தமிழ்ப் பூங்கா > நாவல்கள்

தண்ணீர் தேசம் - கவிஞர் வைரமுத்து

<< < (5/5)

Maran:
21

மனிதர்களில் குதிரைகள் உண்டு.
தம் நிழல் கண்டு தாமே
அஞ்சும் குதிரை மனிதர்கள்.

மனிதர்களில் விட்டில்கள் உண்டு.
பூத்துக் குலுங்கும் பூக்கள்
அழைத்தாலும் பூக்களில்
வாயூன்றித் தேன்குடிக்கத்
தெரியாமல் இலைகள் தின்னும்
விட்டில் மனிதர்கள்.

மனிதர்களில் குரங்குகள் உண்டு.
தங்கக் கிண்ணத்தோடு அப்பம்
கிடைத்தாலும் அப்பம்
கவர்ந்துகொண்டு
தங்கக்கிண்ணத்தைத் தரையில்
எறிந்துவிடும் குரங்குமனிதர்கள்.

கட்டுமரக் கிழவனையும்
இளைஞனையும் அப்படித்தான்
பீடித்தது அறியாமை அச்சம்.

புட்டியின் முடி திறக்க இளைஞன்
தவித்தான். கிழவன்
தடுத்தான்.

இது கடத்தல் புட்டியோ.
வெடிகுண்டுப் புட்டியோ.
வேண்டாம் விளையாட்டு. வீசி
எறிந்துவிடு.

கிழவன் சொன்னதை இளைஞன்
செய்தான். மீண்டும் அலைகளின்
கால்களில் அது
உதைபந்தானது.

கலைவண்ணன் இன்னும்
கண்திறக்கவில்லை.
ஆனால், கைகளும் செவிகளும்
மட்டும் விழித்துக்கொண்டன.

ஏதோ சுடுகிறது - கைகள்
சொல்லின.
ஏதோ ஒரு முனகல் -
செவிகள் உணர்ந்தன.

புணர்ந்து கிடக்கும்
காதலர்களை முயன்று பிரிப்பது
மாதிரி தூக்கத்திலிருந்து
இமைகளைத் துண்டித்துப்
பிரித்தான்.

என்னவாயிற்று தமிழுக்கு?

ஒரு புழுவைத் தொட்டவுடன்,
உடம்பின் இரு துருவங்களையும்
அது ஒன்றாகச் சுருட்டிக்
கொள்வது மாதிரி
குமரித்தாமரை ஏனிப்படிக்
குறுகிக்கிடக்கிறாள்.

அந்த அழுக்குப்
போர்வைக்குமேலே
அனலடித்தது.

போர்வையைப் புறந்தள்ளி
அவள் நெற்றி தொட்டான்.

தொடர்ந்து தொட
முடியவில்லை - அவ்வளவு
வெப்பம்.

எந்த மொழியிலும் சேராத,
ஆனால் எந்த மொழிக்காரனும்
புரிந்துகொள்கிற ஒலிகளை
அவள் முனகினாள்.

இது மழைக்காய்ச்சல்.
அய்யோ இவளை நனையச்
சொன்னவன் நான்தானே.
தமிழ். தமிழ்.

அவன் கூப்பிட்ட குரலுக்குப்
பதிலில்லை.

என்ன இது? நேற்று ஒத்தடச்
சூட்டைப்போல் இருந்த
காய்ச்சல், இன்று
உலைச்சூட்டைப் போல்
ஏறிவிட்டதே. சித்திரை
மாதத்துக் கத்திரிவெயிலாய்த்
தேக வெப்பம்
அதிகமாகிறதே. பசியாலும்
தாகத்தாலும் தேய்ந்தும்,
நைந்தும், தொய்ந்தும்
கிடக்கிற தேகம் - இந்தக்
கடுங்காய்ச்சல் எப்படித்
தாங்கும்?
ஏ, பாலைவனப் பஞ்சே.
உன்னைப் பற்ற வைத்தது
யார்?

தண்ணீரில் தன் கைக்குட்டை
நனைத்தான்.
அதைப் பிழிந்தும் பிழியாமல்
அவள் நெற்றியில் பரப்பினான்.

