நண்பர்களே, இதை ஒரு முறை கற்பனை செய்து பாருங்கள். நீங்கள் ஓர் விமானத்தில் பறந்து கொண்டிருக்கிறீர்கள். பல அடிகளுக்குக் கீழே, நிலநடுக்கம் ஏற்பட்டு, அதிர்வு அலைகள் புவியின் பரப்பில் உருளத் தொடங்கி, மரங்கள் பலமாக ஆடத் தொடங்கி மேலும் கட்டிடங்கள் நொறுங்கிச் சாய்கின்றன. இந்த அதிர்வுகளும், பாதிப்புகளும் வானத்தில் பறக்கும் விமானத்தையும் உங்களையும் தாக்குமா? விமானம் குலுங்குவதை நீங்கள் உணர முடியுமா? இதற்குப் பதிலை இன்றைய அறிவு டோஸில் தெரிந்துகொள்ளுங்கள்.
நம் பூமி மலைகளால் மட்டும் ஆனதில்லை, பரந்துவிரிந்த கடல்களும், 1,000 கிலோமீட்டர் உயர்ந்த புவியின் வளிமண்டலமும் பூமியை நான்கு புறமும் சூழ்ந்திருக்கிறது. உங்கள் எல்லோருக்கும் தெரிந்தது போல், பூமியின் அடியில் நடுக்கம் ஏற்படும் பொழுது, அதன் அதிர்ச்சி அலைகள், கடல் அடி மட்டத்தைத் தாக்குவதால், பூமிக்கு மேலே அலைகள் சுனாமியாய் எழுகின்றன. இப்படி இருக்கும் பொழுது, ஏன் இந்த அதிர்ச்சி வளி மண்டலத்தை எட்டக் கூடாது அல்லது எட்ட முடியாது?
பூகம்பம் ஏற்படும் பொழுது அழுத்தம் மற்றும் வெட்டு அலைகளாக (p மற்றும் S அலைகள் ) அதிர்வு அலைகள் வெளியேறும். இந்த அழுத்த அலைகள் திடப் பொருள்களைக் கடந்து, வளிமண்டலத்தில் நுழையும் பொழுது, அவை ஒலி வடிவை அடைகின்றன. இந்த ஒலிகள் வாயு மண்டலத்தைக் கடந்து விமானத்தை அடைந்தாலும் கூட, அவை மெலிவடைந்து, தாக்கம் குறைந்தே அடைகின்றன. இந்த அலைகளை விமானத்தின் ஒலியோ அல்லது அதன் இயக்க அலைகளோ அடக்கிவிடும். எனவே, நீங்கள் நிச்சயமாக விமானத்தில் பாதுகாப்பாகத் தான் இருப்பீர்கள். அந்த நிலநடுக்கத்தைக் கேட்கவோ, உணரவோ மாட்டீர்கள்.
இப்போ சந்தேகம் தீர்ந்துவிட்டதா?