Author Topic: தமிழ்  (Read 16284 times)

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 500
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: தமிழ்
« Reply #30 on: July 06, 2012, 07:37:01 PM »
அன்மொழித் தொகை


 
இதுவரையிற் கூறிய தொகைகளில் அல்லாத சொற்கள் மறைந்துவருமாயின் அது அன்மொழித்தொகையாகும். மேலும் இவ்வன்மொழித்தொகை முன் சொன்ன ஐந்து தொகைகளில் ஒன்றாக இருக்கும்.

 
 
(எ-கா)

"ஆயிழை வந்தாள்" - இதில் ஆயிழையென்பது காலங்காட்டாத வினைத்தொகை (ஆராய்ந்த இழை, ஆராய்கின்ற இழை, ஆராயும் இழை). ஆயின் இவ்விடத்தில் அந்த இழையணிந்த பெண்ணென்று பொருளாததால், இது வினைத்தொகைப் புறத்தெ பிறந்த அன்மொழித்தொகை எனப்படும். இவ்வாறே மற்ற தொகைகளின் புறத்தே இந்த அன்மொழித்தொகை அமைந்திருக்கும்.
 
 
 
மேலும் சில எடுத்துக்காட்டுகள்:
 

"கோற்றொடியைக் கொன்று என் செய",
 "ஏந்திழை ஈமக் கடனிறுவிப் போது"
 "வீமன் திருமகளாம் மெல்லியலை",
 "ஆயமும் காவலும் ஆயிழை தனக்கு",
 "தந்துயர் காணா தகைசால் பூங்கொடி",
 "விளங்கிழை தமியன் ஆனாள்",
 "அஞ்சொல் இளவஞ்சி அடியெந்தோள் ஏறு"
                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 500
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: தமிழ்
« Reply #31 on: July 06, 2012, 07:41:02 PM »
பகுபதம்,பகாப்பதம்



பதம் என்னும் சொல்லும் சொல்லைக் குறிக்கும் வேறு ஒரு சொல் என்பதைப் பார்த்தோம். பதம் இரண்டு வகைப்படும். அவை,
 
1) பகுபதம்

2) பகாப்பதம் என்பவை ஆகும்.

 
 
 
பகுபதம்:
 
ஒரு சொல்லைப் பகுதி, விகுதி முதலிய உறுப்புகளாகப் பிரிக்க முடிந்தால் அது பகுபதம் எனப்படும்.
 
 
 
(எ.கா) அறிஞன், செய்தாள்
 
 
 
பகாப்பதம்:

ஒரு சொல்லைப் பகுதி, விகுதி முதலிய உறுப்புகளாகப் பிரிக்க முடியவில்லை என்றால் அது பகாப்பதம் எனப்படும்.
 
 
 
(எ.கா) மரம், தேன், தலை, போல, சால
 
 
 
பகுபத உறுப்புகள்

பகுதி, விகுதியாகப் பிரிக்கப்படும் சொல்லில் பல உறுப்புகள் இருக்கும். அவற்றைப் பகுபத உறுப்புகள் என்று கூறுவர்.
 
 
 
(எ.கா) வந்தனன்
 
 
 
இது ஒரு பகுபதம். இந்தச் சொல்லை,

வா+த்(ந்)+த்+அன்+அன்
 
 
 
என்று பிரிக்கலாம். இந்தச் சொல்லில் ஐந்து பிரிவுகள் உள்ளன. இவை ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு பெயர்கள் உள்ளன. இந்தப் பெயர்களைத் தான் பகுபத உறுப்புகள் என்று பொதுவாகக் கூறுகிறோம்.பகுதி,விகுதி,இடைநிலை,சாரியை,சந்தி,விகாரம்
 
என்னும் ஆறும் பகுபத உறுப்புகள் ஆகும்.
 
 
 
· பகுதி

ஒரு பகுபதத்தின் முதலில் இருப்பது பகுதி எனப்படும். பகுபதத்தில் உள்ள பகுதி பொருள் உடையதாக இருக்கும்.
 
 
 
(எ.கா) வந்தனன்
 
 
 
வா+த்(ந்)+த்+அன்+அன்
 
 
 
இதில் வா என்பது பகுதி ஆகும். வா என்னும் பகுதிக்கு வா என்று அழைக்கும் பொருள் இருக்கிறது. எனவே இது பகுதி ஆகும்.
 
 
 
· விகுதி

பகுபதத்தில் இறுதியில் இருக்கும் உறுப்பு விகுதி எனப்படும். விகுதி என்றால் இறுதி என்று பொருள்.
 
 
 
வா+த்(ந்)+த்+அன்+அன்
 
 
 
இதில் இறுதியில் உள்ள அன் விகுதி ஆகும்.
 
 
 
· இடைநிலை

பகுபதத்தில் இடையில் இருக்கும் உறுப்பு இடைநிலை எனப்படும்.
 
 
 
வா+த்(ந்)+த்+அன்+அன்
 
 
 
இதில் இடையில் இருக்கும் உறுப்பாகிய த் இடைநிலை ஆகும்.

 
 
· சாரியை

பகுபதத்தில் இடைநிலைக்கும், விகுதிக்கும் இடையில் வருவது சாரியை எனப்படும்.
 
 
 
வா+த்(ந்)+த்+அன்+அன்
 
 
 
இதில் இடைநிலைக்கும் விகுதிக்கும் இடையில் இருக்கும் அன் என்பது சாரியை ஆகும்.
 
 
 
· சந்தி

பகுதிக்கும் இடைநிலைக்கும் இடையில் வருவது சந்தி எனப்படும்.
 
 
 
வா+த்(ந்)+த்+அன்+அன்
 
 
 
இதில் பகுதிக்கும் இடைநிலைக்கும் இடையில் உள்ள த்(ந்) சந்தி ஆகும்.

 
 
· விகாரம்

பகுபத உறுப்புகளில் ஏற்படும் மாறுதல்கள் விகாரம் எனப்படும். விகாரம் என்றால் மாறுபாடு என்று பொருள்.



வா+த்(ந்)+த்+அன்+அன்
 
 
 
இதில் சந்தியாக இடம் பெற்றுள்ள த் என்னும் எழுத்து ந் ஆக மாறியுள்ளது. பகுதியாக இடம் பெற்றுள்ள வா என்னும் எழுத்து ‘வ’ என்று மாறியுள்ளது. இவ்வாறு மாறுபட்டு வருவது விகாரம் எனப்படும்.
 
 
                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 500
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: தமிழ்
« Reply #32 on: July 06, 2012, 07:44:27 PM »
பொருள்
 
பொருள் இரண்டு வகைப்படும். அவை,
 
1. அகப்பொருள்
 2. புறப்பொருள்

 
 
நம் இலக்கியஙளுக்குப் பாடுபொருள்களாக அமைவன அகப்பொருள்களும் புறப்பொருள்களும்.
 
 
 
ஒத்த அன்புடைய தலைவனும் தலைவியும் ஒருவரையொருவர் காதலித்து நடத்தும் வாழ்க்கை நிகழ்ச்சிகளை விளக்கிக் கூறுவது அகப்பொருள்.
 
 
 
அறம், பொருள், வீடு ஆகிய (இன்பம் ஒழிந்த) மூன்று பேறுகளை பற்றியும், கல்வி, வீரம், கொடை, புகழ் முதலியன பற்றியும் கூறுவது புறப்பொருள்.
                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 500
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: தமிழ்
« Reply #33 on: July 06, 2012, 07:47:46 PM »
யாப்பு


 
 
யாப்பு என்பதற்குப் புலவர்களால் செய்யப்பெறும் செய்யுள் என்பது பொருள். செய்யுள் இயற்றுதற்குரிய இலக்கணம் யாப்பிலக்கணமாகும்.
 
