வாடா மலரே !!!
இவ்வுலகில் பிறக்கும் ஓர் உன்னத பிறப்பே,
தாய்மை என்னும் ஓர் உன்னத நிலையை அடையும் உறவே...
வழிகாட்டியாய் இம்மண்ணுலகில் வாழும் ஓர் அற்புதமே...
தாயாக தாரமாக உடன் பிறப்பாய் புதல்வியாய் அனைத்துக்கும்
ஒரே தொடக்கம் பெண்மைதானே
சகோதரி பாசம்கிடைக்காமல் போகலாம்
மகளின் அன்பு கிடைக்காமல் போகலாம்
,தாரத்தின் அரவணைப்பும் இல்லாமல் தவிக்கலாம் ....ஆனால்
தாயன்பு இல்லாமல் வையகத்தில் யாருமுண்டோ?
இவ்வுலகில் வாழக் கற்றுக்கொடுக்கும் நீ
எப்படி வாழ வேண்டும் என்று கற்றதை மறந்தனையோ?..
உன் பிள்ளைகளின் கண்ணீரை துடைக்க நீ இருக்கிறாய்
உன் கண்ணீரைத் துடைக்க இங்கு யார் இருக்கிறார்?
இவ்வுலகில் உன்னைப் பாதுகாக்க சட்டங்கள் பல இருக்கலாம்,
ஆனால் அதை மதிப்பவர்களோ மிகக் குறைவு.
காரியங்கள் நடப்பதற்கு முன்பே காக்க வேண்டிய சட்டம்,
காரியம் முடிந்த பின் அல்லவா கண் விழித்துப்பார்க்கிறது ?
என்னவொரு பாவப்பட்ட பிறவியோ நீ
கருவறையிலிருந்து பிணவறை செல்லும் வரை
பாடுப்பட்டு வாழ்ந்து கொண்டிருக்கிறாய்.
கருவறையில் கருச்சிதைவாய்
வகுப்பறையில் மனச்சிதைவாய்
வேலை செய்யும் இடத்திலோ உடல்சிதைவாய்
இறுதியில் வீட்டிலோ உயிர்ச் சிதைவாய்.
இம்மண்ணுலகில் நீ துன்பங்களை அனுபவித்ததாலோ என்னவோ
விண்ணுலகில் தேவதையாய் பிறப்பெடுக்கிறாய்.
தேவதைகளை விண்ணுலகில் மட்டுமே தேடும் ஆண்களுக்கு
தன்னோடு இம்மண்ணுலகில் வாழும் தேவதைகள்
கண்ணுக்கு தெரியாதது எனோ ?
தன்னோடு இருக்கும் ஆண்களை உறவாக பார்க்கும் பெண்களை
இ ந்த ஆண் இனம் வெறும் இச்சைப் பொருளாய் பார்க்கின்றது.
ஆண்களின் ஆசை எந்த இடத்தில் முடிகின்றதோ , அந்த இடத்தில்
பெண்ணின் வாழ்க்கையே முடிகிறது.
ஓர் பெண்ணை இச்சைப் பொருளாய் பார்க்கும் ஆண் சமூகமே
ஓர் நிமிடம் அவளின் ஆழ் மனதைப் பார்
அப்போது புரியும் நீ செய்யவிருக்கும் தவறின் அளவு.
தாரமாய் இருந்தாலும் அவள் விருப்பின்றி தொடுதல்
சட்டப்படி குற்றம் என்கிறது இந்த நாடு ' ...ஆனால்
பிஞ்சுகளை கூட வேட்டையாடும் சமூகமும் இங்குதான்
வன்கொடுமை செய்யும் ஆண் இனமே
உன் பிறப்பின் பெருமையை உணர்ந்தால்
உன் தாரத்தை தவிர மற்றொரு பெண்ணை தொட அஞ்சுவாய் .
பாதுகாவலனாக இருக்க வேண்டிய ஆண் இனமே
பசிதீர்க்க அவள் மீது பாய்ந்தால்
தற்கொலை செய்து கொள்வதைத் தவிர
வேறு என்ன செய்யும் இந்த பெண் இனம்...
இப்படிக்கு,
பெண்மை தீயில் கருகுவதை கைகட்டி வேடிக்கை மட்டுமே பார்த்து கொண்டிருக்கும் கையறு நிலையில் இருக்கும் சராசரி மனிதன்....