ஏழிசையும் சுரங்களும்“ 'குரலே துத்தம் கைக்கிளை உழையே
இளியே விளரி தாரம் என்றிவை எழுவகை யிசைக்கும் எய்தும் பெயரே'
”தமிழிசையில் ஏழிசைச் சுரங்களாக குரல், துத்தம், கைக்கிளை, உழை, இளி, விளரி, தாரம் ஆகியவற்றைச் சிலப்பதிகாரம் குறிப்பிடுகிறது, இசைக்குரிய எழுத்துகள் ஏழு - ச,ரி,க,ம,ப,த,நி - இதனை ஏழிசை என்பர். தமிழிசையில் இது பறவை, விலங்கினங்களின் குரல்களோடு ஒப்பிடப்பட்டு விளக்கப்படுகிறது. தமிழர் ஏழிசையை இயற்கை ஒலிகளோடு ஒப்பிட்டுப் பார்த்தனர்.
“ வேண்டிய வண்டும் மாண்டகு கிளியு
குதிரையும் யானையும் குயிலும் தேனுவும்
ஆடும் என்றிவை ஏழிசை ஓசை
”தமிழிசையில் ஐந்திசை கொண்ட (Penta Tonic) பண்கள் சிறப்பான இடத்தைப் பெறுகின்றன.
“ 'கிளை எனப்படுவ கிளக்கும் காலைக்
குரலே இளியே துத்தம் விளரி
கைக்கிளை என ஐந்தாகும் என்ப"
”என சிலப்பதிகாரம் உரையிற் கூறப்படும் சூத்திரத்தின் படி குரல், இளி, துத்தம், விளரி, கைக்கிளை, ச, ப, ரி, க, ம என்ற ஐந்து சுரங்கள் கிடைக்கின்றன. இந்தச் சுரங்கள் மோகனம் என்ற அழகிய பண்ணை உருவாக்குகின்றன. பழம்பெரும் நாகரிகங் கொண்ட சீன நாடு இந்த ஐந்திசைப் பண்களைப் போற்றுவதோடு அந்த இசையில் எள்ளளவும் மாற்ற இன்னும் உடன்படாது இருக்கின்றது. கூங், இட்சி, சாங்;, யூ, கியோ என அவர்கள் குரல், இளி, துத்தம், விளரி, கைக்கிளையை அழைக்கின்றனர். இவற்றுள் சில சொற்கள் தமிழ்ச் சொற்களை ஒத்திருப்பதையும் காணமுடியும்.
இச்சுரங்கள் பன்னிரண்டாக விரிவடைகின்றன. அவை
குரல் - சட்சம் (ஷட்ஜம்)- ச
மென்துத்தம்- சுத்தரிஷபம் ரிஷபம்,- ரி1
வன்துத்தம்- சதுஸ்ருதி ரிஷபம்- ரி2
மென்கைக்கிளை- சாதாரண காந்தாரம்- க1
வன்கைக்கிளை - அந்தர காந்தாரம் - க2
மெல்- உழை சுத்த மத்திமம்- ம1
வல்- உழை பிரதி மத்திமம் - ம2
இளி-பஞ்சமம்- ப
மென் விளரி- சுத்த தைவதம்- த1
வன் விளரி- சதுஸ்ருதி தைவதம்- த2
மென்தாரம் -கைசகி நிஷாதம்- நி1
வன்தாரம் - காகலி நிஷாதம் - நி2
ஆகியனவாகும்.
சுரங்கள்பழந்தமிழ் இசையின் ஏழு சுரங்களுக்கும் கீழ்க்காணுமாறு குறியீட்டு எழுத்துக்களைப் பயன்படுத்தியுள்ளனர்:
“ 'ஆ ஈ ஊ ஏ ஐ ஓ ஔ என்ற
ஏழும் ஏழிசைக் கெய்தும் அக்கரங்கள்'
”
குரல் - ஆ; துத்தம் - ஈ; கைக்கிளை - ஊ; உழை - ஏ; இளி - ஐ; விளரி - ஓ; தாரம் - ஔ. ஆகியன பழந்தமிழர் பயன்படுத்திய சுர ஒலிகளாகும். மேலும்ஒரு சுரத்தில் நான்கில் ஒரு பாகக்கூறுகளை உயிரெழுத்து மூலம் உணர்த்தும் வழக்குத் தமிழ் நாட்டில் இருந்தது. குடுமியான்மலைக் கல்வெட்டில் ஒரு சுரம் நான்காகப் பகுக்கப்பட்டு ர, ரி, ரு, ரெ என்றவாறு குறிக்கப்பட்டுள்ளதைப் பேராசிரியர் சாம்பமூர்த்தி எடுத்துக்காட்டியுள்ளார். இந்தக் கல்வெட்டு கி.பி. ஏழாம் நூற்றாண்டில் பல்லவமன்னன் மகேந்திரன் காலத்ததாகும். குடுமியான்மலைக் கல்வெட்டில் ஆ.ஈ.ஊ.ஏ (ஏழிசைக்கு சமமான உயிரெழுத்துக்கள்) ரா, ரி, ரு, ரே, (ரீன் நான்கு வகை கள்) கா, கி, கூ, கெ (கவின் நான்கு வகைகள்) தா, தீ, தூ, தே (தவின் நான்கு வகைகள்) எனும் குறிப்புக்கள் உண்டு.