 
 
யாப்பின் உறுப்புகள்
 
1. எழுத்து
 2. அசை
 3. சீர்
 4. தளை
 5. அடி
 6. தொடை
                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 500
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: தமிழ்
« Reply #34 on: July 06, 2012, 07:48:30 PM »



எழுத்து(யாப்பு)


யாப்பிலக்கணத்தில் செய்யுள் அல்லது பாக்களுக்கு அடிப்படையாக அமையும் உறுப்பு எழுத்து ஆகும். இங்கே எழுத்து என்பது மொழியை எழுதுவதற்குப் பயன்படும் குறியீடுகளையன்றி அவற்றினால் குறிக்கப்படும் ஒலிகளையே குறித்து நிற்கின்றது. செய்யுள்களைப் பொறுத்தவரை மொழியின் ஒலிப் பண்புகள் சிறப்புப் பெறுகின்றன. இதனால் இந்த ஒலிப் பண்புகளுக்கு ஆதாரமாக அமையும் எழுத்துக்களை, அவற்றை ஒலிப்பதற்குத் தேவையான கால அளவுகளைக் கருத்தில் கொண்டு வகைகளாகப் பிரித்துள்ளார்கள்.
 
எழுத்துவகை

உயிரெழுத்துக்கள் -

 1 குறில்கள் அ, இ, உ, எ, ஒ
 2 நெடில்கள் ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஔ
 
மெய்யெழுத்துக்கள் க், ங், ச், ஞ், ட், ண், த், ந், ப், ம், ய், ர், ல், வ், ழ், ள், ற், ன்
 

உயிர்மெய் எழுத்துக்கள் -

1 குறில்கள் உயிர்க்குறில்கள் சேர்ந்து உருவான உயிர்மெய்கள்
 2 நெடில்கள் உயிர்நெடில்கள் சேர்ந்து உருவான உயிர்மெய்கள்

 


எழுத்துக்களின் கால அளவுகள்
 

குறில் எழுத்துக்களின் ஒலி அளவு ஒரு மாத்திரை அளவினதாகக் கொள்ளப்படுகின்றது. இதன் அடிப்படையில் நெடில் எழுத்துக்களின் கால அளவு இரண்டு மாத்திரைகளாகவும், மெய்யெழுத்துக்களின் கால அளவு அரை மாத்திரைகளாகவும் உள்ளன. உயிர்மெய்க் குறில்களினதும், உயிர்மெய் நெடில்களினதும் கால அளவுகளும், முறையே ஒரு மாத்திரையாகவும், இரண்டு மாத்திரைகளாகவும் உள்ளன.
                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 500
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: தமிழ்
« Reply #35 on: July 06, 2012, 07:50:44 PM »
அசை
 
யாப்பிலக்கணத்தில் அசை என்பது எழுத்துக்களின் குறிப்பிட்ட, வரையறை செய்த சேர்க்கையினால் உருவாகும் ஓர் அடிப்படை உறுப்பாகும். அசைகள் சேர்ந்தே சீர்கள் உருவாகின்றன.


 
அசை அமைப்பு

 
கீழேயுள்ளது சிறுபாணாற்றுப்படை என்னும் நூலிலுள்ள பாடலொன்றின் முதல் அடி.
 
அருந்திறல் அணங்கின் ஆவியர் பெருமகன்
 
இங்கே அருந்திறல், அணங்கின், ஆவியர், பெருமகன் என்பன சீர்களாகும். இச் சீர்களை அவற்றின் ஒலியமைப்பின் அடிப்படையில் கீழே காட்டியவாறு பிரிக்க முடியும்.
 
அருந்திறல் - அருந் திறல்
 அணங்கின் - அணங் கின்
 ஆவியர் - ஆ வியர்
 பெருமகன் - பெரு மகன்
 
மேற்காட்டியவாறு பிரிவடைந்து கிடைக்கும் ஒவ்வொரு பகுதியும் ஒரு அசையாகும். யாப்பிலக்கண விதிகளை நோக்கினால், அசைகளில் மெய்யெழுத்துக்களுக்குத் தனியான பெறுமானம் இல்லாமை புலப்படும் ஆனால் அசைகளின் எல்லைகளைக் காட்ட உதவும். எனவே ஒற்றெழுத்துக்கள் எனப்படும் மெய்யெழுத்துக்களைப் பொருட்படுத்தாது பார்த்தால் அசைகள், கூடிய அளவாக இரண்டு எழுத்துக்களை மட்டுமே கொண்டிருப்பதைக் காணலாம். இவற்றுடன் ஓர் ஒற்றெழுத்தோ அல்லது இரண்டு ஒற்றெழுத்துகளோ இறுதியில் வரக்கூடும்.

 
 
அசை பிரிப்பு
 
செய்யுள்களிலே அமையும் சீர்களின் தன்மை பற்றியும், அச் சீர்கள் ஒன்றுடன் இன்னொன்று சேரும்போது உருவாகும் தளைகள் பற்றியும் அறிந்துகொள்வதற்குச் சீர்களிலே அசைகளை இனங்காணல் அவசியம். இவ்வாறு சீர்களை இனங்கண்டு பிரித்தறிதல் அசை பிரித்தல் எனப்படுகின்றது.
 
 
 
ஒரு சீரை அசை பிரிக்கும்போது அச்சீரின் முதல் எழுத்து ஒரு மாத்திரை அளவுக்குக் கூடுதலான எழுத்து ஆயின் அது தனியாகவே ஒரு அசையாக அமையக்கூடும். எடுத்துக்காட்டாக 2 மாத்திரைகள் அளவுள்ள நெடில் அல்லது ஒன்றரை மாத்திரை கால அளவு கொண்ட ஐகார ஔகார எழுத்துக்கள் முதலெழுத்தாக வரின் அது தனியாக ஒரு அசையாகலாம். அடுத்துவரும் எழுத்து ஒரு ஒற்றெழுத்தாக அமையாவிடின் மேற்சொன்ன எழுத்துக்களை அசையாகக் கொள்ளமுடியும். ஆனால் முதல் எழுத்தைத் தொடர்ந்து ஒற்றெழுத்து வருமானால் அந்த எழுத்தையும் முதல் எழுத்தோடு சேர்த்து அசையாகக் கொள்ளவேண்டும்.
 
கீழேயுள்ளது நான்கு சீர்களைக் கொண்ட ஒரு செய்யுள் அடியாகும்.
 

"கேளிர் போலக் கேள்கொளல் வேண்டி"
 

இங்கே முதற்சீரான கேளிர் என்பதில் முதலெழுத்தான கே இரண்டு மாத்திரை அளவுள்ள நெடிலாகும். இதைத் தொடர்ந்து ஒற்றெழுத்து வராமையால் கே தனியாகவே அசையாக அமையும். இதுபோலவே இரண்டாஞ் சீரிலும் போ தனியாகவே அசையாகும்.
 
மூன்றாவது சீரான கேள்கொளல் என்பதிலும் முதலெழுத்தாக இரண்டு மாத்திரை அளவுள்ள நெடிலான கேயே வருவதால், அது தனியாகவே ஒரு அசையாக அமையக் கூடும். ஆனாலும் இரண்டாம் எழுத்து ள் ஒரு ஒற்றெழுத்து ஆதலால், அதையும் சேர்த்து கேள் என்பதை ஒரு அசையாகக் கொள்ள வேண்டும். நாலாஞ் சீரிலும் இதே அடிப்படையில் வே உம் ண் உம் சேர்ந்து வேண் என அசையாகும்.
 
சீரின் அல்லது அசைபிரிக்க எடுத்துக்கொண்ட சீர்ப்பகுதியின் முதலெழுத்து குறிலாக இருந்தால் அது தனியாக அசையாகாது. அது அடுத்துவரும் குறில், நெடில் அல்லது ஒற்றெழுத்து ஆகிய ஏதாவது எழுத்துடன் சேர்ந்தே அசையாக முடியும். தொடர்ந்து வரும் எழுத்துக்கள் ஒற்றெழுத்துக்கள் ஆயின் அவற்றையும் சேர்த்துக் கொள்ளவேண்டும். தனிக் குறிலைத் தொடர்ந்து, சேர்த்துக்கொள்வதற்கு அதே சீரில் வேறு எழுத்துக்கள் இல்லாவிடில் தனிக் குறிலே அசையாக அமையும்.
 