அசோகவனத்தில் கண்ணீரில்
நனைந்த சீதையின் மேலாடை
அவள் பெருமுச்சில்
உலர்ந்ததுபோல், அடுத்த சில
நிமிடங்களில் காய்ந்துபோனது
கைக்குட்டை.

வெயில் ஏறஏற அவளுக்குக்
குளிரெடுத்தது.

மீனவர்களின் துணிகளையும்
போர்வைகளையும் சேர்த்துப்
போர்த்திப் பார்த்தபோதும்
காய்ச்சல் இறங்கவில்லை.
நடுக்கம் அடங்கவில்லை.

இமை திறக்க முடியவில்லை.

கண்கள் அவள்
கட்டுப்பாட்டைவிட்டுப்
போய்விட்டன.

அவள் கைகள் மட்டும்
அனிச்சைச் செயலாய்
அசைந்தசைந்து எதையோ
தேடின.

கலைவண்ணனின் கைகள்
தொட்டதும் தேடல் நின்றது.

உயிரின் பாசமெல்லாம் அந்த
ஸபரிசத்தில் குவிந்தது.

நோய் என்பதொரு கொடை.

தறிகெட்டோ டும் வாழ்க்கையில்
அது ஒரு மெல்லிய
வேகத்தடை.

வாழ்வின் பெருமையை
உயர்த்துவதும் - உறுப்புகளின்
அருமையை உணர்த்துவதும் -
நேற்றையும் இன்றையும்
நேசிக்க வைப்பதும் -
தன்னைச் சார்ந்தவர்பற்றி
யோசிக்க வைப்பதும் - ஒரு
நிமிஷச்சொட்டின் விலை என்ன
என்று நிறுத்துச் சொல்வதும் -
செலுத்தப்படாத அன்பைச்
செலுத்தச் செய்வதும் - திமிர்
கொண்டோ டும் தேகத்தை
ஞானப்பாதைக்கு அழைத்து
வருவதும் -
மனிதனுக்குள்ளிருக்கும்
சிங்கம்புலிகளைத்
துரத்தியடிப்பதும் -
கடந்தகாலத் தவறுகளை
எண்ணிக் கடைவிழியில் நீரொழுக
வைப்பதும் - நோய்தான்.

ஆகவே உடம்பே.
அவ்வப்போது கொஞ்சம்
நோய் பெறுக.

நோயற்ற வாழ்வுதான்
குறைவற்ற செல்வம்.

ஆனால் நோயும் ஒரு
செல்வமென்று பட்டுத்தெளி,
மனமே.

தன்மடியில் தமிழ்ரோஜாவின்
தலைதாங்கிக் கிடந்தவன்,
அவள் ஒரக்கண்ணில் சொட்டும்
சுடுகண்ணீர் துடைத்தான்.

தமிழ். தமிழ்.
என்றான்.

அவள், தண்ணீர்.
தண்ணீர். என்றாள்.

அவன் தண்ணீர் கொண்டுவந்து
தாய்ப்பாலாய் ஊட்டினான்.
குலுங்கும் வாகனத்தில்
தாயைக்கட்டிக் கொள்ளும்
குழந்தைமாதிரி - அவனைச்
சேர்த்துக் கட்டி, அவன்
மடியில் புதைந்து போனாள்.

அவன் இடுப்பைச் சுற்றி
நெருப்பெரிந்தது.

ஏதோ முனகினாள்.

அவன் சப்தங்களுக்குப்
பக்கத்தில் செவிகளை
வைத்தான்.

அவள் முனகியது கேட்டது.

எனக்குத் தெரியும், நான்
இறந்துபோவேன்.

அவன் துடித்துப் போனான்.

