அடுத்தவீட்டு உறவு ஆபத்து.....சாட்டிங்கே பரவாயில்லை
இப்போதெல்லாம் எங்கு பார்த்தாலும் அடுக்கு மாடி வீடுகள், இதில் அடுத்த வீட்டுக்காரர் என்பவர் யார் எந்த ஊரை சேர்ந்தவர், இவரைப் பற்றிய உண்மை தகவல்களை அறிந்திருக்க வாய்ப்பு இல்லை, அவர் அவரைப் பற்றி என்ன தகவல் அவர் நமக்கு சொல்லுகிறாரோ அதை மட்டுமே நம்மால் அறிய முடியுமே தவிர அவரைப் பற்றிய உண்மையான தகவல்கள் என்ன என்பதை நம்மால் அறிய முடிவது இல்லை.
எங்கள் அடுக்கு மாடி குடியிருப்பில் ஒரு அறை காலியாக இருந்தது, இதில்அடிக்கடி வாடகைக்கு வந்து குடியிருப்போர் மாறி கொண்டே இருப்பார்கள், ஒவ்வொரு முறையும் குடியிருக்க வருபவர்களைப் பற்றி சொல்வதென்றால் சமயம் போதாது. ஒரு முறை ஒரு டீச்சர் அம்மா குடி வந்தார்கள், அவர்கள் குடிவந்து ஏறக்குறைய ஒரு வருடத்திற்கு பின்னர் தான் நான் அவரின் முகத்தை பார்த்தேன், ஏன் என்றால் எனக்கு பரிச்சயப்படாதவர்களிடம் பழகுவது என்பது மிகவும் சிரமமான காரியம், பழகும் அளவிற்கு உத்திரவாதம் உள்ளவரா என்பது குறித்து எனக்கு திருப்த்தி இருக்காது என்பது மற்றொரு காரணம்.
அந்த டீச்சரம்மா ஒரு தனியார் பள்ளியில் பணியாற்றி வந்தார் என்று கேள்விபட்டேன், அவர் தினமும் பள்ளியிலிருந்து வந்த பின்னும் அவரது பள்ளி குழந்தைகளுக்கு டியூஷன் சொல்லி கொடுத்து வந்தார், அப்படி அவர் டியூஷன் சொல்லி கொடுத்து வரும்போது பல நாட்கள் டியூஷனுக்கு வரும் குழந்தைகள் கலாட்டா செய்து கொண்டும் விளையாடிக் கொண்டும் அதிக சத்தம் போடுவார்கள், அப்படி அவர்கள் குதித்து ஓடிப்பிடித்து விளையாடுவது மேல்தளத்தில் அதிக சத்தத்தை உண்டாக்கும், ஒரு நாள் அவர்களை சத்தம் போடவேண்டாம் என்று சொல்லுவதற்காக போன போது தான் அந்த டீச்சரம்மாவை நான் நேரில் பார்த்தேன்.
சில மாதங்களுக்கு அப்புறம் அந்த டீச்சரம்மாவைத் தேடி கொண்டு முப்பத்தைந்து வயது மதிக்க தக்க ஒரு ஆள் வந்தார், அப்போது தான் எனக்கு தெரிய வந்தது அந்த டீச்சரம்மா சில மாதங்களாக அந்த வீட்டில் இல்லை என்பது.
சில மாதங்கள் சென்ற பின்னர் என் கணவர் என்னிடம் பேச்சு வாக்கில் சொன்னார் அந்த டீச்சரம்மா பல இடங்களில் கடன் வாங்கி விட்டு வீட்டு வாடகை பாக்கியும் கொடுக்காமல் யாருக்கும் தெரியாமல் இரவோடு இரவாக வீட்டை காலி செய்து கொண்டு போய் விட்டார்கள் என்று, இதில் இன்னொரு வேடிக்கை என்னவென்றால் அந்த டீச்சரம்மாவை எங்கள் மாடிவீட்டிற்கு குடிவைத்த எங்கள் குடியிருப்பை சேர்ந்த ஒரு அம்மாவிடமும் கடன் வாங்கிக் கொண்டு போய் விட்டார், அது மட்டுமில்லாது அந்த டீச்சரம்மாவிற்கு கடன் கொடுத்தவர்களிடமிருந்து வக்கீல் நோட்டீசு வந்துக்கொண்டிருந்தது, அவர்கள் இருப்பிடத்தை மாற்றி கொண்டு போய் விட்டதால் வக்கீல் நோட்டீசு திருப்பி அனுப்பப்பட்டது.
கிராமங்களில் எல்லாம் எந்த வீட்டில் யார் வாழுகிறார்கள் அவர்களது பாட்டன் யார் பூட்டன் யார், எப்பேர்ப்பட்ட குடும்பம் என்ற விவரமெல்லாம் எல்லோருக்கும் தெரிந்த விஷயமாக இருக்கும், இதனால் யார் யாரோடு எப்படி பழகலாம் என்பதும் அவரவர்களுக்கே நன்கு தெரிந்திருக்கும், நகர வாழ்க்கையில் அப்படி கிடையாது, அடுத்த வீட்டுக்காரர் எங்கு வேலை செய்கிறார் என்ன வேலை செய்கிறார் எந்த ஊர் சொந்த ஊர் என்பதை அவர் சொல்லித்தான் நாம் தெரிந்து கொள்ள முடியும் அப்படிப்பட்டவர்களை நம்பி பேசுவது கூட தொல்லையில் தான் முடிவடைகிறதே தவிர நல்ல உறவுக்கு வித்திடுவது கிடையாது.
இதனால் இன்டர்நெட்டில் சாட்டிங் என்ற முறையை பயன் படுத்தி யாரோ ஒருவருடன் சிறிது நேரம் பொழுது போக்கிற்காக பேசுவதில் எந்த வித பாதிப்பும் இல்லையென்றே சொல்ல முடியும், சைபர் கிரைம் என்பதைப் பற்றி நன்கு தெரிந்திருப்பதால் எந்த அளவிற்கு சாட்டிங்கில் பேசுபவருடன் பேச வேண்டும் எதை பற்றி எல்லாம் சொல்லக்கூடாது என்று ஒரு அளவுடன் பழக முடியும் அதுமட்டுமில்லாது சாட்டிங் செய்பவருடன் பேச அல்லது பழக பிடிக்கவில்லை என்றால் உடனே நிறுத்தி விடவும் முடியும். பஸ் நண்பன் ரயில் நண்பனைப் போல பிரச்சினை அற்றது.
ஆனால் அடுத்த வீட்டுக்காரர்களின் தொல்லை அப்படியில்லை, அவசரத்திற்கு வந்து நம்மிடம் பணம் கேட்டு தொல்லை கொடுப்பது, வீட்டின் உள்ளே வந்து உட்கார்ந்து பேச வருவது, என்று தொல்லைகள் தவிர்க்க முடியாத அளவிற்கு போகும், இதனால் சாட்டிங் செய்வது என்பதை அளவுடன் செய்து, பேசி பொழுது போக்க விருப்பம் இருக்கும் போது பயன்படுத்துவதில் என்னை பொறுத்தவரை தவறு இல்லை என்றே சொல்வேன்.
அடுத்த வீட்டு பழக்க வழக்கங்களினால் நகர வாசிகளுக்கு ஆபத்துகளும் தொல்லைகளும் தான் மிச்சம். எந்தவித நன்மையும் இருப்பது இல்லை.