புரட்டாசியில் அளவுக்கு அதிகமான வெயில் காய்கிறது? அதே நேரத்தில் புரட்டாசி மாதத்தில் பல பெருமாள் பக்தர்கள் வீடுகளில் மாமிச உணவுகளைத் தவிர்ப்பது ஏன்? இது இரண்டும் எதனால்?
ஜோதிட ரத்னா முனைவர் க.ப.வித்யாதரன்: புரட்டாசி மாதத்தில் பிரண்டையும் காயும் என்பார்கள் (தண்ணீர் இல்லாமல் அது வளரும்). அது கூட காயும் என்பார்கள். ஏனென்றால், அந்த அளவிற்கு புராட்டாசியில் வெயில் இருக்கும்.
சாதாரணமாக சைவ உணவு நமது உடலிற்கு எல்லா வகையிலும் உகந்தது. இந்த மாதிரியான வெயில் காலங்களில் அசைவ உணவுகளைத் தவிர்த்தால் நமக்கு நல்லது.
இது தவிர, புரட்டாசி மாதம் என்பது புதனுடைய வீட்டில் சூரியன் இருக்கக்கூடியது. புதன் என்பது ஒரு சாத்வீகமான கிரகம். செளமியன் என்று புதனைக் குறிப்பிடுவது உண்டு. செளமியன் என்றால் சாது. சாத்வீகமானவர், அதிர்ந்து கூட பேசமாட்டார் என்று சொல்வார்களே, அதுபோல.
புதனுடைய உணவு என்று எடுத்துக்கொண்டால், அது உப்பு சப்பு இல்லாத உணவுதான். துவர்ப்பு சக்தி அதிகமுள்ள உணவுகளெல்லாம் புதனுடைய உணவு. இந்த புதனுடைய உணவாக அசைவ உணவுகள் வரவே வராது. காய், கனிகள், பிரசாதங்கள் இதுபோன்ற உணவுகளெல்லாம்தான் புதனுக்கு வரும்.
அதனால்தான் அந்த மாதத்தில் அசைவ உணவுகள் தவிர்க்கப்படுகிறது. சைவ உணவுகள் என்பது கிரகங்களுடன் ஒத்துழைத்துப் போகும்படியாக இருக்கிறது.