சுட்டும் விழி சுடரே கண்ணம்மா!
“கட்டு பாடற்ற சுதந்திரம்” –
கட்டு அவிழ்ந்த சமுதாயத்தில்
உன் காதல் கோட்டைகள்
மோக அலைகள் அடித்து செல்லும்
மணல் வீடுகள் !
மெல்லினம் நீ - வல்லினம் ஆகும்
முயற்சியில் வக்கிரம் ஆகி விடாதே !
வசை பாடி, உறவுகள் பிழையாகி ,
மதுவுக்கு அடிமையாய்
மாதரையே சித்தரிக்கும்
சுதந்திரமா – பெண் சுதந்திரம் ?
சிறுமையாகி கொண்டிருக்கும் பெண்மை
இலக்கணம் கண்டபோது
“நெஞ்சு பொறுக்குதில்லையே இந்த
நிலை கெட்ட மனிதரை நினைத்து விட்டால் !”
களத்தில் கதிரடிக்கும் விவசாயி முதல்
காற்றை கிழித்து செல்லும் விமானி வரை
யாதுமாகி நீ நிற்க-
கனவு கண்ட போராளி நான் !
உன் சத்தியத்தை
விட்டுக்கொடுக்காத சரித்திரம் படை !
“ஆணுக்கு பெண் இங்கே
இளைப்பில்லை காணென்று கும்மியடி! “
பெண்மையின் இலக்கணத்தை
உடைக்காத ஆண்மையின்
நட்புக்கு மட்டும் தலை வணங்கு !
சமுதாய நட்பை வளர்க்கும்
வலை தளங்கள் - உன் முற்போக்கு
எண்ணங்களின் வெளிப்பாட்டில்
பிறந்த மண்ணின் பெருமை
எதிரொலிக்கும் பசறைகளாய் விளங்கட்டும் !
ஒளி படைத்த கண்ணும் ,
உறுதி கொண்ட நெஞ்சும்
பெரிதினும் பெரிதாய் சாதிக்க
உனக்கு கிடைத்த பொக்கிஷங்கள் !
நெஞ்சுக்கு நீதியும் தோளுக்கு
வாளும் நிறைந்த சுடர்மணி பூண் நீ!
செவ்வாய் தாண்டி பிரபஞ்ச பயணத்தில்
புதியதோர் உலகம் காண
மானுடத்தின் அசகாய முயற்சி
என் நிலவு தாண்டிய
கனவு சஞ்சாரத்தின் மணி மகுடம்
சூர்ய குடும்பத்தை தாண்டிய
நம் சாதனைகள் எங்கோ இருக்க
என் நிஜமாகிய நிதர்சனமே !
உன் கால் தடம் பாதிக்க எத்தனையோ
சாதனை ராஜ்ஜியங்கள் தவம் கிடைக்க
பெரிதினும் பெரிதாய் மாநிலம் போற்ற
பெண்ணின் பெருந்தக்க யாவுள!
நீ மனது வைத்தால்
முடியாது என்ற ஒன்று உண்டோ -
ஏனென்றால் .....யாதுமாதி நின்றவள் நீயே !