முன்னர் எடுத்துக்கொண்ட அதே செய்யுள் அடியின் முதற் சீரில், அசையாக இனங்கண்ட கே என்பதைத் தவிர்த்தபின் மிகுதியாக உள்ள ளிர் என்ற பகுதியின் முதல் எழுத்து ளி, அடுத்துவரும் ஒற்றெழுத்தான ர் உடன் சேர்ந்து ளிர்என அசையாகும். இவ்வாறே போலக் என்ற சீரிலும், லக் ஒரு அசையாகும்.
 
கேள்கொளல் என்னும் சீரில் கேள் என்னும் அசை தவிர்ந்த கொளல் எனும் பகுதியில், கொ குறில் எழுத்து அவ்விடத்தில் தனியாக அசையாகாது. அடுத்துவரும் ள உடன் சேர்ந்து அசையாகலாம். ஆனால் அடுத்த எழுத்து ஒற்றெழுத்து ஆதலால், அதையும் சேர்த்து கொளல் என்பதை ஒரு அசையாகக் கொள்ளவேண்டும்.
 
நான்காவது சீரான வேண்டி என்பதில், வேண் என்பது ஒரு அசையாக ஏற்கனவே அடையாளம் காணப்பட்டுள்ளது. எனவே மீந்துள்ள தனிக் குறிலான டி ஒரு அசையாகும்.
 
 
 
குறில், நெடில் எழுத்துக்கள் எவ்விதமாகச் சேர்ந்து அசைகள் உருவானாலும் தொடர்ந்து வரக்கூடிய ஒற்றெழுத்துக்களை அவற்றுடன் சேர்த்துக்கொள்ள வேண்டுமென்பதே யாப்பிலக்கண விதி. சில சமயங்களில் ஒன்றுக்கு மேற்பட்ட ஒற்றெழுத்துக்களும் இவ்வாறு சேர்ந்து அசைகளாவது உண்டு. சில எடுத்துக்காட்டுகள் கீழே தரப்பட்டுள்ளன.
 
* மகிழ்ந்தான் - மகிழ்ந் தான்
 * ஆர்த்த - ஆர்த் த
 * உய்த்துணர் - உய்த் துணர்
                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 500
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: தமிழ்
« Reply #36 on: July 06, 2012, 07:54:23 PM »
சீர்
 
சீர் என்பது, யாப்பிலக்கணப்படி, செய்யுள் உறுப்புக்களில் ஒன்று. யாப்பியலில், எழுத்துக்கள் இணைந்து அசைகளும், அசைகளின் சேர்க்கையினால் சீர்களும் உருவாகின்றன. செய்யுள்களில் சீர்கள் சொற்களைப் போலத் தென்பட்டாலும், உண்மையில் சீர்களும் சொற்களும் எல்லாச் சமயங்களிலும் ஒன்றாக இருப்பதில்லை.
 
நத்தார்படை ஞானன்பசு வேறின்நனை கவிழ்வாய்
 மத்தம்மத யானையுரி போர்த்தமண வாளன்
 பத்தாகிய தொண்டர்தொழும் பாலாவியின் கரைமேல்
 செத்தாரெலும் பணிவான்திருக் கேதீச்சரத் தானே
 
மேலேயுள்ளது சீர் பிரித்து எழுதப்பட்டுள்ள சுந்தரமூர்த்தி நாயனார் பாடிய தேவாரம் ஆகும். இதிலுள்ள பல சீர்கள் முறையான சொற்களாக அமைந்து வராமையைக் காண்க. சீர்கள் பல சந்தர்ப்பங்களில் பொருள் விளக்கத்துக்காக அன்றி, ஓசை நயத்தின் அடிப்படையிலேயே அமைகின்றன.
 
 
 
சீர் வகைகள்
 
செய்யுள்களில் வரும் சீர்கள் ஒன்று தொடக்கம் நான்கு வரையான அசைகளின் சேர்க்கையால் உருவாகின்றன. இவை,
 
1. ஓரசைச்சீர்
 2. ஈரசைச்சீர்
 3. மூவசைச்சீர்
 4. நாலசைச்சீர்
 
எனக் குறிப்பிடப்படுகின்றன. இந்த நான்கு வகையான சீர்களும் வேறு பெயர்களினால் குறிப்பிடப்படுவதும் உண்டு. அவற்றைக் கீழேயுள்ள அட்டவணையில் காணலாம்.
 

சீர்கள் வேறு பெயர்கள்
 ஓரசைச்சீர் அசைச்சீர்
 ஈரசைச்சீர் இயற்சீர், ஆசிரியச்சீர், ஆசிரிய உரிச்சீர்
 மூவசைச்சீர் உரிச்சீர்
 நாலசைச்சீர் பொதுச்சீர்
 
 
 
மேற்சொன்ன நால்வகையான சீர்களும், அவற்றில் இடம்பெறும் அசை வகைகள், அவை இடம்பெறும் ஒழுங்கு என்பவற்றுக்கு ஏற்பப் பல்வேறு வகைகளாக அமைகின்றன. ஓரசைச் சீர்கள் இரண்டு விதமாகவும், ஈரசைச் சீர்கள் நான்கு விதமாகவும், மூவசைச் சீர்கள் எட்டு விதமாகவும், நாலசைச் சீர் 16 விதமாகவும் அமைகின்றன. இவற்றை ஞாபகத்தில் வைத்திருப்பதை இலகுவாக்கவும், குறிப்பிட்டுச் சொல்வதற்கும் எழுதுவதற்கும் வசதியாக இருப்பதற்காகவும், குறிப்பிட்ட சில சொற்களை யாப்பிலக்கண நூல்கள் பயன்படுத்துகின்றன. இவை வாய்பாடுகள் எனப்படுகின்றன. மேற்சொன்ன 30 விதமாக ஒழுங்கில் அமையும் சீர்களையும், அவற்றுக்கான வாய்பாடுகளையும் கீழ்வரும் அட்டவணை காட்டுகின்றது. இதில் இரண்டாம் நிரலில் (Column) சீர்களில் நேரசை, நிரையசைகள் அமைந்திருக்கும் ஒழுங்கும், மூன்றாம் நிரலில் சீர்களுக்குரிய வாய்பாடுகளும், நாலாம் நிரலில் விளக்கம் கருதி அசைபிரித்து எழுதப்பட்டுள்ள வாய்பாடுகளையும் காண்க.
 
 
 
* ஓரசைச்சீர்கள்
 
1. நேர் -நாள் - நாள்
 2. நிரை -மலர் - மலர்
 
 

* ஈரசைச்சீர்கள்

 
1. நேர்-நேர் தேமா தே.மா
 2. நிரை-நேர் புளிமா புளி.மா
 3. நிரை-நிரை கருவிளம் கரு.விளம்
 4. நேர்-நிரை கூவிளம் கூ.விளம்
 
 
 
* மூவசைச்சீர்கள்
 
1. நேர்-நேர்-நேர் தேமாங்காய் தே.மாங்.காய்
 2. நேர்-நேர்-நிரை தேமாங்கனி தே.மாங்.கனி
 3. நிரை-நேர்-நேர் புளிமாங்காய் புளி.மாங்.காய்
 4. நிரை-நேர்-நிரை புளிமாங்கனி புளி.மாங்.கனி
 5. நிரை-நிரை-நேர் கருவிளங்காய் கரு.விளங்.காய்
 6. நிரை-நிரை-நிரை கருவிளங்கனி கரு.விளங்.கனி
 7. நேர்-நிரை-நேர் கூவிளங்காய் கூ.விளங்.காய்
 8. நேர்-நிரை-நிரை கூவிளங்கனி கூ.விளங்.கனி
 
 
 
