வீடெங்கும் பூக்கோலம்
வாசலிலே மாக்கோலம்
தெருவெங்கும் வண்ணக் கோலம்
கதவு ஜன்னல் நிலையெல்லாம்
காண்பவர்க்கு பளிச்சிடும்...
புத்தம் புது சுண்ணாம்பின்
நறுமணமோ நுகர்பவர்க்கு இனித்திடும்...
மாவிலையும் ,மஞ்சளும்
கண்ணுப்பீளையும், வேப்பிலையும்
சேர்த்து கட்டிய தோரணங்கள்
வாசலிலே ஆடிடும்..
மங்களமாய் துவங்கிடும்
தமிழர் திருநாளில்
மஞ்சள் கொத்து சேர்த்து
கட்டிய செப்புப் பானையில்
பச்சரிசியும் பாலும் இட்டு ,
இனிப்பிற்கு வெல்லம் சேர்த்து,
வாசத்துக்கு ஏலம் சேர்த்து
பக்குவமாய் பொங்கும் போது சந்தோசக் குலவியிடுவோம்
பொங்கலோப் பொங்கல் என்று ..
நெய்யிலே வறுத்தெடுத்த
முந்திரியும் திராட்சையும் தூவி
இறக்கி வைத்த பொங்கலிலே முதல் கரண்டி சாமிக்கு படைத்து,
கூடி நின்ற சொந்தங்களுக்கு
மிச்சம் இருக்கும் பொங்கலை
மிச்சம் இல்லாமல் வார்த்து விட்டு
நினைத்தாலே எச்சில் ஊறும்
அடிக்கரும்பை வெட்டி எடுத்து
பற்களால் இழுத்து உறிஞ்சிய
சாற்றில் தித்திப்பது நமது
நாக்கு மட்டுமல்ல.. நம் மனங்களும்...
உழவினை முன்னிருத்தி
உலகிற்கு உணவளிக்கும்
உழவனின் வாழ்வும் ஓங்கட்டும் ..
தைத் திருநாளாம் இந்நாள் போல்
எந்நாளும் சிறக்கட்டும்
நமது வாழ்வும்...