெரியும்.
சில சமயம் ஆசிரியர்கள் வகுப்பறையில் ஏதாவது ஒரு ஜோக் சொல்ல, அதற்கு மாணவர்கள் விழுந்து விழுந்து சிரிப்பார்கள். ஆனால் இந்த மாதிரியான மாணவர்கள் மட்டும் எந்தவித ரியாக்ஷனும் காட்டாமல் .அமைதியாக இருப்பார்கள்.
அதற்காக எல்லாம் கடந்த நிலை என்று முனிவர்கள் ரேஞ்சுக்கு இவர்களை எடுத்துக் கொண்டு விட முடியாது. நடப்பதற்கு ஒரு மவுனசாட்சியாக இருப்பார்கள். இவர்களிடம் கருத்து கேட்டால், தெரிந்த விஷயத்தை சொல்லவும் தயக்கம் காட்டுவார்கள். முடிந்தால் கருத்து கேட்டவர்களிடம் இருந்து நகரவும் பார்ப்பார்கள்.
பள்ளிப்பருவத்தில் ஆசிரியர்களின் அரவணைப்பும் கிடைக்காமல், வீட்டில் பெற்றோருக்கும் வேண்டாத பிள்ளைகளாய் ஏனோதானோவென்று வளரும் இவர்கள் பின்னாளில் அதிகார வட்டத்திற்குள் வரும்போது ஒட்டுமொத்த அதிகாரத்தையும் தங்கள் கையில் எடுத்துக் கொண்டு விடுகிறார்கள். அதுவரை தன்னை கண்டு கொள்ளாத சமுதாயத்தை இவர்கள் சாட்டையால் அடிப்பது போல் தங்களைச் சார்ந்தவர்களை காயப்படுத்தி திருப்திப் பட்டுக் கொள்கிறார்கள். அதிலும் இவர்களிடம் மாட்டிக் கொள்ளும் குடும்பம் தான் இவர்களின் அதிக பட்ச அதிகார இலக்கு.
இப்படிப்பட்டவர்களை எப்படித்தான் வழிக்கு கொண்டு வருவது? இவர்களை முன்னிலைப்படுத்துகிற மாதிரியான விஷயங்களை படிப்படியாக தொடர வேண்டும். அதாவது அப்படியாக நடிக்க வேண்டும். உப்பு பெறாத விஷயத்துக்கும் இவர்களின் அனுமதி கேட்டு அதன்பிறகே செய்யவேண்டும். ஆனால் இது நடிப்பு என்பதை அவர் கண்டு கொள்ளாத மாதிரி நடந்து கொள்வதில்தான்வெற்றியே இருக்கிறது.
ஒருகட்டத்தில் இதைல்ெலாம் என்னிடம் கேட்டுக் கொண்டிருக்க வேண்டுமா? என்ற சலிப்பின்நிலைக்கு அவர் வந்து விடக்கூடும். எல்லாருக்கும் வருகிற மாதிரி சாதாரண தலைவலி காய்ச்சல் அவருக்கும் எப்போதாவது வரலாம். அப்போது ஒட்டுமொத்த குடும்பமும் அவரை கவனிப்பதில் அக்கறை காட்ட வேண்டும். டாக்டரிடம் அழைத்துப்போய், “டாக்டர்…இவருக்கு ஒண்ணுன்னா நாங்க எல்லாம் உயிரோடு இருந்து வேஸ்ட். அதனால் இவரை எப்படியாவது குணப்படுத்திடுங்க” என்று சொல்லும்போதே வார்த்தைகள் தழுதழுத்து நாக்குழற வேண்டும். கண்களில் வராத கண்ணீரை லேசாக துடைக்க முற்பட வேண்டும்.
இப்படியான சந்தர்ப்பங்களில் தான் அவர் தன்னைப்பற்றி யோசிப்பார்.குடும்பத்தை நடத்தினவிதம் பற்றி யோசிப்பார். `கொஞ்சம்அதிகமாத்தான் அடாவடி பண்ணிட்டோமோ? அப்படி பண்ணியும் இந்தக் குடும்பம் என்னை நேசிக்குதுன்னா நான் இனியாவது என்னை மாற்றிக்கொள்ளத்தானே வேணும்’ என உள்மனம் குரல் கொடுக்கும்.
இதற்கெல்லாம் பிறகு அவர் குணமாகி வழக்கம்போல தன் வேலைகளில் ஈடுபடத் தொடங்கினாலும், எப்போதாவது இரவில் மொட்டை மாடியில் காற்றாட நின்று கொண்டிருந்தால், “கொட்ற பனியில் இப்படி நின்னா மார்ச்சளி பிடிச்சி பாடாப்படுத்திடுமே. உள்ளே வாங்க” என்று அக்கறை சிகாமணியாய் பதட்டக்குரலில் வீட்டுக்குள் அழைத்துப் போக வேண்டும். இது எதில் ஒன்றாவது ஓவர்ஆக்டிங்காக அமைந்து விட்டால், `பொய் நாடகம்..போலி நடிப்பு’ என்பதை அவர் கண்டு கொள்வார். அப்புறம்…?
மறுபடியும் முதல்ல இருந்தா..?