* நாலசைச்சீர்கள்
 
1. நேர்-நேர்-நேர்-நேர் தேமாந்தண்பூ தே.மாந்.தண்.பூ
 2. நேர்-நேர்-நேர்-நிரை தேமாந்தண்ணிழல் தே.மாந்.தண்.ணிழல்
 3. நேர்-நேர்-நிரை-நேர் தேமாநறும்பூ தே.மா.நறும்.பூ
 4. நேர்-நேர்-நிரை-நிரை தேமாநறுநிழல் தே.மா.நறு.நிழல்
 5. நிரை-நேர்-நேர்-நேர் புளிமாந்தண்பூ புளி.மாந்.தண்.பூ
 6. நிரை-நேர்-நேர்-நிரை புளிமாந்தண்ணிழல் புளி.மாந்.தண்.ணிழல்
 7. நிரை-நேர்-நிரை-நேர் புளிமாநறும்பூ புளி.மா.நறும்.பூ
 8. நிரை-நேர்-நிரை-நிரை புளிமாநறுநிழல் புளி.மா.நறு.நிழல்
 9. நிரை-நிரை-நேர்-நேர் கருவிளந்தண்பூ கரு.விளந்.தண்.பூ
 10. நிரை-நிரை-நேர்-நிரை கருவிளந்தண்ணிழல் கரு.விளந்.தண்.ணிழல்
 11. நிரை-நிரை-நிரை-நேர் கருவிளநறும்பூ கரு.விள.நறும்.பூ
 12. நிரை-நிரை-நிரை-நிரை கருவிளநறுநிழல் கரு.விள.நறு.நிழல்
 13. நேர்-நிரை-நேர்-நேர் கூவிளந்தண்பூ கூ.விளந்.தண்.பூ
 14. நேர்-நிரை-நேர்-நிரை கூவிளந்தண்ணிழல் கூ.விளந்.தண்.ணிழல்
 15. நேர்-நிரை-நிரை-நேர் கூவிளநறும்பூ கூ.விள.நறும்.பூ
 16. நேர்-நிரை-நிரை-நிரை கூவிளநறுநிழல் கூ.விள.நறு.நிழல்
 
 
 
செய்யுள்களில் பெரும்பாலும் ஈரசை, மூவசைச்சீர்களே வருகின்றன. யாப்பிலக்கண விதிகளுக்கு அமைய, வெண்பாக்களின் இறுதிச் சீராக ஓரசைச்சீர் வரும். வேறிடங்களில் மிக மிக அரிதாகவே ஓரசைச்சீர்கள் காணப்படுகின்றன. இதுபோலவே நாலசைச் சீர்களும் குறைந்த அளவிலேயே பாக்களில் வருகின்றன.
                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 500
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: தமிழ்
« Reply #37 on: July 06, 2012, 07:57:29 PM »
தளை
 
தளை என்ற சொல் பிணைப்பு என்னும் பொருள்படும். செய்யுள்களில் அருகருகே வரும் சீர்களுக்கு இடையேயான தொடர்பு தளை எனப்படுகின்றது. தளை அமைவதற்கு இரண்டு சீர்கள் வேண்டும். செய்யுளில் முதலில் வரும் சீர் நிலைச்சீர் எனப்படுகின்றது. அதை அடுத்து வரும் சீர் வருஞ்சீர் என அழைக்கப்படுகின்றது. செய்யுளொன்றில் வரும் பெரும்பாலான சீர்கள் ஒவ்வொன்றுக்கும் இரண்டு தளைகள் அமைகின்றன. செய்யுளின் முதற் சீரும், இறுதிச் சீரும் அவற்றின் ஒரு பக்கத்தில் மட்டுமே சீர்களைக் கொண்டிருப்பதால் அவை தொடர்பில் ஒவ்வொரு தளை மட்டுமே அமையும்.
 
 
 
இரு சீர்களுக்கிடையேயான தளையின் இயல்பு நிலைச்சீரின் வகை, அதன் இறுதி அசை, வருஞ்சீரின் முதல் அசை என்பவற்றில் பெரிதும் தங்கியுள்ளது.
 

குழலினிது யாழினிது என்பர் தம்மக்கள்
 மழலைச்சொல் கேளா தவர்
 

என்பது ஒரு திருக்குறள். இது இரு அடிகளைக் கொண்ட வெண்பா வகையைச் சேர்ந்த ஒரு செய்யுள். இதன் ஒவ்வொரு சீரும் அசைபிரிக்கப்பட்டு, அவற்றுக்குரிய அசை வகைகளுடன் கீழே காட்டப்பட்டுள்ளது.
 

குழ.லினிது யா.ழினி.து என்.பர் தம்.மக்.கள்
 நிரை.நிரை நேர்.நிரை.நேர் நேர்.நேர் நேர்.நேர்.நேர்
 மழ.லைச்.சொல் கே.ளா தவர் .
 நிரை.நேர்.நேர் நேர்.நேர் நேர்
 

இதிலே முதலிரு சீர்கள் தொடர்பில், நிலைச்சீராக அமைவது ஈரசைச்சீர். நிலைச்சீரின் ஈற்றசை நிரை. வருஞ்சீரின் முதல் அசை நேர். நிலைச்சீர் இயற்சீராக (ஈரசைச்சீர்) இருக்க, அதன் ஈற்றுச்சீரும், வருஞ்சீரின் முதற்சீரும் வேறுபட்ட வகைகளாக இருப்பின் விளைவது இயற்சீர் வெண்டளை எனப்படும்.
 
 
 
இதுபோல இரண்டாம் மூன்றாம் சீர்கள் தொடர்பில் நிலைச்சீர், மூவசைச்சீர் ஆகும். நேரசையை இறுதியில் கொண்ட மூவசைச் சீர் வெண்சீர் எனப்படும். வருஞ்சீரின் முதல் அசையும் நேரசையாக உள்ளது. இவ்வாறு அமையும் தளை வெண்சீர் வெண்டளை ஆகும்.
 
 
 
இவ்வாறே செய்யுளிலுள்ள எல்லாச் சீர் இணைகளுக்கும் இடையிலுள்ள தளைகளின் வகைகளை அறிந்துகொள்ள முடியும். சீர்களுக்கு இடையே விளையக் கூடிய பல்வேறு வகையான தளைகளின் பெயர்களும், அத்தளைகள் ஏற்படுவதற்கான நிலைமைகளும் கீழே தரப்பட்டுள்ளன.
 

1. ஆசிரியத்தளை
 
நேரொன்றிய ஆசிரியத்தளை
 
- நிலைச்சீர் - இயற்சீர் (ஈரசைச்சீர்)
 - நிலைச்சீர் ஈற்றசை - நேர்
 - வருஞ்சீர் முதலசை - நேர்
 
நிரையொன்றிய ஆசிரியத்தளை
 
- நிலைச்சீர் - இயற்சீர் (ஈரசைச்சீர்)
 - நிலைச்சீர் ஈற்றசை - நிரை
 - வருஞ்சீர் முதலசை - நிரை
 

2. வெண்டளை
 
இயற்சீர் வெண்டளை
 
சிறப்புடை இயற்சீர் வெண்டளை
 
- நிலைச்சீர் - இயற்சீர் (ஈரசைச்சீர்)
 - நிலைச்சீர் ஈற்றசை - நிரை அல்லது நேர்
 - வருஞ்சீர் முதலசை - நிலைச்சீர் ஈற்றசை நிரையாயின் நேர், நேராயின் நிரை.
 - வருஞ்சீர் - இயற்சீர்
 
சிறப்பில் இயற்சீர் வெண்டளை
 
- நிலைச்சீர் - இயற்சீர் (ஈரசைச்சீர்)
 - நிலைச்சீர் ஈற்றசை - நிரை அல்லது நேர்
 - வருஞ்சீர் முதலசை - நிலைச்சீர் ஈற்றசை நிரையாயின் நேர், நேராயின் நிரை.
 - வருஞ்சீர் - வெண்சீர்
 
வெண்சீர் வெண்டளை
 
சிறப்புடை வெண்சீர் வெண்டளை
 
- நிலைச்சீர் - வெண்சீர் (மூவசைச்சீர்)
 - நிலைச்சீர் ஈற்றசை - நேர்
 - வருஞ்சீர் முதலசை - நேர்
 - வருஞ்சீர் - வெண்சீர்
 