அடியே. என் ஆருயிரே.
என்ன சொன்னாய்? நீ இறந்து
விடுவாயா? உன்னை
இறக்கவிடுவேனா? என்
உயிரை உறைபோட்டல்லவா
உன் உயிரை வைத்திருக்கிறேன்.
மரணம் என் உயிர் கிழிக்காமல்
உன் உயிர் தொடுவது எப்படி?
உன்மீது நான் கொண்டிருப்பது
வெறும் தசைநேசமன்று.
அது - காதலும் தாய்மையும்
கலந்தஅபூர்வ அனுபவம்.
என் உயிரின் பெண்வடிவம் நீ.
உன் உயிரின் ஆண்வடிவம் நான்.
இதில் யாருக்குத் தனியாகச்
சாவு வரும்? நீ மரித்தால்
என் மரணம். நான் மரித்தால்
உன் மரணம். நாம்
மரிக்கமாட்டோ ம். யார்
உயிர் யாருடையதென்று
மரணத்துக்குக் குழப்பம் வரும்.
நாம் மரிக்கமாட்டோ ம்.

அவள் உதடுகள் சிரமப்பட்டுச்
சிரித்தன.

இது ஆறுதல். உங்கள்
உணர்ச்சி உண்மை. ஆனால்,
அது உயிர்காக்கப்
போவதில்லை. என் உடம்பில்
இப்போது எதுவுமில்லை. நான்
ஏறக்குறைய இறந்துவிட்டேன்.
உயிரின் கடைசித் துளிகளை
ஆவியாக்கத்தான் என் உடம்பில்
காய்ச்சல்
உலைமுட்டியிருக்கிறது.

கண்களைத் திறக்க முடியாதவள்
கைகளால் அவன் முகம்
துழாவினாள்.

அவன் நெற்றியை, முக்கை,
கண்களை, தாடி முளைத்த
கன்னத்தைத் தடவித் தடவிப்
பார்த்தாள்.

அந்தக் கடுஞ்சூட்டிலும் முகத்தின்
ஒரு முலையில் பரவசம்
காட்டியவள் -
நான் சாவதில் எத்தனை
சந்தோஷப்படுகிறேன்
தெரியுமா? என்றாள் மிக
உண்மையாய்.
அவள் உதடுகளைத் தன்
உள்ளங்கையால் பொத்தியவன்,
உளறாதே. என்று
பதறினான்.

இல்லை. என் சாவையும்,
சந்தோஷத்தையும் உங்களால்
தடுக்க முடியாது. பூ உதிர்ந்து
ஒரு புல்வெளியில் விழுவது
மாதிரி உங்கள் பாதுகாப்பான
மடியில் நான் பத்திரமாகச்
சாகிறேன்.

அவன் ஒரு கையில் அவள்
உள்ளங்கை அழுத்தி மறுகையால்
நெற்றி தடவினான்.

ரோஜா சுடுமா? சுட்டது.

வாழ்வின் முதல்
வார்த்தையைக்கூட
உச்சரிக்காத நீயா மரணத்தின்
கடைசி வார்த்தை
பேசுகிறாய்?

இல்லை. நீளமான
வாழ்க்கையில் நிம்மதி இல்லை.
இங்கு எல்லா
மனிதர்களும் முதல் பாகத்தின்
இனிப்பை இழந்து,
இரண்டாம் பாகத்தின்
கசப்போடுதான்
சாகிறார்கள்.

இதுவரைக்கும்
என் வாழ்க்கை இனிமைகளால்
நிறைந்தது. இப்படியே
இறந்துவிடுவது இதமானது. ஒரு
வெற்றியோடு போரை
நிறுத்திக்கொண்ட அசோகச்
சக்கரவர்த்தி மாதிரி காதலின்
இனிய நினைவுகளோடு என்
முச்சை நிறுத்திக்
கொள்கிறேன்.

முடியாது. உன்னைச்
சாகவிடமாட்டேன்
-கலைவண்ணன் உணர்ச்சியில்
உடைந்தான்.

ஆமாம் தங்கையே.
உன்னைச்
சாகவிடமாட்டோ ம் -
மீனவர் வயிற்றிலிருந்து வந்தன
வார்த்தைகள்.

