ஒரு தொழிலதிபரின் மகள் சன் ஸ்ட்ரோக்கில் இறந்துள்ளார். பொதுவாக பார்த்தால் இந்த மாதிரியான கடுமையான வெயில் நாட்களில் எல்லோரும்தான் போகிறார்கள். ஆனால், அது ஒரு சிலரை மட்டுமே பாதிக்கிறது. அது அவர்களுடைய பலவீனமா? அல்லது விதியா?
ஜோதிட ரத்னா முனைவர் க.ப.வித்யாதரன்: சன் ஸ்ட்ரோக்கால் இறந்தவர்களுடைய 7 பேரின் விவரங்களை ஏற்கனவே சேகரித்து வைத்திருக்கிறோம். இதில் முக்கியமாக தசா புத்தி சரியில்லாத பொழுது இயற்கை சீற்றத்தால் மரணங்கள் உண்டு. குறிப்பாக சன் ஸ்ட்ரோக் என்பது மட்டுமல்ல, ஆற்றை கடக்கும் போது அடித்துக் கொண்டு போய்விட்டது என்றெல்லாம் கூறப்படுவது உண்டு.
இதில் சன் ஸ்ட்ரோக் என்பது என்னவென்றால், அவர்களுடைய ஜென்ம நட்சத்திரத்திற்கு சந்திராஷ்டமம் நடக்கும்போது, நான் பார்த்த வரையில் இந்த 7 பேரில் 4 பேர் சந்திராஷ்டமம் அன்று இறந்திருக்கிறார்கள். அதன்பிறகு, சூரியன் பலவீனமாக இருந்தால், அதாவது சூரியன் பாதகாதிபதியாக இருந்தாலும் சூரிய வெப்பத்தால் பாதிப்பு உண்டாகும். உதாரணத்திற்கு, துலாம் ராசி துலாம் லக்னம், மகர ராசி மகர லக்னம், கும்ப ராசி கும்ப லக்னம், அதன்பிறகு மீன ராசி மீன லக்னம் இந்த மாதிரி இருப்பவர்கள் நிறைய பேருக்கு சன் ஸ்ட்ரோக் வருவதைப் பார்க்கிறோம். ஏனென்றால், இந்த லக்னத்திற்கெல்லாம் சூரியன் ஏதேனும் ஒரு பாதிப்பை உண்டாக்கக் கூடியவராக இருக்கிறார். இவர்களுடைய பிறப்பு ஜாதகத்தில் சூரியன் கெட்டுப் போயிருந்தால், சூரியனுடைய ஒளிக்கற்றையால் அவர்கள் பாதிக்கப்படுவதற்கு வாய்ப்பு இருக்கிறது.
இதேபோல, சூரிய கிரகணத்தை நேரில் பார்த்து கண் பார்வை இழந்தவர்களுடைய ஜாதகத்தையும் எடுத்து வைத்திருக்கிறோம். இவர்களுடைய ஜாதகத்தையெல்லாம் பார்க்கும் போது சூரியன் பாதகாதிபதியாக இருந்திருக்கிறார். சூரியன் கெட்ட வீட்டிற்கு அதிபதியாக இருக்கும் போது, சூரியனுடைய அகச்சிவப்பு கதிர்கள், புறஊதாக் கதிர்கள் இதனால் பாதிக்கப்படுவதைப் பார்க்கிறோம்.
இவர்களுடையதும் அந்த மாதிரியான பாதிப்புகள் உடையதாக இருந்திருக்கும். சந்திராஷ்டம் நடக்கும் போதும் இந்த மாதிரி ஆகும். அவர் பிள்ளையுடைய ஜாதகத்தில் சூரியன் மாரகத்தானத்தில் இருந்து, தாய் ஸ்தானத்தில் உட்கார்ந்து அது மாரகாதிபதியாகி அந்த தசை நடந்து கொண்டிருந்தால் கூட அவர்களுக்கு அந்த மாதிரி ஆகியிருக்கும்.
இதுபோல பல கோணங்களில் இதற்கு காரணங்கள் உண்டு.
ஒருவர் வந்து ஜாதகம் பார்க்கும் போது இவ்வளவு விஷயங்களையும் பார்த்து சொல்கிறீர்களா?
பொதுவாக ஜாதகம் பார்க்கும் போது ஆயுள் என்ன? ஆரோக்கியம் எப்படி? என்பதைப் பார்ப்பது முக்கியமானது. அடிப்படை ஜோதிடமும் அதுதான். 'பொழச்சு கிடந்தா பார்த்துக்கலாம்' அப்படின்னு சொல்வார்கள் பெரியவர்கள். அதனால் அதனைப் பார்ப்பதுண்டு. ஏனென்றால் ஒரு சிலருக்கு மிகவும் குறைவாக இருந்தால் அதற்கேற்ப ஐடியா கொடுத்துவிடுவது, எதையும் துணிந்து செய்யுங்கள் என்று சொல்வதுண்டு. சரியில்லை என்றால், இதெல்லாம் இருக்கிறது. அமைதியாக இருந்துவிடுங்கள் என்றும் சொல்வதுண்டு.