சிறப்பில் வெண்சீர் வெண்டளை
 
- நிலைச்சீர் - வெண்சீர் (மூவசைச்சீர்)
 - நிலைச்சீர் ஈற்றசை - நேர்
 - வருஞ்சீர் முதலசை - நேர்
 - வருஞ்சீர் - வெண்சீர் தவிர்ந்த வேறு சீர்கள்
 

3. கலித்தளை
 
சிறப்புடைக் கலித்தளை

 
- நிலைச்சீர் - உரிச்சீர் (மூவசைச்சீர்)
 - நிலைச்சீர் ஈற்றசை - நேர்
 - வருஞ்சீர் முதலசை - நிரை
 - வருஞ்சீர் - காய்ச்சீர் (நேர் ஈற்றசை கொண்ட மூவசைச்சீர்)
 
சிறப்பில் கலித்தளை
 
- நிலைச்சீர் - உரிச்சீர் (மூவசைச்சீர்)
 - நிலைச்சீர் ஈற்றசை - நேர்
 - வருஞ்சீர் முதலசை - நிரை
 - வருஞ்சீர் - இயற்சீர் அல்லது கனிச்சீர் (நிரை ஈற்றசை கொண்ட மூவசைச்சீர்)
 

4. வஞ்சித்தளை
 
ஒன்றிய வஞ்சித்தளை
 
சிறப்புடை ஒன்றிய வஞ்சித்தளை
 
- நிலைச்சீர் - உரிச்சீர் (மூவசைச்சீர்)
 - நிலைச்சீர் ஈற்றசை - நிரை
 - வருஞ்சீர் முதலசை - நிரை
 - வருஞ்சீர் - கனிச்சீர்
 
சிறப்பில் ஒன்றிய வஞ்சித்தளை
 
- நிலைச்சீர் - உரிச்சீர் (மூவசைச்சீர்)
 - நிலைச்சீர் ஈற்றசை - நிரை
 - வருஞ்சீர் முதலசை - நிரை
 - வருஞ்சீர் - கனிச்சீர் தவிர்ந்த வேறு சீர்கள்
 
ஒன்றாத வஞ்சித்தளை
 
சிறப்புடை ஒன்றாத வஞ்சித்தளை
 
- நிலைச்சீர் - உரிச்சீர் (மூவசைச்சீர்)
 - நிலைச்சீர் ஈற்றசை - நிரை
 - வருஞ்சீர் முதலசை - நேர்
 - வருஞ்சீர் - கனிச்சீர்
 
சிறப்பில் ஒன்றாத வஞ்சித்தளை
 
- நிலைச்சீர் - உரிச்சீர் (மூவசைச்சீர்)
 - நிலைச்சீர் ஈற்றசை - நிரை
 - வருஞ்சீர் முதலசை - நேர்
 - வருஞ்சீர் - கனிச்சீர் தவிர்ந்த வேறு சீர்கள்
 
 
 
பாக்களும், தளைகளும்
 
மேலே எடுத்துக்காட்டப்பட்டுள்ள பல்வேறு விதமான தளைகள், ஆசிரியப்பா, வெண்பா, கலிப்பா, வஞ்சிப்பா என்னும் நால்வகைப் பாக்களில் ஒவ்வொன்றுக்குச் சிறப்பாக உரியவை. இதனாலேயே குறிப்பிட்ட தளைகளின் பெயர்கள் தொடர்புடைய பாக்களின் பெயர்களால் வழங்கப்படுகின்றன.
 
 
 
ஆசிரியத்தளைகள் ஆசிரியப்பாவுக்கும், வெண்டளைகள் வெண்பாவுக்கும், கலித்தளைகள் கலிப்பாவுக்கும், வஞ்சித்தளைகள் வஞ்சிப்பாவுக்கும் சிறப்பாக உரியவை.
                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 500
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: தமிழ்
« Reply #38 on: July 06, 2012, 08:00:09 PM »
அடி
 
தமிழ்ப் பாக்களின் இலக்கணத்தைக் கூறும் யாப்பியல் நூல்கள், பாக்களின் உறுப்புக்களாக, எழுத்து, அசை, சீர், அடி என்பவற்றைக் குறிப்பிடுகின்றன. எழுத்துக்கள் சேர்ந்து அசையும், அசைகள் சேர்ந்து சீரும், சீர்கள் சேர்ந்து அடியும் உருவாகின்றன.
 
 
 
அடிகளின் உருவாக்கம்
 
பாலும் தெளிதேனும் பாகும் பருப்புமிவை
 நாலும் கலந்துனக்கு நான்தருவேன் கோலஞ்செய்
 துங்கக் கரிமுகத்துத் தூமணியே நீயெனக்குச்
 சங்கத் தமிழ்மூன்றுந் தா
 
மேலேயுள்ள பாடலிலே ஒவ்வொரு வரியும் ஒரு அடியாகும். முதல் அடியானது 1. பாலும், 2. தெளிதேனும், 3. பாகும், 4. பருப்புமிவை என நான்கு பகுதிகளாகப் பிரித்து எழுதப்பட்டுள்ளது. இவை ஒவ்வொன்றும் சீர் என அழைக்கப்படுகின்றது. இப்பாடலிலே முதல் மூன்று அடிகள் ஒவ்வொன்றும் நான்கு சீர்களைக் கொண்டு அமைந்துள்ளன. நான்காவது அடி மூன்று சீர்களால் அமைந்துள்ளது. பொதுவாக பாடல்களின் அடிகளில் இரண்டு சீர்கள் முதல் பதினாறு சீர்கள் வரை காணக்கூடியதாக உள்ளது. இவ்வாறு வெவ்வேறு எண்ணிக்கையான சீர்களைக் கொண்டு அமைந்த அடிகள் வெவ்வேறு பெயர்களினால் குறிப்பிடப்படுகின்றன
 
.
 
1. குறளடி - இரண்டு சீர்கள் கொண்டது.
 2. சிந்தடி - மூன்று சீர்கள் கொண்டது.
 3. அளவடி - நான்கு சீர்கள் கொண்டது.
 4. நெடிலடி - ஐந்து சீர்கள் கொண்டது
 5. கழி நெடிலடி - ஆறு, ஏழு அல்லது எட்டு சீர்களைக் கொண்டது.
 6. இடையாகு கழி நெடிலடி - ஒன்பது அல்லது பத்து சீர்களைக் கொண்டது.
 7. கடையாகு கழி நெடிலடி - 11 முதல் 16 வரையான எண்ணிக்கைகளில் சீர்களைக் கொண்டது.
                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 500
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: தமிழ்
« Reply #39 on: July 06, 2012, 08:03:36 PM »
தொடை


தொடை என்பது யாப்பிலக்கணத்தில் செய்யுள் உறுப்புக்கள் வகையைச் சேர்ந்தது. செய்யுள்களின் சீர்களும், அடிகளும் தொடுத்துச் செல்லுகின்ற முறையுடன் சம்பந்தப்பட்டிருப்பதால் தொடை என வழங்கப்படுகின்றது. செய்யுள்களின் ஓசை நயத்துக்கும், அவற்றின் இனிமைக்கும் தொடைகள் முக்கியமானவை.
 
 
 
தொடை வகைகள்
தொடைகள் பலவகைப் படுகின்றன. இவை,
 
1. மோனைத் தொடை
 2. இயைபுத் தொடை
 3. எதுகைத் தொடை
 4. முரண் தொடை
 5. அளபெடைத் தொடை
 6. அந்தாதித் தொடை
 7. இரட்டைத் தொடை
 8. செந்தொடை
 
என்பனவாகும். இவற்றுள் மோனை, எதுகை, முரண் மற்றும் அளபெடைத் தொடைகள் செய்யுள் அடிகளின் முதற் சீருடன் சம்பந்தப்பட்டிருக்க, இயைபுத் தொடை அடிகளின் இறுதிச் சீர் தொடர்பாக அமைகின்றது.
 
