சாரங்க தேவர்
சாரங்கதேவர் என்பவர் கி.பி.1210 - 1241 வரையுள்ள காலத்தில் காசுமீரத்திலிருந்து தமிழகம் வந்து தேவாரப் பண்களை அறிந்து வடமொழியில் 'சங்கீத ரத்னாகரம்' என்னும் நூலை எழுதினார். அந்நூலிலுள்ள இசையமைப்பு முறை தேவாரம், திவ்விய பிரபந்தத்தில் உள்ள தமிழிசைப் பண்ணமைப்பு முறையை ஆதாரமாகக் கொண்டது. வடமொழிப் பெயர்கள் இராகங்களுக்கு இடப்பட்டு, முதல்முதல் வெளிவந்த கர்நாடக இசைநூல், கர்நாடக இசைக்கு முதல்நூல் அதுதான் என்று அறியப்படுகின்றது. சங்கீத ரத்னாகரத்தின் வாயிலாகத் தமிழிசை வடநாடுகளுக்கு அறிமுகமானதாகக் கூறலாம். இசை நூல்களில் வடமொழிப்பெயர்கள் இடம்பெறத் தொடங்கின. சில ராகங்களுக்கு சாரங்க தேவர் 'பாஷா ராகங்கள் ' என்று பெயரிட்டுள்ளார். பாஷா என்று அவர் கூறவது தமிழ் மொழியையேயாகும்.
இந்துஸ்தானி இசை
கி.பி. பதின் மூன்றாம் நூற்றாண்டுவரை தென்னிந்திய இசை என அழைக்கப்பட்ட தமிழிசை மட்டுமே இந்தியா முழுவதும் பரவி வாழ்ந்திருந்தது. தென்னிந்தியாவில் வளர்ந்து நின்ற தமிழிசை வட இந்தியாவெங்கும் பரவி மாறுபட்ட பெயர்களோடு வழங்கிவந்தாலும்கூட, காலப்போக்கில் முஸ்லிம் அரசர்கள் இந்தியாவை ஆட்சிசெய்யத் தொடங்கிய காலம் தொடக்கம் முஸ்லிம் நாடுகளின் இசையின் வரவால் தனித்துவம் இழந்தது. இரண்டறக் கலந்தது. அதுவே இந்துஸ்தானி இசை என்று இப்போது வழக்கத்தில் உள்ளது. பிற நாட்டு இசைக்கலப்பால் புதுவடிவம்பெற்ற வட இந்திய இசையே இந்துஸ்தானி இசை. ஆனால் அடிப்படை மரபு மாறாமல் இன்றும் கடைப் பிடிக்கப்பட்டு வருவது தென்னிந்திய இசை. அதுவே கர்நாடக இசை என்ற பெயரில் வழங்கிவரும் தமிழிசை.
14 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில், ஹரிபாலர் என்பவர் எழுதிய 'சங்கீத சுதாகரம்' என்ற நூலிலேயே முதன்முதலாக, கர்நாடகஇசை, இந்துஸ்தானிஇசை என்ற இரண்டுவகை இசைகளின் பெயர்கள் குறிப்படப்பட்டுள்ளன. கன்னடம் தனியொரு மொழியாகத் தோன்றி 1100 ஆண்டுகளே ஆகின்றன. தெலுங்கு மொழி தோன்றி 900 ஆண்டுகளே ஆகின்றன. ஆனால் இற்றைக்கு 1300 ஆண்டுகளுக்கு முன்னரே பக்தி இலக்கியங்களான தித்திக்கும் தேவாரங்கள் தோன்றிவிட்டன. 2000 ஆண்டுகளுக்கு முன்பே தமிழிசை செழித்து தழைத்து ஓங்கி நின்றது என்பதைப் பழந்தமிழ் இலக்கியங்கள் சான்று பகர்கின்றன.