அன்பின் கோயில் அன்னை
அறிவின் தீபம் தந்தை
இணைத்தது என் வருகை
குழந்தையும் தெய்வமும் ஓன்று
அனாதை சிறுவன் நான் இன்று
அன்பால் இணைந்தார்கள்
காதலால் கசிந்தார்கள்
ஊடலால் மகிழ்ந்தார்கள்
கூடலால் உறைந்தார்கள்
அது ஒரு கனாக் காலம் .
இரு மனம் கலந்து
திருமணம் புரிந்து
பிள்ளை நான் ஒருவன்
இருப்பதையும் மறந்து
மண முறிவு காண
கிழக்கும் மேற்குமாய் இன்று
ஒற்றைக்காலில் நிற்கிறார்கள்
தாம்பத்தியத்தின் பலம்
விட்டுக்கொடுத்தல், புரிந்துணர்வு
பலவீனம் சந்தேகம், ஆணவம்
தக்கவைத்துக்கொள்வது பலவீனமானால்
கடலில் திசைமாறிய படகு போல்
தத்தளித்துவிடும் வாழ்க்கை.
சிறுபிள்ளை நான்
செய்த பிழை ஏதுமில்லை
கொண்டு வந்த ஊழ் வினையா?
யானறியேன் பராபரமே !'
குழந்தைகளின் உலகம்
அன்பான பெற்றோர்கள்
என்னிரன்டு கண்களிலே
எதை வேண்டாம் என்பேன் நான்
விட்டுக்கொடுத்து வாழுங்கள்
வாழ்க்கை பிரகாசமடையும்
அன்பைப் பரிமாறுங்கள்
வாழ்க்கை அழகுபெறும்
கோபத்தை அடக்குங்கள்
வாழ்க்கை இன்பமடையும்
ஆணவத்தை களையுங்கள்
வாழ்க்கை முழுமையடையும்.