எப்படித் தடுப்பீர்கள்?
உங்கள் பத்துக்கரங்களும் என்
உடம்பை மொத்தமாகப்
பொத்தினாலும், மரணம்
உங்கள் விரல்களின் இடுக்கில்
புகுந்து என் உயிரை
வெளியேற்றிவிடும். உயிரைத்
தரமாட்டோ ம் என்று
சொல்வதற்கு நீங்கள் யார்?
மரணம் யாரையும்
யாசிப்பதில்லை.
கவர்ந்துகொள்கிறது.

ஏ, பேதைப் பெண்ணே.
உனக்குள் எப்படி இத்தனை
ஒளிவீச்சுகள். மரணத்தைச்
சிந்திக்க ஆரம்பித்தால்
ஞானக்கதவு திறந்து
கொள்கிறதா? ஞானத்துக்குப்
பக்கத்தில் மரணமா? அல்லது
மரணத்துக்குப் பக்கத்தில்
ஞானமா?

புலம்பாதே தமிழ்.
புலம்பாதே. மரணத்துக்குக்
கண்தெரியும். உன் அரும்புமுகம்
பார்த்தால் அது உன் உயிரைப்
பறிக்காது.

இல்லை - மரணம் ஒரு
புயல். அரும்புக்கும் சருகுக்கும்
அதற்கு வித்தியாசம்
தெரியாது.

அதற்குப் பிறகு அங்கே
மெளனம் நிலவியது.

கண்ணீர் என்ற வீட்டுச்
சொந்தக்காரன்
வந்துவிட்டால்,
வாடகைக்கிருந்த வார்த்தைகள்
வெளியேற வேண்டியதுதானே.

அவள் விழிப்பதற்கு
முயன்றுமுயன்று தோற்றாள்.

பிறகு மெல்ல மெல்ல
இமைகளை மேலெழுப்பினாள்.
எல்லாக் கண்களிலும் ஈரம்
பார்த்தாள்.

உணவு, மருந்து
இரண்டுமில்லாமல் அவள் உயிர்
காப்பது எப்படி என்று
அவர்கள் உறைந்து
நின்றார்கள்.

தனக்கு அவள் தனிமை
வேண்டுமென்றாள்.

சற்றே தள்ளி இருங்களென்று
சைகை செய்தாள்.

நால்வரும் பேசவில்லை.
நகர்ந்தனர்.

அவள் உணர்ச்சிவசமானாள்.

மிச்சமிருந்த உயிரையெல்லாம்
உதட்டில் திரட்டி அவன்
மார்பில் முத்தமிட்டாள்.

நான் சொல்வதைக்
கவனமாய்க் கேளுங்கள். நான்
இங்கேயே இறந்துவிட்டால்,
என் உடலைக் கரைக்குக்
கொண்டுசென்று பூமியில்
புதைக்காதீர்கள். பூமியில்
இன்னும் எத்தனையோ
உடல்களுக்கு இடம்
வேண்டியிருக்கிறது. ஒருவருக்கு
என் பிணக்குழியை விட்டுக்
கொடுத்தேன் என்ற பெருமை
எனக்கிருக்கட்டும்.

உடம்பை எரித்துத்தானே
கடலில் கரைப்பார்கள்.. என்
உடம்பையே கடலில்
கரைத்துவிடுங்கள். பசியால்
சாகப்போகும் என் உடம்பு,
மீன்களின் பசிக்கு
உணவாகட்டும்.

நம் காதலுக்கு
மடிதந்த கடற்கரையைக்
கேட்டதாய்ச் சொல்லுங்கள்.
அந்தப் பூங்காவில், நம்
காதலைக்
கவனித்துக்கொண்டிருந்த
அசோக மரங்களைக்
கேட்டதாய்ச் சொல்லுங்கள்.
பூமிக்குள் பதுங்கியிருந்து
செப்டம்பரில் தலைகாட்டும்
புல்வெளிகளைக் கேட்டதாய்ச்
சொல்லுங்கள். அந்தத்
தூங்குமுஞ்சி மரத்தின்
சாயங்காலப் பறவைகளின்
செளக்கியம் கேட்டதாய்ச்
சொல்லுங்கள். சென்னை
நகரத்தின் நடைபாதைத்
தேநீர்க்கடைகளைக்
கடைசியாய் நலம் கேட்டேன்
என்று கண்டிப்பாய்ச்
சொல்லுங்கள்.