 
 
தொடை விகற்பங்கள்
 
மேலே கண்ட எட்டுத் தொடைகளிலே முதல் ஐந்து தொடை ஒவ்வொன்றுக்கும் அவை பாவிலே அமைந்து வருகின்ற இடங்களைப் பொறுத்து, எட்டு வகையான வேறுபாடுகள் யாப்பிலக்கண நூல்களிலே சொல்லப்பட்டுள்ளன. இவை யாப்பிலக்கணச் சொற் பயன்பாட்டு வழக்கில் "விகற்பங்கள்" எனப்படுகின்றன. மேற் கூறிய எட்டு விகற்பங்களும் வருமாறு.
 
1. அடி
 2. இணை
 3. பொழிப்பு
 4. ஒரூஉ
 5. கூழை
 6. மேற்கதுவாய்
 7. கீழ்க்கதுவாய்
 
மோனை, எதுகை, முரண், அளபெடை, இயைபு ஆகிய தொடைகளில் எட்டுவகையான விகற்பங்கள் ஏற்படும்போது மொத்தம் நாற்பது தொடை விகற்பங்கள் உண்டாகின்றன. இவற்றுடன் விகற்பங்கள் இல்லாத அந்தாதி, இரட்டை மற்றும் செந்தொடைகளும் சேர்ந்து நாற்பத்து மூன்று ஆகின்றது.
 
 
 
1. மோனைத் தொடை
 மோனை என்பது செய்யுள் அடிகளின் முதல் எழுத்துக்கள் ஒத்து அல்லது ஒன்றி வருதல் ஆகும். அடிகளின் முதல் எழுத்துக்கள் மட்டுமன்றி சீர்களின் முதலெழுத்துக்கள் ஒன்றி வரினும் அது மோனையே ஆகும். சீர்கள் தொடர்பில் வரும் மோனை சீர்மோனை எனவும், அடிகள் தொடர்பில் வருவது அடிமோனை எனவும் குறிப்பிடப்படுகின்றன.


1.1சீர்மோனைகள்
 
1. பாலுந் தெளிதேனும் பாகும் பருப்புமிவை
 
இந்த வெண்பா அடியிலே முதற் சீரின் முதல் எழுத்தாக வரும் பா மூன்றாம் சீரின் முதலெழுத்தாகவும் வருகிறது. நாலாஞ்சீரின் முதலெழுத்தாகவும் அதன் உயிரெழுத்து இனமான ப வருவதால், இவ்வடி 1, 3, 4 ஆம் சீர்களில் மோனை அமைந்த அடியாகும்.
 
 
 
2. கற்க கசடற கற்றவை கற்றபின்
 
இத் திருக்குறள் அடியில் 1, 2, 3, 4 ஆகிய எல்லாச் சீர்களிலும் க என்னும் ஒரே எழுத்து மோனையாக வந்துள்ளது. இவ்வாறு அமைவது முற்று மோனை எனப்படும்.
 
 
 
1.2அடிமோனைகள்
 
தம்பொருள் என்ப தம்மக்கள் அவர்பொருள்
 தந்தம் வினையான் வரும்
 
மேலே காட்டிய திருக்குறளில் இரண்டு அடிகளினதும் முதற் சீர்கள் த எனும் எழுத்தில் தொடங்குவதால் இதிலே அடிமோனை அமைந்துள்ளது.
 
 
 
அடிமோனை சிறப்புக் குறைவானதால் அடிமோனைகள் அமைந்த பாடல்கள் மிகக் குறைவே. அடிகள் தொடர்பில் சிறப்புப் பெறுவது எதுகையாகும் இது அடி எதுகை எனப்படும்.
 
 
 
2. இயைபுத் தொடை
 ஒரு செய்யுளில் ஒன்றுக்கு மேற்பட்ட அடிகளின் இறுதி எழுத்து அல்லது இறுதிச் சொல் ஒத்து வரும்போது அது இயைபுத் தொடை என்று கூறப்படுகின்றது. ஒரே அடியில் உள்ள சீர்களின் இறுதி எழுத்துக்கள் ஒன்றி வந்தாலும், அடியின் இறுதிச் சொல்லும் அவ்வடியில் வரும் சீர்களின் சொற்கள் ஒன்றி வந்தாலும் அது இயைபுத் தொடையேயாகும். இதன் படி ஒரு செய்யுளில் இயைபுத் தொடை நான்கு வகையில் அமைய முடியும்.
 
 
 
1. ஒன்றுக்கு மேற்பட்ட அடிகளின் இறுதி எழுத்துக்கள் ஒன்றுதல்.
 2. ஒன்றுக்கு மேற்பட்ட அடிகளின் இறுதிச் சொற்கள் ஒன்றுதல்.
 3. ஒரு அடியிலுள்ள ஒன்றுக்கு மேற்பட்ட சீர்களின் இறுதி எழுத்துக்கள் ஒன்றுதல்.
 4. ஒரு அடியில் வரும் இறுதிச் சொல் அந்த அடியில் வரும் இன்னொரு சீரிலாவது ஒன்றி வருதல்.
 
 
 
எடுத்துக்காட்டுகள்
 
ஐந்து கரத்தனை ஆனை முகத்தனை
 இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை
 நந்தி மகன்தனை ஞானக் கொழுந்தினை
 புந்தியில் வைத்தடி போற்றுகின் றேனே
 
மேற்கண்ட பாடலிலே முதல் மூன்று அடிகளிலும் வரும் இறுதி எழுத்துக்கள் (னை) ஒன்றி இருப்பதனால் இது ஒரு இயைபுத் தொடை கொண்ட பாடலாகும். இது தவிர முதலாம், மூன்றாம் அடிகளில், இறுதி எழுத்துடன் அதே அடியிலுள்ள வேறு சீர்களின் இறுதி எழுத்துக்களும் ஒன்றுவதால் இது அந்த வகையிலும் கூட இயைபுத் தொடை கொண்ட ஒரு பாடலாக அமைகின்றது.
 
 
 
3. எதுகை தொடை
 யாப்பிலக்கணத்தில் தொடை என வழங்கப்படும் செய்யுள் உறுப்பு வகைகளில் எதுகை முக்கியமானதாகும். வெவ்வேறு அடிகளின் அல்லது சீர்களின் முதலெழுத்துக்கள் ஒத்துவரின் மோனை எனப்படின், இரண்டாவது எழுத்துக்கள் ஒத்துவருதல் எதுகை ஆகும்.
 


அடிதொறும் தலை எழுத்து ஒப்பது மோனை
 அது ஒழித் தொன்றின் எதுகை ஆகும்
 
என்பது தொல்காப்பியர் கூற்று.
 எதுகை வகைகள்
 
எதுகை சீர்களிலும், அடிகளிலும் வரக்கூடும். இவை முறையே சீரெதுகை என்றும் அடியெதுகை என்றும் அழைக்கப்படுகின்றன. பொதுவாக அடியெதுகையே செய்யுள்களில் சிறப்புப் பெறுகின்றது. சீரெதுகை அதிகம் கைக்கொள்ளப் படுவதில்லை.
 
 
 
4. முரண் தொடை

 செய்யுளில், சொல் அல்லது பொருள் முரண்பட்டு நயம் பயக்கும் வகையில் அமைவது முரண் தொடை ஆகும். இது செய்யுளின் வெவ்வேறு அடிகளின் முதற் சீர்களில் அமையலாம் அல்லது ஒரே அடியின் வெவ்வேறு சீர்களிலும் அமையலாம்.
 
 

5. அளபெடைத் தொடை

 செய்யுள்களில் அடிகளில் அளபெடை அமைய வருவது அளபெடைத் தொடை ஆகும். எழுத்துக்கள் தமக்குரிய மாத்திரைகளுக்கு அதிகமாக அளபெடுத்து (நீண்டு) ஒலிப்பது அளபெடை. நயம் கருதி இவை செய்யுள்களில் பயன்படுத்தப்படுகின்றன. மோனை, எதுகை போன்ற பெரும்பாலான தொடைகளைப் போலவே அளபெடைத் தொடையும் செய்யுள் அடிகளின் முதற் சீரிலேயே அமைகின்றன.
 
