டெல்லியில் ஜெயலலிதாவுக்கு அவமரியாதை- சிறுபான்மை பேரவை கண்டனம்
சென்னை: டெல்லி தேசிய வளர்ச்சி கவுன்சில் கூட்டத்தில் தமிழக முதல்வர் ஜெயலலிதாவை அவமதித்ததற்கு சிறுபான்மை பேரவைத் தலைவர் பிஷப் எம்.பிரகாஷ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மத்தியில் ஆளும் காங்கிரஸ் கூட்டணி அரசு தமது கூட்டணியில் அங்கம் வகிக்காத கட்சிகள் ஆளும் மாநிலங்களை மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடத்தி வருகிறது. தமிழகத்திற்கு தேவையான வளர்ச்சி திட்டங்களை போதுமான அளவு கொடுக்காமலும், தேவையான நிதியை ஒதுக்காமலும் மத்திய அரசு தொடர்ந்து புறக்கணித்து வருகிறது.
இந்த நிலையில், டெல்லியில் நடந்த தேசிய வளர்ச்சிக்குழு ஆலோசனை கூட்டத்தில் தமிழகத்தின் நிலையை எடுத்துச் சொல்ல முதல்வர் ஜெயலலிதாவுக்கு போதுமான நேரம் ஒதுக்கவில்லை. மாறாக வெறும் 10 நிமிடம் மட்டும் ஒதுக்கி பேசுமாறு கூறி அவரை அவமதித்துள்ளனர். இந்த செயல் உலகத் தமிழர்கள் அனைவரையும் அவமானப்படுத்திய செயலாகும். சிறுபிள்ளைத்தனமாகும்.
மக்கள் நலத்திட்டங்களை பற்றி பேசவிடாமல் பாதியிலேயே நிறுத்தும்படி மணி அடித்ததால் கூட்டத்திலிருந்து முதல்வர் ஜெயலலிதா வெளிநடப்பு செய்தது மிகச்சரியானதும், வரவேற்கத்தக்கதும் ஆகும். இந்த விஷயத்தில் அவர் காட்டியிருக்கும் துணிச்சலையும், தமிழக மக்கள் நலனில் அவர் கொண்டிருக்கும் அக்கறையையும், உணர்வையும் நாங்கள் பெரிதும் பாராட்டுகிறோம்.
மத்திய அரசின் செயலுக்கு இந்திய சிறுபான்மை மற்றும் கிறிஸ்தவ கூட்டமைப்பு, இந்திய சுயாதீன திருச்சபைகள் மாமன்றம், இந்திய பிஷப்புகள் கவுன்சில் சார்பில் கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன் என்று அதில் கூறப்பட்டுள்ளது.