எனக்கு நல்லவர் என் தந்தை.
என் கண்கள் வடிக்கும் கடைசி
இரண்டு துளிகளில் ஒரு துளி
அவருக்கு, ஒரு துளி உங்களுக்கு
என்பதையும் நான் சொன்ன
இதே வார்த்தைகளின்
வரிசையில் அவருக்குச்
சொல்லுங்கள்.

அதற்குமேல் பேசமுடியாமல்
அவள் இமைகளும் உதடுகளும்
முடிக்கொண்டன.

தன் இருகைகளிலும் அந்தச்
சிதைந்த ரோஜாவைச்
சிந்தாமல் சிதறாமல் அள்ளி,
நம் காதல்மீது ஆணை.
உன்னை உயிரோடு
கரைசேர்ப்பேன்.
இல்லையென்றால் நம் இரண்டு
உடல்களும் கரைசேரும்
என்று அவள் காதில் குனிந்து
உறுதிமொழிந்தான்.

அவள் கண்ணில் வழிந்த சுடுகண்ணீர்
அவன் உதட்டில் விழுந்தது.

கறுத்த மேகங்கள் வானத்தை வளைத்து
முற்றுகையிட்டிருந்தன.

சூரியனுக்கும் பூமிக்குமுள்ள தொடர்பு
துண்டிக்கப்பட்டிருந்தது.

பகல் இருட்டை அணியத் தொடங்கியிருந்தது.

மேகம் சில துளிகளை, விட்டுவிட்டுச் சொட்டியது.

சுங்கத்துறைப் படகொன்று வேட்டையில்
எதுவும் சிக்காமல் வெறுங்கையோடு கரை
திரும்பிக் கொண்டிருந்த நேரம் -

கடலில் மிதக்கும் ஊசியைக்கூடக் கண்டறியும்
ஒரு கழுகுக்கண் அதிகாரியின் கண்களில்
அது தட்டுப்பட்டுவிட்டது.

அதோ பாருங்கள். படகை அங்கே செலுத்துங்கள்.

தண்ணீரை உழுது விரைந்தது படகு.

ராமனின் கால்களுக்காக காத்துகிடந்த
அகலிகைக் கல்லைப்போல தக்கவர்களின்
கைகளுக்காகத் தண்ணீர்த்தவம் புரிந்த புட்டி
கடைசியில் சேரவேண்டியவர்களின் கைகளில்
சேர்ந்துவிட்டது.

கண்டுபிடித்துவிட்டோ ம். கண்டுபிடித்து
விட்டோ ம். ராயபுரம் கடற்கரையிலிருந்து
தென்கிழக்கே நாற்பது முதல்
நாற்பத்தைந்தாவது கிலோமீட்டரில்,
பழுதுபட்டு நிற்கும் விசைப்படகில் காணாமல்
போனவர்கள் கட்டுண்டு கிடக்கிறார்கள்
இரண்டு விசைப்படகுகள் தயாராகட்டும்.
உணவோடும் மருந்துகளோடும் ஒரு
மருத்துவரும் உடன் செல்லட்டும் அவர்களை
இன்றே மீட்டு இரவுக்குள் கரைசேரட்டும்

கட்டளைகள் பறந்தன.

டீசல் குடித்து வயிறு புடைத்த விசைப்படகுகள்
கடல் கிழக்கத் தயாராயின.

இருள் கவிந்த வானம் சின்னத்தூறல்களை
முணுமுணுத்தது.

அடிவானம் வரைக்கும் அப்பிக்கிடந்த
மேகங்கள் வானமெங்கும் தார்ச்சாலை
போட்டதுபோல் அடர்த்தியாயிருந்தன.

ஓநாயின் பாஷை கற்றுக்கொண்ட காற்று
லேசாய் ஊளையிடத் தொடங்கியது.

இப்போதோ பிறகோ வானம் திறந்து
கொள்ளலாம் என்று தெரிந்தது.

