கொட்டும் தூரலிலே
எட்டும் தூரத்திலே
பட்டுச்சிறகடித்து வரும் பட்சியே.....
காதல் தூதாய் உன்னை
என்னவள் அனுப்பினாளோ...!!!???
என்ன இன்ப சேதி உரைக்க
என்னிடம் வருகிறாய்...
காதலுக்கு தூது சொல்ல
பூரிப்பில் கரைகிறாய்...
ஆடும் விழிகளில்
நாடகம் காட்டும் என் கலைமாது,
நான் அவள்பால் கொண்ட காதலில்
தவிப்பதை பார்த்து வரச் சொன்னாளோ...
இமைக்கும் சந்தத்திலும்
காதல் கீதம் கொண்ட என் இசையரசி,
ஆகாரமின்றி அவள் புன்னகை ஒன்றையே
எண்ணி எண்ணி காதல் வளர்ப்பதை
இரசித்து வரச்சொன்னாளோ...
குறைகளற்ற சிற்பமாய்
பூமியில் நடைபயிலும் என் கட்டழகி,
உறக்கத்திலும் அவள் பூமுகம் கண்டு
தலையணையிடம் சிரித்துப் பேசும்
என் பித்து நிலையை அறிந்து
வரச்சொன்னாளோ...
நான் தேடும் சொர்க்கம் எல்லாம்
ஒற்றைப் பார்வையில் ஒளித்த என் பூங்கொடி,
அவள் நினைவுகள் அலையென அடிக்கும்
என் மனதின் நிலையை
கேட்டு வரச்சொன்னாளோ...
நீ வரும் காட்சி கண்டு
உன் சிறகுகளை விடவும்
என் இதயம் படபடப்பதை
கேளாயோ பட்சியே.....
இயல்பு நிலைமாறி
காதலால் தினம் மூழ்கி
கொஞ்சும் பெண்மைக்கு
பஞ்சம் இன்றி கவிப் பாடி
உருகி வழியும் என்னிடம்
விரைந்து வா தூது பறவையே...
அவள் சேதி யாதாயினும்,
நான் கொண்ட சேதி ஒன்று தான்...
அவள் மடியில் தலை வைத்து
கன்னியவள் தரும் நெற்றி முத்தம்
வேண்டிய கணமே என் ஜீவன் பிரிந்திடினும்
ஏழேழு ஜென்மமும் மோட்சமே எனக்கு...