 
 
ஒஒ இனிதே எமக்கிந்நோய் செய்தகண்
 தாஎம் இதற்பட் டது.
 
என்னும் குறளில் அளபெடைத்தொடை அமைந்துள்ளது காண்க. இங்கே அடிகளின் முதற் சீரின் முதல் எழுத்தே அளபெடுத்து அமைந்துள்ளது. எனினும் அச் சீரின் எவ்வெழுத்து அளபெடுத்து அமைந்தாலும் அது அளபெடைத் தொடையே ஆகும்.
 
 

6. அந்தாதித் தொடை

 ஒரு அடியில் ஈற்றில் அமையும் சீர், அசை அல்லது எழுத்து, அடுத்துவரும் அடியின் தொடக்கமாக அமைவது அந்தாதித் தொடை எனப்படும். அடுத்தடுத்த செய்யுள்களில் இத் தொடர்பு இடம்பெறின் அதுவும் அந்தாதித் தொடையே. அதாவது ஒரு செய்யுளின் இறுதிச் சீர், அசை அல்லது எழுத்தை அடுத்துவரும் செய்யுளின் முதலில் வரும் வகையில் அமையின் அதுவும் அந்தாதித் தொடை எனப்படும்.
 

ஒரு அடியின் ஈற்றிலும் அடுத்ததின் முதலிலும் எழுத்து மட்டும் ஒன்றாய் வருவது எழுத்தந்தாதி எனலாம். இவ்வாறே, அசை, சீர், அடி என்பவை ஒன்றாக இருப்பது முறையே அசையந்தாதி, சீரந்தாதி, அடியந்தாதி எனப்படலாம்.
 
 
 
எடுத்துக்காட்டுகள்
 
வேங்கையஞ் சார லோங்கிய மாதவி
 விரிமலர்ப் பொதும்பர் நெல்லியன் முகமதி
 திருந்திய சிந்தையைத் திறைகொண் டனவே


மேல் உள்ள பாடலில் எழுத்தந்தாதித் தொடை அமைந்துள்ளதைக் காணலாம். முதலடியின் இறுதியெழுத்தான "வி" இரண்டாம் அடியின் முதலில் வருவதும், இரண்டாம் அடியின் இறுதி எழுத்து மூன்றாம் அடியின் முதலில் வருவதும், மூன்றாம் அடியின் இறுதி எழுத்து மீண்டும் முதலடியின் முதலில் வருவதும் காண்க.
 

அந்தாதித் தொடைக்கு எடுத்துக்காட்டாக, இளம்பூரணர் பின்வரும் பாடலைக் கொடுத்துள்ளார்.
 

உலகுடன் விளங்கும் ஒளிதிகழ் அவிர்மதி
 மதிநலன் அழிக்கும் வளங்கெழு முக்குடை
 முக்குடை நீழல் பொற்புடை ஆசனம்
 ஆசனத் திருந்த திருந்தொளி அறிவன்
 ஆசனத் திருந்த திருந்தொளி அறிவனை
 அறிவுசேர் உள்ளமோ டருந்தவம் புரிந்து
 துன்னிய மாந்தர் அஃதென்ப
 பன்னருஞ் சிறப்பின் விண்மிசை உலகே
 

மேலேயுள்ள பாடலில் பல வகையான அந்தாதித் தொடைகள் பின்வருமாறு வந்துள்ளன.
 

முதலாம் இரண்டாம் அடிகள் - அசையந்தாதி
 இரண்டாம் மூன்றாம் அடிகள் - சீரந்தாதி
 மூன்றாம் நான்காம் அடிகள் - சீரந்தாதி
 நான்காம் ஐந்தாம் அடிகள் - அடியந்தாதி
 ஐந்தாம் ஆறாம் அடிகள் - சீரந்தாதி
 ஆறாம் ஏழாம் அடிகள் - எழுத்தந்தாதி
 ஏழாம் எட்டாம் அடிகள் - எழுத்தந்தாதி
 எட்டாம் முதலாம் அடிகள் - சீரந்தாதி

 

7. இரட்டைத் தொடை

 செய்யுள் ஒன்றின் ஒரு அடியில் முழுவதும் ஒரே சொல்லே அதன் சீர்களாகத் திரும்பத் திரும்ப வருமாயின் அது இரட்டைத் தொடை எனப்படும். எனினும் இச் சொல் எல்லா இடங்களிலும் ஒரே பொருளிலேயே வரவேண்டும் என்பதில்லை. வெவ்வேறு பொருள்களிலும் வரலாம்.
 
 
 
8.செந்தொடை
 மோனை, எதுகை, இயைபு, முரண், அளபெடை, அந்தாதி, இரட்டை போன்ற எவ்வகைத் தொடையும் இல்லாமல், அவற்றில் உள்ள சொற்களின் இயல்பான தன்மையினால் அழகுற அமைவது செந்தொடை எனப்படுகின்றது.
                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 500
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: தமிழ்
« Reply #40 on: July 06, 2012, 08:05:36 PM »
அணி


அணி என்பதற்கு அழகு என்பது பொருள். செய்யுளில் அமைந்து கிடக்கும் சொல்லழகு, பொருளழகு முதலியவற்றை வரையறுத்துக் கூறுவது அணி இலக்கணமாகும். அணி பலவகைப்படும். அவற்றுள் சில,
 
 
 ■தண்மை அணி
 ■உவமையணி
 *இல்பொருள் உவமையணி
 *எடுத்துக்காட்டு உவமையணி
 ■உருவக அணி
 ■பின்வருநிலையணி
 ■தற்குறிப்பேற்ற அணி
 ■வஞ்சப் புகழ்ச்சியணி
 ■வேற்றுமை அணி
 ■இரட்டுறமொழிதலணி
                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 500
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: தமிழ்
« Reply #41 on: July 06, 2012, 08:08:56 PM »
உவமையணி


தமிழிலக்கணத்தில், உவமையணி என்பது கூறக் கருதிய பொருளை நன்கு தெரிந்த ஒன்றைக் காட்டி விளக்குவது. ஒரு பொருளை இன்னொரு பொருளுடன் ஒப்பிட்டு அழகு படுத்திக் கூறுவது. தெரியாத பொருளைக் காட்ட தெரிந்த பொருளைச் சொல்லி விளக்குவது.
 
 
 
மூன்று வகைகள்
 
உவமையணி மூன்று வகைப்படும். அவையாவன:
 
1. பண்பு உவமையணி
 2. தொழில் உவமையணி
 3. பயன் உவமையணி.
 
 
 
பண்பு உவமையணி
 
உதாரணம்: குத்துப்பல், பவளவாய், கயல்விழி
 பவளம் போல் சிறப்பு பவளத்தின் பண்பு.
 
 
 
தொழில் உவமையணி
 
உதாரணம்: புலிமறவன், குரங்குமனம்
 செயலை விளக்குவது
 புலியின் வீரம், தாவும் மனம்.
 
 
 
பயன் உவமையணி
 
உதாரணம்: மழைக்கை
 மழை போல பொழியும்(கொடுக்கும்) கை
 
--------------------------------
 
உவமையணியில் உவமானம் ,உவமேயம், உவமை உருபுகள் ஆகிய மூன்றும் வெளிப்படையாக வரும். இவைகளோடு பொதுத்தன்மையும் இருக்கும்.
 
 
 
உவமானம்-ஒப்பிடக் கொண்டு வந்த பொருள்
 உவமேயம்-ஒப்பிட எம்மிடமுள்ள பொருள்

 உவமை உருபுகள்- உதாரணம்: போன்ற, போல, நிகர்த்த, உடைய, ஒப்ப, அன்ன, அனைய
 பொதுத்தன்மை-இரண்டுக்கும் உள்ள தன்மை(சந்திரன் போல முகம். இங்கு சந்திரன் உவமானம். முகம் உவமேயம். இதில் சந்திரனின் வடிவம், அழகு, வட்டம், குளிர்மை போன்றவை பொதுத்தன்மை).
 
