விளையும் பயிர்....
இளம் தலைமுறையினர் ஒவ்வொரு கால கட்டத்திலும் அவர்களுக்கு முந்திய தலை முறையினரைவிட முற்றிலும் வித்தியாசமானவர்களாக இருப்பது சகஜம். இதற்குப் பெயர் ஜெனரேஷன் காப் [ generation gap] என்று சொல்லப்படுகிறது.
'ஜெனரேஷன் காப்' என்ற வார்த்தை பிரயோகத்திற்கு முன் 'கலிகாலமிது' என்று சொல்லி வந்தனர். வார்த்தையை எப்படி பிரயோகித்தாலும், இதற்க்கு அர்த்தம் மட்டும் ஒன்றாகவே இருந்து வந்துள்ளது.
இதில் குறிப்பிடும்படியான மிகப் பெரிய வித்தியாசம் என்னவென்றால் அப்போதைக்கும் இப்போதைக்கும் கணிசமான அளவில் இதன் தொகை அதிகரித்துள்ளதும், violence என்று சொல்லப்படும் நிலை அதிகரிப்பதும் கவலை அளிப்பதாக உள்ளது.
ஆண்களும் பெண்களும் பருவம் அடையும் வயது மிகவும் குறைந்து வருவதும் கூட இதற்க்கு ஒரு காரணமாக இருக்கக்கூடும் என்றும் எண்ணத் தோன்றுகிறது.
பெற்றோருக்கு கீழ்படியாத தலைமுறையினர் பெருகிவருவதும், சில பெற்றோருக்கு தங்களின் கடமை என்னவென்பதே தெரிந்திராதவர்களாக இருப்பதும் இந்நிலை உருவாக மிக முக்கிய காரணங்கள்.
குழந்தை பருவத்திலேயே தவறு செய்யும்போது கண்டித்து அடித்து திருத்துவதும் பெற்றோரின் மிக முக்கிய கடமைகளில் ஒன்று என்பது பலருக்கு தெரியாத ஒன்றாகவே உள்ளது, குழந்தைகள் எங்கே போகிறார்கள் என்ன செய்கிறார்கள் யாருடன் அதிக உறவு கொள்கிறார்கள் அந்த உறவிற்கு என்ன காரணம் இதெல்லாம் அறிந்து அதற்கேற்றார்போல அவர்களை திருத்தி வளர்ப்பது தங்களது கடமை என்பதை பலர் அறியாமலிருப்பதும், பிள்ளைகள் தவறு செய்யும்போது கண்டித்தால் தங்கள் பிள்ளைகள் வீட்டைவிட்டு ஓடி விடுவார்கள் அல்லது வேறே விபரீதங்கள் ஏற்பட்டுவிடும் என்பதும் காரணமாக கூறப்படுகிறது.
பைபிளில் ஒரு வசனம், "பிரம்பை கையாளாதவன் தன் மகனை [குழந்தையை] பகைக்கிறான்" என்கிறது. எப்போது அடித்து திருத்த வேண்டுமோ அப்போது அடித்து திருத்தவில்லை என்றால் குழந்தைகளின் எதிர்காலம் என்பது மிகவும் மோசமானதாகிவிடுவதை நம்மால் பார்க்க முடியும். பிறகு வருந்தி பயன் ஒன்றும் இராது என்பதை உணரவேண்டிய காலத்தில் உணர வேண்டும்.
சில வீடுகளில் குடும்பத்திலிருக்கும் ஒரு நபர் குழந்தையிடம் மிகவும் கண்டிப்புடன் இருப்பார், குழந்தைகள் தவறு செய்யும்போது அவர் கண்டிக்கும் சமயத்தில் குடும்பத்திலிருக்கும் நபர்கள் தலையீட்டினால் குழந்தைகளை தக்க சமயத்தில் திருத்தும் வாய்ப்பை தடுப்பதுண்டு, அல்லது கண்டிப்பான நபரின் குறைகளை குழந்தைகளின் எதிரில் சொல்லி காண்பித்து குழந்தைகளை கண்டிக்கவிடாமல் செய்யும் குடும்பத்தினரும் உண்டு, இதனால் குழந்தைகளின் தவறுகள் திருத்தபடாமல் போய்விடுவதுடன் கண்டிப்புடன் இருக்கும் நபரின் மீது மரியாதையும் மதிப்பும் போய்விடும், அந்த குழந்தையின் எதிர்காலம் பாதிப்பிற்க்குள்ளாவதுடன் கண்டிப்புடன் இருக்கும் நபருக்கும் குழந்தைகளுக்குமான உறவு துண்டிக்கப்பட்டு அவர் மீது வெறுப்புணர்ச்சி ஏற்ப்பட்டுவிடுகிறது.
சில பெற்றோர் தங்கள் பிள்ளைகள் பொருளோ பணமோ வீட்டிற்கு கொண்டு வரும்போது அவற்றை ஆர்வமுடன் வாங்கி ஒளித்து வைப்பது அல்லது அந்த பொருளை உபயோகிப்பது போன்ற பெற்றோரின் செய்கைகள் அந்த குழந்தைக்கு தான் செய்ததில் தவறு உள்ளது என்பதை அறியவிடாமல் அதற்க்கு மாறாக அவர்கள் செய்த தவறை ஊக்குவிப்பது போல உள்ளதால் அவர்கள் அச்செயல்களை தொடர்ந்து செய்யும் நிலைக்குத் தள்ளப்படுகின்றனர்.
பத்து வயதிலிருந்து பதினைந்து வயதிற்குள் உள்ள குழந்தைகளின் செய்கைகளையும் அவர்களது பேச்சுக்களையும் பார்க்கும் போது எதிர்காலம் எப்படி இருக்குமோ என்று வருந்த வைப்பதாகவே உள்ளது.
பருவநிலை மாற்றங்களால் மட்டுமல்ல மனிதர்களின் இயல்புகளின் மாற்றங்களாலும் வரும் காலங்கள் மோசமான மாற்றங்களை எதிர் நோக்கியுள்ளது.