மீட்புப் பணிகளுக்குப் படகுகள்
தயாரானபோது அகில இந்திய வானொலியின்
அறிவிப்பொன்றைத் தொண்டை கட்டிய
வானொலிப் பெட்டியொன்று துருப்பிடித்த
குரலில் பேசியது.

ஓர் அறிவிப்பு. வங்கக்கடலில்
சென்னைக்குத் தென்கிழக்கே 240 கிலோமீட்டர்
தூரத்தில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு
மண்டலம் ஒன்று உருவாகியிருக்கிறது.
அது புயலாக வலுவடைந்து மேற்கு
வடமேற்குத் திசையில் நகரக்கூடும். அடுத்த
48 மணிநேரத்தில் கடலோரப் பகுதிகளில்
இடியுடன் கூடிய மழை பெய்யலாம்.
மணிக்கு 100 முதல் 120 கிலோமீட்டர்
வேகத்தில் புயல்காற்று வீசக்கூடும்
கடல் கொந்தளிப்பு ஏற்படலாம். மீனவர்கள்
கடலுக்குள் செல்லவேண்டாம் என்று
எச்சரிக்கப்படுகிறார்கள்.

எங்கோ ஒரு மேகம் இருமியது.

விரையத் தயாரான விசைப்படகுகள்
விறைத்து நின்றன.

Maran:
22

மடியில் தமிழையும் வயிற்றில்
நெருப்பையும் கட்டிக்கொண்டு
கிடந்த கலைவண்ணன் வானிலை
மாற்றம்கண்டு மனநிலை
மாறிப்போனான்.

ஏ. என்னவாயிற்று கடலுக்கு?
பகல் ஏன் இருட்டை உடுத்தப்
பார்க்கிறது. வானம் ஏன்
காணாமல் போனது? சூரியனை
மேகம் தின்றுவிட்டதா?

என் கண்மணியின் வெப்பம்
அதிகமாகும் வேளையில்
காற்றின் வெப்பம் ஏன்
குறைந்துகொண்டே போகிறது?

அலைகள் ஏன் பேசுவதை
நிறுத்திக்கொண்டன? கடல் ஏன்
மெளனம் சாதிக்கிறது?
மரணத்துக்கு முன்பே
மெளனாஞ்சலியா?

எங்கள்
திசைகளைத் திருடிக்கொண்டது
யார்? திசைகளைத்
தெரிந்துகொள்ள இதுவரை
சூரிய அடையாளம் இருந்தது.
இப்போது அந்த அடையாளமும்
அழிந்துவிட்டதே.

அதுவும்
சரிதான். பயணம்
போகாதவர்களுக்குத் திசை
எதற்கு?

மீனவர்கள் படகின்
விளிம்புகளுக்கு ஓடியோடி
வானம் பார்த்தார்கள்.
வானிலை போலவே முகம்
இருண்டார்கள்.

தமிழ். தமிழ். - அவன்
கூப்பிட்ட அழைப்புக்குக் குரல்
இல்லை.

செடிக்குத் தெரியாமல்
உதிர்ந்த சிறுமலரைப்போல
நினைவுகள் அவளைவிட்டு
நீங்கிவிட்டன.

ஆனால், அவள் உதடுகள்
மட்டும் முளையின்
கட்டுப்பாட்டிலிருந்து
விடுபட்டு முனகிக்
கொண்டேயிருந்தன.

எங்களோடு என்ன ஊடல்
கடலே. ஏனிந்த இறுக்கம்?

எங்கள் காற்றை எங்கே
கடத்திவிட்டாய்?

ஒன்று மட்டும் புரிகிறது.

இப்போது நீ அடைந்திருப்பது
அமைதி அல்ல. கோபமான
மெளனம் அல்லது மெளனமான
கோபம்.

இதுவரை நாங்கள் பட்டதும்
படுவதும் போதாதா?

எங்கள் படகையே மரணத்தின்
தொட்டிலாக்கி,
தாலாட்டுக்கும் ஒப்பாரிக்கும்
மத்தியில் ஒரு சங்கீதம்
பாடிக்கொண்டிருந்தாயே.

Navigation

[0] Message Index

[*] Previous page

Go to full version