 
 
சான்று:

அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை

இகழ்வார்ப் பொறுத்தல் தலை
 
 
 
இங்கு,
 
உவமானம்: அகழ்வாரைத் தாங்கும் நிலம்
 உவமேயம்: தம்மை இகழ்வார்ப் பொறுத்தல்
 உவமை உருபு: போல
 

உவமைத்தொகை
 
வெளிப்படையாகத் தெரியாத உவமைஉருபுகள் உவமைத்தொகை எனப்படும். அதாவது உவமை தொக்கி நிற்பது.
 
உதாரணம்: கயல்விழி - கயல் போல் விழி
 இங்கு உவமை உருபு (போல்) மறைந்து நிற்கிறது.
 
இதே போல இன்னொரு உதாரணம்:
 மதிமுகம் - மதி போன்ற முகம்
 உவமை உருபு (போன்ற) மறைந்து நிற்கிறது.
 
----------------------------------
 
 
 
உவமையணியை இன்னொரு விதத்தில் இன்னும் இரண்டாகப் பிரிக்கலாம்.
 அவையாவன:

 1- எடுத்துக்காட்டு உவமையணி
 2- இல்பொருள் உவமையணி
 

எடுத்துக்காட்டு உவமையணி
 
இது நேர்ப்பொருளில் வெளிப்படையாகச் சொல்வது
 

உதாரணம்:
 தொட்டனைத்து ஊறும் மணற்கேணி
 மாந்தர்க்கு கற்றெனத் தூறும் அறிவு
 

மணற்கேணியானது எவ்வளவு ஆழமாகக் கிண்டுகிறோமோ அவ்வளவுக்கவ்வளவு நீர் சுரக்கும். அதே போல மனிதர் எவ்வளவுகெவ்வளவு கற்கிறார்களோ அவ்வளவுக்கவ்வளவு அவர்களது அறிவு பெருகும்.
 
 
 
இல்பொருள் உவமையணி
 
இல்பொருள் உவமையணி மறைபொருளில் வரும். அதாவது இல்லாத ஒன்றை இருப்பது போல கற்பனை செய்து அதனை உவமையாகக் காட்டுவது.
 

உதாரணம்:
 அன்பகத்து இல்லா உயிர் வாழ்க்கை
 வன்பால் கண் வற்றல் மரம் தளிர்த்தற்று
 

அதாவது வலிமையான ஒரு பாலைவனத்திலே பட்டமரம் தளிர்த்ததைப் போன்று அன்பில்லா உயிர்வாழ்க்கை தளிர்க்காது. அதாவது வலிமையான பாலைவனத்திலே பட்டமரம் தளிர்க்கவே தளிர்க்காது. அதே போலத்தான் அன்பில்லா வாழ்க்கையும்.
                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 500
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: தமிழ்
« Reply #42 on: July 06, 2012, 08:11:26 PM »
உருவக அணி


உருவக அணி என்பது அதுதான் இது என உறுதிப் படுத்திக் கூறுவது. உவமை அணியின் மறுதலை.
 

எடுத்துக்காட்டு
 
இதுதான் அது.
 அவளின் முகம்தான் சந்திரன்.
 
 
 
* பச்சை மாமலை போல் மேனி - இது உவமை அணி.
 * மையோ மாமலையோ மறிகடலோ - இது உருவக அணி
 
 
 
இதில் கண்ணனை மை, மாமலை, மறிகடல் என உருவகிக்கப் படுகிறது. மை போன்ற மேனி என்று சொல்லியிருந்தால் இது ஒரு உவமையணி. ஆனால் மையோ என்னும் போது அவன் மேனிதான் மை என்று சொல்லியாயிற்று. இது உருவக அணி.
 

எடுத்துக் காட்டுகள்
 
* உவமை அணி - மதிமுகம் (மதி போன்ற முகம்)
 * உருவக அணி - முகமதி (முகம்தான் மதி)
 
* உவமை அணி - புலி போன்ற வீரன் வந்தான்
 * உருவக அணி - புலி வந்தான்
 
* உவமை அணி - மலர்க்கை (மலர் போன்ற கை)
 * உருவக அணி - கைமலர் (கைகள்தான் மலர்)
 
* உவமை அணி - வேல்விழி (வேல் போன்ற விழி)
 * உருவக அணி - விழி வேல் (விழிதான் வேல்)
                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 500
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: தமிழ்
« Reply #43 on: July 06, 2012, 08:12:37 PM »
பின்வருநிலையணி


பின்வருநிலையணி என்பது செய்யுளில் முன்னர் வந்த சொல்லோ பொருளோ இவ்விரண்டுமோ பல முறை பின்னரும் வருவது.
 
 
 
இது மூன்று வகைப்படும்:
 
* சொல் பின்வருநிலையணி
 * பொருள் பின்வருநிலையணி
 * சொற்பொருள் பின்வருநிலையணி
 
 
 
சொல் பின்வருநிலையணி
 
சொல் பின்வருநிலையணி என்பது செய்யுளில் முன்னர் வந்த சொல் வேறு ஒரு பொருளில் பின்னரும் பலமுறை வருவது.
 
 
 
எ.கா:
 
உள்ளம் உடைமை உடைமை பொருளுடைமை
 நில்லாது நீங்கி விடும்
 --திருக்குறள (592)
 
 
 
இக்குறட்பாவில் 'உடைமை' என்ற சொல் பெற்றிருத்தல், உடைய, பொருள் என வேறுபட்ட பொருளில் பல முறை வந்துள்ளதால் இது சொல் பின்வருநிலையணி ஆகும்.
 

பொருள் பின்வருநிலையணி
 
பொருள் பின்வருநிலையணி என்பது செய்யுளில் ஒரே பொருள் தரும் பல சொற்கள் வருவது.
 
 
 
எ.கா:
 
அவிழ்ந்தன தோன்றி யலர்ந்தன காயா
 நெகிழ்ந்தன நேர்முகை முல்லை - மகிழ்ந்திதழ்
 விண்டன கொன்றை விரிந்த கருவிளை
 கொண்டன காந்தள் குலை
 
 
 
இப்பாடலில் மலரதில் என்னும் பொருள் தரக்கூடிய அவிழ்தல், அலர்தல், நெகிழிதல், விள்ளல், விரிதல் ஆகிய சொற்கள் பல முறை வந்துள்ளமையால் இது பொருள் பின்வருநிலையணி ஆகும்.
 

சொற்பொருள் பின்வருநிலையணி
 
சொற்பொருள் பின்வருநிலையணி என்பது செய்யுளில் முன்னர் வந்த சொல் அதே பொருளில் பல முறை வருவது.
 
 
 
எ.கா:
 
எல்லா விளக்கும் விளக்கல்ல சான்றோர்க்குப்
 பொய்யா விளக்கே விளக்கு.
 --திருக்குறள் (299)
 
 
 
இக்குறட்பாவில் விளக்கு என்னும் சொல் ஒரே பொருளில் பல முறை வந்துள்ளதால் இது சொற்பொருள் பின்வருநிலையணி ஆகும்
                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 500
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: தமிழ்
« Reply #44 on: July 06, 2012, 08:16:11 PM »
தற்குறிப்பேற்ற அணி


தற்குறிப்பேற்ற அணி என்பது இயல்பாக நடக்கும் ஒரு நிகழ்வின் மீது கவிஞர் தன் குறிப்பை ஏற்றுவதாகும்.
 
 
 
எ.கா:
 
போருழந் தெடுத்த ஆரெயில் நெடுங்கொடி
 வாரல் என்பனபோல் மறித்துக் கைகாட்ட
 சிலப்பதிகாரம்
 
விளக்கம்:
 
கோவலனும் கண்ணகியும் மதுரை மாநகரத்திற்குள் நுழைய முற்படும்போது இயல்பாகக் காற்றிலாடும் தோரண வாயிற் கொடிகளைக் கவிஞர் தம் கற்பனையினால் கோவலன் மதுரையில் கொல்லப்படுவான் என்று முன்னமே அறிந்து வர வேண்டாம் என அக்கொடிகள் எச்சரிப்பதாகக் குறிப்பேற்றிக் கூறுவார்.